சிவனடியார்க்கு தீமை செய்யக்கூடாது

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. –  (திருமந்திரம் – 534)

விளக்கம்:
சிவனடியார்கள் மனம் கலங்கும்படியான நிலை ஒரு நாட்டில் ஏற்படக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாடும் அந்நாட்டின் சிறப்பும் அழிந்திடும். இந்திரனின் ஆட்சிப் பீடமும், நாட்டின் மன்னரின் ஆட்சிப் பீடமும் நாசமாகும். இது நம் நந்தியம்பெருமானின் ஆணை!


குருவுக்கு தீமையிழைக்கக் கூடாது!

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.  –  (திருமந்திரம் – 533)

விளக்கம்:
ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தை உபதேசம் செய்த தவஞானியான குருவின் மனம் நோகும்படியான செயல் எதையும் நாம் செய்யக்கூடாது. குருவின் மனம் நோகும்படியான தீமைகளைச் செய்தவர்கள் நூறு பிறவிகள் நாயாகப் பிறந்து கீழான வாழ்வு பெற்று மண்ணோடு மண்ணாவார்கள்.