ஞானத் தலைவி

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. – (திருமந்திரம் – 82)

ஞானத் தலைவியாம் சக்தியுடன் சிவபெருமான் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். அங்கே ஒன்பது கோடி யுகங்கள் தீமை எதுவும் ஏற்படாத நிலையில் இருந்தேன். ஞானப் பாலூட்டும் அந்த சிவபெருமானை வணங்கி அந்த அறிவு நிழலில் நான் தங்கி இருந்தேன்.

இவ்வாறாக திருமூலர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்.

உணர்ச்சி கடத்தல்!

எனது விரல் அழகாய்த் தெரிகிறது
அவளது விரல்கள் அதில் பின்னி இருப்பதால்!
வெளிச்சம் பாய்ந்த நரம்புகளின் உள்ளே
கொஞ்சம் குளிர்ச்சியும் பரவியது!

மிருதுவாய் சருமம் – உள்ளே
எலும்புகளின் உறுதி சோதித்தேன்!
நரம்புகள் எத்தனை? பய நரம்பு எது,
சிலிர்ப்பு எதில், கோபம் எதில் – பிரித்து மேய்ந்தேன்!
ஓடும் குருதியின் உஷ்ண மாற்றம் புரியப் பார்த்தேன்!

வார்த்தைகள் மிச்சமாயிற்று இப்போது –
விரல்களே பேசிக் கொள்கின்றன சகலமும்!

வேதாளம் சொன்ன கதையல்ல நிசம்!

சேதனனுக்கு நேரத்தைக் கடப்பதே சிரம காரியம். இந்த சாலையை எப்படி கடப்பான்?  தன் முயற்சியில் சற்றும் தளராத சேதனன் மீண்டும் அந்த அகலம் அதிகமுள்ள சாலையைக் கடக்க முயன்றான். அந்த இடத்தைக் கடந்த எந்த சக்கர வாகனமும், எந்த வாகன ஓட்டுனரும், எந்த ஒரு பயணியும், அவனை ஒரு பொருட்டாகவே உணரவில்லை. ஒவ்வொருவனையும் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் பிறகு அவனை பொருட்படுத்த எவனும் இருக்க மாட்டான் என்பது இங்கே பொருட்கொள்ள வேண்டிய விஷயம். அவனைப் போலவே சக சமுதாயக் கால்நடை ஒன்றும் அங்கே தவித்தான். அவன் ரொம்ப யோசிக்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த சாலையைக் கடக்க ஆரம்பித்தான். சேதனனும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அப்போது வலப்பக்கமிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் நிறக் கார் ஒன்று இரண்டு அற்பப் பிராணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து சிறிது வேகத்தை குறைத்தது. காரின் வேகத்தைப் பார்த்து முதலில் தயங்கிய அந்த சக மனிதன், கார் வேகம் குறைவதைப் பார்த்து வேகமாக சாலையைக் கடக்கப் பாய்ந்தான். அதே நேரம் அவன் தயங்கியதைப் பார்த்த அந்த கார் நிறக் கார் ஓட்டுனன் தன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

பிணமாகக் கிடந்த அந்த சக மனிதனை சேதனன் தூக்கிச் சுமந்தவாறு சாலையைக் கடந்தான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் அந்தக் கார் சாதாரணமாகக் கடந்து சென்ற விதம், தனக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்பதாக இருந்தது. சேதனன் சாலையைக் கடந்து முடிக்கும் போது, தோளில் பிணமாகக் கிடந்தது கனக்கத் தொடங்கியது. ஒரு ஓரமாக இறக்கி வைக்கப் பார்த்தால், அது இறங்க மறுத்தது. இந்த இடத்தில் இருந்து தான் வேதாளம் சொன்ன கதை ஆரம்பம் ஆகிறது.

அந்த சடலத்தில் இருந்து இறங்க மறுத்த வேதாளம் பேசத் தொடங்கியது. “சேதனா! இப்போது நடக்கும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓர் ஒற்றை இலக்க சதவிகிதம் மட்டுமே விபத்தாகும், மற்றவையெல்லாம் கொலையும், தற்கொலையுமே ஆகும். தெரியுமா உனக்கு?” எனக் கேட்டது.

“ஊடகங்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேச வைக்கிறது. உன் உணவுப் பழக்கம் பற்றி கொஞ்சம் சொல்லேன்.”  சேதனன் வேதாளத்திடம் கேட்டான்.

“வேதாளத்திற்கு நினைவு தான் உணவு. ஏன் கேட்கிறாய்?”

“யோவ்! இந்த வெயிட் இருக்கியேன்னு கேட்டா!  எறங்குயா கீழ”.

“கோபப்படாதே சேதனா! உன் மூலமாக இந்த உலகிற்கு நீதி சொல்ல வேண்டியிருக்கிறது”.

“நீயுமா? என்ன செய்யணும்னு சொல்லு”.

”நீ இந்த சடலத்தை தோளில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு நடந்து போ. போகும் வழியில் நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”.

