மெய்ப்பொருளை உணர்வோம்!

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.  –  (திருமந்திரம் – 643)

விளக்கம்:
வானம் முதலான ஐந்து பூதங்கள், அவற்றைப் பற்றிய கல்வி, காலம், இவற்றால் ஏற்படும் மாயை ஆகியவற்றில் சிக்காமல் அகன்ற அறிவு ஒன்றை நாடுவோம். புற உலகைப் பற்றிய விஷயங்களைத் தேடாமல் மெய்ப்பொருளை நாடுவோம். மெய்ப்பொருளை நாடும் அகன்ற அறிவுடன், தொடக்கமில்லாத அனாதியான  ஓய்வேயில்லாத சிவபெருமானின் தன்மையை உணர்வோம். மெய்ப்பொருளை உணர்ந்தால் அழிவில்லாத பரவெளியை அடையலாம்.


வசித்துவம் – எட்டாம் சித்தி

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.  –  (திருமந்திரம் – 642)

விளக்கம்:
யோககுருவின் வழிகாட்டுதலின் படி நாம் தியானம் செய்வோம். அத்தியானத்தினால் மூலாதாரத்தில் உள்ள சக்தி சகஸ்ரதளத்தில் இருக்கும் சிவனைச் சேரும். அந்தச் சரியான சமயத்தில் தெளிவு தரும் சாம்பவி, கேசரி ஆகிய யோகங்களைச் செய்பவர்களுக்கு எட்டாம் சித்தியான வசித்துவம் வாய்க்கும். இதை விடச் சிறந்த சிவகதி ஏது?

குரவன் – குரு, பரை – பராசக்தி, சங்கட்டம் – நல்ல சமயம்


அட்டமாசித்தியை விட உயர்ந்த பரிசு ஏது?

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.  –  (திருமந்திரம் – 641)

விளக்கம்:
அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி அருள் தரும் பண்பு உடையவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடியே கதி என நாடி, மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சரண் அடைந்தேன். அங்கே தூய்மையான பரவெளியைக் கண்டேன். இனி இந்த உலகில் நான் ஆசைப்படக்கூடிய அரிய பொருள் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் மிக அரிய பரிசான அட்டமாசித்தியை எனக்கு அளித்து என் பிறப்பறுத்தான் என் சிவபெருமான்.


சிவபெருமானை அணிந்து கொள்வேன்!

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.  –  (திருமந்திரம் – 640)

விளக்கம்:
அட்டமாசித்தி எனப்படும் எட்டு விதமான மாபெரும் சக்திகளைப் பெற நாம் எட்டுத் திசைகளிலும் சிவபெருமானைத் தேடிச் சென்று முழு நம்பிக்கையுடன் அவனை வணங்க வேண்டும். அன்பு மிகுதியால் சிவபெருமானை நாம் அணிந்து கொள்ள வேண்டும். உலக விஷயங்களின் மேல் உள்ள ஆசைகள் எல்லாம் தணிந்து சிவபெருமானைத் தொழுது இருந்தால் அட்டமாசித்திகளைப் பெற்று அச்சக்திகளை நிலை நிறுத்தலாம்.


அட்டாங்கயோகத்தில் சமாதியின் பலன்கள்

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.  –  (திருமந்திரம் – 639)

விளக்கம்:
பரம்பொருளான சிவபெருமானைச் சேர்ந்திருக்கும் நிலை சமாதி. அந்த சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் மேலானவை.

உடல், மனம், இந்த உலகம், செல்வம் ஆகியவை எல்லாம் மாயையின் தோற்றங்கள் என உணர்ந்து அவற்றை நாம் கடந்து விடலாம். மாயத்தோற்றத்திற்குக் காரணமான ஏழு தத்துவங்களும் நம் அறிவுக்கு விளங்கும். தொடர்ந்து கிளைத்து வரும் வினைகளுக்கிடையே ஒழுங்குடன் நின்று பரம்பொருளுடன் சேர்ந்திருக்கும் சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் இவை.


அட்டாங்கயோகத்தால் ஈசன் திருவடியை அடையலாம்

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.  –  (திருமந்திரம் – 638)

விளக்கம்:
சமாதி நிலையில் இருந்து தூங்க வல்லவர்கள், ஏழு உலகங்களிலிருந்தும் மனத்தை வாங்கி உள்நோக்கித் திருப்பும் பிரத்தியாகரத்தில் இருக்க வல்லவர்கள், அந்த நிலையிலே நிலையாக நிற்கும் தாரணையில் தேங்க வல்லவர்கள், உள்ளூறும் அமுதத்தை தியானத்தில் இருந்து தாங்க வல்லவர்கள், இவர்கள் எல்லோரும் எதை நோக்கித் தியானம் செய்கிறார்களோ அந்த நிலையை அடைவார்கள். அதாவது ஈசனின் திருவடியை அடைவார்கள்.


அட்டாங்கயோகம் தரும் பரிசு

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.  –  (திருமந்திரம் – 637)

விளக்கம்:
அட்டாங்கயோகம் நம்மை சரியான பாதையில் நடத்திச் செல்லும் வழிகாட்டி ஆகும். அட்டாங்கயோகத்தின் பலன் நம்மை நல்வழியை மட்டுமே நாடியிருக்கச் செய்யும். எமனிடம் அழைத்துச் செல்லும் தீய வழியில் செல்ல விடாமல் தடுக்கும். மேலும் நமக்குக் கிடைக்கும் குறைவில்லாத பரிசு என்னவென்றால், நமக்குத் தேவலோகத்தில் உள்ள எல்லா வழிகளும் பூலோகத்தைப் போல எளிதாகவே இருக்கும். அங்கே எட்டுத் திசைகளிலும் தங்கு தடை இன்றி சென்று வரலாம்.


இவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.  –  (திருமந்திரம் – 636)

விளக்கம்:
நாம் சிவகதி அடையும் காலத்தில் சிவலோகத்தின் காவலர்கள் ”யார் இவன்?” என தேவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது அந்த அழகு மிக்க தேவர்கள் “அட்டாங்கயோகத்தில் நின்ற இவனும் சிவனே ஆவான்!” என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த உலகத்தில் நம் இறைவனாம் திருநீலகண்டப் பெருமானைக் காணலாம்.


அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.  –  (திருமந்திரம் – 635)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் தொடர்ந்து நின்று யோகப் பயிற்சிகளைச் செய்பவர்கள், செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் வானவர்கள் பூரண கும்பத்துடன் வந்து எதிர்கொண்டு ‘நம் தங்கத் தலைவன் இவன்’ என வாழ்த்தி வரவேற்பார்கள்.  அந்த வானவர்களின் சேர்க்கை கிடைக்கப் பெற்று அவ்வுலத்தில் இன்பமாய் இருக்கலாம்.


தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.  –  (திருமந்திரம் – 634)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தன் மெய் வருத்தி ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களை ’இவன் தேவர் உலகின் செல்வன்’ என தேவர்களின் தலைவர் இயம்புவார். அந்நேரம் முரசுகள் முழங்கும், புல்லாங்குழல் இசைக்கும். அந்த தேவர் உலகத்திலே ஈசன் அருளாலே நாம் இன்ப வாழ்வு பெறலாம்.