ஞானம் தரும் நந்தி!

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.   – (திருமந்திரம் –142)

விளக்கம்:
ஞானத்தை தரும் புண்ணிய வடிவான எங்கள் நந்தியம் பெருமானை புத்தியில் வைத்து வழிபடுவர் புண்ணியர் ஆயினர். அவர் தம் வாழ்நாள் முடிந்த பின்னர் விண்ணை அடைந்து நாதனான சிவபெருமானின் நடனத்தை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து, அப் பெருமானை நோக்கி வேதம் துதித்திடுவார்.

(போதம் – ஞானம், அறிவு.   நயனம் – கண்)

திருவடி ஞானம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே.  – (திருமந்திரம் –141)

விளக்கம்:
நான் எப்போதும் சேர்ந்திருப்பது நந்தியம்பெருமானின் திருவடியை. என் நினைவில் எப்போதும் இருப்பது அப்பெருமானின் திருமேனி. நான் வணங்குவதும், பெயர் சொல்லித் துதிப்பதும் நந்தியின் திருநாமத்தை. என் அறிவில் நிலைத்து நிற்பது நந்தியின் திருவடி பற்றிய ஞானமே!

ஆர்ட்டிஸ்டு!

அவரை ஆர்ட்டிஸ்ட்ன்னு தான் கூப்பிடுவோம். பொதுவா லெட்சுமி படம்னா,  சாமி ஒல்லியா இருக்கும், ஒரு ரெடிமேட் சிரிப்ப ஒட்ட வச்சிருப்பாங்க. கையில இருந்து விழுற தங்கக்காசுக்கும் லெட்சுமியோட தோரணைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா ஆர்ட்டிஸ்ட்  திருமகள் படத்த வரைஞ்சார்னா, வடிவமே செழிப்பா இருக்கும், கைலேருந்து தங்கமெல்லாம் விழாது, ஆனா ஒலகத்துல உள்ள மொத்தப் பணமும் என்கிட்டதாண்டா அப்படிங்கிற தோரணை இருக்கும். ஓவியனிக்கே உள்ள சாபக்கேடு அவன் கேக்குற துட்டு கெடைக்காது. ஆர்ட்டிஸ்டும் சிரிப்பு மாறாம குடுக்கிற துட்ட வாங்கிக்கிடுவார். “ஓவியனுக்கு உண்டான துட்ட குடுக்காம படம் வாங்கிட்டுப் போறவனுக்கு விருத்தியே இருக்காது”ன்னு சொல்வேன். “சேச்சே! அப்பிடில்லாம் சொல்லத” என்பார். அவருக்கென்ன? பெண்டாட்டி, புள்ளைங்க இருந்தா துட்டோட அருமை தெரியும். கல்யாணமாகி பத்து வருஷத்துல கட்டினவள ஏதோ ஒரு நோய்க்கு பறி குடுத்திட்டார்.

எப்பவுமே ரொம்ப நெதானமா பேசுற ஆளு, அன்னைக்கு அவரோட பதட்டத்த சிகரெட் பிடிச்சிருந்த விரலே காட்டிக்குடுத்துச்சு.

”என்ன ஆர்ட்டிஸ்ட் விஷயம்”ன்னு கேட்டேன்.

“நாகர்கோவில்ல ஒரு குடும்பம் ராதாக்ருஷ்ணன் படம் கேட்டாங்க. ரொம்ப வசதியானவங்க, ஒரே பொண்ணு. அந்தப் பொண்ணு ஆஸ்த்ரேலியால படிச்சு அங்கயே ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்கு. ரெண்டே வருஷத்தில  பத்திட்டான் போல! இப்போ இங்கதான் அந்த பொண்ணு இருக்கு கைக்கொழந்தையோட. என்னா ரசனைங்கிற அவளுக்கு!”

“அப்ப நாங்கல்லாம் ரசன கெட்டவனுங்க. என்ன?”ன்னு கேட்டதுல கொஞ்சம் பதட்டம் கொறஞ்சி சிரிச்சார்.

“பெயிண்டிங்கப் பாத்து கொஞ்ச நேரம் பித்து பிடிச்ச மாதிரி நின்னா. என்ன நெனச்சாளோ தெரில, அப்படியே என்மேல வந்து விழுந்திட்டா. நான் கோவத்தோட எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன்”ன்னு சொன்னவரப் பாத்து பாவமா இருந்தது.

“ஆர்ட்டிஸ்டு! அது வெளிநாட்டுல வளந்த புள்ள, அங்க இப்படித்தான் பாராட்டுவாங்க போல” என் வயித்தெரிச்சலை மறைக்க என்ன பாடுபட வேண்டியிருக்கு?

