அடுத்தவர் மனைவியை பாக்காதீங்க!

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. – (திருமந்திரம் – 201)

விளக்கம்:
அன்புடைய மனைவி ஒருத்தி வீட்டில் இருக்கும் போது, பிறரின் மனைவி மேல் தகாத ஆசை கொள்ளும் ஆண்களின் செயல் எப்படி இருக்கிறது என்றால், நன்கு காய்த்து பழுத்த பலாப்பழம் ஒன்று வீட்டில் இருக்கும் போது, அதைச் சாப்பிடாமல் காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பப்படுவது போன்றதாகும்.


இவை ஐந்தும் பெரும் பாவங்கள்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. – (திருமந்திரம் – 200)

விளக்கம்:
கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகியவை பெரும் பாவங்களாகும். அவற்றை விலக்கி விட்டு நம்முடைய மேலான தெய்வமாம் சிவபெருமானின் திருவடியைப் பற்றி இன்பத்தை உணர்வோம். அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால் பிறகு பாவங்கள் செய்ய மாட்டோம்.  எப்போதும் பேரின்பத்தில் திளைத்திருப்போம்.


நீங்கள் அசைவமா? இதைப் படியுங்கள்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. – (திருமந்திரம் –199)

விளக்கம்:
தீய உணவான மாமிசம் உண்ணுபர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். அவர்களை எமதூதர்கள் எல்லாரும் காணும்படியாக கறையானை அகற்றுவது போல பறித்து எடுத்துப் போய் தீ நிறைந்த நரகத்தில் மல்லாக்கத் தள்ளி கிடத்தி வைப்பார்கள்.

புலையர் – கீழ் மக்கள்,    இயமன் – எமன்,    செல் – கறையான்


கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்!

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. – (திருமந்திரம் – 198)

விளக்கம்:
எப்போது பார்த்தாலும் கொல்லு, குத்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் கொலைத் தொழில் புரிபவர்களுக்கு ஒருநாள் துர்மரணம் தான் ஏற்படும். அவர்களை யமதூதர்கள் வலிய கயிற்றால் கட்டி தீயினால் ஆன நரகத்திற்கு இழுத்துச் சென்று “இங்கேயே இரு” என்பார்கள். அங்கே அவர்களை நெடுங்காலம் வைத்திருந்து நட என்றும் நில் என்றும் ஆணையிட்டு வதைப்பார்கள்.

வல்லடி – துர்மரணம்


இறைவனுக்கேற்ற சிறந்த மலர் – கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  – (திருமந்திரம் – 197)

விளக்கம்:
பற்றுக்களில் இருந்து நாம் விடுபட நம் குருநாதனாகிய சிவபெருமானுக்கு பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்கிறோம். ஆனால் நம் சிவனுக்கு பிடித்த மலர், பிற உயிர்களைக் கொல்லாமை என்கிற விஷயமாகும். நம்முடைய நடுங்காத திட மனமே, நாம் அவனுக்கு ஏற்றும் சிறந்த தீபமாகும். நம் குருநாதனை வைத்து வழிபடச் சிறந்த இடம் நம்முடைய இருதயமே!


சிறிது உணவு தானம் செய்வோம்

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே.  – (திருமந்திரம் – 196)

விளக்கம்:
நாம் வஞ்சனை பேசி தீயவழியில் செல்ல வேண்டாம். பேராசை கொண்டு அடுத்தவர் பொருளைக் கவர வேண்டாம். எல்லா வகையிலும் நல்ல பண்புகளைக் கொண்டவராக இருப்போம். சாப்பிடும்போது சிறிது உணவாவது பிறருக்கு கொடுத்து விட்டு சாப்பிடுவோம்.


முக்திக்கு மானிடப் பிறவியை விட சிறந்த வழி ஏது?

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.  – (திருமந்திரம் – 195)

விளக்கம்:
இந்த உலக வாழ்வில் நாம் நலம் பெற புண்ணிய காரியங்களைச் செய்வோம். நம்முடைய இறப்பிற்குப் பிறகு முக்தி நிலையை அடைய, புனிதனான அந்த சிவபெருமானை நாடி வணங்குவோம். முக்தி அடைய நாம் ஒரு வழிமுறையைத் தேடினால், அதற்கு இந்த மானிடப் பிறவியை விட ஒரு சிறந்த வழி கிடையாது. மானிடராய் பிறப்பது எவ்வளவு அருமையான விஷயம் தெரியுமா? இதை உணர்ந்து நாம் அந்த சிவனை நாடி இருந்து, நம் வாழ்நாள் முடிந்தவுடன் முக்தி நிலையை அடைவோம்.


தேனைத் தேடும் வண்டு

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.  – (திருமந்திரம் – 194)

விளக்கம்:
இன்பத்தை தேடும் வண்டு, தேன் மிகுந்த மலர்களைத் தேடிப்போய் வாசம் மிகுந்த தேனை உண்டு களிக்கும். அது போல உண்மையான இன்பத்தைத் தேடும் நாம் சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றில் காணக்கூடிய சிவனை நாடி வழிபட்டால், நாம் தேடும் இன்பம் கிடைக்கும். தன்னை நினைக்காத மனத்தில் அந்த சிவன் நிற்க மாட்டான்.


உடலுக்குள்ளே ஒரு சமையல் நடக்குது

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.  – (திருமந்திரம் – 193)

விளக்கம்:
நாம் உணவு சமைக்க தேவையான பொருட்கள் – அரிசி, பானை, அகப்பை மற்றும் நெருப்பு. அது போலவே நம் உடல் இயக்கத்திலும் ஒரு சமையலே நடக்கிறது. நம் உயிரே அரிசி, உடல் பானை, நாம் விடும் மூச்சுக்காற்றே அகப்பை ஆகும். உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று என்னும் ஐந்தும் நெருப்புகள் உள்ளன. இவ்வாறு தொடர்ந்து நடக்கும் சமையலே நாம் உயிர் வாழ்வதாகும். நம்முடைய வாழ்நாள் வீணாக கழிந்து கொண்டிருக்கின்றன. சுடுகாட்டில் நம் உடல் எரிவதற்கு முன்பாக, நம் உயிர் என்னும் அரிசியை சமைக்கும் பொறுப்பை அந்த ஈசனிடம் ஒப்படைப்போம். அதாவது நாம் உயிருள்ள போதே அந்த ஈசனை சரணடைந்திருந்தால், நமக்கு மறுபிறவி என்பது கிடையாது.

துடுப்பு – அகப்பை


எல்லாமே கொஞ்ச நேரம்தான்

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.  – (திருமந்திரம் – 192)

விளக்கம்:
சிக்கல் நீக்கி பார்த்து பார்த்து நெய்யப்பட்ட பட்டாடை ஒரு நாள் கிழிந்து போகும். இந்த அழியும் தன்மையை நாம் அறிந்து கொள்வதில்லை. அதே போல் நாம் பெருமை பட்டுக் கொள்ளும் நம்முடைய கருமயிர் வெண்மயிராக மாறும் கால அளவும், நம்முடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள கால அளவும் மிகவும் குறைவானதே. இதை நாம் உணர்வோம்.

நம் வாழ் நாள் மிகவும் குறைவானதே. அதனால் காலத்தை வீணாக்காமல் நாம் அந்த இறைவனின் திருவடியை நாடி இருப்போம்.

(பட்டிகை – பட்டாடை,  பீறும் – கிழிந்து விடும்,  ஈறு – இறப்பு)