ஞானாசிரியரை குருவாக ஏற்க வேண்டும்

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. –  (திருமந்திரம் – 536)

விளக்கம்:
முன்வினைகளைச் சுமப்பவர்கள் கன்மிகள். அவர்களை குருவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஞானாசிரியர்களை விட்டு கன்மிகளை குருவாக ஏற்கும் செயல், கையில் உள்ள மாணிக்கத்தை எறிந்து விட்டு காலில் அகப்படும் சாதாரணக் கல்லைத் தூக்கிச் சுமப்பவனின் விதி போன்றதாகும். கையில் உள்ள நெய், பால், தயிர் ஆகியவற்றை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத மாவை எடுத்து சாப்பிடுவது போன்றதாகும், கன்மிகளை நாடி குருவாக ஏற்றுக்கொள்ளும் செயல்.


ஞானகுருவுக்கு அவதூறு நேரக்கூடாது

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. –  (திருமந்திரம் – 535)

விளக்கம்:
நமக்கெல்லாம் ஞானவழியைக் காண்பிக்கும் குருவை நோக்கி பொய்யான குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாட்டில் நன்னெறியும் ஞானமும் தங்காது. நெடுங்காலமாக விளங்கி வரும் பல்வேறு துறைகளின் திறமைகள் எல்லாம் அழியும். நாடு பலவழிகளிலும் கெட்டு பஞ்சமும் வந்து சேரும்.