பதி, பசு, பாசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. – (திருமந்திரம் – 115)

விளக்கம்:
சிவன், சீவன், தளை எனக் கூறப்படும் மூன்றில் சிவனைப் போலவே சீவனாகிய உயிரும், தளையாகிய பற்றும் மிகவும் தொன்மையானவை. சீவனும் தளையும் சிவனை அணுகாது. சிவன் நம் சீவனை அணுகி வரும் போது, பற்று எனப்படும் தளை நம்மை விட்டு நீங்கி விடும்.

(பதி – சிவன்,  பசு – சீவன், உயிர்,   பாசம் – தளை, பற்று,   அனாதி – தொன்மையானது)

பளிங்கிலே பவளம் பதித்தான்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. – (திருமந்திரம் – 114)

விளக்கம்:
நெற்றிகண்ணை உடைய எங்கள் நந்தி பெருமான், எம்முடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய குற்றங்களை நீக்கி அருளினான். மேலும் மாசு வந்து படியா வண்ணம் எம்முள்ளே அருள் கண்ணை விழிக்கச் செய்து, மாசில்லாத ஆன்ம ஒளியைக் காட்டி அருளினான். எம் சிவபெருமானின் இந்தச் செயல், பளிங்கிலே பவளம் பதித்தது போன்றது ஆகும்.

சிவபெருமான் நம் குற்றங்களை நீக்குகிறார்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. – (திருமந்திரம் – 113)

விளக்கம்:
சிவபெருமான் தன்னுடைய மேலான நிலையில் இருந்து இறங்கி வந்து, நம்முடைய வினைகளை எல்லாம் தீர்க்கும் விதமாக குளிர்ச்சியான தன் திருவடிகளை நமக்குச் சிறந்த பாதுகாவலாகத் தருகிறான். அவன் நம் உடலின் உள்ளேயும், உயிரின் உள்ளேயும் நின்று ஒப்பற்ற ஆனந்தத்தை நமக்குக் காட்டி, நம் குற்றங்களை எல்லாம் நீக்கி அருள் செய்தான்.

(விண்ணின்று – மேலான நிலையில்,  இழிந்து – இறங்கி வந்து,  தலைக்காவல் – சிறந்த காவல்,  உண்ணின்று – உள்+நின்று,  களிம்பு – மாசு)

என் ஒவ்வொரு அசைவிலும் சிவன் இருக்கிறான்

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. – (திருமந்திரம் – 112)

விளக்கம்:
எம் இறைவனான சதாசிவன் உலகில் உள்ள எல்லாப் பொருளிலும் தான் ஒரு அங்கமாக விளங்குகிறான். வானுலகிலும் தான் ஒரு அங்கமாக எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான். எம் தலைவனான அவன் என் உடலில் உயிராக கலந்திருந்து என் ஒவ்வொரு அசைவிலும் அவன் விளங்கிறான்.

(கூறு – பகுதி,  மருவி – கலந்து,  கோன் – தலைவன்,  சலம் – அசைவு)

அவரவர் தன்மைக்கு ஏற்ப காட்சி தருவான்

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. – (திருமந்திரம் – 111)

விளக்கம்:
சிவபெருமான் நம்முடைய உடலாகவும், உயிராகவும் விளங்குகிறான்.  நம்மிலே கலந்திருக்கும் மேலானவன் அவன் . அந்த சிவனே, வரம் தரும் திருமாலாகவும், பிரமனாகவும் விளங்குகிறான். பக்தர்கள் ஒவ்வொருவரின் தரத்திற்கேற்ப பல தன்மைகளில் காட்சி தருகிறான். யாருக்கும் விளங்காதவாறு மறைந்து நின்று அழித்தல் தொழில் செய்யும் உருத்திரனும் அவனே!

