மிஸ். மரணம்

“டக். டக்!”

“யாரது?”

“மிஸ். மரணம் வந்திருக்கிறேன்”

“இன்னொரு நாள் வாம்மா! பொறு மிஸ்ஸுன்னா சொன்ன?”

“ஆமாம். என்னை யாரும் அவ்வளவு எளிதில் புணர்ந்து விட முடியாது”

“அது சரிதான். என்ன விஷயமா வந்திருக்க நீ?”

“உனது வாழ்நாள் எண்ணப்பட்டு விட்டது”

“ஏதும் விசாரணையா இப்ப? அல்லது தீர்ப்பா?”

“இல்லை. நீ உருமாற்றம் ஆகப்போகிறாய்”

“அப்படின்னா? கொஞ்சம் விபரமா சொல்லேன்”

“நடக்கும் போது நீயே தெரிந்து கொள்வாய்”

“அது என்ன எழவாவும் இருந்துட்டுப் போட்டும். இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள் வச்சுக்குவோம்”

“விளையாடுகிறாயா நீ? நீட்டிப்பத்ற்கு வாழ்நாள் ஒன்றும் உன்னுடைய ….”

“சரி. சரி. நிறுத்தும்மா. நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன். கோவமா இருக்கும் போது நான் சாகக்கூடாது”

“நீ சாவதற்கு என்னுடைய கோபம் போதும்”

“நான் சொல்ற்து ஒனக்குப் புரியல. கோவமா இருக்கும் போது செத்தா, என்னால சாவ அனுபவிக்க முடியாது”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”

“இன்னைக்கு நெறையக் கோவம் என் கண்ண மறச்சுக்கிட்டு இருக்குது. இப்ப செத்தா சாவும் போது என்ன நடக்குதுன்னு என்னால கவனிக்க முடியாது.”

“அதைக் கவனித்து என்ன ஆகப் போகிறது உனக்கு?”

“சாவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்கனும்னு நெனைக்கேன். சாவ அணு அணுவா ரசிக்கணும். அப்போ எனக்கு வேற எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது”

“இப்போது எனக்கு உன்னை உடனே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது மானிடா!”

கதை இல்லாத மனிதன்

“நான் நல்லவளா? இல்லையா? அதச் சொல்லு மொதல்ல”.

இருவருக்கும் சகலமும் பிசிபிசுத்துப் போயிருந்த நேரம் அது. இந்தக் கேள்வியால் என் காதும் பிசுபிசுத்தது.

“ஒனக்கு என்ன பதில் வேணும்னு சொல்லு!”

“என்ன நீ நல்லவன்னு சொல்லு. ஒனக்காக நான் என்ன வேணாலும் செய்றேன்”.

“நீ செஞ்சது போதும்! தெம்பில்லடி எனக்கு”.

அடுத்து என்ன பேசினோம் என்பதில் எனக்கு நாட்டமில்லை. அவள் சொன்ன “என்ன வேணாலும் செய்றேன்” திரும்பத் திரும்ப தலைக்குள் சுத்திக் கொண்டிருந்தது.

“எனக்காக ஒன்னு செய்யேன்! நீதான் ரொம்ப நல்லவளாச்சே?” கேட்டு விட்டு சசியின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

“என்னடா செய்யணும் உனக்கு? கொலை எதுவும் பண்ணனுமா?” அவ்வளவு நெருக்கமாக முகத்தைக் கொண்டு வந்து கேட்ட போது மூச்சடைத்தது. எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? “திருட்டு முழி முழிக்காத. இதெல்லாம் ஊர் ஒலகத்துல நடக்குறது தான்”. கேலி செய்கிறாளோ?

அவள் கேலி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். நன்றாகக் குளித்தோம், சுத்தமான உடை அணிந்தோம். நல்ல ஃபில்டர் காபி தயாரித்தோம், ஆளுக்கொரு கோப்பையை நிரப்பி எதிரெதிரே அமர்ந்தோம். முக்கிய முடிவெடுக்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையா?

