பிராணாயாமம் – என்றும் இளமை

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.   – (திருமந்திரம் – 569)

விளக்கம்:
பிராணாயாமப் பயிற்சி செய்பவர்கள், மூச்சுக் காற்றை உள்வாங்கித் தன் வசப்படுத்தி அடக்குவதில் வெற்றி பெற்று விட்டால், அவர்களின் உடல் பளிங்கு போல் மாசு இல்லாது தூய்மையுடையதாக மாறும். வயதினால் முதுமை அடைந்தாலும், இளமையாகத் தோற்றம் அளிப்பார்கள். இதனைத் தெளிந்து குருவின் திருவருளும் பெற்று விட்டால், அவர்கள்  காற்றை விட மென்மையாக, அன்பானவர்களாக இருப்பார்கள்.

பிராணாயாமம் தொடர்ந்து செய்வோம், என்றும் இளமையாக இருப்போம்.

வளி – காற்று,  வயம் – வசம்,   காயம் – உடல்,    வேட்டு – விரும்பத்தக்க,    அளியன் – அன்பானவன்