“ஏன்யா, பாராட்டுறதுக்கும், ஆசையோட பிடிக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன்”ன்னு கேட்டவர் “அம்பத்தாறு எங்க இருக்கு, இருவத்தாறு எங்க இருக்கு”ன்னு தனக்குத் தானே புலம்பினார். அதுக்கப்புறம் ரொம்ப நேரம் பேசவேயில்ல அவர். நானும் என்ன பேசன்னு தெரியாம ஃபோன எடுத்து நோண்டிகிட்டுருந்தேன்.

கிளம்பும் போது மெதுவாகச் சொன்னார் “சீக்கிரம் நாகர்கோவில்ல போய் செட்டில் ஆகிடுவேன்னு நெனைக்கேன். அவங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருங்களேன்னு கூப்பிடுறாங்க”.

இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், நேத்து தற்செயலா எதிர ஆர்ட்டிஸ்டப் பாத்தேன். வீட்டுக்கு கூப்பிட்டு டீ போட்டு குடுத்தார். என்னாச்சுன்னு கேட்டேன்.

“ஆஸ்திரேலியாக்காரன் நாகர்கோவில் வந்திட்டான்!” சிரிச்சுகிட்டே சொன்னார்.

அவருடைய லேட்டஸ்ட் பெயிண்டிங்கில் எல்லாம் பெண்களிடம் வேறு சாயல் வந்திருந்தது.

புலன்கள் எல்லாம் நம் வசமாகும்

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.  – (திருமந்திரம் –140)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானை விருப்பத்தோடு சந்தித்தால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்து புலன்கள் விடுபட்டு உள்முகமாகத் திரும்பும்.

புலன்களை அடக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. சிவபெருமானின் தரிசனம் கிடைத்தால் அதெல்லாம் தானே நடக்கும்.

குருவே சரணம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.  – (திருமந்திரம் –139)

விளக்கம்:
குருவை நேரில் பார்த்தால் நமக்கு மனத்தில் தெளிவு உண்டாகும். குருவின் பெயரை உச்சரித்தாலும் தெளிவு உண்டாகும். குரு சொல்லும் வார்த்தைகள் தெளிவு தரக்கூடியவை. குருவின் உருவத்தை நினைத்துப் பார்த்தால் கூட தெளிவு கிடைக்கும்.

சிவலோகம் அவன் திருவடியில்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.  – (திருமந்திரம் –138)

விளக்கம்:
ஆராய்ந்து பார்த்தால், சிவனின் திருவடியே சிவம் என்பது நமக்குப் புரியும். இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவலோகம் என்பதும் புரியும். சொல்லப் போனால் திருவடியே மோட்சத்திற்குரிய வழியாகும். உள்ளம் தெளிந்தவர்க்கு சிவனின் திருவடியே புகல் இடம் ஆகும்.

(தேரில் – ஆராய்ந்தால்)

திருவடியை உறுதியாகப் பற்றுவோம்

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. – (திருமந்திரம் – 137)

விளக்கம்:
சிறு அணுவாகிய நாம், படைப்பு அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த சிவபெருமானின் திருவடியைக் கண்டாலும், அங்கே நிலை கொண்டு தங்குவதில்லை. நமக்கு அவன் திருவடியை விட்டால் வேறு போக்கிடம் ஏது?   தன் உடலில் நிற்கும் உயிர் கடைசியாகச் சேரும் இடம் எதுவென்று உணர்ந்து கொள்பவர்கள், இறைவனின் திருவடியை  உறுதியாகப் பற்றிக் கொள்வார்கள்.

https://www.youtube.com/watch?v=xL9omtbwqcw

கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-02

ஒரு முழுமையான அழகுடைய பெண்ணைப் பார்த்தால், கண் நல்லாயிருக்கு, மூக்கு நல்லாயிருக்கு என்று பிரித்துச் சொல்லத் தோன்றாது. அது மாதிரி தான், நம்முடைய டிசைன், பார்ப்பவரை முழுமையான அளவில் ஈர்க்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்று அர்த்தம். பார்ப்பவருக்கு பேக் கிரவுண்ட், படம், டைப் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்கத் தோன்றக்கூடாது.  நாம் தான் நமது டிசைனின் முதல் பார்வையாளர், மனதளவில் தள்ளி நின்று, வேறு யாரோ செய்த டிசைனைப் பார்ப்பது போல பார்க்கும் மனோபாவத்தை பழகிக் கொள்வது நல்லது.