இவள் மிகத் தெளிவானவள். இவள் காபி குடிக்கும் விதமே அதைச் சொல்லியது. “சொல்லு இப்ப” அதில் ஆர்வம் எதுவும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். விடை தெரியவில்லை.

“என்ன சொல்ல?”

மிகப் புனித உறுப்பின் பெயர் ஒன்றை வசையாக உச்சரித்தாள். “யார? எங்க? எப்பிடி?”

“யாருங்கிறத கடைசியா சொல்றேன். எப்படிங்கிறத சொல்றேன், அது தான் முக்கியம்”.

சொல்லு என்பது போலப் பார்த்தாள்.

”கூர்மையான இரும்புத் துண்டு ஒன்னு தருவேன். அதை வச்சுத் தொடைல ஆரம்பிக்கணும். அப்படியே ஒனக்குப் பிடிச்ச லைன் ட்ராயிங் ஒன்னு வரையணும். யோசிக்க வேணாம்! அவன் உன் கைக்கு சுலபமா சிக்கக் கூடியவன் தான்”.

“கட்டி வைக்கணுமோ?”

“தேவையில்லை. உன் அழகே அவனைக் கட்டிப் போடும்”. இதைச் சொன்னதற்கு ஒரு புதுவிதமான வசை கிடைத்தது. “இந்தக் காபிய எவ்வளவு ரசிச்சுக் குடிக்கிற! அப்படி ரசிச்சுச் செய்யணும் அத”.

“இதெல்லாம் செஞ்சா நீ என்ன நல்லவன்னு சொல்லுவியா?”

“நான் சொல்ல வேண்டியதில்ல. நீ நல்லவளாவே ஆயிடுவே!”

“அப்படி யாருப்பா அது? ஒனக்கு வேண்டாதவன்?”

“அவன் யாருக்குமே வேண்டாதவன்”.

“கொழப்பாத ரொம்ப. யாருன்னு சொல்லு”.

“நான் தான் அது. என்னத் தான் நீ அப்படி அனுபவிக்கணும்”.

நான் சீரியஸாகத் தான் சொல்றேன் என்பதைப் புரிய வைக்க இன்னும் நான்கைந்து வசைகளை அவளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது. “ஒனக்கு என்ன ப்ரச்சனை? அதச் சொல்லு மொதல்ல”

“என்னத்தச் சொல்ல? யாரப் பத்திப் பேசினாலும், அவங்களப் பத்தி ஒன்னு ரெண்டு விஷயமாச்சும் இருக்கும். என்னப் பத்திச் சொல்ல என்ன இருக்கு? சொல்லு. எனக்குன்னு ஒரு கத இல்ல இந்த ஒலகத்துல. நான் ஏன் இருக்கணும் இங்க? நீ முடிச்சிரு”.

நான் அவள் அல்லள்!

ரயில் இன்ஜின் போன்ற
மூச்சுக் காத்தும்
வெட்கம் மறந்த
கண்ணீரும் அவன்
சுக்கிலத்தின் பழமையைச்
சொன்னது!

இடுப்பசைத்து அவள்
ஏந்திக் கொண்ட விதம்
“நான் உன்னை விலக மாட்டேன்”
என்பதாம்!

“நான் அவளைப் போன்றவளில்லை”
என்பதை
அடுத்த உடலசைவு
உறுதி செய்தது!

முதலை ஒன்று வளர்த்தேன்

முதலை ஒன்று வளர்த்தேன்
ஆமாம் முதலை தான்.
ஆதரவாய்ப் பிடித்துக்கொள்ள
அந்த சொரசொரப்பு தோதாக இருந்தது.

உச்சக்கட்ட அச்சத்தை ரசித்தபடி
கொல்வதே ருசியானது.
உண்பதெல்லாம் வெறும் பசிக்குத்தான்.
அதன் வியாக்கியானத்தைக் கேட்டால்
முதலையாய் பிறந்திருக்கலாமோ?

முதலைக்குத் தினமும் தேவை
கொஞ்சம் இளஞ்சூட்டுக் குருதி.
அதைத் தர எனக்குப் பிடிக்காதவர் பலர்!

