பிராணவாயு ஒடுங்கும் முறை அறிவோம்

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே – 720

விளக்கம்:
மூச்சுக்காற்றைத் திரட்டி பிராணாயாமம் செய்து வருவதால் சிறப்புடன் விளங்குகிறோம். ஆனாலும் பயிற்சியின் போது பிராணவாயு ஒடுங்கும் நிலையை யாரும் அறிந்து கொள்வதில்லை. தியானத்தில் ஊன்றி நின்று பிராணவாயு ஒடுங்கும் நிலையை அறிந்து கொண்டால், நந்தியம்பெருமான் வீற்றிருக்கும் அருள்வெளியில் கலந்து திளைக்கலாம்.


நம்முடைய உடலே சிவாலயம் ஆகும்

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே – 719

விளக்கம்:
வானமண்டலத்தில் தேவர்களுக்காக ஒரு உலகத்தைப் படைத்தவள், தத்துவ நாயகியாகிய நம் பராசக்தி. அத்தனை சக்தி கொண்ட அப்பராசக்தி, அட்டாங்கயோகப் பயிற்சி செய்யும் நம் உடலில் தாமே ஒரு வழியை உருவாக்கி உள்ளே வந்து அமர்கிறாள். அந்த அம்மையை நாம் மதித்துத் தொழுது, அவளுடைய அருளில் திளைத்திருந்தால் நம்முடைய உடல் சிவாலயம் ஆகும்.


உள்நாடியில் ஒடுங்கி நிற்போம்

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே – 718

விளக்கம்:
பிராணாயாமத்தில் நம்முடைய மூச்சுக்காற்று உள்நாடியான சுழுமுனையில் இருந்து விலகாது இருக்க வேண்டும். அந்நிலையில் நம் மூச்சு சகசிரதளத்தில் படர்ந்து அங்கே வீற்றிருக்கும் சிவசோதியுள் ஒன்றி நிற்கும். இதனால் இம்மை, மறுமை, முத்தி ஆகிய மூன்று நிலைகளிலும் பெருகுகின்ற பயன்களைப் பெறலாம்.

கிளர் பயன் – தொடர்ந்து வளர்கின்ற பயன்,   பங்கயம் – தாமரை


மூச்சுக்காற்று ஒளிமயமாய் மாறும்

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே – 717

விளக்கம்:
இரும்பினைப் பொன்னாக மாற்றும் இரசவாதம் போல், அட்டாங்கயோகத்தில் நின்று நம் மூச்சுக்காற்றை ஒளிமயமாக மாற்ற முடியும். நடுநாடியில் கருத்தை நிறுத்திப் பெருந்தவம் செய்து மூச்சுக்காற்றை சகசிரதளத்தில் புகச்செய்தால் அக்காற்று ஒளிமயமாக மாறும். அதனால் நாம் பல சாதகங்களைப் பெறலாம்.

வேதகம் – இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம்.


ஊக்கமுடன் தொடர்ந்து தியானம் செய்வோம்

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே – 716

விளக்கம்:
தியானத்தில் உண்மையாக மனம் ஒன்றி சமாதி நிலையில் நிற்பவர், தாம் எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தோம் என்பதை உணர மாட்டார்கள். அந்த அளவுக்கு மனம் அருள் வெளியில் நிலைத்திருக்கும். தொடர்ந்த பயிற்சியில், சமாதி நிலையில் இருக்கும் கால அளவு பெருகி பெருமை மிக்க சிவ ஆனந்தத்தைப் பெறுவார்கள். பிராணாயாமத்தில் ஒருங்கும் நம் மூச்சுக்காற்று ஒளி பெற்று விளங்கும். இவ்வாறு ஊக்கம் மிகுந்து தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர் சிறந்த சாதகர் ஆவார்.

ஒருக்கு – ஒருங்கு,  தருக்கு – ஊக்கம் மிகுந்து


மூச்சைக் கட்ட வல்லவர்கள்

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே – 711

விளக்கம்:
பிராணாயாமம் செய்து மூச்சைக் கட்ட வல்லவர்கள், மறைந்திருக்கும் அருள்வெளியைக் கண்டடைந்து அங்கே மனம் லயித்திருப்பார்கள். தாமரைப்பூவிலிருந்து அதன் மணத்தை பிரிக்க முடியாது, அது போல் தியானத்திலே நமது மனம் திரிவுபடாமல் சுழுமுனையில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி மனம் நிலைத்து நின்று தியானம் செய்தால் குண்டலினியாகிய சக்தி புருவ மத்தியில் குத்தி மேல் ஏறுவதையும், உச்சந்தலையில் பொறி கிளம்புவதையும் உணரலாம். இவ்வாறான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மரணம் பற்றிய சிந்தனையோ பயமோ இருக்காது.


யோகத்தினால் அச்சம் நீங்கும்

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. – (திருமந்திரம் – 692)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தை தொடர்ந்து பயிலும் யோகிகள், மேன்மை மிகுந்த பேரொளியைக் காண்பார்கள். அந்தப் பேரொளியின் வெளிச்சத்தையே தாயகமாகக் கொண்டு அங்கே வசிக்க விரும்புவார்கள். அவர்கள் யோகத்தின் போது தமது அகத்தில் உள்ள குழப்பங்களை ஆய்ந்து, தெளிந்து அச்சம் நீங்குவார்கள். எப்போதும் அச்சத்திலேயே இருந்த அவர்களது மனம் அச்சம் நீங்கி பேரொளியைக் காணும்.


பூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்!

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஒளி நாயக மானதே. – (திருமந்திரம் – 691)

விளக்கம்:
பூ மலரும் போது அதில் வாசனை தோன்றுகிறது. அந்தப் பூ வாடும் போது வாசனை மறைந்து விடும். அது போலத்தான் நாம் பிறக்கும் போது இந்த உலகம் நமக்குள் தோன்றுகிறது, நாம் மறையும் போது இந்த உலகம் நமக்குள்ளேயே மறைந்து விடும். வசித்துவம் பெற்று, தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் தத்துவம் கைகூடும் போது இந்த உண்மையை உணர முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துபவன் நம் தலைவனான சிவபெருமான். வசித்துவம் பெற்று உலகம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளும் போது, நாம் அறிவொளி மிகுந்தவராக இருப்போம்.


பொன்னான தருணங்களைக் காணலாம்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. – (திருமந்திரம் – 690)

விளக்கம்:
இத்தனை காலம் கல்லில் செய்த கொடி போல காமுகனாக இருந்திருக்கிறோம். அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை நல்லவிதமாக மாற்றுகிறது. நற்கொடியாகிய சக்தியைக் கண்டு ஓராண்டு குண்டலினிப் பயிற்சியாகிய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், இவ்வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் காணலாம். அதுவே வசித்துவம் ஆகும்.


வசித்துவம் தரும் சிறப்புகள்

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. – (திருமந்திரம் – 689)

விளக்கம்:
மென்மையான மெய்ப்பொருளைக் கண்டு வசித்துவம் எனும் சித்தி பெறும்போது, நாம் சூரியனைப் போல் பிரகாசமாக இருந்து அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை பெறுவோம. அசுத்தமான ஐம்புலன் ஆசைகள் நம்மை விட்டு அகன்று விடும். நன்மை தரும் நற்கொடியாகிய சிவசக்தியைக் காணலாம்.