மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.


வெற்றிலை விற்கும் கிழவி

எங்க ஊர்ல வெற்றிலை மொத்தமாக வாங்கனும்னா ரெண்டே கடைகள் தான் உண்டு. ஒரு கடை  சுமார் முப்பது வயதுள்ள இளந்தாரியால் நடத்தப்படுவது. இன்னொன்று ஒரு பாட்டியால் நடத்தப்படும் கடை. பாட்டிக்கு எழுபது வயசு இருக்கும், கொஞ்சம் கோபக்கார பாட்டி. துணை யாரும் தேவைப்படாமல் தானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார். வெற்றிலை முக்கிய வியாபாரம், அது போக பூஜைக்கு தேவையான பொருட்களும் வியாபாரம் உண்டு.

நான் முப்பது ரூபாய்க்கு வெற்றிலை வாங்குவேன். இளந்தாரி கடையில் வாங்கினால் வெற்றிலை எண்ணிக்கை கொஞ்சம் அதிகமிருக்கும். பாட்டியிடம் வாங்கினால் எண்ணிக்கை கம்மி தான், ஆனால் எடைக்கணக்கு ஒரே மாதிரிதான், 100 கிராம் பத்து ரூபாய்னா, ரெண்டு பேர் கிட்டயும் அதே விலை தான். நான் வாடிக்கையாய் வாங்குவது பாட்டியிடம் தான்.

எண்ணிக்கை வித்தியாசத்திற்கு காரணம் இதுதான் – இளந்தாரி வரும் வெற்றிலையை வாங்கி ஒரு கட்டு மட்டும் பிரித்து வைப்பார், தேவைப்படும் போதுதான் அடுத்த கட்டு பிரிப்பார். கேட்பவர்களுக்கு அப்படியே எடை போட்டு கொடுப்பார். பாட்டியின் வியாபார முறை வேறு. வரும் வெற்றிலையை பூராவும் பிரித்து தண்ணீரில் நனைத்து அடுக்கி விடுவார். வெயிலாக இருந்தால் அடிக்கடி தண்ணீரில் நனைத்து வாடாமல் பார்த்துக்கொள்வார். எடை போடும் போது ஒரு முறை தண்ணீரில் நனைத்துக் கொள்வார். தண்ணிரின் எடை சேர்ந்து கொள்வதால் வெற்றிலை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

பாட்டிக்கு லாபமும் அதிகம், நல்ல வெற்றிலையாக தருகிறார் என்ற பெயரும் கிடைக்கிறது. இது மாதிரி பாட்டிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். வேறு வியாபாரங்களும் செய்கிறார்கள், அவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களை நினைத்து கண்ணீர் விடும் கட்டுரைகள் சிலவற்றை படிக்க நேர்ந்தது. கண்ணீர் விடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் – ‘எங்க பாட்டி ஒரு மொதலாளிங்க’.


ஆக்னட்டிக் கதிர்கள் – விஞ்ஞானத்தின் அற்புதம்

Electro Ognatics –  இது சமீபத்திய விஞ்ஞானத்தின் புதிய பிரிவு. இதன் வருங்கால சாத்தியங்கள் நினைத்துப் பார்க்க பிரமிப்பானவை. மிண்ணனுவியலில் ஒரு நூறாண்டு காலத்தை ஒரே பாய்ச்சலாக கடந்து விட்டோம் என்றே சொல்லலாம். இந்த புதிய விஞ்ஞானம் பல துறைகளில் செயல்படப் போகிறது என்றாலும், மனிதனின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்தினால் சாவு என்பதே இனி இராது, 108 ஆம்புலன்ஸ்களை வேறு எத்ற்கு பயன்படுத்தலாம் என்று ஒரு குழு யோசித்து வருகிறது. மனிதன் தன் சக மனிதனைக் கொலை செய்வது அசாத்தியமாகிறது. கடலினால் சூழப்பட்ட இந்த உலகில் இனி இயற்கை மரணம் மட்டுமே நிகழும்.

மனித வாழ்வின் முக்கிய அங்கமாய் இருக்கப் போகும் ஆக்னட்டிக் கதிர்கள் செயல்படும் விதம் பற்றி எனக்கு முழுதாக தெரியும் என்றாலும், அதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். நம் உடலை சுற்றி சுமார் ஆறு அங்குல அடர்த்தியில் ஆக்னட்டிக் கதிர்களை உருவாக்கி விடுவார்கள். இது நமது உடலுக்கு ஒரு கவசமாய் செயல்படும். ஆக்னட்டிக் கதிர் உடையவனை அரிவாளால் வெட்ட முடியாது, துப்பாக்கியால் சுட முடியாது, நெருப்பினால் சுட முடியாது, பனியினால் உறைய வைக்க முடியாது. கீதையில் பகவான் கிருஷ்ணர் இதை பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். இந்தக் கதிர் செயல்பாட்டில் இருக்கும் போது துரதிர்ஷ்டவிதமாக ஏதாவது விபத்து நடந்து விட்டால் கூட, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் எழுந்து வந்து விடலாம்.

இந்த ஆக்னட்டிக் கதிர்களை அணிந்து கொள்வது மிகவும் சுலபம். சிம் கார்டு போன்ற சிப் ஒன்றில் உள்ளடக்கி விடக்கூடிய கதிர்கள் இவை. இனி வரப் போகும் மொபைல்கள் இந்த சிப்பை பொருத்திக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் முறையில் இந்த கதிர்களை மொபைல் மூலமாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கதிர்கள் கண்ணுக்கு புலப்படாதவை, எடை இல்லாதவை, தேவை இல்லாத நேரத்தில் ஆஃப் செய்து கொள்ளலாம்.