என்னைப் பிடிக்காதவர் இருக்கலாம்
எனக்குப் பிடிக்காதவர் தேவையே இல்லை.

காலங்கடந்த வேளையிலே
ஒருநாள் புரிந்தது
நான் தான்
வளர்க்கப்படுகிறேன்
என்னும் உண்மை.

பனங்கிழங்கு வாசம்

யார் வீட்டுல யாரு பனங்கிழங்கு அவிச்சாலும், அந்த வாசம் அரசிய ஞாபகப்படுத்துது. அவள யாரும் மங்கையர்க்கரசின்னு முழுப்பேரு சொல்லி நான் கேட்டதில்ல. மஞ்சப்பொடியும் வியர்வையும் கலந்த அவளோட வாசத்துல நான் மூச்சு முட்டி தவிக்கிற நேரம் மங்கை யாருக்கு அரசின்னு கேப்பேன் அல்லது கூப்பிடுவேன். அது ஏன்னு தெரியல, அவளோட வாசம் பனங்கிழங்க ஞாபகப்படுத்துது. எங்க பனங்கிழங்கு வாசம் வந்தாலும் அவ மூச்சுக் காத்து மேல வந்து தடவுற மாதிரி இருக்கு. வாசம் மட்டுமில்ல, குட்டையா, குண்டா உருண்டு இருக்குற  பனங்கிழங்க பாக்கும்போதும் அவள பாக்குற மாதிரியே இருக்கு.

அரசியோட அம்மா வீடுகளுக்கும் விஷேசங்களுக்கும் போய் கைமுறுக்கு சுத்திக் கொடுப்பாங்க. “செந்திலு! நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு?’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி! ஒரு சொரணையும் இல்ல, வாசக்கதவ தொறந்து போட்டு தூங்குறாடா. சும்மா ஒரு தொணைக்கு இரேன்” எனக்கு பாதி மாசம் நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால பகல்ல தூக்கம் தான். அவங்க வீட்டுல டிவி பாத்துகிட்டே தூங்கிருவேன். அரசி ஆதித்யா சேனல் பாத்து காரணமே இல்லாம சிரிக்கிறது எரிச்சலா இருக்கும். எக்கேடும் போன்னு ஒரு மொற மொறச்சிட்டு கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிருவேன்.

மணி என்ன பாக்கும் போதெல்லாம் அரசியப் பத்தியே பேசுவான். அவனும் எங்க தெரு தான். “லூசுப்பய மாதிரி பேசாத“ன்னு எரிச்சலா சொன்னாலும் ஒரு மாதிரியா பல்லக் காட்டுவான். “ஏல! கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா? தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல? ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற?”ன்னு கேட்டப்போ “போடா போ! ஒனக்கு எப்படி ஒரு சான்ஸ் கெடச்சிருக்குன்னு தெரியாம இருக்க”ன்னு மணி சிரிச்சான்.  எனக்கு வாயில கெட்ட வார்த்தையா வந்தது.

பாவிப்பய மணி எந்த நேரத்துல அத சொல்லித் தொலச்சானோ? அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா?”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு!”. பனங்கிழங்கு வாசத்தோட அரசி வாசமும் சேர்ந்துச்சு. மழை வாசம், பனங்கிழங்கு வாசம், அரசியோட வாசம், என்னோட வாசம் எல்லாமும் சேர்ந்து மூச்சு முட்டித் தவிச்சேன். எல்லாத்துக்கும் மேல இன்னொரு வாசத்தையும் மொத மொதலா அனுபவிச்சேன். அரசி தன்னோட நெலைல இல்ல. அவளும் மூச்ச வேகமா இழுத்து எல்லா வாசத்தையும் தீர்த்துடுற வேகத்துல இருந்தா.

