நிரந்தர முதல்வர்

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)

விளக்கம்:
ஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.

(இரந்துணி – யாசித்து உண்பவன்,   எற்றுக்கு – எதற்கு,  கழல் – திருவடி)

He created the seven worlds and spread over them
Some people call him a beggar, why he have to beg?
The devotees who constantly think of the lord,
He accept the devotion from them and make them reach His Holy Feet.

உயிரிலே கலந்தவன்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. – (திருமந்திரம் – 2010)

விளக்கம்:
ஆன்மாவில் சிவனும், சிவனில் ஆன்மாவும் ஒன்றாக கலந்திருப்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கவில்லை. ஒப்பில்லாத ஈசன் அவன், பிரபஞ்சம் முழுவதும் வற்றாமல் எங்கும் நிறைந்திருக்கிறான்.

(அணு – ஆன்மா,    சராசரம் – பிரபஞ்சம்)

He is inside the soul, the souls are inside Him.
Such the Soul and Siva are combined, but most people unaware of this.
Incomparable is His Grace, He spreads everywhere
in this universe, with out any abatement.

அவனுக்கா தெரியாது?

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. – (திருமந்திரம் – 1889)

விளக்கம்:
தன்னை தேடி வருபவர்களை வரவேற்க வழியிலேயே நின்றிருப்பான் ஈசன். தன் அடியவரான நல்லவர்க்கு இன்பம் தரும் விதமாக தன்னையே தர இருக்கிறான் அவன். தன்னை சரணடைய வருபவரிடம் கலந்து கொள்ள தயாராக இருக்கிறான். அவனைப் போய் அறியாதவன் என்று சொல்லலாமா?

(பொர – பொருந்த,    புகல் – சரண்)

He is standing in the path to receive them who seek Him.
He wants to give Himself to his holy devotees.
He likes to unite with them, who stands waiting
to surrender his feet. How can we say 'He don't know me'!

புலன்களை அடக்காதீர்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. – (திருமந்திரம் – 2033)

விளக்கம்:
ஐந்து பொறிகளையும் அடக்கு என்று வலியுறுத்துபவர்கள் எதுவும் அறியாதவர்கள். ஐந்தும் அடக்கிய தேவர்கள் அங்கே வானுலகிலும் இல்லை. ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டால் நாம் சடப் பொருள் போல் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து அடக்காமல் இருக்கும் அறிவை அறிந்து கொண்டேனே!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது. அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

(அசேதனம் – அறிவற்ற சடப் பொருள்)

Those are ignorant, who insist to repress the five senses.
Not even the immortals could not do that.
If we repress the five senses, we'll be a insensible thing.
Thus we learnt not to suppress the senses.

கண்டு கொண்டேன்

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. – (திருமந்திரம் – 1589)

விளக்கம்:
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவன் உயிர்களில் பொருந்தியிருக்கும் தன்மையை யாரும் அறிந்திருக்கவில்லை. இது பற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபாடான பல கருத்துக்கள் உள்ளன. நான் இந்த சச்சரவுகளுக்குள் சிக்காமல் எல்லா உயிர்களையும் தம் கருவில் கொண்ட ஈசனை கண்டு கொண்டேன்.

For all living things in the world, He is the Lord
No one knows his state of existence.
I am not involved in the conflicts about the concepts on Him.
I found that God, who is the seed of all living things.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே!

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.  – (திருமந்திரம் –24)

விளக்கம்:
புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)

We praise and sing of his Holy Feet,
We dedicate all our treasures to his Holy Feet.
Thus who get cleared from their disturbed mind,
the Lord being with them firmly.

பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்!

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  – (திருமந்திரம் – 52)

விளக்கம்:
வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது!

Those who speak the Vedas, without know the meaning are not pundits.
God spoke the Vedas to reveal its meaning,
God spoke the Vedas to perform the Holy Poojas,
God spoke them to make us manifesting the truth.

நாண மாட்டேன் தழுவிக்கொள்ள!

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானே! நீ நாங்கள் கண்களால் பார்க்கும்படி  நிற்பது இல்லை. எனக்கு உன்னையன்றி வேறு உறவு யாரும் இல்லை. நான் உன்னை தழுவிக் கொள்ள வெட்கப்பட மாட்டேன். மாறுபாடு இல்லாத மனம் உடைய அடியவர் மனத்தில் ஆழப் பதிந்தவனாய் அமர்ந்திருக்கிறாய்.

(இறைவன் நம்முடைய புறக்கண்களுக்கு காட்சி தருவதில்லை. அவன் நமது மனத்தினுள் பதிந்து இருக்கிறான்.அவனை நினைத்து தியானிப்பதின் மூலம் அந்த இறைவனை நாம் உணரலாம்).

Oh the Unseen God, Who else is kin to me but You?
I'm not feeling shy to embrace You!
In the Pure Heart of your Devotee
You ever Stood Firmly.

பசுவை அழைக்கும் கன்று

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே – (திருமந்திரம்)

விளக்கம்:
வானத்திலிருந்து தானே மழை பெய்வது போல இறைவனும் தானே வந்து அருள் செய்யட்டும் என்று தயங்கி சிலர் அழைக்க மாட்டார். கன்று தன் தாய்ப் பசுவை அழைப்பது போல் நான் என் சிவபெருமானை அழைக்கிறேன், ஞானம் பெறுவதற்காகவே.

Like the rain falling from sky
The GOD will descend himself - a few think so.
I call him as if the calf calling his mother
Seeking him the true knowledge.