விருதுநகர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் இது பற்றிய ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று, இப்போது முழுமையடையும் நிலையில் உள்ளது. தலைமை விஞ்ஞானியிடம் பேசிய போது, இது தாமதமான முயற்சி என்றும், முன்பே செய்திருந்தால் நாம் காந்தியை இழந்திருக்க மாட்டோம் என்றும் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஆக்னட்டிக் கதிர் வீச்சு முறை நெருப்பு, நீர், ஆயுதப் பிரயோகம், கார் விபத்து, லாரி விபத்து, விமான விபத்து ஆகிய எல்லாவற்றிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது. சிறிய அளவில் கூட அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த ஆக்னட்டிக் கதிர்கள் அணுக் கதிர் வீச்சுக்களையும் தாங்க வல்லவை. இன்னும் ஒரு சில வாரங்களில் ‘ஆக்னோ’ என்ற பெயரில் இந்த பொருள் விற்பனைக்கு வருகிறது, மாதம் எண்ணூறு ரூபாய் என்ற அளவில் அதன் விலை இருக்கும் என தெரிகிறது. புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு இருவருக்கான ஒருங்கிணைந்த கதிர் வீச்சு வடிவமைத்து தரப்படும், கொஞ்சம் விலை அதிகமாய் இருக்கும். கடைசியாய் ஒரே ஒரு விஷயம் – இந்தக் கட்டுரையை நம்பி உங்கள் ஹெல்மெட்டை நீங்கள் தூர எறிந்து விட்டால், அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.


அனுபவத்துல சொல்றேன்

என்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர்,  அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்க எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.

அனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.

இதுக்காகவே வீட்டில்  தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன்,  இதுக்கான  தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும்.  நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே?

அனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.


கடவுள் எனப்படும் அனானி!

பிரியமான மனிதர்களுக்கு,

அனானி எழுதுவது. நான் பெயர் இல்லாதவன், உருவமற்றவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதால் அனானி என்று சொல்லி கொள்கிறேன். அதையே எனது பெயராக்கி விடாதீர்கள். வரலாற்றில் இப்படித்தான் நிறைய நடந்திருக்கிறது. ஆன்மீக சிந்தனை என்ற பெயரில் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் எனது இன்பாக்ஸ்ஸில் வந்து சேர்ந்து அது பல டெட்ரா பைட்ஸ்ஸை தாண்டி விட்டது. உங்கள் கேள்விகள் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றாலும், உங்கள் சந்தேகங்களுக்கு நான் பொறுப்பில்லை என்றாலும் FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கு பதில் தருகிறேன்.

1. இந்த உலகத்தை படைத்தது யார்?
டெக்னிக்கலாக தெரிய வேண்டும் என்றால் டார்வின் படிக்கலாம். வேதாந்தமாக வேண்டுமென்றால் அவரவர் உலகை அவர்களே படைக்கிறார்கள்.

2. விதி என்பது உண்மயா?
உண்மை. இதற்கு நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்.

3. மதத்தின் பெயரால் நடக்கும் சண்டை, சச்சரவுகள் பற்றி?
அவை மதத்திற்காகவோ, அவர்களின் கடவுளுக்காகவோ இல்லை. தன்னுடய புரிதலும் நம்பிக்கையும் தான் சரியானது என்று வாதிடுகிறார்கள்.

4. இவற்றை எப்படி நிறுத்துவது?
அது என் வேலை இல்லை.

5. மரணத்திற்கு பிறகு?
செத்து பார். தெரியும்.

6. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏன்?
வலிமை உள்ளவன் வேண்டியதை அடைவான். அது இல்லாதவன் இப்படி கேள்விகள் கேட்பான்.

7. நாத்திகம் பற்றி?
அதுவும் ஒரு நம்பிக்கைதான்.

8. யோகா, தியானம் மூலம் கடவுள் தன்மை அடைய முடியுமா?
கடவுள் தன்மை என்று ஒன்று கிடையாது. முயன்றால் தன்னுடைய தன்மை உணரலாம்.

9. பேய், பிசாசுகள் உண்டா?
உண்டு. அவை எல்லோருடய எண்ணங்களிலும் உள்ளன.

10. பிரார்த்தனைகளால் பலன் உண்டா?
சந்தேகத்துடன் செய்தால் பலன் கிடையாது.

11. அரசியல் பற்றி?
சமூக வாழ்விற்கு அது மிகவும் அவசியம்.

12. அரசியலில் முறைகேடுகள் நிறைய உள்ளதே?
அவை service charges.

13. விபத்துக்கள் இப்போது நிறைய நடக்கிறதே?
விஞ்ஞான வள்ர்ச்சியின் ஒரு சிறிய பக்கவிளைவு.

14. பூஜைகள், யாகங்கள் செய்தால் பலன் உண்டா?
அவற்றை உருவாக்கியவர்களைத்தான் கேட்க வேண்டும்.

15. அவை கடவுளால் சொல்லப்பட்டதில்லையா?
நான் உருவாக்கியிருந்தால் இன்று உலகில் ஒரே வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும்.

16. அப்படியானால் நீங்களே ஒரு வழிபாட்டு முறை உருவாக்கி இருக்கலாமே?
என்னை வழி படச்சொல்லி நான் யாரையும் சொல்லவில்லை.