ஒரு பல்லக்கு தூக்குபவனின் கடிதம்

மாதம் தோறும் வெளி வரும் ஒரு பக்தி மாத இதழுக்கு வந்த ஒரு வாசகர் கடிதம் இது.

ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,

கோடி நமஸ்காரங்கள். இந்த பரந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைவனின் படைப்புகளில் அடியேன் ஒரு சிறியவன். மாதந்தோறும் வரும் உங்கள் பத்திரிகையை நான் வாரந்தோறும் வாங்கி விடுவேன். தீவிர வாசகன் நான். வாசகன் என்றால் பல்லக்கு தூக்குபவன் என்று அர்த்தம் என்பது தங்களுக்கு தெரியும் தானே. (பாடை தூக்குபவன் என்றும் அர்த்தம் உண்டு. நாம் அதை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டாம்). முன்பெல்லாம் நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை வெளியூர் பயணத்திற்காக என் மனைவி உங்கள் பத்திரிகை ஒன்றை வழியில் படிக்க எடுத்து வைத்திருந்தார். நான் கோபத்தில் கடுமையாக திட்டி அதை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டேன். பேருந்து நிலையத்தின் கடை ஒன்றில் ஜூனியர் விகடன் கேட்டேன். வாங்கும் நேரம் பேருந்து கிளம்பி விட்டதால் புத்தகத்தை சரியாக பார்க்கவில்லை. பிறகு தான் பார்த்தேன், வீட்டில் நான் வேண்டாமென்று சொன்ன அதே புத்தகம் அது. அட்டையில் ஐயப்பன் படம், என்னைப் பார்த்து சிரித்தவாறு. வேகமாக திரும்பி அந்த கடைக்காரரை பார்த்தேன். அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார், என்னைப் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பு சிரித்தார். இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் சம்பவம் அது.

அன்றிலிருந்து உங்கள் பத்திரிகையை தவறாமல் வாங்கி விடுகிறேன். கையில் காசில்லா விட்டாலும் வித்தால் போதும் என்று கடைக்காரர் கொடுத்து விடுகிறார். பக்தி வந்தவுடன் எந்த கோவிலுக்கு போவது என்று தெரியாமல் இருந்தேன். அதற்கும் உங்கள் பத்திரிகை தான் வழி காட்டிற்று. கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தை திறப்பேன், அந்த பக்கத்தில் எந்த கோவிலைப் பற்றி இருக்கிறதோ அந்த கோவிலுக்கு கிளம்பி விடுவேன்.

ஒரு சொம்பு நிறைய பாயாசம் கொடுத்து, அதில் எந்த துளியில் அதிக இனிப்பு என்று கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ அது போல உங்கள் பத்திரிகையில் எந்த பகுதி சிறப்பு என்பதும் சொல்ல முடியாது. ஆனாலும் அதில் வரும் ராசி பலன் பகுதியை முந்திரி பருப்பென்பேன். அது என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக உள்ளது. ஒரு மாதம் எனக்கு கெடுதலான பலன்களாக போட்டிருந்தது. பரிகாரமாக திருநங்கைகளுக்கு உதவச் சொல்லியிருந்தது ஆறுதல் அளித்தது. ஆனாலும் அந்த நேரம் திருநங்கை யாரும் தென்படவில்லை. அதற்காக பரிகாரம் செய்யாமல் இருக்க முடியுமா? இதெற்கெல்லாம் செலவு பார்த்தால் முடியுமா? இப்போது மருத்துவம் எவ்வளவு முன்னேறியிருக்கு?

என்னுடைய நிறைய ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களுடைய பதில்கள் எனக்குள் அறிவு வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது. அந்த சந்தேகங்களில் சில இவை.