முதல் பாகத்தில் சொன்னது போல, டிசைனிங் ஆரம்பிக்கும் முன், சைஸ் தெரிந்து கொள்வது நல்லது. நம்முடைய முதல் ஸ்டெப், டாக்குமெண்ட் சைஸில் மேட்டரின் மொத்த அளவை இன்புட் செய்வதாக இருக்க வேண்டும். வெட்டுதல், மடித்தல் போன்றவை வரும் இடங்களில் Guide Lines போட்டுக் கொள்வது நல்லது. இப்படி ஆரம்பித்து வேலை செய்வது, நல்ல சாலையில் வண்டி ஒட்டுவது போல எளிதாக இருக்கும். குத்து மதிப்பாக ஒரு A4 documentல் ஆரம்பித்து மனக்கணக்கிலேயே வேலை செய்வது, ரோடு இல்லாத இடத்தில் வண்டி ஓட்டுவது போன்றதாகும், பாதியில் வழி தவறிப் போகும் வாய்ப்புண்டு. இதை over confidence என்றும் சொல்லலாம். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக இங்கே http://www.dayfold.com/Artwork/TabId/311/ArtMID/1018/ArticleID/17/Artwork-document-size-when-using-Cutter-Guides.aspx

புதிதாக வேலை பழகுபவர்களுக்கு, இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு. போட்டோஷாப்பிலும் கோரல்ட்ராவிலும் தெரிந்த toolsகளைக் கொண்டு, அந்த வட்டத்துக்குள் டிசைனை முடிப்பது. பெரும்பாலனவர்களுக்கு இதுதான் சாத்தியம், சுலபமான வழியும் கூட. இன்னொரு வழிமுறை, மனத்தில் தோன்றும் சில சித்திரங்களை எப்படி கணினியில் செயல்படுத்துவது என்று யோசித்து அந்த வழிமுறையை பழகிக் கொள்வது. கூகுளில் தேடினால், நமக்குத் தேவையான tutorials கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் உள்ள தலைப்பிற்கு fire effect இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும், ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாது. http://10steps.sg/tutorials/photoshop/text-on-fire-effect/ என்ற முகவரிக்குப் போனால எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது போல தொடர்ந்து பல புது விஷயங்களை தெரிந்து கொள்வது க்ரியேட்டிவிட்டிக்கு உதவும்.

இன்னொரு முக்கிய விஷயம், சில நல்ல க்ரியேட்டிவிட்டி உள்ளவர்கள் கூட டிசைனை எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறுவார்கள். நிறைய அலங்கார வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினால் finishing அழகாக இருக்கும். ஆனால் அதைத் தாண்டி இன்னும் மெருகேற்றலாம் என்று நினைப்பார்கள். ‘When your work speaks for itself, don’t interrupt’ என்றொரு பாடம் உண்டு. இந்த மனப்பயிற்சி முக்கியமான  விஷயம். சில சமயம், ஆரம்பித்து பத்து நிமிஷங்களில், நாம் எதிர்பார்ப்பதை விட நல்ல டிசைன் அமைந்து விடுவது உண்டு, அதோடு அந்த டிசைனை முடித்து விடுவது நல்லது. இன்னும் ஏதாவது செய்து பார்ப்போமே என்று நினைப்புத் தோன்றுவது வாடிக்கை, அந்த நினைப்பை அலட்சியப்படுத்துங்கள்.

அடுத்த பாகத்தில் Color Management பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01 இங்கே.

செல்லமா அடிச்சா வலிக்குமா?

கிருத்தியைத் தேடி ராசு மாமா வந்தால் ஞாயிற்றுக்கிழமை விடிஞ்சாச்சுன்னு அர்த்தம். கிருத்தி இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கிறாள். இருக்கிறாள்னு தான் சொல்லணும், படிக்கிறாள்னு சொன்னால் பிறகு நமக்கு படிப்பு வராமல் போய் விடும். இந்த ஞாயிறு எட்டு மணிக்கெல்லாம் வந்து கிருத்தியை எழுப்பி விட்டார்.

“Boring fuddy-duddy uncle” என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

“நல்லா கண்ணத் தொறந்து பாரு கிருத்தி. ஜீன்ஸ், டி-ஷர்ட்ல வந்திருக்கேன். என்னைப் போய் ஓல்ட் ஃபேஷன்கிறியே”.

“மாமா. ஃபேஷன்லாம் ட்ரஸ்ல இல்லை. மனசுல இருக்கணும்”.

“சரி. இன்னைக்கு ஐஸ் க்ரீம் வாங்கலாமா?”

“You are moronic மாமா”.