கதை கேட்பது, கருத்து சொல்வது, இதெல்லாம் சேதனனுக்கு பிடித்த விஷயம். அதனால் “சரி சொல்லு வேதாளமே!” என்று சொன்னவாறே நடக்க ஆரம்பித்தான்.

“சேதனா! இது கற்பனை கதை அல்ல, நடந்த சம்பவம். சிற்றுந்து எனப்படும் மினிபஸ்ஸில் நடந்த சம்பவம் இது. மினிபஸ்களுக்கு சாலை விதிகளில் இருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். பாதசாரி ஒருவர் கண்ணசைத்தாலே பக்கத்தில் வந்து நின்று அவரை ஏற்றிச் செல்லும். அந்த வகையில் அவை சிறந்த சேவையை அளிக்கின்றன. சம்பவ தினத்தன்று, மதிய நேரம், ஓரளவு கூட்டத்துடன் பயணம் சென்று கொண்டிருந்தது. நண்பகல் நேரமாதலால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. சிற்றுந்தின் ஒட்டுனர் மற்றும் நடத்துனர், இருவருமே இளவயதுக்காரர்கள்.”

“பக்கச்சாலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மினிபஸ்ஸின் முன்னே வந்து சாலையில் இணைந்து சாலையின் நடுவே மிதமான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் இருந்த இருவருக்கும் முப்பது வயதிற்குள் இருக்கும், லுங்கியும் பனியனும் அணிந்திருந்தார்கள். பின்னால் வந்த மினிபஸ்ஸுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் அலட்சியமாக ஒட்டினான் அந்த சிவப்பு பனியன்காரன். ஹாரன் சத்தம் கேட்டு அவன் உடல் கொஞ்சம் விரைத்ததே தவிர, ஒதுங்கி வழி விடுவதில்லை என தீர்மானமாக ஓட்டினான். மினிபஸ் ஓட்டுனன் பொறுமை இழக்க ஆரம்பித்தான். அவன் உதிர்த்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் பின்னால் நின்ற கல்லூரிப் பெண் ஒருத்தி கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் தன் மனத்தில்.”

“மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நீல பனியன்காரன் பின்னால் திரும்பி கோபமாக இருந்த ஓட்டுனனின் முகத்தை பார்த்து விட்டு சிவப்பு பனியன்காரனிடம் ஏதோ சொல்லிச் சிரித்தான். அதை பார்த்த சிற்றுந்து ஓட்டுனனின் கோபம் தலைக்கேறியது. பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனனிடம் பயணி ஒருவர் “அங்க என்னய்யா ப்ரச்சனை?” என்று கேட்க, முன்னால் வந்து பார்த்த நடத்துனன் ஓட்டுனனிடம் “தூக்குடா அவன” ன்னு சொல்லவும் அடுத்த விநாடி அங்கே எல்லாமே முடிஞ்சு போச்சு. மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே பலியாகி விட்டார்கள்”.

“இப்போது என் கேள்வி இதுதான். நடந்தது விபத்தா அல்லது கொலையா? அந்த துர்சம்பவத்திற்கு காரணம் யார்? சிற்றுந்து ஓட்டுனரா? மோட்டார் சைக்கிள் ஓட்டுனரா? அவர் பின்னால் அமர்ந்திருந்தவரா? அல்லது “தூக்குடா அவனை”ன்னு சொன்ன நடத்துனரா? நீ சரியான பதிலை சொன்னால் நான் உன்னை விட்டு விடுவேன்.” என்று வேதாளம் சொன்னது.

கொஞ்சம் யோசித்த சேதனன் “இது போன்ற சூழ்நிலைகள் நிறைய இடங்களில், அநேக சமயங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன, ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை அசம்பாவிதம் இல்லாமல் கலைந்து விடுகின்றன. உணர்ச்சி வசப்படாமல் யோசித்தால்  புரியும், இது போன்ற கோபங்கள் சில நிமிடங்களில் மறைந்து விடும். நீ சொன்ன சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேர், மினி பஸ் ஓட்டியவரும் பைக் ஓட்டியவரும். நடத்துனர் என்ற முறையில் அவருக்கும் அதில் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் “அங்கே என்ன ப்ரச்சனை?”ன்னு கேட்ட அந்த பயணிக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது. காசு கொடுத்து பயணச்சீட்டு எடுப்பதை விட்டு விட்டு தனக்குத் தேவையில்லாத விஷயத்தில் ஆர்வம் காட்டியது தான் அந்த அசம்பாவிதத்திற்கு காரணம்”.