  • பாம்புக்கு மோதிரம் போட்டால் நாக தோஷம் தீரும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த கிழமையில் செய்யலாம்?
  • கனவில் கழுதை ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. அதன் பலன் யாது?
  • அவிட்ட நட்சத்திரக்காரர் ஆயில்ய நட்சத்திரக்காரரை விவாகரத்து செய்யலாமா?
  • வாய்க்கசப்பு ஏற்படுவது மனக்கசப்பு  நீங்கிடும் அறிகுறி என்கிறார்களே? உண்மையா?
  • 108 விளக்கு ஏற்றினால் விவாதத் தடை நீங்கும் என்று சொல்லியிருந்தீர்கள். ட்விட்டரில் உள்ளவர்கள் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

எனக்கு தொழில் நிலம் வாங்கி விற்பது.  முதலில் சிறிய வருமானமாக இருந்த நேரம், வழக்கம் போல உங்கள் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். கடைகாரர் தவறுதலாக முந்திய மாத புத்தகத்தை கொடுத்து விட்டார். நானும் வீட்டுக்கு வந்து தான் கவனித்தேன். அப்போது தோன்றிய பிசினஸ் ட்ரிக்தான் தான் இது. ஏற்கனவே விற்ற நிலத்தை இன்னொருவருக்கு விற்றேன். மாட்டிக்கொள்ள இருந்தேன். அந்த நேரம் முதலில் வாங்கியவர் இறந்து விட்டார். அவர் சார்பில் யாரும் இதை தெரிந்திருக்கவில்லை. நான் தப்பித்தேன், கடவுள் நம்பிக்கை கூடிற்று. இப்போது கோடிக்கணக்கில் குவித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் பத்திரிகைதான். பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக மாதம் நூறு பிரதி வாங்கி வைக்கிறேன் இப்போது. சர்க்குலேஷன் போதவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கி குவிக்கிறேன்.

இப்போது ஒரு சின்ன பிரச்சனை, உங்களால் கண்டிப்பாக ஆலோசனை சொல்ல முடியும். கிரக நிலை இப்போ சரியில்லை போல. மோசடி செஞ்சிட்டேன்னு சொல்லி போலீஸ்ல தேடுறாங்க, என் பேர்ல நிறைய கேஸ் இருக்கு. சட்டப் பிரச்சனைக்கு சட்டநாதரை வணங்கினால் தீர்வு உண்டு என்று உங்கள் கட்டுரை ஒன்று படித்தேன். அதைப் பற்றி இன்னும் சில விபரங்கள் தேவை.


நாடு தாங்காதுடா டே!

“ஒரு ரெண்டு வருஷம் அப்பிடி இப்பிடி கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் அஞ்சு வருஷம்” கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார் “நீ ரொம்ப கஷ்டப்படுவ” நூத்தியோரு ரூவா வாங்கிய அந்த கைரேகைக்காரர். கருமாரி அம்மன் கோயில் பக்கத்தில் இருப்பவர்.

“ஒம் மவன் ஜாதகம் தான் ஓன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம். அவன் பெறந்து ரெண்டு வருஷம் வரை அவன் மொகத்த நீ பாக்கக் கூடாதுன்றது தான் பரிகாரம். இப்ப ஒண்ணும் கெட்டு போகல, ஒரு சாந்தி ஹோமம் பண்ணனும். ஐயாயிரம் ஆகும்” இவர் ஒரு ஜாதக நிபுணர். இந்தா பிடி நூத்தியொண்ணு. ஆள விடு.

“நாப்பது வயசில நீ அரசியலுக்கு வருவ. அதுல பெரிய ஆளாயிடுவ.” நாடு தாங்காதுப்பா!

“அய்யர் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு வருவா வீட்டுக்காரியா.” என்னத்த சொல்ல?

“பல தொழில் செஞ்சி பல வழில வருமானம் வரும்.” ஒரு தொழிலே ஒழுங்கா செய்ய முடியல.

இது வரை பார்த்ததிலே அந்த திருவண்ணாமலை கைரேகைக்காரர் வித்தியாசமாய் சொன்னார் “இந்த கைல பாக்குறதுக்கு என்ன இருக்கு! எல்லாமே நல்லா இருக்கு. நீ காசு குடுக்காட்டியும் பரவால்ல, போயிட்டு வா.” அஞ்சு ரூபா கொடுத்திட்டு நகர்ந்தேன்.