ரொம்ப நாள் கழிச்சு அரசிய நேத்து வழில பாத்தேன். மொதல்ல அடையாளமே தெரில, ரொம்பவே பூரிச்சிருந்தா. ஊர்ல இருந்து அம்மா வீட்டுக்கு வர்றா போல, அவ கூட மணி ஒரு கைல பச்சப்புள்ளையவும் இன்னொரு கைல சூட்கேசையும் தூக்கிட்டு நடந்து வந்தான். அதே சிரிப்பு இப்பவும்.  அப்பத்தான் வாங்கின பனங்கிழங்கு கட்டு என் கூடைல இருந்தது. அரசிதான் மொதல்ல பேசுனா “நல்லாயிருக்கியாடே? இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல!”.

Eyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை

Eyes-wide-shut_2

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள்  உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.

பில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை! அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.

குடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.

ஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க  கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்?” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும்  இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது!”.

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய்நேர்த்தி என்று  நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை  அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

நேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.

அட்டாங்கயோகம் நூலுக்கான முன்னுரை

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.  வானுலகத் தேவர்கள்  பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்

‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு? எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.

அந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.

தியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு,  ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்!”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.

செல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா! படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே! தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா?”ன்னு கேட்டான்.

நடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்!”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே!”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.

சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.

நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.

சித்தம் கலங்காது செய்யும் பரியங்க யோகம்

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே – 835

விளக்கம்:
உடலையும் மனத்தையும் பரியங்கயோகத்தில் இருத்தி, சக்தியாகிய குண்டலினியை சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானுடன் சேரச் செய்து, சித்தம் கலங்காமல் யோகப்பயிற்சி செய்ய வேண்டும். அத்தகைய கடுமையான பயிற்சியை நாம் செய்தால், பத்துத் திசைகளில் இருக்கும் பதினெட்டு சிவகணங்களுக்கும் ஞான சூரியனாய் நிற்கும் சிவபெருமான் நமக்கும் ஞானம் வழங்கி அருள் செய்வான்.

பத்து வகை – பத்துத் திசைகள், பதிணென் கணம் – பதினெட்டு சிவ கணங்கள்

கரியை விலக்கி அக்கினியைக் காண்போம்

வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே – 834

விளக்கம்:
விந்து எனும் நம் உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலக்க விடாமல், உலக விஷயங்கள் என்னும் கரியைக் கொண்டு மூடி வைத்துள்ளார் நம்முடைய சிவபெருமான். அதாவது புறக்கலவியிலேயே நம்முடைய நாட்டம் எல்லாம் செல்கிறது.

பரியங்க யோகம் பயிலும் யோகியர், புறக்கலவியை விட்டு அகக்கலவியைக் காண, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய அக்கினியை சுழுமுனை வழியாக மேலே ஏறச் செய்து, வலிமை உடையவராய், உள்நாக்கில் அடக்கி வைத்து சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் சேரச் செய்வர்.

வெள்ளி – வெண்ணிற விந்து, பொன் – பொன் நிறமாகிய நாதம், கள்ளத் தட்டானார் – மறைந்திருக்கும் சிவபெருமான், கொள்ளி – குண்டலினியாகிய அக்கினி, பறிய – முன்னே செல்ல, குழல் – சுழுமுனை, உண்ணா – உள் நாக்கு, வள்ளி – வண்மை உடைய

கலவிக்கு ஏற்ற வயது!

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே – 833

விளக்கம்:
பரியங்கயோகத்தில் சிவசக்தியர் ஒன்று சேரும் தத்துவத்தை, மனிதக் கலவியுடன் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். இந்தப் பாடல் பரியங்கயோகத்தில் கிடைக்கும் இன்பத்தின் அளவை சொல்வதற்கு அதே உத்தியை பயன்படுத்துகிறது.

கலவியில் உச்சக்கட்ட இன்பத்தை பெறும் வயது பெண்ணுக்கு இருபது வயதும், ஆணுக்கு முப்பது வயதும் ஆகும். இந்தப் பருவத்தில் ஏற்படும் கலவி ஆணுக்கும் ஆனந்தத்தையும், பெண்ணுக்கு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு மனம் சோர்ந்தாலும், உடல் சோர்வடையாது. அதே அளவுக்கு ஒரு இன்பம் பரியங்கயோகத்தில் நிற்கும் சிவயோகிகளுக்குக் கிடைக்கும். அவர்களுக்கு மனம் சோர்ந்தாலும், உயிர்சக்தி சோர்வடையாது.

