இறைவா போற்றி!

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.  – (திருமந்திரம் – 352)

விளக்கம்:
வானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம், தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம், மனம் வருந்தி, வாடிய முகத்துடன், தமது ஆணவமெல்லாம் ஒடுங்கிய நிலையில், ‘இறைவா போற்றி’ என்று சிவபெருமானை வணங்கினர். அப்போது ஈடு இணையில்லாத புகழுடைய சிவபெருமான், தன்னை வணங்கிய தேவர்களை எல்லாம் துன்பங்களில் இருந்து மீண்டு எழுந்து வரச்செய்தான்.