சிவன் அருள் பெற்ற இராவணன்

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.  – (திருமந்திரம் – 350)

விளக்கம்:
இருபது தோள்களை உடைய இராவணன் கயிலாய மலையை பெயர்க்க பெரிய ஆற்றலுடன் முயற்சி செய்த போது, சிவபெருமான் தனது கால்களை சிறிது அழுத்த, வலி தாங்காமல் கதறி, தனது சிறுமையை உணர்ந்தான். ‘இறைவா’ என்று வருந்தி அழைத்த பிறகு, இராவணனுக்கு நீங்காத அருள் செய்தான்  சிவபெருமான்.

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், டம்பம், தர்ப்பம், அசூயை, இரீஷை ஆகிய பத்துத் தலைகள் கொண்டவன் இராவணன். அவன் சிவபெருமானின் வலிமையைப் பார்த்த பிறகு தனது சிறுமையை உணர்ந்தான். சிறுமையை உணர்ந்த அவனுக்கு நீங்காத இறைபக்தியை சிவபெருமான் அளித்தான்.