ஏய்ந்த – பொருந்திய, குழலி – அழகிய கூந்தலை உடைய குண்டலினி சக்தி

எண்ணி எண்ணி மகிழலாம்!

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே – 832

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நிற்பது எல்லோரும் செய்யக்கூடிய பயிற்சி அல்ல, அது கடுமையான பயிற்சி. ஆகாய கங்கையை தலையில் வைத்திருக்கும் சிவபெருமானைப் போல, உச்சந்தலையில் அமுதம் ஊறப்பெற்ற சிவயோகிகளுக்கு மட்டுமே பரியங்கயோகம் சாத்தியமாகும். சிவயோகிகள் ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் இருந்து, தனது உச்சந்தலையில், நீர்நிலையில் தேக்கப்படும் தண்ணீரைப் போல, அமுதம் ஊறப் பெறுவார்கள்.

சிவயோகிகள் பரியங்கயோகத்தில், சிவசக்தியரை எண்ண மாட்டாமல் எண்ணி எண்ணி மகிழ்வார்கள்.

ஒண்ணாத – இயலாத/எளிதில் செய்ய முடியாத, உற்றவர் – நட்பு கொண்டவர்/யோகம் கைவரப் பெற்றவர், பண் – நீர்நிலை

செய்வதற்கு அரிய பரியங்கயோகம்!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே – 831

விளக்கம்:
முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவளும், மார்பில் சந்தனம் பூசப்பெற்று வாசனை மிகுந்தவளாகவும் இருப்பவள் குண்டலினியாகிய சக்தி. அந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருத்தாமல், மேலே எழச்செய்து, சகசிரதளத்தில் இருக்கும் சிவனைத் தொட்டுத் தழுவி இன்பம் பெறச் செய்வோம். ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் நிற்கும் யோகிகளால் மட்டுமே சிவசக்தியரை கூடச் செய்வது சாத்தியம்.

செய்வதற்கு அரியதாகிய, ஐந்து நாழிகை நேர பரியங்கயோகம் செய்யும் யோகிகள் மட்டுமே சிவசக்தியரை ஒன்று சேரக் காண்பார்கள்.

பஞ்ச கடிகை – ஐந்து நாழிகை நேரம், சரிவளை முன்கைச்சி – முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவள்.

மனம் நிறையச் செய்யும் யோகம்

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே – 830

விளக்கம்:
சிவசக்தி சேர்ந்திருக்கும் பரியங்கயோகத்தில் ஐந்து நாழிகைகள் தொடர்ந்து நின்று ஆறாவது நாழிகையிலும் தொடர்ந்தால், மனம் நிறைந்த இன்பம் பெருகும். அந்த இன்பத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் காணாது.

ஐந்து நாழிகை நேரம் குண்டலினி சக்தியும், சகசிரதள சிவனும் சேர்ந்து இருக்கும்படி யோகம் செய்வது, பரியங்கயோகம் ஆகும்.

கடிகை – நாழிகை (24 நிமிடங்கள்), வாய் கொளாது – சொல்ல வார்த்தைகள் காணாது

உடலும் மனமும் நம் வசப்படும்!

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே – 829

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, சிவசக்தியை ஒன்று சேரக் காண்பவர்களுக்கு ஞானம் எல்லாம் வசப்படும். எல்லையில்லாத இன்பம் கிடைக்கும். மனம் வசப்பட்டு அங்கும் இங்கும் அலையாது நிற்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் நம் வசப்பட்டு நம்முடைய கட்டுப்ப்பாட்டில் இயங்கும்.

உடலும் மனமும் நம் வசத்தில் நின்று, நமக்கு நாமே தலைவனாகலாம்.

