ஐந்து வகையான பாவங்களை விட்டவர்கள்!

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கொண் டோரே.  – (திருமந்திரம் – 497)

விளக்கம்:
சிவம் ஆகி ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். தன் வாழ்நாளை வீணாக்காத அவர்கள் முத்தியை அடைவாரகள். அவர்கள் பசு பாசத்தன்மைகள் நீங்கி அடுத்து பிறவி இல்லாத நிலையை அடைவார்கள். மேலும் அவர்கள் சிவபெருமானின் ஒன்பது தத்துவங்களை நாடி அறிந்து கொள்வார்கள்.


மூன்று வகையான சகலர்

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.  – (திருமந்திரம் – 496)

விளக்கம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் விடாத சகலர்களில் வெகு சிலர் மட்டுமே பக்குவம் அடைவார்கள். அவர்கள் பெத்தத்த சித்தான தனது ஆன்மாவை, முத்தத்து சித்தான சிவத்தோடு பொருந்தச் செய்து சீவன்முத்தர் ஆவார்கள். சகலரில் இரண்டாவது வகையில் வருபவர்கள் சீவன் முத்தர் ஆகும் முயற்சியில் சாதகம் செய்பவர்கள். இவர்கள் தமது முயற்சியில் முத்தி அடைய முடியாவிட்டாலும் மும்மலத்தினால் ஏற்படும் துன்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். மூன்றாவது வகையினர் எந்தவித முயற்சியும் இல்லாமல் ஆரவாரமான உலக விஷயங்களில் மூழ்கி இருந்து தமது வாழ்நாளை வீணாக்குவார்கள்.


பிரளயாகலர்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.  – (திருமந்திரம் – 495)

விளக்கம்:
ஊழிகாலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை விடாதவர்கள். அவர்கள் தமது அடுத்த பிறவியில் முக்தி அடைவார்கள். இரண்டாவதாக வரும் பிரளயாகலரை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். அவர்கள் நூற்றெட்டு பேராக இருக்கும் உருத்திரரின் நிலையை அடைவார்கள். இவர்களுக்கு அடுத்த வகையினரான சகலர் மும்மலங்களையும் உடையவர்கள்.


நான்கு வகையான விஞ்ஞானகலர்!

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.  – (திருமந்திரம் – 494)

விளக்கம்:
கன்மத்திலும் மாயையிலும் சிக்காத விஞ்ஞானகலரை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். தஞ்ஞானர், எஞ்ஞானர், மந்திர நாயகர், மெஞ்ஞானர் என நான்கு வகையினில் அவர்கள் வருவார்கள். தஞ்ஞானர் ஆன்ம ஞானம் உடையவர்கள், ஆனால் ஆணவம் முழுமையாக நீங்கப் பெறாதவர்கள். எஞ்ஞானர் அட்ட வித்தியேசுவர நிலையை நாடி இருப்பவர்கள். மந்திர நாயகர் ஏழு கோடி மகாமந்திரங்களில் நாட்டம் உடையவர்கள். தன்னுடைய ஆணவத்தை முழுமையாக விட்டவர்கள் மெஞ்ஞானர் ஆவர்.


மூவகைச் சீவ வர்க்கம்

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.  – (திருமந்திரம் – 493)

விளக்கம்:
மனிதர்களை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையாக பிரிக்கலாம். தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் ஆணவம் உடையவர். ஊழி காலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவத்தையும் கன்மத்தையும் உடையவர்கள். உலக வாழ்வில் சிக்கி அறியாமை நிரம்பப் பெற்றவர் சகலர். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முன்றையும் உடையவர் ஆவார். விஞ்ஞானகலரை நான்கு வகையாகவும், பிரளயாகலரை மூன்று வகையாகவும், சகலரை முன்று வகையாகவும் பிரிக்கலாம். இந்த உட்பிரிவுகளைச் சேர்த்தால் மனிதர்கள் பத்து வகையினர் ஆவர்.


சித்தமெல்லாம் சிவனே!

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.  – (திருமந்திரம் – 492)

விளக்கம்:
உயிர்கள் பிறப்பது சிவசக்தியின் திருவிளையாடலால். அவர்கள் இந்த உடலுக்கு உயிர் கொடுத்தவர்கள். சிவசக்தியானவர்கள் அந்த உயிரை சுத்தமும் அசுத்தமும் ஆகிய இரண்டு மாயைகளில் சிக்கச் செய்து, உயர்ந்த ஒரு யோக நிலையை அடையவும் உதவி செய்கிறார்கள். நாம் பக்குவம் பெற்று அந்த உன்னதமான யோக நிலையை அடையும் போது நம்முடைய மனம் சிவமயமாகி விடும். நமக்கு சிவனைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறெதுவும் இருக்காது.


கடல் நீரில் உப்பு திரள்வது போல நம் பிறப்பு

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.  – (திருமந்திரம் – 491)

விளக்கம்:
ஒருவரின் வாழ்நாள் முடியும் அவருடைய பருவுடலைத் தகனம் செய்து விடுகிறோம். நுண்ணுடலான உயிர் வானுலகத்தில் கரைந்து பதிந்து விடுகிறது. கடல் நீரில் உள்ள உப்பு திரண்டு வந்து வடிவம் பெறுவது போல, நுண்ணுடலான உயிர் மறுபடியும் பிறப்பு எடுக்கிறது சிவன் அருளாலே!


தவத்தால் உணரலாம்

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.  – (திருமந்திரம் – 490)

விளக்கம்:
இந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.


சிவபெருமானுக்கு இன்பம் தரும் விஷயம்

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் – 489)

விளக்கம்:
செடி ஒன்று முதலில் மண்ணின் கீழ் கிழங்காக இருக்கிறது. அது முளைத்துப் பின் புதர் போல் வளர்கிறது. வளர்ந்த பருவத்தில் அது பழங்களைக் கொடுக்கிறது. இது போன்ற சரியான வளர்ச்சியே அந்தத் தாவரத்துக்குக் கிடைக்கும் இன்பமாகும். நம்முடைய வளர்ச்சியும் சரியான பாதையில் சென்று, நாம் ஆன்மிகத்தால் பக்குவம் பெறுவதே நமக்குள் இருக்கும் சிவபெருமானுக்கு இன்பம் தருவதாகும்.


தாயின் பெருமை

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 488)

விளக்கம்:
நாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உடலுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.