மூச்சை சுழுமுனையில் நிறுத்தினால் சிவனைக் காணலாம்

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே – 795

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று நடுவே உள்ள சுழுமுனையில் ஒன்றி நிற்காமல், வலப்பக்கமும் இடப்பக்கமாகவும் அலைந்து ஓடி வருந்துகிறது. சிவயோகியர் தமது மூச்சுக்காற்றை அப்படி அலைய விடாமல் நடுவாக சுழுமுனையில் நிறுத்தி நிதானிக்கிறார்கள். மூச்சுக்காற்று சுழுமுனையில் நிற்கும் போது அங்கே குண்டலினியும் ஒன்று சேர்ந்து நம் தலையின் உச்சியில் ஒளி விடும் தீபமாக நின்று விளங்குகிறது. அந்தத் தீபமே சிவமாகும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

அடுகின்ற – வருந்துகின்ற, அந்தணன் – தூய்மையானவன், யோகி,  பணி – பாம்பு (குண்டலினி)