தெரிஞ்ச ஒரு அக்காவின் பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை சிபாரிசு செய்தேன் “ஏன்யா! ஜாதகம் பாத்த ஜோசியரு மாப்பிள வடகிழக்கு தெசைலருந்து வருவாருன்னு சொன்னாங்க. நீங்க சொல்றது தெற்கு பக்கமால்ல இருக்கு? வேணாம்யா.”

காய்ச்சலா இருக்குதுன்னு பக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு போய் பூசாரிகிட்ட விபூதி கேட்டேன். “கோவிலுக்கு ஒரு மணி வாங்கி மாட்டு. எல்லாம் சரியாப்போவும்.” முனீஸ்வரா!

நண்பர் ஒருவர் சொல்வார் “எந்த நியூமராலஜிஸ்ட்டாவது ஒருத்தன் கிட்ட உன் பேர் சரியாயிருக்கு. ஒண்ணும் மாத்த வேண்டியதில்லைன்னு சொல்லியிருக்காரா? எனக்கு தெரிஞ்சி நிறைய பிரபலங்கள் நியூமராலஜி பார்த்து பேர் மாத்தின பிறகு அவங்க புகழ் குறைய ஆரம்பிச்சிருக்கு. பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீயே யோசிச்சிக்கோ.” நமக்கு அந்த அளவு பொது அறிவெல்லாம் கெடையாதுங்க.

எங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு பேரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி.

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு குறி சொல்ற பெண் வீட்டு வாசல்ல வந்து குடிக்க தண்ணி கேட்டுச்சு. வீட்டுக்காரி சொம்புல தண்ணி கொண்டு வந்து குடுத்தா. அந்த பெண் தண்ணி குடிச்சிட்டு “நீ நல்லா இருப்பம்மா. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் பிரியாம ஒத்துமையா இருப்பிங்கம்மா”னுச்சு. வீட்டுக்காரி அவளை ஒரு விரட்டு விரட்டினாள் “ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற? சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”

அந்த பெண்ணுக்கு வேர்த்து விட்டது. பயந்துகிட்டே யோசிச்சவளுக்கு குபுக்குனு சிரிப்பு வந்து, சிரிக்கலாமா கூடாதான்னு புரியாம திருதிருன்னு முழிச்சுகிட்டு சிரிப்பு அடக்க முடியாம ஓடியே போயிருச்சு.


போடா டேய்!

சின்ன வயதில் பயணம் செய்வதென்றால், அது மிகவும் சந்தோஷமான அனுபவம். பேருந்தினுள் நூற்றென்பது பேரில் ஒருவனாக நின்று கொண்டே பயணம் செய்தது கூட அப்போதெல்லாம் அலுப்பு ஏற்படுத்தியதில்லை. நெரிசலுக்குள் உட்கார ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட போதும், ஒரு பாக்கெட் நாவல் படித்து விட்டு தூங்கிவிடுவேன். கூட்டமில்லாத பேருந்தில், அதுவும் ஜன்னலோரம் இடம் கிடைத்து விட்டால் போதும் – சொர்க்கம் தான்.

சின்ன வயது சகிப்புத் தன்மை இப்போது குறைந்து வருவது எனக்கு மட்டும்தானா என்பது புரியவில்லை. இப்போதெல்லாம் வேறு வழியில்லை என்றால் தான் பேருந்து பயணம். நம் தோளை தனது தலையனையாய் உபயோகிக்கும் பக்கத்து இருக்கை அன்பர், தனது மோதிர தாளத்தில் இசை முயற்சி செய்யும் பின் இருக்கை நண்பர், சீன மொபைலில் நம்மை பாட்டு கேட்க வைக்கும் இசை ரசிகர், அதை கேட்டோ என்னவோ காறித் துப்பிக் கொண்டே வரும் பண்பர், இதனூடே பயணம் செய்வது கொஞ்சம் சிரமமாய்த் தான் உள்ளது.

