ருசிக்காக இல்லாமல் பசிக்காகச் சாப்பிடுவோம்

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.  – (திருமந்திரம் – 213)

விளக்கம்:
உணவில் அறுசுவையையும் விரும்பி வேண்டுபவர்கள், பசுக்கள் முதலான விலங்கினத்தைப் போன்றவர்கள். ஏற்கனவே நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு எண்ணில்லாத துன்பங்களைத் தந்துள்ளன. வாழ்வில் நம்மை வருத்தும் வினைகள் ஒன்றிரண்டு அல்ல, அவை ஏராளம். நாம் அறுசுவை போன்ற விஷயங்களை வெறுத்து ஈசனை வேண்டி நின்றால் நம்முடைய வறுமை நீங்கப் பெறலாம்.


உறவுகள் வினையை விடக் கொடியது

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  – (திருமந்திரம் – 212)

விளக்கம்:
பெருகி வரும் உறவுகள் நம்முடைய வினையை விட கொடிய விஷயமாகும். அவர்களால் நமது வினை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப்பிறவியில் நமது வாழ்நாள் முடிவதற்கு முன்பே ஒருநாள் நம்முடைய மெய்யுணர்வு என்னும் விளக்கை ஏற்றி, தொடர்ந்து அந்த விளக்கை அணையாமல் காக்க வேண்டும். மெய்யுணர்வு பெற்றால் உண்மைப் பொருளை அறியலாம், திரும்பத் திரும்ப நாம் சென்று விழும் அந்தப் பிறவிக்குழியையும் மூடலாம்.


வயிற்றை நிரப்பியே வைத்திருக்க முடியாது

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.  – (திருமந்திரம் – 211)

விளக்கம்:
கற்குழியாகிய வயிற்றை நிரப்ப பொன்னும் பொருளும் தேடி சேர்த்து வைப்பார். ஆனால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும்படி செய்வது முடியாத செயல் என்பதை நாம் உணர்வதேயில்லை. இதை உணர்ந்து தேவையான நேரத்தை பொருள் தேடுவதிலும், மற்ற நேரத்தை சிவனின் திருவடியை நாடுவதிலும் கழித்தால் குற்றம் இல்லாதவராய் ஆவோம்.

கற்குழி – நிரப்ப முடியாத வயிறு,   கனகம் – பொன்


வறுமையிலும் இறைவனைத் துதிப்போம்

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. – (திருமந்திரம் – 210)

விளக்கம்:
தினமும் நாம் பொய்க்குழியாகிய வயிற்றை நிரப்ப வேண்டியவராய் உள்ளோம். பொழுது விடியவும் உணவுத் தேவைக்காக வேலை செய்து உழைக்க கிளம்புகிறோம். வயிற்றுத் தேவைக்காக நாம் அலைந்து திரிந்தாலும் மறக்காமல் ஈசனை துதிப்போம். ஈசனை துதித்தால் வினை தீரும், வினை தீர்ந்தால் வறுமை அகலும்.

குற்றமில்லாத வாழ்வு நடத்தி இறைவனை வணங்கி வந்தால் வயிற்றுப்பாடு தானே தீரும்.

புலரி – சூரியன்,  தூர் – நிரப்பு,  ஏத்துமின் – வணங்குங்கள்.


வறுமை வந்தால் வாழ்வு இல்லை

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.  – (திருமந்திரம் – 209)

விளக்கம்:
வறுமை வந்தால் வாழ்க்கை கிழிந்த புடைவை போல் பயனில்லாமல் போய்விடும். மனைவியும், பிள்ளைகளுமே அன்பில்லாதவராய் ஆவார்கள். உறவினர்களும் விட்டு விலகுவார்கள், அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் எதுவும் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இராது. நாட்டு நடப்பு எதிலும் அவருக்கு பங்கில்லை. ஏதோ இயங்குகிறார் இந்த உலகத்தில், அவ்வளவுதான்.


