பனை மரத்தின் மேல் ஒரு பருந்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  – (திருமந்திரம் – 47)

விளக்கம்:
இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். அப்பெருமான் தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்திருப்பவர் அன்புடையவராய் இருப்பர். பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து, அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப் பற்றி நினையாமல் உணவுக்காக கீழிறங்கி வரும். அது போலவே சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனைப் பற்றிய நினைவில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

(மனை – இல்லறம்,  மாதவர் – பெருந்தவம் செய்பவர்)

Those who worship the Lord, even while in domestic life, are equal to sages.
Those who feel the existence of God in their heart, will have great affection.
Like the kite over the palm tree not aware of the fruit in the tree,
some people do not feel the inside God. They won't find the real Bliss.