(பரம் – மேலான,   கரத்து – மறைவு,   கழிவு செய்தான் – அழிவுத் தொழில் செய்தான்)

நிர்வாகத்திற்கு உதவும் காலண்டர்

ஒரு நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான பாடங்கள் நமது பழந்தமிழ் இலக்கியமான பழமொழி நானூறு செய்யுள்களில் உள்ளன. அந்தப் பழமொழிகள் இப்போதும் ஒரு வெற்றிகரமான நிர்வாகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளன. பழமொழி நானூறில் உள்ள சில பாடல்களை காலண்டராக வடிவமைத்திருக்கிறோம். எழுத்தாளர் என். சொக்கன் அவர்கள் பழமொழிச் செய்யுள்களுக்கு எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரை எழுதியிருக்கிறார். இந்தக் காலண்டர்கள் 2014 புது வருட தினம் அன்று தங்கள் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்றவையாகும். காலண்டர் தேவைப்படுபவர்கள் sales@scribblers.in க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தங்கள் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள். மேலும் விபரங்களுக்கு http://scribblers.in

Calendar_2014
January_2014
July_2014
Page_15

சோதிக்கும் கடவுள்

சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. – (திருமந்திரம் – 110)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவராகவும், பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவராகவும் விளங்குவது ஆதிக்கடவுளான சிவபெருமானே ஆகும். அவன் ஒளி வீசும் பேரொளிச் சுடராக உள்ளான். மூடர்கள் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரை வெவ்வேறானவராக எண்ணி பேதித்துப் பிதற்றுகிறார்கள்.

(சோதித்த – ஒளி விடுகின்ற,  ஆதர்கள் – மூடர்கள்)

இந்தப் பாடலில் சோதித்த என்னும் சொல் ஒளி விடுகின்ற என்னும் பொருளில் வருகிறது.  கடவுள் சோதிக்கிறார் என்றால் கடவுள் ஒளி விடுகிறார் என்று அர்த்தம். கடவுள் நம்மைத் தொடர்ந்து சோதிக்கட்டும்.

கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01

கிராஃபிக் டிசைனிங்கில் ஆர்வம் உடையவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில உதவிக் குறிப்புகளை (tips) இங்கே பகிரலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதில் ஃபோட்டோ ஷாப்பிலோ அல்லது கோரல் ட்ராவிலோ உள்ள கருவிகளின் உபயோகம் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. நாம் வேலை செய்யும் டிசைனின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமே எழுதுவதாக உள்ளேன். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் – டிப்ஸ் தரும் அளவுக்கு இவன் யார்? இவனுக்கு என்ன தெரியும்? என்று. அதைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன்.

நடிகர் சுருளிராஜன் ஒரு வில்லுப்பாட்டில் சொல்லுவார் ‘தெரியாதது எதுவோ, அதில தான் நாம முன்னுக்கு வர முடியும்’ன்னு. என் கதை அப்படித்தான். பதினஞ்சு வருஷமா இன்னும் எனக்கு புரிபடாத இந்த கிராஃபிக் டிசைனிங் தான் உண்ண உணவும், வசிக்க இடமும் தந்திருக்கிறது. இப்போதும் வாடிக்கையாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு டிசைன் செய்வதை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம், ஒரு டிசைனின் அடிப்படைத் தோற்றம் உருவாக நான் படும் பாட்டை பார்த்தால், எனக்கு டிசைனிங் தெரியாது என்னும் உண்மை வெளியே தெரிந்து விடும் என்பதால். சில சமயம் டிசைன் நன்றாக அமைந்து விடுவது உண்டு, அதற்கு காரணம் வாடிக்கையாளரின் ஜாதக விஷேசமே ஆகும். ஒவ்வொரு டிசைனுக்கும் அதிக நேரமும், முயற்சியும் எடுத்துக் கொள்வதால், அந்த அனுபவங்களில் இருந்து பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