சேதனனின் பதிலைக் கேட்ட வேதாளம்,  அந்த சடலத்தை விட்டு நீங்கியது. கதையும் பதிலும் கேட்டுக் குழம்பிப் போன அந்த சடலம் எழுந்து ஓடத்தொடங்கியது.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. . – (திருமந்திரம் – 81)

திருமூலர் நம்மைக் கேட்கிறார் “முந்தைய பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்திருந்தால் இப்படி பிறவிகள் எடுத்திருக்க வேண்டியதில்லையே?” தன்னுடைய பிறவி பற்றிச் சொல்கிறார் “என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், தான் அருளிய ஆகமங்களை தமிழில் திருமந்திரமாகத் தரும் அளவில். என் பிறவி வீண் போகவில்லை”.

நந்தியின் திருவடி நிழல்

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. – (திருமந்திரம் – 80)

காயம் என்பதற்கு ஒரே நிலையில் இருத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு, அது இங்கே பொருத்தமாக அமைகிறது.

திருமூலர் சொல்கிறார் “நான் இந்த யோக  நிலையில் எண்ணில்லாத கோடி வருடங்கள் இருக்கிறேன். இரவும் பகலும் இல்லாத பிரகாச வெளியிலே இருக்கிறேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருக்கிறேன். என் நந்தியம்பெருமானின் திருவடி நிழலில் எப்போதும் இருக்கிறேன்.”

கண்ணனுக்குப் பிடித்த உணவுகள்

ஆண்டாள் இயற்றிய பாடல்களில் பக்தியும் காதலும் அதிகம் இருந்தாலும், இந்தப் பாடல் வேறு ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது. இதுவும் ஒரு வித காதல்தான், நாம் நம் குடும்பங்களில் உணர்கிற, பார்க்கிற விஷயமாக இருப்பதால் இந்தப் பாடல் ரொம்பவே பிடித்து விட்டது. என்னுடைய சிறு வயதில், வீட்டில் அம்மா அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார், சமையல் பிடிச்சிருக்கா இல்லையா என்று தெரிந்து கொள்ள. அது தான் ஞாபகம் வருகிறது இந்தப் பாடலைப் படிக்கும் போது.

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்.

இதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் உரை தவிர்த்து, நான் கொஞ்சம் வேறு மாதிரி பொருள் கொள்கிறேன்.

“குளிர்ந்த கறு மேகமும், கருவிளைப் பூவும், காயாம்பு மலரும், தாமரை மலரும் என்னை ஈர்க்கின்றன. அவை ‘நீயும் கண்ணபிரான் பக்கம் போ’ என்று சொல்வது போல் உள்ளது. கண்ணன் தன்னுடைய அன்றாடப் பணியினால் வேர்த்து, வயிறு பசி எடுத்து வந்து சாப்பிடும் நேரம், அவன் அருகில் அமர்ந்து என்னவெல்லாம் விரும்பிச் சாப்பிடுகிறான் என்று பார்த்துக் கொண்டேயிருப்பேன்” என்று ஆண்டாள் சொல்கிறார். “அப்படி ஒரு பக்திப் பார்வை பார்க்கும் அனுபவத்தை எனக்குக் கொடு” என்று கண்ணனிடம் கேட்கிறார்.

திருவாவடுதுறை

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – (திருமந்திரம் – 79)

சக்தியை தனதொரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமானைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமானை நான் சேர்ந்த இடம் திருவாவடுதுறை. அங்கே சிவ அறிவு எனும் நிழலில் தங்கியிருந்தேன், சிவ நாமங்கள் ஓதியபடியே!

திருமூலர் தென்னகத்துக்குக் வந்த காரணம்

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. – (திருமந்திரம் – 77)

திருமூலர் தன் மாணவர்களில் ஒருவரான மாலங்கனைப் பார்த்து சொல்கிறார் – “மாலாங்கனே! நான் இந்த தென்திசைக்கு வந்த காரணம், நீல நிற மேனியும் சிறந்த அணிகளையும் உடைய உமையம்மைக்கு சிவபெருமான் முதன்முதலாக சொன்ன ஒழுக்கத்தை போதிக்கும் சிவாகமத்தை எடுத்து சொல்ல வந்தேன்”.

கற்கும் காலத்தில் அளவான உணவு நல்லது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். – (திருமந்திரம் – 76)

சதாசிவம் அருளிய தத்துவம், முத்தமிழ் மொழிகள், வேதங்கள் ஆகியவற்றை கற்கும் காலத்தில் அளவுடன் உணவு கொண்டிருந்தேன். சுகாசனத்தில் இருந்து மனம் தெளிவு பெற்றேன். அதனால் என் மனம் அந்த தத்துவங்களைப் புறக்கணிக்கவில்லை, அவற்றைக் கற்று நான் பொருள் உணர்ந்தேன்.

அருந்தவச் செல்வி

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. – (திருமந்திரம் – 75)

ஏழு ஆதாரங்களிலும் நான் பொருந்தியிருந்து தவம் செய்யக் காரணமாக இருந்தது என்ன தெரியுமா இந்திரனே? எல்லா உலகங்களுக்கும் தலைவியான அருந்தவச் செல்வியை அன்புடன் சேவித்து வந்தேன் பக்தியினாலே!