பார்த்தால் கரும்புச்சாறு ஆனால் உண்மையில் வேப்பஞ்சாறு

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.  – (திருமந்திரம் – 207)

விளக்கம்:
இந்த உலகத்தில் பொது மகளிரோடு கூடுவதில் அப்படி என்ன பெரிய இன்பம் இருக்கிறது? மெய்ப்பொருளை உணர்ந்த பெரியவர்களைக் கேளுங்கள், அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொல்வார்கள் இவ்வாறு – “பொதுமகளிரிடம் இன்பம் என்பது அனுபவிக்கும் போது கரும்புச்சாறு போல இனிக்கும், ஆனால்  மனத்தில் வேம்பு போன்ற ஒரு கசப்பினை உண்டாக்கும்”.


பொதுமகளிரிடம் ஏமாறாதீர்கள்

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.  – (திருமந்திரம் – 206)

விளக்கம்:
ஒருவனது வாழ்க்கை நிலை நன்றாக இருக்கும் போது, பெண் யானையைப் போன்ற அழகிய இளம் பெண்கள் மழையில் புல் நனைந்திருப்பதைப் போல் வந்து கலந்திருப்பார்கள். அந்தப் பெண்கள் அவனை விட வசதியான இன்னொருவனைப் பார்த்து மயங்கி விட்டால், முதலாமவனை காத்திருக்கச் சொல்லித் தவிர்ப்பார்கள். மேலும் அவனை தனியாக அழைத்து ஏதாவது பேசி வழி அனுப்பி வைக்கப் பார்ப்பார்கள்.

பொதுமகளிரின் தன்மை அறியாமல், அவர்களைத் தேடி வாழ்நாளை வீணாக்க வேண்டாம். அவர்கள் இன்னும் தகுதியான ஒருவன் கிடைத்து விட்டால், அவனோடு ஒட்டிக் கொள்வார்கள்.

பிடி என்னும் சொல்லுக்கு பேய் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. அந்த அர்த்தமும் இங்கே பொருத்தமாகவே உள்ளது.

இயல் – தகுதி, பெருமை,   பிடி – பெண் யானை,   மயல் – மயக்கம்,   அயல் – அருகிடம்


உண்மையான இன்பம் வீட்டில் இருக்கிறது

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.  – (திருமந்திரம் – 205)

விளக்கம்:
இல்லற வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மனைவியிடம் இன்பத்தை நாடும்போது, அங்கே அவர்கள் இருவரும் சுனைநீரின் நீர்ச்சுழியில் மூழ்குவது போல இன்பத்தில் மூழ்குவார்கள். இதுவே உண்மையான இன்பமாகும். பொதுமகளிரிடம் காணும் இன்பம் என்பது கனவில் தோன்றும் சிறுஇன்பம் போன்றதாகும். அதை உண்மை என்று நம்பி நாட வேண்டாம்.


பொதுமகளிர் சகவாசம் வேண்டாம்

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. – (திருமந்திரம் – 204)

விளக்கம்:
மரத்தின் இலைகளின் ஊடே காய்த்து தொங்கும் எட்டிப்பழம் பார்க்க அழகாகவே இருக்கும். பார்க்க அழகாக இருக்கிறதே என்பதற்காக அதை உண்ண முடியாது. அது விஷத்தன்மை உடையதாகும். பொதுமகளிர் சகவாசமும் எட்டிப்பழம் உண்பது போன்ற விஷயம் தான். அந்தப் பெண்கள் தங்கள் முலை அழகைக் காட்டி சிரித்து மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து விலகி நிற்கின்றவாறு நம் மனத்தை அறிவுறுத்தி வைக்க வேண்டும்.


நம்முடைய அறிவின் அளவு என்ன?

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. – (திருமந்திரம் – 203)

விளக்கம்:
நம்முடைய அறிவின் அளவு என்பது, இருட்டுக்குள்ளே ஒரு மின்னலின் போது தெரியும் காட்சி போன்றது தான். சிலர் இது புரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் பணவசதியும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படிப்பட்ட அவர்கள் மருட்சியான பார்வை கொண்ட பெண்களின் மீது மயக்கம் கொள்கிறார்களே தவிர, தங்கள் அறியாமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.