உயிரிலும் உள்ளத்திலும் நீங்காது இருப்பவன்!

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.   – (திருமந்திரம் – 431)

விளக்கம்:
நம் உள்ளத்தில் வசிப்பவன் சிவபெருமான். அவன் நம் உயிரிலும் சோதியாகக் கலந்திருக்கிறான். அவனால் நம் மனத்தை விட்டு ஒரு அடி கூட நகர முடியாது. நம் உள்ளமும் நம்மிடம் தான் இருக்கிறது, உயிரும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனாலும் அவற்றில் கலந்திருக்கும் நம் பெருமானின் உருவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை!

கதை இல்லாத மனிதன்

“நான் நல்லவளா? இல்லையா? அதச் சொல்லு மொதல்ல”.

இருவருக்கும் சகலமும் பிசிபிசுத்துப் போயிருந்த நேரம் அது. இந்தக் கேள்வியால் என் காதும் பிசுபிசுத்தது.

“ஒனக்கு என்ன பதில் வேணும்னு சொல்லு!”

“என்ன நீ நல்லவன்னு சொல்லு. ஒனக்காக நான் என்ன வேணாலும் செய்றேன்”.

“நீ செஞ்சது போதும்! தெம்பில்லடி எனக்கு”.

அடுத்து என்ன பேசினோம் என்பதில் எனக்கு நாட்டமில்லை. அவள் சொன்ன “என்ன வேணாலும் செய்றேன்” திரும்பத் திரும்ப தலைக்குள் சுத்திக் கொண்டிருந்தது.

“எனக்காக ஒன்னு செய்யேன்! நீதான் ரொம்ப நல்லவளாச்சே?” கேட்டு விட்டு சசியின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

“என்னடா செய்யணும் உனக்கு? கொலை எதுவும் பண்ணனுமா?” அவ்வளவு நெருக்கமாக முகத்தைக் கொண்டு வந்து கேட்ட போது மூச்சடைத்தது. எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? “திருட்டு முழி முழிக்காத. இதெல்லாம் ஊர் ஒலகத்துல நடக்குறது தான்”. கேலி செய்கிறாளோ?

அவள் கேலி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். நன்றாகக் குளித்தோம், சுத்தமான உடை அணிந்தோம். நல்ல ஃபில்டர் காபி தயாரித்தோம், ஆளுக்கொரு கோப்பையை நிரப்பி எதிரெதிரே அமர்ந்தோம். முக்கிய முடிவெடுக்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையா?

இவள் மிகத் தெளிவானவள். இவள் காபி குடிக்கும் விதமே அதைச் சொல்லியது. “சொல்லு இப்ப” அதில் ஆர்வம் எதுவும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். விடை தெரியவில்லை.

“என்ன சொல்ல?”

மிகப் புனித உறுப்பின் பெயர் ஒன்றை வசையாக உச்சரித்தாள். “யார? எங்க? எப்பிடி?”

“யாருங்கிறத கடைசியா சொல்றேன். எப்படிங்கிறத சொல்றேன், அது தான் முக்கியம்”.

சொல்லு என்பது போலப் பார்த்தாள்.

”கூர்மையான இரும்புத் துண்டு ஒன்னு தருவேன். அதை வச்சுத் தொடைல ஆரம்பிக்கணும். அப்படியே ஒனக்குப் பிடிச்ச லைன் ட்ராயிங் ஒன்னு வரையணும். யோசிக்க வேணாம்! அவன் உன் கைக்கு சுலபமா சிக்கக் கூடியவன் தான்”.

“கட்டி வைக்கணுமோ?”

“தேவையில்லை. உன் அழகே அவனைக் கட்டிப் போடும்”. இதைச் சொன்னதற்கு ஒரு புதுவிதமான வசை கிடைத்தது. “இந்தக் காபிய எவ்வளவு ரசிச்சுக் குடிக்கிற! அப்படி ரசிச்சுச் செய்யணும் அத”.

“இதெல்லாம் செஞ்சா நீ என்ன நல்லவன்னு சொல்லுவியா?”

“நான் சொல்ல வேண்டியதில்ல. நீ நல்லவளாவே ஆயிடுவே!”

“அப்படி யாருப்பா அது? ஒனக்கு வேண்டாதவன்?”

“அவன் யாருக்குமே வேண்டாதவன்”.

“கொழப்பாத ரொம்ப. யாருன்னு சொல்லு”.

“நான் தான் அது. என்னத் தான் நீ அப்படி அனுபவிக்கணும்”.

நான் சீரியஸாகத் தான் சொல்றேன் என்பதைப் புரிய வைக்க இன்னும் நான்கைந்து வசைகளை அவளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது. “ஒனக்கு என்ன ப்ரச்சனை? அதச் சொல்லு மொதல்ல”

“என்னத்தச் சொல்ல? யாரப் பத்திப் பேசினாலும், அவங்களப் பத்தி ஒன்னு ரெண்டு விஷயமாச்சும் இருக்கும். என்னப் பத்திச் சொல்ல என்ன இருக்கு? சொல்லு. எனக்குன்னு ஒரு கத இல்ல இந்த ஒலகத்துல. நான் ஏன் இருக்கணும் இங்க? நீ முடிச்சிரு”.

சேர்ந்த வினைகளைச் சுட்டுப் பொசுக்குவோம்!

