தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  –  (திருமந்திரம் – 508)

விளக்கம்:
நாம் கொடுக்கும் தானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிவபெருமானே நம் முன்னே நின்று ஈகின்றான் எனக் கை கூப்பி வணங்கிக் கொடுக்க வேண்டும். நிலத்தளவு தானம் செய்தாலும், மலையளவு தானம் செய்தாலும், ஈசனை நினையாமல் கொடுத்தால் தானம் கொடுத்தவரும் தானம் பெற்றவரும் மீள முடியாத நரகக் குழியிலே விழுவார்கள்.


தானம் செய்தால் நரகம் தவிர்க்கலாம்

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.  –  (திருமந்திரம் – 507)

விளக்கம்:
நல்லவர்க்குத் தானம் செய்வதன் பயனை அறியாதவர் பஞ்ச மாபாதகர் ஆவார்.  குற்றம் இல்லாத சிவனடியார்களுக்கும் , சிவஞானம் அளிக்கும் குருக்களுக்கும், காமம் முதலிய குற்றங்களை விட்ட சிவயோகியர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானம் செய்வதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும்.  அப்படித் தானம் செய்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் ஞானம் பெறுவார்கள். தானம் அறியாத பாதகர்கள் செல்லும் நரகத்திற்கு அவர்கள் செல்ல மாட்டார்கள்.


இயம நியமத்தில் இருப்பவர்க்கே தானம் செய்ய வேண்டும்

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  –  (திருமந்திரம் – 506)

விளக்கம்:
யோக நெறியில் சொல்லப்படும் இயம நியமங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். இயம நியமங்களில் இருந்து விலகினால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரிந்தும் அந்நெறியில் விரும்பித் தங்காதவர்களுக்குத் தானம் செய்யக்கூடாது. அது பெரும்பிழை ஆகும்.

இயமம் – தவிர்க்க வேண்டிய தீய விஷயங்கள். நியமம் – கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்.


ஒழுக்கம் இல்லாதவர்க்குத் தானம் செய்ய வேண்டாம்

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.  –  (திருமந்திரம் – 505)

விளக்கம்:
ஒழுக்கமும் தவமும் இல்லாத வேடதாரிகளுக்குத் தானம் செய்வது, வறட்டுப் பசுவை வணங்கி  அதற்கு உணவளித்து அதன் பாலைக் கறந்து குடிப்பதைப் போல பயன் இல்லாத செயலாகும். காலம் கடந்து பயிர் செய்வது போன்ற அவ்விதத் தானத்தைத் தவிர்க்க வேண்டும்.

தகுதி இல்லாத வேடதாரிகளுக்கு தானம் செய்வது எந்தவிதப் பயனையும் தராது.


ஆவது ஆகட்டும்! அவன் இருக்கிறான்!

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.  –  (திருமந்திரம் – 504)

விளக்கம்:
நந்தி என்னும் பெயர் கொண்ட நம் இறைவன், முதன்மையான தகுதி உடைய அடியவரிடம் தன்னைக் வெளிப்படுத்தித் தரிசனம் தருவான். தரிசனம் பெற்ற அடியவர் தம் வாழ்வில் தெளிவு பெற்று ‘நடப்பது நடக்கட்டும், அழிவது அழியட்டும், போவது போகட்டும், வருவது வரட்டும். எது நடந்தாலும் அது இறைவனின் ஆணை’ என தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்து நிம்மதியாய் இருப்பார்.


நெய் தேவைப்படாத விளக்கு

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.  – (திருமந்திரம் – 503)

விளக்கம்:
நான் எப்போதும் சிவபெருமானின் திருவடியை நினைத்தே இருக்கிறேன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே அவனை நினைத்தபடி இருந்தேன். பொய்யில்லாத மெய்யன்போடு அவன் திருவடியைத் தேடுகிறேன். சிவனடி என்னும் விளக்கு எப்போதும் ஒளி தருவதாகும். அந்த விளக்குக்கு நெய் எதுவும் தேவையில்லை.


ஈசனை உணர்ந்தால் தேவர் ஆகலாம்

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.  – (திருமந்திரம் – 502)

விளக்கம்:
ஒரு காலகட்டத்துக்குப் பிறகு காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொள்வான் என்னும் உண்மையை வெகு சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் நம் உயிரோடு கலந்திருக்கும் அந்த ஈசனை எப்போதும் தம் மனத்தில் வைத்து வழிபடுவார்கள். தன்னை நன்கு உணர்ந்தவர்களுக்கு அருள் செய்திடும் ஈசனைச் சென்று வணங்கி அவன் திருவருளை உணர்வோம். அவனை உணர்ந்தால் தேவர்களின் நிலையை அடையலாம்.


தகுதி அறிந்து தானம் செய்ய வேண்டும்

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  – (திருமந்திரம் – 501)

விளக்கம்:
உண்மையான சிவஞானிகளுக்கு எள்ளளவு தானம் செய்தாலும் கிடைக்கும் பலன் அதிகம். சித்தியும், முத்தியும், மேலான இன்பமும் கிடைக்கும். அஞ்ஞானம் அகலாத மூடர்களுக்கு நிலமளவு பொன்னைத் தானம் செய்தாலும் அது எந்தவிதப் பயனையும் தராது. மேலான இறை இன்பமும் கிடைக்காது போய்விடும்.

தகுதி உள்ளவர்க்கே தானம் செய்ய வேண்டும்.


அஞ்ஞானம் நீங்கப் பெறுவோம்!

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.  – (திருமந்திரம் – 500)

விளக்கம்:
ஆணவத்தால் ஏற்படும் அறியாமையை நீக்குவது நமது கனவாக மட்டும் இருந்து விடக்கூடாது. நனவிலும் ஆணவத்தை விட்டு அறியாமை நீங்கப் பெற வேண்டும். அப்படி அஞ்ஞானம் நீங்கப் பெற்றவர்கள் தாம் விந்து, நாதம் முதலிய சகல தத்துவங்களையும் தெளிவாக உணர்வார்கள். ஆணவம் முதலிய அழுக்குகள் நீங்கப் பெறாத சகலர்கள் நெடுங்காலம் முயற்சி செய்து சிவதத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள்.


எல்லோருக்கும் கண்டிப்பாக முத்தி உண்டு!

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.  – (திருமந்திரம் – 499)

விளக்கம்:
விஞ்ஞானகலர் தம்முடைய நல்வினைகளால் உடலும் மனமும் ஒருமித்து சிவபெருமானை தியானித்து முத்தி அடைவார்கள். பிரளயாகலர் தம்முடைய நல்வினைகளால் அடுத்து இன்னும் மேன்மையான பிறவி பெற்று முத்திக்கான முயற்சியில் இருப்பார்கள். சகலர் மறுபடியும் நிறைய பிறவிகள் எடுத்தாலும் இடையிடையே முத்திக்கான முயற்சியை செய்தவாறு இருப்பார்கள். அவர்களும் ஒரு நாள் மெய்ஞானம் பெற்று சிவத்தை அடைவது உறுதி. இதில் சந்தேகம் வேண்டாம்.