அஞ்சு – ஐந்து பொறிகள்

யோக இன்பத்தில் நிலை கொள்வோம்!

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே – 828

விளக்கம்:
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய சக்தியும், சகசிரதளத்தில் இருக்கும் சிவனும் ஒன்று சேரும் தத்துவத்தை புரிந்து கொள்ள, அச்சேர்க்கையை அங்கப்புணர்ச்சியாகிய உடலுறவுடன் ஒப்பிடலாம்.

அங்கப்புணர்ச்சியில் ஒரு தலைவன், கலவியின் போது தனது விந்தை சேதப்படாமல், நன்றாகத் தேங்கும்படி செய்து தலைவிக்குக் கொடுக்கிறான். பரியங்கயோகத்தில் யோகியானவன், குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடையும் போது, உச்சந்தலையில் ஊறும் அமுதத்தை தேக்கி நிறுத்தி சாதகம் செய்கிறான்.

யோகநிலையில் ஏற்படும் இன்பத்தை புரிந்து கொள்வதற்காக, அந்த இன்பம் மனித உடல் புணர்ச்சியோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது என்பதை இந்த பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அங்கம் – உடல், பங்கப் படாமல் பரிகரித்து – சேதம் ஏற்படாதவாறு அடக்கி

காதல் யோகம்!

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே – 827

விளக்கம்:
முந்தைய பாடல்களில் பார்த்தபடி, குண்டலினி சக்தி மேலேறி சகசிரதளத்தை அடைவது என்பது, சிவனும் சக்தியும் செய்யும் காதல் யோகம் ஆகும்..

இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு மூச்சுக்களையும், கவனத்தை வெளியே சிதற விடாமல், சுழுமுனையில் நிறுத்தி மேலே ஏற்றினால் உச்சந்தலைக்கு மேல் உள்ள மதி மண்டலத்தில் வான் கங்கை ஊறும். இவ்வாறு குண்டலினி சக்தியை மேலே ஏற்றி, நாம் பரியங்கயோகத்தில் நின்றால் நம்முடைய முதுக்குத்தண்டு ஒருகாலும் தளராது. உடலும் தளராமல் நீண்ட காலம் வாழலாம்.

இடைகலை, பிங்கலை ஆகிய இரு சக்கரங்களைக் கொண்ட வண்டியை, அங்கேயும் இங்கேயுமாக பாதை மாற்றாமல், மேலே ஏற்றுவோம்.

கண்டன் – தலைவனாகிய சிவபெருமான், கண்டி – தலைவியாகிய சக்தி, மண்டலம் – உச்சந்தலைக்கு மேல் விளங்கும் மதி மண்டலம், தண்டு – முதுகுத்தண்டு

உடல் இன்பத்தை விட்டு யோக இன்பத்தைப் பெறுவோம்

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே – 826

விளக்கம்:
புறக்கலவி என்னும் உடல் இன்பத்தில் நம் மனம் லயித்திருக்கும் வரை, நமக்கு சகசிரதளம் என்னும் படிக்கதவு திறக்கப்படாது.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களால் சூதை விட முடியாது, சூதும் அவர்களை விடாது. சூதனாகிய சிவபெருமானை பொருத்தவரை, மென்முலைகள் கொண்ட குண்டலினி சக்தி ஒரு சூதுப்பொருள். இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, சூதுக்கும் சூதாடுபவனுக்கும் இருக்கும் ஈர்ப்பு போன்று அடர்த்தியானது. பரியங்க யோகத்தினால், குண்டலினியாகிய சக்தியை, சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானை அடையச் செய்தால், தேனில் குழைந்தது போல் விந்து நாதத்தில் கலந்து விடும்.

பரியங்கயோகத்தினால் விந்து என்னும் உயிர்சக்தி வீணாகமல் சிவத்தில் கலந்து விடும்.

போகம் – புறக்கலவி இன்பம், உன்னுதல் – நினைத்தல், வெள்ளி – வெண்ணிற விந்து, வியாழம் – நாதம், நற்சூதன் – சிவன், தாது – தேன்