எங்கும் எதிலும் பரவி இருக்கிறான்

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.  –  (திருமந்திரம் – 191)

விளக்கம்:
சூரியன் தனது ஒளியை பத்து திசைகளிலும் பரவவிட்டு, இந்த உலகில் உள்ள அனைத்தையும் உணர்கிறான். ஆனால் நம் தலைவனான சிவபெருமான், இந்த உலகில் சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன்னுடைய உணர்வாலே அளக்கிறான். அவன் உணராத பொருள் இல்லை இவ்வுலகத்தில். இந்த உலகின் மனிதர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்வதில்லை. இந்த உடல் அழியக்கூடியது, நம்முடைய உயிர் நிலையானது இல்லை என்பதைப் புரிந்தவர்கள், அந்த ஈசனை உணர்ந்து, அந்த உணர்விலே கலந்திருப்பார்கள்.

பத்து திசைகள் – எட்டு திசைகள் + மேலே + கீழே

பொன்று – இறத்தல், நிலையாமை


வெந்து அழியக்கூடியது இந்த உடல்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.  –  (திருமந்திரம் – 190)

விளக்கம்:
உடல்கள் வேகின்ற சுடுகாட்டில் ஆடும் அந்த ஈசனை, வேதங்களை நமக்களித்த அந்தக் கூத்தனை நாம் அறிந்து கொள்ளவில்லை. வெந்து அழியக்கூடிய இந்த உடலுக்குள்ளே நின்று விளையாடும் நந்திபெருமானையும் நாம் அறியவில்லை. இந்த உடல் வெந்து அழியக்கூடியது என்பதை அறியாதவர்களால், இந்த உடலை தாங்கி நிற்கும் அந்த ஆருயிரான ஈசனையும் தெரிந்து கொள்ள முடியாது.

வேங்கடநாதன் – வேம் + கடம் + நாதன் – வேகின்ற சுடுகாட்டுக்கு நாதன்
வேங்கடத்துள்ளே – வேம் + கடம் + உள்ளே – வேகக்கூடிய உடலின் உள்ளே


இரு வகையான தாளங்கள்

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.  –  (திருமந்திரம் – 189)

விளக்கம்:
மண்ணால் ஆகிய கோயில் நம்முடைய உடல். இதன் உள்ளே நாம் இழுக்கும் மூச்சுக்காற்றை பூரகம் எனவும், வெளியே விடும் மூச்சை இரேசகம் எனவும் சொல்கிறோம். இந்த பூரகம், இரேசகம் ஆகியவை இரண்டு தாளங்களாக உள்ளன. நம்முடைய உயிர் என்னும் அரசனும் இந்த மண்ணால் ஆகிய கோயிலுக்குள் வாழ்கிறான். அந்த அரசன் ஒருநாள் வெளியே கிளம்பி விட்டால், இந்த உடல் வெறும் மண்ணாகி விடும்.

மத்தளி – மண் + தளி


ஐம்புலன்களுக்கு வரும் ஓலை

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  –  (திருமந்திரம் – 188)

விளக்கம்:
நம் உடலை ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு புலன்களுக்கும் ஒரு வேலைப்பொறுப்பு இருக்கிறது. ஐம்புலன்களுக்கும் நாயகனாகிய உருத்திரனிடம் இருந்து ஓலை வரும் நேரம், ஐம்புலன்களும் தமது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும். அதனால் புலன்கள் நன்றாக இருக்கும் காலத்திலேயே அந்த ஈசனின் திருவடியை நாடி இருப்போம்.


திருவடியிலே வாடாத பூக்களாய் இருக்கலாம்

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.  –  (திருமந்திரம் – 187)

விளக்கம்:
குளிர்ச்சியான மலர்கள் பூத்துக் குலுங்கும்  தளிரான கிளையைப் பார்க்கும் போது நமக்கு மகிழ்வாக இருக்கிறது. ஆனால் சில நாட்களில் அந்தக் கிளையில் உள்ள இலைகளும் மலர்களும் சருகாகி விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்க்கும் போது எந்த உயிரும் நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வதில்லை. இதை உணர்ந்து நாம் உலகியல் விஷயங்களைத் தவிர்த்து அந்த ஈசனின் திருவடியைத் துதித்து இருப்போம். ஈசனின் திருவடியை நாடாதவர்கள், அந்த ஈசன் தன்னை விரும்பி அழைப்பதை உணர மாட்டார்கள்.


