ஆணவம் அழிந்தால் நோயில்லாமல் வாழலாம்

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.  – (திருமந்திரம் – 360)

விளக்கம்:
நல்லோர்களின் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்புற்றிருக்க வேண்டி, பல தேவர்களும் சிவபெருமானிடம் ‘பரிந்து அருள் செய்!’ என வேண்டினார்கள். வில்லால் முப்புரம் அழித்த சிவபெருமானும், ஒளி மிகுந்த தீயாகிய அம்பை செலுத்தி பொல்லாத அசுரர்களை அழித்தான்.

சிவபெருமானை வேண்டினால், அவன் நம்முடைய ஆணவம் முதலிய மும்மலங்களை அழிப்பான். மும்மலங்கள் அழிந்தால் நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்பம் பெறும்.


குவிமந்திரம்

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.  – (திருமந்திரம் – 359)

விளக்கம்:
தேவர்கள் வேள்வித்தீயை மூட்டி, மந்திரங்களை உச்சரித்து தவம் செய்கிறார்கள். மந்திரங்களை உச்சரிப்பதோடு, நாம் நமது அகத்தை உற்று நோக்கி மனத்தை குவித்து தியானம் செய்வதே சிறந்த தவமாகும். இந்த தவமுறையை நாம் படர்கொடி போல் பற்றிக் கொள்ள வேண்டும்.


சிவனருளை இழந்த தேவர்கள்

அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.  – (திருமந்திரம் – 358)

விளக்கம்:
தக்கன் வேள்விக்குத் துணை போனதால் திருமால், பிரமன், தக்கன், சூரியன் ஆகியோருடன் சந்திரன், நாமகள், அக்னி, இந்திரன் ஆகியோரும் தலை, முகம், மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர்.


அகவேள்வி – சிவபெருமானுக்குப் பிடித்த வழி

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே.  – (திருமந்திரம் – 357)

விளக்கம்:
சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து தேவர்கள் அவனை வேண்டினார்கள். ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கலையை சுழுமுனை வழியாக மேலே எழுப்பினார்கள். அப்போது சிவந்த ஒளியான குண்டலினி சக்தி மேலே சகஸ்ரதளத்தில் போய் பற்றிக்கொண்டது. ‘இந்த அகவேள்வி தனக்குப் பிடித்த வழியாயிற்றே!’ என்று மகிழ்ந்த சிவபெருமான் ஓடி வந்து அவர்களுக்கு அருள் செய்தான்.


எல்லாமே சிவத்தன்மை தான்

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 356)

விளக்கம்:
பிரமன், திருமால் முதலிய தேவர்கள் அனைவருக்கும் உள்ள தெய்வத்தன்மைக்குக் காரணம் சிவபெருமானே ஆவான். வேள்வித்தீயின் அக்னித்தன்மையாக விளங்குபவனும் சிவபெருமானே!


சிவனின் கோபத்தில் இருந்து தப்பிய அக்கினித்தேவன்

அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.  – (திருமந்திரம் – 355)

விளக்கம்:
தக்கனின் தலைமையில் நடந்த வேள்வியில் முக்கிய பங்கு கொண்டவன் அக்கினித் தேவன். அவன் வேறு வழியில்லாமல் தான் அந்த வேள்விக்குத் துணையாக நின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சிவபெருமான் அவனிடம் மட்டும் தன் கோபத்தைக் காட்டவில்லை. அக்கினித் தேவனின் ஆற்றலை அவன் தணிக்கவில்லை.


திருமாலுக்கு அருள் செய்த சிவபெருமான்

சந்தி செயக்கண் டெழுகின்ற அரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.  – (திருமந்திரம் – 354)

விளக்கம்:
வீரபத்திரர் தக்கனின் வேள்வியை அழிப்பதைப் பார்த்த திருமால் “நாங்கள் சிவநிந்தனை செய்பவர்கள் அல்ல!” என்று சொல்லி இந்த மண்ணுலகம் வாழக் காரணமான சிவபெருமான் பாதத்தில் விழுந்து வணங்கினான். அந்தம் இல்லாத சிவபெருமானும் சினம் தணிந்து திருமாலுக்கு அருள் புரிந்தான்.


சிவபெருமானின் கோபம்

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.  – (திருமந்திரம் – 353)

விளக்கம்:
தக்கன் தீ வளர்த்துச் செய்த தனது வேள்வியில், தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானுக்கு முதல் ஆகுதியைச் செய்யத் தவறினான். அங்கிருந்த தேவர்களும் தக்கனுக்கு அறிவுறுத்தவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி வேள்வியில் ஈடுபட்டிருந்த தக்கனையும், தேவர்களையும் அழித்தான்.


இறைவா போற்றி!

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.  – (திருமந்திரம் – 352)

விளக்கம்:
வானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம், தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம், மனம் வருந்தி, வாடிய முகத்துடன், தமது ஆணவமெல்லாம் ஒடுங்கிய நிலையில், ‘இறைவா போற்றி’ என்று சிவபெருமானை வணங்கினர். அப்போது ஈடு இணையில்லாத புகழுடைய சிவபெருமான், தன்னை வணங்கிய தேவர்களை எல்லாம் துன்பங்களில் இருந்து மீண்டு எழுந்து வரச்செய்தான்.


தண்டீசனின் கதை

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.  – (திருமந்திரம் – 351)

விளக்கம்:
இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்தவன் தண்டீசன். அவன் ஒளி மிகுந்த மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து, அந்த மணல் லிங்கத்தை பசும்பாற் குடங்களால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட சண்டீசனின் தந்தை, அவனைக் கம்பால் அடித்தான். ஆனால் சிவபக்தியில் இருந்த சண்டீசனுக்கு தந்தை கொடுத்த அடி உறைக்கவில்லை. அதனால் மேலும் கோபம் கொண்ட அவனது தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தான். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டீசன், பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க, அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான், தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் தண்டீசனுக்கு அணிவித்தான்.

தண்டீசன் சண்டேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.