ஒரு முறை தேனியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து பயணம் தான், வேறு வழியில்லை. அன்று அலைந்து திரிந்திருந்த களைப்பினால் தூக்கமாய் வந்தது. ஆனால் தூங்க விடாமல் முதுகில் யாரோ மெத்தென்று மிதிப்பது போல் இருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். அந்த சிறுவனுக்கு மூன்று வயதுக்குள்தான் இருக்கும். கருப்பாய், களையாய், துறுதுறுப்பாய் இருந்தவன், தனது பாட்டியுடன் உட்கார்ந்திருந்து முன்னால் இருந்த இருக்கையை உதைத்துக் கொண்டிருந்தான். “சே! ஒரு சின்ன பையனோட சேட்டையை ரசிக்காட்டியும் பரவாயில்லை, கோபம் வந்தால் நாமெல்லாம் ஒரு மனுசனா?” இப்படி என்னை நானே திருத்திக் கொள்ள முயன்று முன்புறமாக சாய்ந்து கொண்டேன்.

உசிலம்பட்டியில் பேருந்து சிறிது நேரம் தேநீர்க்காக நின்றது. நிறைய பேர் கீழே இறங்கி விட்டார்கள். சிறுவனின் பாட்டியும் பேரனுக்கு தின்பண்டம் வாங்க கீழே இறங்கினார். ஆசுவாசமாக பின்னால் சாய்ந்த எனக்கு முதுகில் உதை பலமாக விழுந்தது. சிறுவனின் உதையில் வேகமும் அழுத்தமும் அதிகமாயிருந்தது. நான் அவனை நோக்கி திரும்பி “தம்பி! காலை கொஞ்சம் கீழே வச்சுக்கோயேன்”னு சொன்னேன். அவன் பதிலாய் ஒரே வார்த்தைதான் சொன்னான் “போடா!”. சுற்றிலும் பார்த்தேன், யாரும் கவனித்திருக்கவில்லை. எதிரே ஒரு இருக்கை காலியாயிருந்தது, அதிலே போய் உட்கார்ந்து கொண்டேன்.

பேருந்து கிளம்பிச் செல்லும் போது நான் முதலில் உட்கார்ந்திருந்த இருக்கையை கவனித்தேன். ஒரு கிராமத்து முதியவர் உட்கார்ந்திருந்தார். அப்போதும் அந்த சிறுவன் உதைத்துக் கொண்டுதான் இருந்தான். அந்த முதியவர் அதை உனர்ந்ததாகக் கூட தெரியவில்லை. காலை ஆட்டிக்கொண்டே அந்த சிறுவன் தனது பாட்டியிடம் கேட்டான் “இவங்கெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்க?”. பாட்டிக்கு எதுவும் புரியலை.


இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு

– முதலில் பெர்சியர்கள் சிந்து நதியோரம் வசிப்பவர்களை ஹிந்து என்று குறிப்பிட்டாலும், ஹிந்து என்ற சொல் அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள் வருகைக்கு பிறகு பரவலான உபயோகத்திற்கு வந்தது. முதலில் அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே நினைத்தனர். பின்னர் இந்திய மக்களின் வாழ்வு முறையை புரிந்து கொண்ட பிறகு தான் அவர்களால் ஹிந்துக்களை மற்ற மதத்தினவர்களிடம் (புத்தம் மற்றும் ஜைனம்) இருந்து வேறுபடுத்தி அறிய முடிந்தது.

– வரலாற்றின் பிற்காலங்களில் தான் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். முன்னர் அவர்கள் தங்கள் ஜாதி அல்லது வகுப்பு பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி கொண்டார்கள். ஹிந்துக்களிடையே ஜாதியினால் பெரிய அளவில் பிரிவினைகள் எப்போதுமே இருந்துள்ளது. சமய வழிபாட்டு முறை மற்றும் மத உரைகள் அவர்களிடையே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்து வர காரணமாய் இருந்து வந்துள்ளது.

