திருமந்திரத்தில் பிராணாயாமம் – ஒரு தொகுப்பு

திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின் விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக இங்கே:

  • பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது.
  • நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.
  • பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
  • பிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லை. மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம். பிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.
  • நம்முடைய உடலில் பிராணன், அபானன் என இரண்டு குதிரைகள் ஓடுகின்றன. அறிவுடைய நம் மனம் நல்லவனாக இருந்தாலும், அக்குதிரைகளை இழுத்துப் பிடிக்கும் வழிமுறைஅறிந்தோம் இல்லை. அன்பு கொண்ட குருநாதரின் அருள் பெற்றால் அக்குதிரைகளை நம் வசப்படுத்தலாம். குருவருள் பெற்றால் பிராணாயாமப் பயிற்சியின் சூட்சுமம் வசப்படும்.
  • பிராணாயாமப் பயிற்சி செய்பவர், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாய் மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாய்த் தோற்றம் அளிப்பர். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர் உடல் காற்றை விட மென்மையாய் மாறும். எல்லோராலும் விரும்பப்படுவர். பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.
  • நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு பெறுவோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அங்கே இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும். பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
  • இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம். இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.
  • நம் உடலின் எல்லா பாகங்களிலும் காற்று நிரம்பும் வண்ணம், மிகுதியாகக் காற்றை உள்வாங்கிப் பூரகம் செய்வோம். பூரகத்தின் மறுபகுதியான இரேசகத்தினை, காற்று உடல் உள்ளே பதியும்படி மெலிதாக வெளியேறச் செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையே விருப்பத்துடன் வயிற்றில் கும்பகம் செய்தால் திருநீலகண்டப் பெருமானின் அருளைப் பெறலாம். பிராணாயாமத்தை விருப்பத்துடன் முறையாகச் செய்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.
  • இடைகலை வழியாக பதினாறு மாத்திரை கால அளவு பூரகம் செய்வோம். பிறகு  முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு பிங்கலை வழியாக இரேசகம் செய்வோம். இவ்விரண்டு வேள்வியோடு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவு கும்பகம் செய்து வந்தால் ஆன்மிக உண்மை புலப்படும். உபதேசிக்கப்பட்டுள்ள கால அளவுகளின்படி பிராணாயாமத்தை விருப்பத்துடன்  செய்து வந்தால் ஆன்மிக உண்மை விளங்கிடும்.
  • பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடல் தளர்ச்சி அடையாது. இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு பூரகம் செய்வோம். பிறகு உள்ளே இருக்கும் பிராணன், அபானன் ஆகிய காற்றை நிறுத்தி கும்பகம் செய்வோம். இந்தப் பயிற்சியை உடல் வளையாமல் நேராக அமர்ந்து செய்து வந்தால் யமனுக்கு அங்கே வேலை இல்லை. பத்து நாடிகள் எனப்படுபவை – சுத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.
  • தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.
  • சிறு வயதில், நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குல நீளம் உள்ளே புகுவதும், ஓடுவதுமாய் உள்ளது. கொஞ்சம் வயதான பிறகு எட்டு அங்குல அளவே முச்சை இழுக்கிறோம், நாலு அங்குல நீளத்தை துண்டிக்கிறோம். பிராணாயாமப் பயிற்சி செய்து விடுபட்ட நான்கு அங்குலமும் சேர்த்து சுவாசித்து வந்தால் திருவைந்தெழுத்தைப் போல அழகு பெறலாம். பிராணாயாமப் பயிற்சி மூலம் மூச்சு விடும் அளவை பன்னிரண்டு அங்குல அளவுக்கு நீளச்செய்தால் தெய்வீக அழகு பெறலாம்.
  • பன்னிரண்டு அங்குல நீளத்தில் ஓடும் முச்சு, இரவும் பகலும் தன் விருப்பப்படி செயல்படுகிறது. அந்த பிராணனை கட்டுப்படுத்தும் முறையை பாகனாகிய நாம் அறிந்து கொள்ளவில்லை. பிராணனை கட்டுப்படுத்தும் பிராணாயாமப் பயிற்சியை நாம் அறிந்து கொண்டால் பகலும் இரவும் வீணாகக் கழியாது. நம் வாழ்நாள் பொழுது பயனுள்ளதாய் இருக்கும். இப்பாடலில் நம் மூச்சுக்காற்று யானையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  யானையை பாகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் நாம் நம் மூச்சுக்காற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம்.