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.   – (திருமந்திரம் – 430)

விளக்கம்:
நினைத்த பொழுது எல்லாவற்றையும் மொத்தமாக அழித்து விடக்கூடிய வலிமையான கடவுள் ஒன்றுண்டு. அது நம் சிவபெருமானாகும். நாம் நம்முடைய வினைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டு நம் பெருமானைச் சார்ந்திருப்போம். நமக்கெல்லாம் உடலைக் கொடுத்த சிவபெருமான், எங்கும் கலந்திருக்கும் தன்னை நினைத்திருக்கும் வழியையும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். நாம் தான் அதை உணர்ந்து அந்த வழியில் செல்ல வேண்டும்.

எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை!

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.   – (திருமந்திரம் – 429)

விளக்கம்:
முதலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தில் இருந்து உலகம் தோன்றி பலவாறாய் வளர்ந்தது. பேரழிவின் போது இந்த உலகம் அழிந்து போனாலும், அந்தப் பழைய வெற்றிடம் அழியாது. உலகம் தோன்றுவதற்கும் அழிவதற்கும் இடையே உள்ள காலம் மட்டும் தான் பிரமன், திருமால் ஆகியோருக்குத் தொழில் இருக்கிறது. உலகம் அழியும் போது அவர்களது தொழிலும் அழிந்து விடும்.

பாழ் – வெற்றிடம், அழிதல்
செய்தி – தொழில்

வீடுபேறு – நான்காவது நிலை

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.   – (திருமந்திரம் – 428)

விளக்கம்:
நித்திய சங்காரம், நமக்கு அன்றையப் பொழுதின் களைப்பிலிருந்து உடலுக்கு இளைப்பாறுதல் தருகிறது. ஆயுட் சங்காரம், உடலுடன் மனம் முதலியவற்றிற்கும் இளைப்பாறுதல் தருகிறது. சருவ சங்காரமே நம்மை உய்விக்கும் சங்காரமாகும். ஏனென்றால் சருவ சங்காரத்தில், பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய நிலைகளைத் தாண்டி வீடுபேறு எனும் நான்காவது நிலையை அடைகிறோம்.

இடர் நீக்கும் சங்காரம்!

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.   – (திருமந்திரம் – 427)

விளக்கம்:
நித்திய சங்காரம், கருவினால் உருவான நமது உடலின் துயரங்களை நீக்கும். ஆயுட் சங்காரத்தில் உடல், உயிர் ஆகியவற்றின் துயர் நீங்கும். சருவ சங்காரம் இவற்றை எல்லாம் கடந்து சூக்கும உடலின் துயரையும் அழிக்கிறது. துயரங்கள் நீங்கி நாம் உய்யும் பொருட்டே சங்காரம் நடைபெறுகிறது. சங்காரம் என்பது அவனது அருளே ஆகும்.

சூக்கும உடலும் அழிய வேண்டும்

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 426)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களை வேறு விதமாகச் சொல்வதென்றால், நித்திய சங்காரத்தில் தூல உடலும் சூக்கும உடலும் தற்காலிக ஓய்வு பெறும் (தூக்கம்). ஆயுட் சங்காரம் என்பது தூல உடல் மட்டும் அழிவது (மரணம்). சருவ சங்காரம் என்னும் சுத்த சங்காரத்தில் தூல உடலும் அழிந்து, சூக்கும உடலும் அழியும். நமது ஆணவம் அழியப் பெற்றால் சிவனருளைப் பெற்று உய்வடையலாம்.

நமது மரணத்தின் போது, சூக்கும உடலும் அழிய வேண்டும். அதுவே நாம் உய்வடையும் வழி. அதற்கு வேண்டிய சிவனருளை வாழும் போதே பெற வேண்டும்.

மூவகைச் சங்காரங்கள்!

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 425)

விளக்கம்:
சிவபெருமான் மூன்று வகையான சங்காரங்கள் செய்வது உண்டு. அவை நித்திய சங்காரம், ஆயுட் சங்காரம், சருவ சங்காரம் ஆகியனவாகும். நித்திய சங்காரம் என்பது நம்முடைய அன்றாடத் தூக்கம் போன்றது. ஆயுட் சங்காரம் என்பது நமது ஆயுள் முடிந்தவுடன் நமது உடல் மட்டும் அழிவதாகும். சருவ சங்காரம் என்பது உடலுடன் நமது ஆன்மாவும் தனது தொழிலை விட்டுச் செயலற்று இருப்பது.

ஆணவம் அழியப் பெறுவதே நம்மை உய்வடையச் செய்யும் சங்காரமாகும். நாம் அந்தச் சங்காரத்தைச் செய்தால் சிவனருள் கிடைப்பது உறுதி.

அழிவு நிச்சயம்!

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.   – (திருமந்திரம் – 424)

விளக்கம்:
மலைகளின் மேலே உள்ள மேகங்களில் இருந்து மழையாக இறங்கி வரும் குலமகள், நீர்நிலைகளிலும், கடலிலும் தங்கி நமக்கெல்லாம் வாழ்வளிக்கிறாள். அதே நேரத்தில், நம் சிவபெருமான் தான் பக்குவம் செய்த இந்த மொத்த உலகத்தின் மீது நெருப்பை திரட்டி வைக்கிறான். அதனால் இந்த உலகிற்கு அழிவு என்பது உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

சிவபெருமானின் வல்லமை

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.   – (திருமந்திரம் – 423)

விளக்கம்:
பல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான்  அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.

பதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை