பத்மாசனம் செய்யும் முறை

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.   – (திருமந்திரம் – 559)

விளக்கம்:
சுகாசன நிலையில் அமர்ந்து ஒரு காலை அணைந்தவாறு தொடையின் மேல் ஏற்றி, நன்றாகப் பற்றிக் கொண்டு இடது கால் வலது தொடையிலும், வலது கால் இடது தொடையிலுமாக வைத்து, அழகாக கைகளை மலர்த்தி தொடையின் மேல் வைத்தால், அது உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

ஊரு – தொடை,     சீர் – அழகு,    பார் – உலகம்


சோர்வை நீக்கும் ஆசனம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.   – (திருமந்திரம் – 558)

விளக்கம்:
பத்மாசனம் முதலாக பல ஆசன முறைகள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசன முறைகள் முக்கியமானவை ஆகும். சோர்வு நீக்கும் சுவத்திகாசனம் அவற்றில் சிறந்த ஒன்றாகும். இந்த ஆசனத்தில் பொருந்தி இருந்தால் சிறந்தவன் ஆகலாம்.

கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை இது. சுவத்திகாசனத்தை சுகாசனம் எனவும் உரைப்பர்.

பங்கயம் – பத்மாசனம்,     சொங்கு – சோர்வு,    சுவத்திகம் – சுவத்திகாசனம்


நியமத்தரின் கடமைகள்

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 557)

விளக்கம்:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை,  தானம், விரதம்,  கல்வி, யாகம், சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்து கடமைகளை நாம் செய்து வந்தால் நியமத்தில் நிற்கிறோம் என்று அர்த்தம்.

சந்தோடம் – மகிழ்ச்சி,  சித்தாந்தம் – சிவாகமம்,   கேள்வி – கல்வி,   மகம் – யாகம்


நியமத்தில் நியமனம் பெறுவோம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி  யுணர்ந்து நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 555)

விளக்கம்:
நியமத்தை மேற்கொள்பவர்கள் இந்த உலகின் முதல்வன் சிவபெருமான் என்பதை உணர்வார்கள். நியமத்தில் நின்றால் வேதத்தின் பொருள் சிவன் என்பதையும், அருள் சோதியும் அவனே, அந்த சோதியில் விளங்கும் அக்கினியும் அவனே என்பதையும் உணரலாம். சிவபெருமான் தன்னுடைய பாதியாய் விளங்கும் பராசக்தியுடன் நிலைபெற்றிருக்கும் தன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

தீயவற்றை விலக்கும் இயமத்தின் அடுத்த நிலை நியமம். நியமம் என்பது நல்லவற்றைச் செய்யும் ஆன்மிகக் கடமை.


மழை பெய்தாலும் நியமங்கள் தவறக்கூடாது

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.  –  (திருமந்திரம் – 553)

விளக்கம்:
எட்டுத் திசைகளிலும் மழை சூழ்ந்து பெய்தாலும், மனதிற்கு குளிர்ச்சி தரும் நியமங்களைத் தவறாமல் செய்வோம். நியமங்களில் உறுதியாக இருந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர்க்கும், பவளம் போன்ற குளிர்ந்த சடை கொண்ட சிவபெருமான் அருள் புரிந்தான்.

 


அட்டாங்க யோகத்தின் படிகள்

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம் பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.  –  (திருமந்திரம் – 552)

விளக்கம்:
இயமம், நியமம், பல வகைப்பட்ட ஆசனங்கள், அருள் தரும் பிராணாயாமம், பிரத்தியாகாரம், வெற்றி தரும் தாரணை, தியானம், சமாதி ஆகிய இவை எட்டும் சேர்ந்தது அட்டாங்க யோகமாகும்.

இயமம் – தீது அகற்றல், நியமம் – ஒழுக்க நெறியில் நிற்பது, பிரத்தியாகாரம் – வெளியே செல்லும் மனத்தை உள்நோக்கித் திருப்புதல், தாரணை – உள்ளே இழுத்த மனத்தை நிலை பெறச்செய்தல், அயமுறும் – நலம் தரும்


அட்டாங்க யோகம் தீய வழிக்குச் செல்லாமல் காக்கும்

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.  –  (திருமந்திரம் – 551)

விளக்கம்:
ஞானம் பெறுவதற்கு அந்த வழியா இந்த வழியா என பல வழிகளைப் பற்றி ஆராயாமல், அட்டாங்க யோக வழியில் செல்வோம். அப்படி நன்னெறியில் சென்று சமாதி நிலையில் நிலை பெறலாம். சமாதி நிலையில் அடையும் ஞானம் நம்மை தீய வழிக்குச் செல்ல விடாமல் காக்கும்.


தூய்மையான நெறி

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.  – (திருமந்திரம் – 216)

விளக்கம்:
நமக்கெல்லாம் நெருங்கிய துணையாக இருப்பது, அந்தணர்கள் வளர்க்கும் அக்னிக்குள் அக்னியாக இருக்கும் இறைவனே. அந்தணர்கள் இல்லறத்தில் இருந்தாலும், அக்னிக்குள் உட்பொருளாய் விளங்கும் அந்த இறைபொருளைப் புரிந்து கொள்வார்கள். தமது மனைவியுடன் சேர்ந்து அக்னிக் காரியங்களை மெய்ப்பொருள் உணர்ந்து செய்வார்கள். இது தூய்மையான வாழ்க்கை நெறியாகும்.


நம் விதியை நாமே முடிவு செய்யலாம்

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 215)

விளக்கம்:
அரிய வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தவறாமல் யாகங்களைச் செய்வார்கள். மோட்சத்தை அடையும் பொருட்டு, தாங்கள் உண்ணும் முன் பிறர்க்கு தானம் செய்வார்கள். தம் விதியை தானே முடிவு செய்யும் திறன் வேண்டி மெய்நெறியை நாடுவார்கள். அந்த உண்மை நெறியிலே தங்கள் அறிவாலே அந்தத் திறனைப் பெறுவார்கள்.


வேள்வியின் பயன்கள்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.  – (திருமந்திரம் – 214)

விளக்கம்:
வெற்றி தரும் வேதத்தை தன்னுடைய முதல் பொருளாகக் கொண்டுள்ள அந்தணர்கள் தொடர்ந்து செய்யும் அக்னி வேள்வியினாலே வானம் தவறாமல் மழை பொழிகிறது. இந்த நிலம் நல்ல விளைச்சலைத் தருகிறது. எட்டுத்திசையில் உள்ள மக்களும், எட்டுத்திசைகளைக் காக்கும் திக்குப்பாலகர்களும் நன்மை பெறுகிறார்கள்.