– ஐரோப்பியர்களுக்கு வெகு காலம் முன்பே இந்தியர்கள் தாங்கள் கற்றவைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பழங்கால இந்தியர்கள் படைத்த காவியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டவை, நுட்பமான பொருள்கள் நிறைந்த அமரத்துவம் பெற்றவை. அவை இன்றும் உலக அளவில் நமக்கு பெருமை தேடித் தருபவை. மேலும் தலை சிறந்த கணித மேதைகளும் வானியலாளர்களும் செய்த பங்களிப்புகள் பின்னர் முக்கிய ஆய்வுகளுக்கு பயன்பட்டன. இந்தியர்கள் இல்லாமல் இப்போது நடைமுறையில் உள்ள நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையாய் உள்ள எண் முறை சாத்தியமாகியிருக்காது.

-தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக காலத்திய நகைகளையும் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் அந்நாளைய பண்பட்ட வாழ்க்கை முறையை பறைசாற்றுபவையாக உள்ளன. இந்தியர்களின் வெண்கலம் மற்றும் செம்பினால் ஆன கைவினைப் பொருட்களுக்கு அகில உலகில் எப்போதுமே கிராக்கி இருந்து வருகிறது.

-மேலும் நமக்கு பெருமை சேர்ப்பவை பழங்கால துணி வேலைப்பாடுகள், கோவில்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் 8200 வருட கால அமைதியான ஒழுக்கமான சமூக வாழ்க்கை முறை.

– இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் பழங்கால இந்தியா மற்ற நாகரிகங்களான மெசபட்டோமியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பின்தங்கியே இருந்திருக்கிறது. இந்தியர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. சீனர்களும் ரோமானியர்களும் தங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

– பழங்கால இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமையை போக்குவதற்க்கு பெரிய அக்கறை எதுவும் கொள்ளவில்லை. மேலும் இந்தியாவின் மீது படிந்துள்ள பெரும் கறை அதன் ஜாதி அமைப்பு.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI


இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி ஒன்று

 – இந்தியாவின் முதன்மையான புனித நூல் ரிக் வேதம். இன்றைய பஞ்சாப் பகுதி ரிக் வேதத்தில் சப்த சிந்தவா (ஏழு நதிகளை கொண்ட நிலம்) என்று அழைக்கப்படுகிறது. இப்போது அங்கே ஐந்து நதிகள் மட்டுமே ஓடுகின்றன – சிந்து, ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ் / பீஸ். 4000 வருடங்களுக்கு முன் சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி என்னும் இரண்டு நதிகள் இருந்தனவாக நம்பப்படுகிறது. பின்னாளில் அவை வற்றிப் போயிருக்கலாம்.

– 8000 வருடங்களுக்கு முன் பெர்சியர்கள் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்த போது, அவர்கள் மேற்கே இருந்த சிந்து நதியை தொடர்புபடுத்தி அங்கே வசித்தவர்களை ‘ஹினாபு’ என்று அவர்கள் மொழியில் அழைத்தார்கள். பிறகு சுமார் 2000 வருடங்களுக்கு பிறகு மாசிடோனியர்கள் அலக்ஸாண்டரின் தலைமையில் அங்கே படையெடுத்தார்கள். அவர்கள் சிந்து நதியை ‘இந்தோஸ்’ என்றும் அதை சார்ந்த நிலப் பகுதியை ‘இந்தியா’ என்றும் கிரேக்க மொழியில் அழைத்தார்கள். ஆனால் நம் மக்கள் சில சமஸ்கிருத பெயர்களைத் தான் உபயோகித்துள்ளார்கள் – பாரத், மத்தியதேஷா மற்றும் ஜம்புத்விபா (இந்திய வரை படம் ஜம்பு மர வடிவில்  இருப்பதால்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

– கி.மு. 7000 வாக்கில் பலூசிஸ்தான் பகுதியில் முதன் முதலாக விவசாயம் செய்யும் வழக்கம் தோன்றியுள்ளது.

-கி.பி.1200க்கு முன்பு நமது நாடு பலமுறை வெளிநாட்டினரால் தாக்கப்பட்டிருந்தாலும் (பெர்சியர்கள், கிரேக்கர்கள், மத்திய ஆசியாவை சேர்ந்த குஷானர்கள், அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள்) அப்போதிருந்த இந்திய பேரரசர்களும் சிற்றரசர்களும் தங்கள் நிலப்பகுதிகளை காப்பாற்றி தக்க வைத்துக் கொண்டார்கள்.

