தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
நீசர் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. – (திருமந்திரம் – 105)

விளக்கம்:
ஈசன் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளுக்கு அப்பாற்பட்டவன். தாமரை மொக்கு போன்ற அந்த சிவபெருமான்  உலகின் பெருந்தெய்வம் ஆவான். தெய்வ நினைப்பில்லாத நீசர்கள் அது இது என்று பிதற்றுவார்கள். மனத் தூய்மை உடையவர்கள் இறைவனின் வேர் அறிந்தார்களே!

(தூசு பிடித்தவர் – தூய்மையானவர்)


மூவரும் ஒருவரே!

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.   –  (திருமந்திரம் – 104)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவன், அழகிய மணிவண்ணனாகிய திருமால், தாமரை மலரில் எழுந்தருளும் பிரமன் – இவர்கள் மூவரும் அழித்தல், காத்தல், படைத்தல்  ஆகிய தமது தொழில்களினால் வேறுபட்டுத் தோன்றுகிறார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் ஒருவரே என்பது புரியும். இந்த உலகத்தார் உண்மை புரியாமல், இவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நினைத்து தமக்குள் பிணங்கி நிற்கிறார்களே!


தளர்விலன் சங்கரன்!

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே.   –  (திருமந்திரம் – 103)

விளக்கம்:
சிவபெருமானால் படைக்கப்பட்ட இந்த உலகம் எப்போதும் இளமையானது, அழகுள்ளது, ஒரு எல்லைக்குள் இருக்கிறது. இந்த உலகின் மொத்த காலமும் கணக்கிட முடியாதது. இதையெல்லாம் உணர்ந்தால் அந்த சங்கரன் சோர்வே இல்லாதவன் என்பது புரியும். அடியார்கள் சொல் அளவில்  பிரமனையும் திருமாலையும் சேர்த்தே புகழ்கிறார்கள், ஆனால் எல்லா பெருமையும் சிவபெருமானையே சேர வேண்டும்.


பிறவிப் பிணி இல்லாத சித்தர்கள்

கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.   –  (திருமந்திரம் – 102)

விளக்கம்:
சிவ அருளில் கலந்திருக்கும் காலாங்கர், அகோரர், நன்மை தரும் மாளிகைத் தேவர், நாதாந்தர், அறிவார்ந்த பரமானந்தர், போக தேவர், நிலைத்த புகழ் உடைய திருமூலர் – இந்த எழுவரும் பிறவிப்பிணி இல்லாத சித்தர்கள்.


சன்மார்க்கம் போதித்த முதன்மையான மடம்

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.   –  (திருமந்திரம் – 101)

விளக்கம்:
உலகில் சன்மார்க்கம் நிலைபெறும் பொருட்டு வந்த மடங்கள் எண்ணிக்கையில் ஏழு ஆகும். அவற்றில் முதன்மையான மடத்தை தோற்றுவித்தவர் திருமூலர். அவரால் உரைக்கப்பட்டது தான் ஒன்பது தந்திரங்களில் மூவாயிரம் பாடல்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் அழகிய ஆகமம் ஆகும்.


திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.   –  (திருமந்திரம் – 100)

விளக்கம்:
ஒன்பது தந்திரங்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் நன்னூலின் பரிசு என்னவென்றால், இந்த நூலில் உள்ள மூவாயிரம் பாடல்களைப் படிப்பதன் மூலம் முத்தி நிலை அடையலாம். அறிவுபூர்வமாகச் சொல்லப்பட்ட இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானதாகும், படிப்பவர்க்கு நன்மை தருவதுமாகும்.


தினமும் காலையில் திருமந்திரம் படிப்போம்

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.   –  (திருமந்திரம் – 99)

விளக்கம்:
இந்த உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்வதற்காக, நந்தி பெருமானின் அருளினால் பாடப்பட்டது, திருமூலரின் மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம். இந்த திருமந்திரத்தை தினமும் காலை நேரத்தில், அர்த்தம் புரிந்து படித்து வந்தால், உலகத்தலைவனான சிவபெருமானை அடையலாம்.

(ஞாலம் – உலகம்,  நண்ணுவர் – அடைவர்)


திருமந்திரம் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.   –  (திருமந்திரம் – 98)

விளக்கம்:
இந்த திருமந்திரத்தில் உள்ள தத்துவ ஞானங்கள் எல்லாம் சிவபெருமானால் கயிலாய மலையடிவாரத்தில் உபதேசிக்கப்பட்டவை. இதை உணர்ந்து கொள்ளாமல், இந்த திருமந்திரத்தை ஓதுபவர்கள்  (அவர்கள் முக்தி வேண்டி தவம் செய்யும் முனிவரானாலும், தேவரானாலும்)  இந்த நூலைப் படிப்பதனால் கிடைக்கக் கூடிய முழு பலனைப் பெறமாட்டார்கள்.

திருமந்திரம் படிப்பவர்கள், இதில் உள்ள தத்துவ ஞானங்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, பக்தியோடு படிக்க வேண்டும்.

(தாழ்வரை – மலை அடிவாரம்,   பத்திமை – பக்தி உடைமை)

 


திருமந்திரம் பாடுவதால் ஈசனை உணரலாம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.   – (திருமந்திரம் – 97)

விளக்கம்:
தன்னையே நினைத்து பாடுபவரின் இன்னிசையின் உள்ளே ஈசன் எழுந்தருள்வான். பின்னால் மீண்டும் உலகைப் படைத்த பிரமனும் சிவபெருமானின் திருவடி பெறவே தியானித்து முயல்கிறான். இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தைப் பாடுவதால் அந்த ஈசனை உணரலாம்.

(மன்னிய – நிலை பெற்ற, உன்னும் – முயற்சி)


அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யாருக்குத் தெரியும் எங்கள் சிவபெருமானின் பெருமை முழுவதும் ? அந்த பெருமானின் பரப்பை அறிந்தவர் யாரும் இல்லை! தனக்கென பெயரும் உருவமும் இல்லாத பெருஞ்சுடர் எங்கள் சிவபெருமான். அந்த பெருஞ்சுடரின் வேர் யாராலும் அறிய முடியாதது.