பராசக்தியின் துணையைப் பெறலாம்

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.  –  (திருமந்திரம் – 550)

விளக்கம்:
சமாதி நிலை ஈடேற இயம நியம ஒழுக்கங்கள் அவசியம். இயம நியமங்களைச் சரியாகக் கடைபிடிக்கும் நிலையில் பராசக்தி நம் முன்னே தோன்றுவாள். மேலும் கவசமாகிய நியாசங்கள் (நெஞ்சு, தலை, கண், கை முதலிய உறுப்புக்களைச் சிவனது உடைமையாக நினைத்துத் தொடுதல்) செய்யும் முறையையும், முத்திரைகளையும் அறிந்து யோகத்தைச் செய்யலாம்.

அட்டாங்க யோகத்திற்கு இயமமும், நியமமும் அவசியம். அதாவது தீய பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது,  உத்தரம் – பின் நிகழ்வது,  பூருவம் – முன்பு


மரண நேரத்தில் பயமில்லாமல் இருக்கலாம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. – (திருமந்திரம் – 186)

விளக்கம்:
நம்முடைய இறுதி நாள் என்பது நம் முதுமைக் காலத்தில் தான் வரும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. மரணம் எந்த நேரத்திலும் வரலாம், அப்போது நம் இளமை இன்னும் மிச்சம் இருக்கலாம். அதனால் நாம் நம் இளமைக் காலத்தில் இருந்தே அந்த ஈசனைப் புகழ்ந்து பாடி வணங்குவோம். அந்நேரத்தில் மரணம் வந்தால் கூட, நம்மை இந்த உலகத்தில் இருந்து யாரோ தூக்கி எறிவது போன்ற உணர்வு தோன்றாது. மரண நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பயமில்லாமல் பார்க்கலாம்.


தேயும் நிலா சொல்லும் பாடம்

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. – (திருமந்திரம் – 185)

விளக்கம்:
பதினாறு கலைகளும் நிரம்பப்பெற்ற பூரணச்சந்திரன், மறுநாளே தேய்ந்து குறைந்து போவதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை உணர மறுப்பவர்கள் நீசர்கள். அவர்களை சினம் கொண்ட காலன் மறுபடியும் ஒரு கருப்பையில் வைப்பான். மனமயக்கம் நீங்காத அவர்கள் வேறு வழியில்லாமல் அந்தக் குழியில் போய் விழுவார்கள்.


திருமந்திரத்தை ரீமேக் செய்த ஔவையார்

முப்பதாம் வயது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லும் ஒரு திருமந்திரப் பாடலை பிற்காலத்தில் ஔவையார் ரீமேக் செய்துள்ளார்.

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

என்பது திருமூலரின் பாடல்.

நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும் கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள்.

இதே விஷயத்தை ஔவையார் நல்வழியில்

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

என்று பாடியிருக்கிறார். “ ஒரு பெண்ணிற்கு முப்பது வயதில் இருக்கும் மார்பின் அளவுதான் அவளது முதுமையிலும் இருப்பதைப் போல, முப்பது வயதில் கற்கும் கலைகள் தான் முதுமை வரை வரும். அதனால் நாம் முப்பது வயதில் மூவாசைகளையும் ஒழித்து பரம்பொருளை நாடி தனக்குள் பெற வேண்டும்.” என்று சொல்கிறார்.

இதற்கு அடுத்த பாடலிலேயே திருமூலரைப் புகழ்ந்தும் பாடியுள்ளார். “திருக்குறள், நான்கு வேதங்கள், தேவாரம், திருவாசகம் – ஆகிய இவை யாவும் திருமூலரின் ஒரு வாசகத்திற்குச் சமம்.” என்கிறார்.


முப்பது வயது முக்கியமானது

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. – (திருமந்திரம் – 184)

விளக்கம்:
நாட்களையும் மாதங்களையும் நாம் கணக்கிடுவது, இந்த உலகத்துக்குள்ளேயே இருக்கும் குளிர்ந்த சந்திரனையும் வெப்பமான சூரியனையும்  கொண்டுதான். அது போல நம் உடலில் சந்திரகலை, சூரியகலை ஆகியவை உள்நின்று நமது ஆயுளை அளக்கின்றன. ஒருவர் தன்னுடைய முப்பதாவது வயதில் ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபட ஆரம்பித்தால், அவர் தன் வாழ்நாள் முடிந்த பிறகு விண்ணுலகத்தை அடையும் பேறு பெறுவார். மற்றவர்களெல்லாம் மறுபிறவி என்னும் சுழற்சியிலேயே சிக்குவார்கள்.