-கி.பி.1200க்கு பிறகு ஆப்கன் மற்றும் மொகலாயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்திய மன்னர்கள் தங்கள் சுய ஆட்சி உரிமையை சிறிது சிறிதாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI


கடவுள் எனப்படும் அனானி!

பிரியமான மனிதர்களுக்கு,

அனானி எழுதுவது. நான் பெயர் இல்லாதவன், உருவமற்றவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதால் அனானி என்று சொல்லி கொள்கிறேன். அதையே எனது பெயராக்கி விடாதீர்கள். வரலாற்றில் இப்படித்தான் நிறைய நடந்திருக்கிறது. ஆன்மீக சிந்தனை என்ற பெயரில் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் எனது இன்பாக்ஸ்ஸில் வந்து சேர்ந்து அது பல டெட்ரா பைட்ஸ்ஸை தாண்டி விட்டது. உங்கள் கேள்விகள் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றாலும், உங்கள் சந்தேகங்களுக்கு நான் பொறுப்பில்லை என்றாலும் FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கு பதில் தருகிறேன்.

1. இந்த உலகத்தை படைத்தது யார்?
டெக்னிக்கலாக தெரிய வேண்டும் என்றால் டார்வின் படிக்கலாம். வேதாந்தமாக வேண்டுமென்றால் அவரவர் உலகை அவர்களே படைக்கிறார்கள்.

2. விதி என்பது உண்மயா?
உண்மை. இதற்கு நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்.

3. மதத்தின் பெயரால் நடக்கும் சண்டை, சச்சரவுகள் பற்றி?
அவை மதத்திற்காகவோ, அவர்களின் கடவுளுக்காகவோ இல்லை. தன்னுடய புரிதலும் நம்பிக்கையும் தான் சரியானது என்று வாதிடுகிறார்கள்.

4. இவற்றை எப்படி நிறுத்துவது?
அது என் வேலை இல்லை.

5. மரணத்திற்கு பிறகு?
செத்து பார். தெரியும்.

6. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏன்?
வலிமை உள்ளவன் வேண்டியதை அடைவான். அது இல்லாதவன் இப்படி கேள்விகள் கேட்பான்.

7. நாத்திகம் பற்றி?
அதுவும் ஒரு நம்பிக்கைதான்.

8. யோகா, தியானம் மூலம் கடவுள் தன்மை அடைய முடியுமா?
கடவுள் தன்மை என்று ஒன்று கிடையாது. முயன்றால் தன்னுடைய தன்மை உணரலாம்.

9. பேய், பிசாசுகள் உண்டா?
உண்டு. அவை எல்லோருடய எண்ணங்களிலும் உள்ளன.

10. பிரார்த்தனைகளால் பலன் உண்டா?
சந்தேகத்துடன் செய்தால் பலன் கிடையாது.

11. அரசியல் பற்றி?
சமூக வாழ்விற்கு அது மிகவும் அவசியம்.

12. அரசியலில் முறைகேடுகள் நிறைய உள்ளதே?
அவை service charges.

13. விபத்துக்கள் இப்போது நிறைய நடக்கிறதே?
விஞ்ஞான வள்ர்ச்சியின் ஒரு சிறிய பக்கவிளைவு.

14. பூஜைகள், யாகங்கள் செய்தால் பலன் உண்டா?
அவற்றை உருவாக்கியவர்களைத்தான் கேட்க வேண்டும்.

15. அவை கடவுளால் சொல்லப்பட்டதில்லையா?
நான் உருவாக்கியிருந்தால் இன்று உலகில் ஒரே வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும்.

16. அப்படியானால் நீங்களே ஒரு வழிபாட்டு முறை உருவாக்கி இருக்கலாமே?
என்னை வழி படச்சொல்லி நான் யாரையும் சொல்லவில்லை.