உதயசூரியன் அவன்!

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை ஒரு தாயைப் போல போக்கி அருளும் அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)

Like the fire indwells inside bamboo,
Our Lord Nandi resides inside our body - temple.
Like a mother, He remove our three impurities and
arise in our heart like the sun from the ocean.

விளக்கேற்றுவோம்!

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  – (திருமந்திரம் – 1818)

விளக்கம்:
விளக்கு ஏற்றி எல்லையற்ற பரம்பொருளை அறிவோம். விளக்கின் ஒளியின் முன் நம் வேதனைகள் அகலும். விளக்கு ஏற்றத் தூண்டும் ஞானமாகிய விளக்கு உடையவர்களுக்கு, ஏற்றப்படும் விளக்கினில் சிவன் ஒளியாய் காட்சி தருவான்.

Let we light the lamp and realize the eternal God.
Before the lamp light, our troubles will go away.
For those who have the light of knowledge,
in their lamp light, the Divine Light will show Himself.

தற்பெருமை ஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.  – (திருமந்திரம் – 2513)

விளக்கம்:
கரிய கால்களைக் கொண்ட கருடன் வான் வழியே கடந்து செல்வதை பார்த்து, பசுமையான செடிகள் நிறைந்த குளத்தினில் உள்ள கருநாகப் பாம்பு ஓடி ஒளிந்து கொள்ளும். அது போல, ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது கண்டு நாம் நம்முடைய தற்பெருமையை பேசாதிருப்போம்.

ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது போல், நாம் விதி முடிந்து இறைவனுடன் கலந்து விடும் போது, வாழ்நாளில் நாம் தேடிய பெருமைகளெல்லாம் பொருள் இல்லாமல் போய் விடும். இதை உணர்ந்து நாம் பெருமை பேசுவதை விட்டு அடக்கமாய் இருப்போம்.

(கருந்தாள் கருடன் – கரிய கால்களை உடைய கருடன்,   விசும்பு – ஆகாயம்,  இற – கடந்து செல்ல,  கருந்தாள் கயம் – பசுமையான செடிகள் உள்ள நீர்நிலை)

When the black footed bird, Garuda, fly over the sky,
black snake in the pond below will hide itself.
Like this, seeing that the river water cannot be consumed
once it merge with ocean, we should stop speaking our self pride.

எல்லாம் விதிப்படியே!

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. – (திருமந்திரம் – 45)

விளக்கம்:
கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் இறைவன் விதித்தபடி அல்லாமல் வேறு எப்படி இயங்க முடியும்? விதியின் வழியில் வந்த இன்பம் குற்றமில்லாதது. நாள்தோறும் அந்த சோதி வடிவான சிவனை துதிப்போம். அவன் வீடு பேறு அடையும் வழி காட்டும் சூரியன் ஆவான்.

ஆன்மிக இன்பம் மட்டுமே இயற்கையானது, விதி வழியானது, குற்றமில்லாதது.

(வேலை – கடல்,  விருத்தம் – குற்றம்,   நித்தலும் – எந்நாளும்,   பதி – வீடு)

This sea surrounded world is happening only by His fate.
There is no fault in enjoyment happening through fate.
Let we praise our Lord daily, He is our eternal light.
He guide us towards the divine path.

பனை மரத்தின் மேல் ஒரு பருந்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  – (திருமந்திரம் – 47)

விளக்கம்:
இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். அப்பெருமான் தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்திருப்பவர் அன்புடையவராய் இருப்பர். பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து, அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப் பற்றி நினையாமல் உணவுக்காக கீழிறங்கி வரும். அது போலவே சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனைப் பற்றிய நினைவில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

(மனை – இல்லறம்,  மாதவர் – பெருந்தவம் செய்பவர்)

Those who worship the Lord, even while in domestic life, are equal to sages.
Those who feel the existence of God in their heart, will have great affection.
Like the kite over the palm tree not aware of the fruit in the tree,
some people do not feel the inside God. They won't find the real Bliss.

