பெல்ட் கட்டிய பிள்ளையார்

சதுர்த்தி வந்தாலே வினாயகனுக்கு கொஞ்சம் பயமாயிருக்கும். மோதகம் அவனுக்கு பிடிக்கும் தான், அதுக்காக இவ்வளவா சாப்பிட முடியும்? அவனோட அப்பா சொல்லிட்டார், சதுர்த்தி அன்னிக்கு யார் மோதகம் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிடணும்னு. இந்த முருகனை கூப்பிட்டு கொஞ்சம் ஷேர் பண்ணலாம்னா அவனுக்கு விரதம் தான் பிடிக்கும்.

இந்த உலகமே வினாயகனோட வயித்துக்குள்ள இருக்குதாம். அதனால அவன் வயிறு நிரம்பினா, இந்த உலகத்தில எல்லாருக்கும் தட்டுப்பாடு இல்லாம சாப்பாடு கிடைக்கும். இதை அவங்க அம்மா அவனுக்கு அடிக்கடி சொல்லுவாங்க. அதனாலதான் எவ்வளவு படையல் வச்சாலும் அவனால மறுக்க முடியல.

இப்படித்தான் அந்த சதுர்த்தி அன்னைக்கும் மக்கள் எல்லாம் நிறைய படையல் வச்சிருந்தாங்க. அவல், பொரி, சுண்டல், பொங்கல், மோதகம், கொழுக்கட்டை இப்படி பல வகைகள் வைத்து ஒரே விருந்து. மோதகத்தில் பல தினுசுகள், பல வடிவங்கள். சிலவற்றில் முந்திரி, நெய் எல்லாம் உண்டு, ஆனாலும் வினாயகனுக்கு பிடித்தது எளியவர் வீட்டு மோதகம் தான். அன்னைக்கு ராத்திரி வினாயகனுக்கு நடக்கக் கூட முடியாம வயிறு ரொம்ப ஃபுல் ஆகிடுச்சு. அவனோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது.

“நீ வேணா போய் பூமியை சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வா. எல்லாரும் என்ன செய்யுறாங்கன்னு மேல இருந்து பாரு. உனக்கு பொழுது போன மாதிரியும் இருக்கும், வயிறும் சரியாகி விடும்” அப்படின்னாங்க.

அவனும் தன்னோட வாகனமான எலியின் மேல் ஏறி பூமிக்கு மேல ஒரு ரவுண்ட் வந்தான். நல்ல நிலா வெளிச்சம். நட்சத்திரமெல்லாம் மினு மினுன்னு கோலம் போட்ட மாதிரி இருந்தது. வினாயகன் இதையெல்லாம் ரசிச்சுகிட்டு எலி கூட பேசிக்கிட்டே வந்தான். அப்போ திடீர்ன்னு ஒரு பெரிய பாம்பு, பெரிசுன்ன்னா ரொம்ப பெரிசு, எதிர வந்து எலிய தாக்கப் பார்த்துச்சு. பயந்து போன எலி வினாயகனை விட்டுட்டு ஓடப் பார்த்துச்சு. பாம்பைப் பார்த்த வினாயகனுக்கு ரொம்பவே குஷி ஆகிடுச்சு. எலிய தன்னோட காலுக்குள்ள இறுக்கி பிடிச்சுகிட்டு, சீறி வந்த பாம்பை சரியா கழுத்தில ஒரு பிடி போட்டான். பிடிச்சு கிறு கிறுன்னு நாலு சுத்து சுத்தினான். அப்புறம் அதை எடுத்து தன்னோட இடுப்பில பெல்ட்டா கட்டிகிட்டான்.

பாம்பு கூட போட்ட சண்டைல வயிறு நல்ல செரிமானம் ஆச்சு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த சந்திரன் (அதான் நிலா) சிரிச்சிட்டான். வினாயகனுக்கு கோபம் வந்து அதை முறைச்சு பார்த்தான். பயந்து போன சந்திரன் பூமியோட இன்னொரு பக்கம் போய் ஒளிஞ்சுகிட்டான். பிறகு வினாயகனுக்கு கோபம் தணிஞ்சிருச்சான்னு பார்த்து மெல்ல மெல்ல எட்டி பார்க்க ஆரம்பிச்சான். பிறகு சந்திரனுக்கு இப்படியே ஒளியிறதும் பிறகு எட்டி பார்த்து வர்றதுமா பழக்கம் ஆகிடிச்சு.


உயிரிலே கலந்தவன்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. – (திருமந்திரம் – 2010)

விளக்கம்:
ஆன்மாவில் சிவனும், சிவனில் ஆன்மாவும் ஒன்றாக கலந்திருப்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கவில்லை. ஒப்பில்லாத ஈசன் அவன், பிரபஞ்சம் முழுவதும் வற்றாமல் எங்கும் நிறைந்திருக்கிறான்.

(அணு – ஆன்மா,    சராசரம் – பிரபஞ்சம்)

He is inside the soul, the souls are inside Him.
Such the Soul and Siva are combined, but most people unaware of this.
Incomparable is His Grace, He spreads everywhere
in this universe, with out any abatement.