தகுதி அறிந்து தானம் செய்ய வேண்டும்

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  – (திருமந்திரம் – 501)

விளக்கம்:
உண்மையான சிவஞானிகளுக்கு எள்ளளவு தானம் செய்தாலும் கிடைக்கும் பலன் அதிகம். சித்தியும், முத்தியும், மேலான இன்பமும் கிடைக்கும். அஞ்ஞானம் அகலாத மூடர்களுக்கு நிலமளவு பொன்னைத் தானம் செய்தாலும் அது எந்தவிதப் பயனையும் தராது. மேலான இறை இன்பமும் கிடைக்காது போய்விடும்.

தகுதி உள்ளவர்க்கே தானம் செய்ய வேண்டும்.


அஞ்ஞானம் நீங்கப் பெறுவோம்!

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.  – (திருமந்திரம் – 500)

விளக்கம்:
ஆணவத்தால் ஏற்படும் அறியாமையை நீக்குவது நமது கனவாக மட்டும் இருந்து விடக்கூடாது. நனவிலும் ஆணவத்தை விட்டு அறியாமை நீங்கப் பெற வேண்டும். அப்படி அஞ்ஞானம் நீங்கப் பெற்றவர்கள் தாம் விந்து, நாதம் முதலிய சகல தத்துவங்களையும் தெளிவாக உணர்வார்கள். ஆணவம் முதலிய அழுக்குகள் நீங்கப் பெறாத சகலர்கள் நெடுங்காலம் முயற்சி செய்து சிவதத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள்.


எல்லோருக்கும் கண்டிப்பாக முத்தி உண்டு!

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.  – (திருமந்திரம் – 499)

விளக்கம்:
விஞ்ஞானகலர் தம்முடைய நல்வினைகளால் உடலும் மனமும் ஒருமித்து சிவபெருமானை தியானித்து முத்தி அடைவார்கள். பிரளயாகலர் தம்முடைய நல்வினைகளால் அடுத்து இன்னும் மேன்மையான பிறவி பெற்று முத்திக்கான முயற்சியில் இருப்பார்கள். சகலர் மறுபடியும் நிறைய பிறவிகள் எடுத்தாலும் இடையிடையே முத்திக்கான முயற்சியை செய்தவாறு இருப்பார்கள். அவர்களும் ஒரு நாள் மெய்ஞானம் பெற்று சிவத்தை அடைவது உறுதி. இதில் சந்தேகம் வேண்டாம்.


ஒன்பது பிரிவினர்!

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.  – (திருமந்திரம் – 498)

விளக்கம்:
விஞ்ஞானகலர் ஆணவமலத்தை மட்டுமே உடையவர்கள். இவர்கள் கன்மம், மாயை ஆகியவற்றில் சிக்க மாட்டார்கள். பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை உடையவர்கள். அஞ்ஞானத்தை விடாதவர்கள் சகலர் ஆவார்கள். இந்த மூன்று வகையிலும் வருபவர்கள் உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று பிரிவுகளாய் இருக்கிறார்கள். ஆக மொத்தம் மனிதர்கள் ஒன்பது வகையான பிரிவுகளில் வேறுபட்டு நிற்கிறார்கள்.


ஐந்து வகையான பாவங்களை விட்டவர்கள்!

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கொண் டோரே.  – (திருமந்திரம் – 497)

விளக்கம்:
சிவம் ஆகி ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். தன் வாழ்நாளை வீணாக்காத அவர்கள் முத்தியை அடைவாரகள். அவர்கள் பசு பாசத்தன்மைகள் நீங்கி அடுத்து பிறவி இல்லாத நிலையை அடைவார்கள். மேலும் அவர்கள் சிவபெருமானின் ஒன்பது தத்துவங்களை நாடி அறிந்து கொள்வார்கள்.


மூன்று வகையான சகலர்

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.  – (திருமந்திரம் – 496)

விளக்கம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் விடாத சகலர்களில் வெகு சிலர் மட்டுமே பக்குவம் அடைவார்கள். அவர்கள் பெத்தத்த சித்தான தனது ஆன்மாவை, முத்தத்து சித்தான சிவத்தோடு பொருந்தச் செய்து சீவன்முத்தர் ஆவார்கள். சகலரில் இரண்டாவது வகையில் வருபவர்கள் சீவன் முத்தர் ஆகும் முயற்சியில் சாதகம் செய்பவர்கள். இவர்கள் தமது முயற்சியில் முத்தி அடைய முடியாவிட்டாலும் மும்மலத்தினால் ஏற்படும் துன்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். மூன்றாவது வகையினர் எந்தவித முயற்சியும் இல்லாமல் ஆரவாரமான உலக விஷயங்களில் மூழ்கி இருந்து தமது வாழ்நாளை வீணாக்குவார்கள்.


பிரளயாகலர்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.  – (திருமந்திரம் – 495)

விளக்கம்:
ஊழிகாலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை விடாதவர்கள். அவர்கள் தமது அடுத்த பிறவியில் முக்தி அடைவார்கள். இரண்டாவதாக வரும் பிரளயாகலரை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். அவர்கள் நூற்றெட்டு பேராக இருக்கும் உருத்திரரின் நிலையை அடைவார்கள். இவர்களுக்கு அடுத்த வகையினரான சகலர் மும்மலங்களையும் உடையவர்கள்.