கரும்பு கசக்கும் தேன் புளிக்கும்

கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய வானந்தம்
விரும்பியே யுள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.  – (திருமந்திரம் – 2976)

விளக்கம்:
நம் உடலில் காமமாகிய கரும்பும், அதன் சுவையாகிய தேனும் கலந்துள்ளது. அதே உடலில் தோன்றும் சிவானந்த வாசனையை உணர்ந்து நமது உள்ளம் அதை விரும்பியிருந்தால் மனம் மேலான உணர்வு அடையும். அதன் பிறகு கரும்பின் சுவை கசப்பாகவும், தேனின் சுவை புளிப்பாகவும் இருக்கும்.

சிவானந்த உணர்வை அடைந்து மனம் அதிலே பொருந்தி விட்டால், காம உணர்வு நம்மை விட்டு அகலும்.

(அரும்பும் – தோன்றும்,  கந்தம் – வாசனை)

In this body, cane like sexual desire and honey like its pleasure are there.
We have to feel the sprouted fragrance of Siva Bliss in our body,
Our mind soak in that feeling, reaching a higher state.
Then the sugarcane will be bitter in taste and the honey will be sour.

துரை


நஞ்சு உண்ட சிவபெருமான்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 41)

விளக்கம்:
திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே!

(புனம் – திருத்தப்பட்ட நிலம்,  கனம் – பெருமை,   வாள் – ஒளி,  நுதல் – நெற்றி)

Our Lord consumed deathly poison to save Devas.
We worship Him in our reformed heart.
The Lord who possess Uma as a part of Him,
conjoint with us like pairing deer.

மவுனமான நேரம்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.  – (திருமந்திரம் – 1896)

விளக்கம்:
மவுனம் என்பது வாக்கு, மனம் இரண்டுமே அமைதியாக இருத்தல். வாய் மட்டும் பேசாமல் இருப்பது ஊமையாகும். வாக்கு, மனம் ஆகியவற்றை அமைதியாக, செயலற்றவையாக வைத்திருப்பவரே தூய்மை உடையவர் ஆவர். அத்தகைய தூய்மை நிலையை இங்கு யார் அறிந்திருக்கிறார்கள்!

யோக நிலையில் இருப்பவர்கள் வாய் பேசாமல் இருந்தால் மட்டும் போதாது. மனமும் செயலற்று அமைதியாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் தூய்மை அடைவார்கள்.

(மூங்கை – ஊமை,   சுத்தர் – தூய்மை உடையவர்)

State of silence is stillness of speech and thought.
Remaining speechless is the state of dumbness.
When we attain speechless and thoughtless state, we become pure.
But who knows this pure state to bring in.

தாய் வீடென என்னுள் புகுந்தான்

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே.  – (திருமந்திரம் – 1728)

விளக்கம்:
கருவில் நாம் உருவான அன்றே ஐம்பூதங்களும் நம்முள்ளே குடி வந்தன. ஐந்து பூதங்களும் தம் இடத்தில் வாசல் வைத்து வழி ஏற்படுத்தி அருளினர். நம் தலைவனான சிவபெருமான், தன் தாய் வீடென உரிமையுடன் உள்ளே புகுந்தான் அவ்வாசல்கள் வழியாக. அவன் வந்துள்ள நோக்கம் நம்மை தன் அருளினால் ஆள்வதற்காகவே.

ஐம்பூதங்களின் இயக்கமே நாம் உயிர் வாழக் காரணமாய் உள்ளது. அந்த பூதங்களின் இடத்தில் ஈசன் வந்து ஆட்சி செய்யும் போது நம் வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

(தாயில் – தாய் + இல் – தாய் வீடு)

The five elements entered our body, once it formed in mother’s womb.
They made gates for their places and ruling us in their ways.
Lord Siva entered our body, as if His mother’s house,
through the gates, became the master of us.