மந்திரமாலை!

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.  நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.

காலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்காது

சித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.

பேசவே தெரியா உனக்கிந்த
…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா?
நாசமாய் போச்சே உனதுபணி
….. நேரம் முழுதும் வீணாச்சே!
காசதைப் பாரடா நீயென்ன
….. கருத்துகந் தசாமி பெற்றவனா?
நேசமாய் பாரடா வெளியுலகினை
….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.!

யான் பெற்ற இன்பம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)

திருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.

விண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.

வேதத்தின் சொல்லும் பொருளும்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. – (திருமந்திரம் – 84)

திருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”.

பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.

சிவமுனி!

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. – (திருமந்திரம் – 83)

சிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது –  மிகுதியான எண்ணிக்கையில்  தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். அதாவது அந்த யோகநிலையில் இருந்து மீண்டு வந்தேன்.

இவ்வாறு திருமூலர் சொல்கிறார்.

ஞானத் தலைவி

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. – (திருமந்திரம் – 82)

ஞானத் தலைவியாம் சக்தியுடன் சிவபெருமான் வசிக்கும் ஊருக்குச் சென்றேன். அங்கே ஒன்பது கோடி யுகங்கள் தீமை எதுவும் ஏற்படாத நிலையில் இருந்தேன். ஞானப் பாலூட்டும் அந்த சிவபெருமானை வணங்கி அந்த அறிவு நிழலில் நான் தங்கி இருந்தேன்.

இவ்வாறாக திருமூலர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்.

உணர்ச்சி கடத்தல்!

எனது விரல் அழகாய்த் தெரிகிறது
அவளது விரல்கள் அதில் பின்னி இருப்பதால்!
வெளிச்சம் பாய்ந்த நரம்புகளின் உள்ளே
கொஞ்சம் குளிர்ச்சியும் பரவியது!

மிருதுவாய் சருமம் – உள்ளே
எலும்புகளின் உறுதி சோதித்தேன்!
நரம்புகள் எத்தனை? பய நரம்பு எது,
சிலிர்ப்பு எதில், கோபம் எதில் – பிரித்து மேய்ந்தேன்!
ஓடும் குருதியின் உஷ்ண மாற்றம் புரியப் பார்த்தேன்!

வார்த்தைகள் மிச்சமாயிற்று இப்போது –
விரல்களே பேசிக் கொள்கின்றன சகலமும்!

வேதாளம் சொன்ன கதையல்ல நிசம்!

சேதனனுக்கு நேரத்தைக் கடப்பதே சிரம காரியம். இந்த சாலையை எப்படி கடப்பான்?  தன் முயற்சியில் சற்றும் தளராத சேதனன் மீண்டும் அந்த அகலம் அதிகமுள்ள சாலையைக் கடக்க முயன்றான். அந்த இடத்தைக் கடந்த எந்த சக்கர வாகனமும், எந்த வாகன ஓட்டுனரும், எந்த ஒரு பயணியும், அவனை ஒரு பொருட்டாகவே உணரவில்லை. ஒவ்வொருவனையும் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் பிறகு அவனை பொருட்படுத்த எவனும் இருக்க மாட்டான் என்பது இங்கே பொருட்கொள்ள வேண்டிய விஷயம். அவனைப் போலவே சக சமுதாயக் கால்நடை ஒன்றும் அங்கே தவித்தான். அவன் ரொம்ப யோசிக்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த சாலையைக் கடக்க ஆரம்பித்தான். சேதனனும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அப்போது வலப்பக்கமிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் நிறக் கார் ஒன்று இரண்டு அற்பப் பிராணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து சிறிது வேகத்தை குறைத்தது. காரின் வேகத்தைப் பார்த்து முதலில் தயங்கிய அந்த சக மனிதன், கார் வேகம் குறைவதைப் பார்த்து வேகமாக சாலையைக் கடக்கப் பாய்ந்தான். அதே நேரம் அவன் தயங்கியதைப் பார்த்த அந்த கார் நிறக் கார் ஓட்டுனன் தன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

பிணமாகக் கிடந்த அந்த சக மனிதனை சேதனன் தூக்கிச் சுமந்தவாறு சாலையைக் கடந்தான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் அந்தக் கார் சாதாரணமாகக் கடந்து சென்ற விதம், தனக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்பதாக இருந்தது. சேதனன் சாலையைக் கடந்து முடிக்கும் போது, தோளில் பிணமாகக் கிடந்தது கனக்கத் தொடங்கியது. ஒரு ஓரமாக இறக்கி வைக்கப் பார்த்தால், அது இறங்க மறுத்தது. இந்த இடத்தில் இருந்து தான் வேதாளம் சொன்ன கதை ஆரம்பம் ஆகிறது.

அந்த சடலத்தில் இருந்து இறங்க மறுத்த வேதாளம் பேசத் தொடங்கியது. “சேதனா! இப்போது நடக்கும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓர் ஒற்றை இலக்க சதவிகிதம் மட்டுமே விபத்தாகும், மற்றவையெல்லாம் கொலையும், தற்கொலையுமே ஆகும். தெரியுமா உனக்கு?” எனக் கேட்டது.

“ஊடகங்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேச வைக்கிறது. உன் உணவுப் பழக்கம் பற்றி கொஞ்சம் சொல்லேன்.”  சேதனன் வேதாளத்திடம் கேட்டான்.

“வேதாளத்திற்கு நினைவு தான் உணவு. ஏன் கேட்கிறாய்?”

“யோவ்! இந்த வெயிட் இருக்கியேன்னு கேட்டா!  எறங்குயா கீழ”.

