சிவநீரே தெய்வ மருந்து

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே – 850

விளக்கம்:
கிடைக்க அரிதான அமுரி என்னும் சிவநீரை வீர மருந்தென்றும், தேவ மருந்தென்றும், ஆதி பராசக்தி தந்த மருந்தென்றும் நந்தியம்பெருமான் உரைத்திருக்கிறார். சிவநீரை தமது சகசிரதளத்தில் உணர்ந்து அனுபவம் பெற்றவர்கள், அந்த அமுரியை ஆதிப்பொருளான சிவபெருமான் தமக்கு அளித்த ஆதி மருந்து என்பதை உணர்வார்கள். பெரிதும் அகன்ற இந்த உலகத்துக்கு அருள் செய்யும் அந்தப் பெருஞ்சோதி தரும் இந்த மருந்தின் பெருமை பற்றிச் சொல்ல மொழியின் வார்த்தைகள் காணாது.

  • வீர மருந்து: மனதிடம் கொண்ட யோகியர் (வீரர்கள்) கையாளுவதால்.

  • விண்ணோர் மருந்து: தேவர்கள் உண்ணும் அமிர்தத்திற்கு இணையானது என்பதால்.

  • நாரி மருந்து: ‘நாரி’ என்பது இங்கே சக்தியைக் குறிக்கும் (குண்டலினி சக்தி அல்லது உண்ணாக்கு வழியாகச் சுரக்கும் சக்தி நீர்).

  • ஆதி மருந்து: ஆதிப்பொருளான சிவபெருமான் நமக்கு அருளும் மருந்து


சிவநீரின் மருத்துவ குணம்

அளக நன்னுத லாயோர் அதிசயம்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே – 849

விளக்கம்:
சுருள் முடியும், அழகிய நெற்றியும் கொண்ட பெண்ணே! ஒரு அதிசயத்தைச் சொல்கிறேன். கேள் இதை – நம் எல்லோருடைய உடலிலும் சிவநீர் கலந்து உள்ளது. அது ஒரு களவுப் பொருளைப் போல ஒளிந்துள்ளது. யோகப்பயிற்சியில் உறுதியாக நிலைத்து நின்றால், அச்சிவநீரை நாம் கண்டடைந்து அந்நீரை நுகரலாம். யோகப் பயிற்சியின் முக்கிய அங்கமான அமுரிதாரணை செய்வதன் மூலம் மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு ஆகிய நான்கு பொருட்களின் மருத்துவக் குணங்களும் ஒருங்கே அமைந்த அந்தச் சிவநீரை (அமுரி) உச்சந்தலையில் தேக்கிப் பழகினால், உடல் இளமை பெற்று மென்மையாகும் (இளகும் மேனி). நரை மறைந்து தலைமயிர் காகத்தின் சிறகு போலக் கருமை நிறம் பெறும் (இருளும் கபாலமே).

  • அளக நன்னுதல்: கூந்தலும் அழகிய நெற்றியும் உடையவள் (சக்தி அல்லது பெண்ணைக் குறிக்கும் விளி).

  • களவு காயம்: மாயையால் மறைக்கப்பட்டுள்ள உடல்.

  • வேம்பிடில்: வேப்பிலையின் குணம் போல உடலின் கசடுகளை நீக்குதல்.

  • இருளும் கபாலமே: தலை உச்சிப் பகுதியில் உள்ள முடி கருமையடைதல் (நரை நீங்குதல்).


யோகத்தின் எல்லை: தெளிந்த சிவநீர் தரும் அழியா வாழ்வு

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே – 848

விளக்கம்:
யோக நெறியில் நின்று பயிற்சி செய்பவர்கள், தமது குறுகிய காலப் பயிற்சியில் ‘சிவநீர்’ (அமுத ஊற்று) சுரக்கத் தொடங்கிய முதல் நிலையிலேயே, “இதுதான் யோகத்தின் எல்லை” என்று மதியிலாமல் அங்கேயே நின்று விடுகிறார்கள்.

முதலில் ஊறும் அந்தச் சிவநீர் நுரை மற்றும் திரைகளுடன் (அசுத்தங்களுடன்) கூடிய உப்பு நீராக இருக்கக்கூடும். ஆனால், யோகப் பயிற்சியில் மென்மேலும் ஆழ்ந்து செல்பவர்கள், அந்த நுரைகளை நீக்கித் தெளிந்த சிவநீரைப் பருகும் ஆற்றலைப் பெறுவார்கள்.