“ஏடி! மாமாவை முட்டாள்னு சொல்லக் கூடாது” கிச்சனிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

“இதுலாம் மட்டும் இந்த அம்மாவுக்கு நல்லா காதுல கேட்கும்” கிருத்தி மெதுவாக மாமாவிடம் சொன்னாள். “மாமா! யாருகிட்டயும் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் வேணுமான்னு கேட்கக் கூடாது. குடுக்கணும்னு நெனச்சா வாங்கி குடுத்துறணும். ஐஸ்கிரீம் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?”

“கரெக்ட். சரி என்ன ஐஸ் கிரீம்? வெணிலா?”

“லைஃப்பே வெணிலாவா இருக்கு. ஐஸ்கிரீம்லயும் வெணிலாவா?” கிருத்தி கேட்டாள்.

“நீ என்ன சொல்ற?” மாமாவுக்கு ஒண்ணும் புரியலை.

”பின்ன? என்ன லைஃப் இது? ஒரே போர். இந்த அப்பாவாச்சும் இன்னொரு கல்யாணம் பண்ணலாம்” வேணும்னே அம்மாவுக்கு கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லி மாமாவிடம் ஒரு குட்டு வாங்கினாள்.

“சரி சொல்லு. என்ன ஃப்ளேவர் வேணும்?”

“அமெரிக்கன் டிலைட்”.

“அமெரிக்கன் டிலைட்டுக்கும் இட்டாலியன் டிலைட்டுக்கும் என்ன வித்தியாசம்?” மாமா வெணிலா தவிர வேறு ஐஸ் கிரீம் ருசித்ததில்லை.

“அமெரிக்கன் டிலைட்ல பாதாமும் பிஸ்தாவும் இருக்கும். இட்டாலியன்ல முந்திரிப் பருப்பும் செர்ரி பழமும் இருக்கும்” கிருத்தி விளக்கினாள்.

“அப்ப ப்ரபாவுக்கும் சேத்து வாங்கிடுறேன்” ப்ரபா கிருத்தியோட ஃப்ரெண்ட். ஞாயிற்றுக்கிழமை தோறும் விளையாட வந்திருவாள்.

“ரெண்டு வாரமா ப்ரபா வரல மாமா. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி வந்ததுல இருந்து அவள கைல பிடிக்க முடில. எப்பப் பாத்தாலும் அது கூடவே வெளையாண்டுகிட்டு இருக்கா”.

“ண்ணா! ரெண்டும் வெளையாடுறதப் பாத்தா, நாய் எது பிள்ளை எதுன்னே தெரிய மாட்டேங்குது” அம்மாவின் குரல்.

மாமா ஐஸ்கிரீம் வாங்கப் போன கொஞ்ச நேரத்தில் ப்ரபா வந்தாள். எப்போதுமே இல்லாத ஒரு சோகம் அவள் முகத்தில் இருந்தது.

“ஏம் புள்ள ஒரு மாதிரியா இருக்க?” கிருத்தி கேட்டாள்.

“பஸ்டர வேற வீட்டுக்கு குடுத்துட்டாங்க” ப்ரபா அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏம்பா?”

ப்ரபா கையைக் காட்டினாள். உள்ளங்கையின் ஓரத்தில் கடிபட்ட காயம் இருந்தது.

“கடிச்சிருச்சா? கடிக்கிற நாய யாராவது வீட்ல வச்சிருப்பாங்களா? அதான் குடுத்திருப்பாங்க” ஆறுதல் சொன்ன கிருத்தியை தலையில் குட்டினாள் ப்ரபா.

“நான் குட்னது வலிக்குதா?” ப்ரபா கேட்டாள்.

“சேச்சே! நீ செல்லமாத் தானே குட்டினே?” வலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் கிருத்தி.

“பஸ்டரும் செல்லமாத் தான் கடிச்சான்”.

“புரியுதுடா! ஆனா நீ சொல்றது நம்ம பேரண்ட்ஸுக்குப் புரியாதே” கிருத்தி சமாதானம் சொன்னாள்.

ராசு மாமா ஐஸ்கிரீமோடு வந்தார். “இன்னொரு ஐஸ்கிரீமா? இத ப்ரபாவுக்கு குடுத்துருவோம்” கிருத்தி சொன்னதை மாமா புரிந்து கொண்டு அமெரிக்கன் டிலைட்டை ப்ரபாவிடம் கொடுத்தார்.

“I feel a good rapport here” என்றார் அப்போது தான் வீட்டுக்குள்ளே வந்த கிருத்தியின் அப்பா.

நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.

அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.

“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.

“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.

“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.

“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.

“எந்த ஊருப்பா நீ?”

“மதுர”

“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”

“பி.எஸ்சி”

“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.

“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.

அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.

“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.

அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.