“கோபப்படாதே சேதனா! உன் மூலமாக இந்த உலகிற்கு நீதி சொல்ல வேண்டியிருக்கிறது”.

“நீயுமா? என்ன செய்யணும்னு சொல்லு”.

”நீ இந்த சடலத்தை தோளில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு நடந்து போ. போகும் வழியில் நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”.

கதை கேட்பது, கருத்து சொல்வது, இதெல்லாம் சேதனனுக்கு பிடித்த விஷயம். அதனால் “சரி சொல்லு வேதாளமே!” என்று சொன்னவாறே நடக்க ஆரம்பித்தான்.

“சேதனா! இது கற்பனை கதை அல்ல, நடந்த சம்பவம். சிற்றுந்து எனப்படும் மினிபஸ்ஸில் நடந்த சம்பவம் இது. மினிபஸ்களுக்கு சாலை விதிகளில் இருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். பாதசாரி ஒருவர் கண்ணசைத்தாலே பக்கத்தில் வந்து நின்று அவரை ஏற்றிச் செல்லும். அந்த வகையில் அவை சிறந்த சேவையை அளிக்கின்றன. சம்பவ தினத்தன்று, மதிய நேரம், ஓரளவு கூட்டத்துடன் பயணம் சென்று கொண்டிருந்தது. நண்பகல் நேரமாதலால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. சிற்றுந்தின் ஒட்டுனர் மற்றும் நடத்துனர், இருவருமே இளவயதுக்காரர்கள்.”

“பக்கச்சாலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மினிபஸ்ஸின் முன்னே வந்து சாலையில் இணைந்து சாலையின் நடுவே மிதமான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் இருந்த இருவருக்கும் முப்பது வயதிற்குள் இருக்கும், லுங்கியும் பனியனும் அணிந்திருந்தார்கள். பின்னால் வந்த மினிபஸ்ஸுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் அலட்சியமாக ஒட்டினான் அந்த சிவப்பு பனியன்காரன். ஹாரன் சத்தம் கேட்டு அவன் உடல் கொஞ்சம் விரைத்ததே தவிர, ஒதுங்கி வழி விடுவதில்லை என தீர்மானமாக ஓட்டினான். மினிபஸ் ஓட்டுனன் பொறுமை இழக்க ஆரம்பித்தான். அவன் உதிர்த்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் பின்னால் நின்ற கல்லூரிப் பெண் ஒருத்தி கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் தன் மனத்தில்.”

“மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நீல பனியன்காரன் பின்னால் திரும்பி கோபமாக இருந்த ஓட்டுனனின் முகத்தை பார்த்து விட்டு சிவப்பு பனியன்காரனிடம் ஏதோ சொல்லிச் சிரித்தான். அதை பார்த்த சிற்றுந்து ஓட்டுனனின் கோபம் தலைக்கேறியது. பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனனிடம் பயணி ஒருவர் “அங்க என்னய்யா ப்ரச்சனை?” என்று கேட்க, முன்னால் வந்து பார்த்த நடத்துனன் ஓட்டுனனிடம் “தூக்குடா அவன” ன்னு சொல்லவும் அடுத்த விநாடி அங்கே எல்லாமே முடிஞ்சு போச்சு. மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே பலியாகி விட்டார்கள்”.

“இப்போது என் கேள்வி இதுதான். நடந்தது விபத்தா அல்லது கொலையா? அந்த துர்சம்பவத்திற்கு காரணம் யார்? சிற்றுந்து ஓட்டுனரா? மோட்டார் சைக்கிள் ஓட்டுனரா? அவர் பின்னால் அமர்ந்திருந்தவரா? அல்லது “தூக்குடா அவனை”ன்னு சொன்ன நடத்துனரா? நீ சரியான பதிலை சொன்னால் நான் உன்னை விட்டு விடுவேன்.” என்று வேதாளம் சொன்னது.

கொஞ்சம் யோசித்த சேதனன் “இது போன்ற சூழ்நிலைகள் நிறைய இடங்களில், அநேக சமயங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன, ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை அசம்பாவிதம் இல்லாமல் கலைந்து விடுகின்றன. உணர்ச்சி வசப்படாமல் யோசித்தால்  புரியும், இது போன்ற கோபங்கள் சில நிமிடங்களில் மறைந்து விடும். நீ சொன்ன சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேர், மினி பஸ் ஓட்டியவரும் பைக் ஓட்டியவரும். நடத்துனர் என்ற முறையில் அவருக்கும் அதில் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் “அங்கே என்ன ப்ரச்சனை?”ன்னு கேட்ட அந்த பயணிக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது. காசு கொடுத்து பயணச்சீட்டு எடுப்பதை விட்டு விட்டு தனக்குத் தேவையில்லாத விஷயத்தில் ஆர்வம் காட்டியது தான் அந்த அசம்பாவிதத்திற்கு காரணம்”.

சேதனனின் பதிலைக் கேட்ட வேதாளம்,  அந்த சடலத்தை விட்டு நீங்கியது. கதையும் பதிலும் கேட்டுக் குழம்பிப் போன அந்த சடலம் எழுந்து ஓடத்தொடங்கியது.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. . – (திருமந்திரம் – 81)

திருமூலர் நம்மைக் கேட்கிறார் “முந்தைய பிறவிகளில் நன்றாக முயன்று தவம் செய்திருந்தால் இப்படி பிறவிகள் எடுத்திருக்க வேண்டியதில்லையே?” தன்னுடைய பிறவி பற்றிச் சொல்கிறார் “என்னை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான், தான் அருளிய ஆகமங்களை தமிழில் திருமந்திரமாகத் தரும் அளவில். என் பிறவி வீண் போகவில்லை”.