ஆற்றின் கரை அருகே நின்று கலங்கிய நீரைப் பருகுவதற்கும், ஆழத்திற்குச் சென்று தெளிந்த நீரைப் பருகுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆழ்ந்த யோக நிலையில் தெளிந்த சிவநீரைப் பருக வல்லவர்களுக்கு:

  • நரைமுடி மீண்டும் கருமையாகும்.

  • திரை (கண் மறைப்பு/முதுமைத் தளர்ச்சி) நீங்கிப் பார்வை தெளிவடையும்.

  • காலன் (எமன்) அணுகாத நீடித்த ஆயுள் கிட்டும்.

முடிவுரை:
யோக அனுபவம் என்பது ஒரு மகா கடல் போன்றது. அதைக் கரையருகே நின்று வேடிக்கை பார்க்காமல், பயிற்சியால் உள்ளே இறங்கி நீந்தி, பேரானந்தம் எனும் அமுதத்தைப் பெறுவோம்.

வரை – எல்லை, உவரி – கடல்/உப்பு நீர், நமன் – எமன்/மரண பயம்.


சிவநீர் தாரணையும் நரைநீக்கமும்

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே – 847

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தலை உச்சியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்யுங்கள். தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில் மனம் குவியும் போது, அந்த வெளி இளகி சிவநீர் ஊறும், அதனை நுகருங்கள். ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் சகசிரதளத்தில் ஊறும் அந்நீருக்கு இணையான சிறந்த மருந்து வேறு ஒன்றில்லை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் கவனத்தை தலை உச்சியிலேயே நிறுத்தி நிலை பெறச் செய்வார்கள். அமுரி எனப்படும் இந்தச் சிவநீரை தாரணை செய்பவர்களுக்கு கருத்த மறுமயிர் முளைப்பதைக் காணலாம்.

நூறு மிளகு நுகரும் – நூறும் + இளகும் + நுகரும், சிவத்தினீர் – நம் தலை உச்சியில் ஊறும் சிவநீர்


தெளிதரும் சிவநீர்

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே – 846

விளக்கம்:
யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுரி என்னும் அமுதத்தை நுகர்ந்து வந்தால் சித்தம் தெளிவு பெறும். இவ்வரிய நிலையை தாரணை செய்து ஓராண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சிவ ஒளியைக் காணலாம், குறைவில்லா வாழ்வு கிடைக்கும். இந்நிலையில் இன்னும் நீடித்து நின்று, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மனம் ஒடுங்கி ஒரு நிலையில் நிற்கும், மட்டில்லா மகிழ்ச்சி பெறலாம், நம்முடைய உடல் பொன் போன்று பிரகாசம் பெறும்.

சிவநீர்  – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், வளி – காற்று, களி – மகிழ்ச்சி, கனகம் – தங்கம்


கடலின் நடுவே ஒரு கிணறு!

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே – 845

விளக்கம்:
இது அமுரி தாரணை என்னும் தலைப்பில் வரும் முதல் பாடலாகும். அமுரி என்பது தொடர்ந்த யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம். மிக அரிதாக சுரக்கும் அவ்வமுத நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தும் யோகப்பயிற்சியைப் பற்றி அமுரி தாரணை பேசுகிறது.

அமுரி என்னும் அமுதம் கிடைப்பது மிக அரிதான விஷயமாகும். அத்தனைப் பெரிய கடலின் நடுவே ஒரு சின்னஞ்சிறிய கிணறு, அந்தக் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு ஒப்பானதாகும் யோகப்பயிற்சியால் அமுதம் சுரக்கச் செய்வது. உடலுக்கு உறுதி தரும் அமுரி சுரக்க, ஒரே ஒரு வழி தான் உண்டு. நம் மனத்தை சுழுமுனையில் நிறுத்தி தொடர்ந்து யோகப்பயிற்சி செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது உயிர் துன்பத்தில் வதைப்படாமல் சிவபெருமானின் திருவடியை நாடி நிற்கும்.

அமுரி – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், தாரணை – நிலை நிறுத்துதல், நடலை – துன்பம்