மிகவும் அடிப்படையான விஷயமாக நான் நினைப்பது, வாடிக்கையாளர் கொடுக்கும் இன்புட். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முதலில் தெளிவாகத் தெரிய வேண்டும். டிசைன் செய்யப்பட வேண்டியது லேபிளா, போஸ்டரா, அட்டைப்பெட்டியா, புக் கவரா என்பதுடன் அதன் அளவு கண்டிப்பாக வேண்டும். நிறைய பேர் முதலில் சரியான அளவு தருவதில்லை. “ஒரு டிசைன் போடுங்க, சைஸ் பிறகு மாத்திக்கிடலாம்” என்பார்கள். கடுமையான சொல்லுக்கு மன்னிக்கவும், மிகவும் முட்டாள்தனமான வேலை வாங்கும் முறை இது. சைஸ் மாற்றுவது எளிய வேலை தானே என்பார்கள். அது கஷ்டமா அல்லது எளிதா என்பது ஒரு பிரச்சனை இல்லை. நன்றாக அமைந்த ஒரு டிசைன் பிறகு சைஸ் மாற்றப்படும் போது, அதுவும் அதன் நீள அகல விகிதம் மாறினால், டிசைனின் தோற்றப்பொலிவு குறைந்து போகும். ஒரு டெய்லரிடம் போய் யாரும் குத்து மதிப்பா ஒரு சட்டை தைங்க, அளவு சேரலைன்னா பிறகு ஆல்டர் பண்னிக்கிடலாம்ன்னு சொல்லுவதில்லை. எல்லாம் நம்மிடம் மட்டும்தான். இன்னொரு விஷயம், A4 size என்பார்கள். A4 size என்பது 210 mm x 297 mm, ஆனால் நம் ஊரில் letter size முதல் foolscap size வரை எல்லாமே A4 என்று சொல்வது வழக்கம். சரியான A4 size ப்ரிண்ட் செய்ய 63,5 cm x 86 cm பேப்பர் அவசியம், பொதுவாக நமது ப்ரிண்டர்கள் உபயோகிப்பது 58.5 cm x 91 cm ஆகும். அதனால் அளவு மில்லி மீட்டரில் இருந்தால் நல்லது.

வாடிக்கையாளரிடம் அளவு உட்பட எல்லா விபரங்களும் தயங்காமல் கேட்டு வாங்குவது ஒரு நல்ல டிசைனின் ஆரம்பம். ஒரு உற்பத்திப் பொருளுக்கு பேக்கிங் டிசைன் கேட்டால், அதன் விற்பனை விலை முதல் எல்லா விபரங்களும் நான் வாங்கி விடுவதுண்டு. காரணம், பேக்கிங்கிற்கு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ அதிகமாக செலவழிக்க வாய்ப்பிருந்தால் அதற்கேற்ற மாதிரி spot color printing, foils அல்லது UV ஏதோவொன்று டிசைனிங்கின் போது திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதால். அடுத்து பொருளின் பெயர், அதைத் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் இவற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்வது. சில பெயர்கள் அர்த்தம் புரியாது, ஆனால் அந்த பெயருக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை கேட்டுத் தெரிந்து கொண்டால் பொருத்தமான டிசைன் அமைப்பது சுலபமாக இருக்கும்.

வேலை ஆரம்பிக்கும் போது சரியான document size மற்றும் key line அமைத்து விடுவது அவசியம். இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இப்போதைய trend
drop shadow, outer glow, outline போன்ற எதுவும் உபயோகிக்காமல்,
ஆனால் text எல்லாம் தெளிவாகத் தெரியும்படி layout செய்வது தான்.

வாசம் செய்கிறான்… வாசனை பரப்புகிறான்…

வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. – (திருமந்திரம் – 109)

விளக்கம்:
மனிதர்களாகிய நம் அனைவரின் உடலிலும், தேன் நிறைந்த கொன்றை மலர் அணிந்த சிவபெருமான் அமர்ந்திருக்கிறான். வானுலகில் உள்ள தேவர்களின் உடலிலும் அந்த சிவபெருமான் வாசம் செய்கிறார். நம்முடைய பிறவிப் பயன் எதுவென்றால்,  நம் உடலில் மணம் பரப்பி வாசம் செய்யும் அந்த சிவபெருமானை உணர்வது தான்.