செய்வதற்கு அரிய பரியங்கயோகம்!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே – 831

விளக்கம்:
முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவளும், மார்பில் சந்தனம் பூசப்பெற்று வாசனை மிகுந்தவளாகவும் இருப்பவள் குண்டலினியாகிய சக்தி. அந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருத்தாமல், மேலே எழச்செய்து, சகசிரதளத்தில் இருக்கும் சிவனைத் தொட்டுத் தழுவி இன்பம் பெறச் செய்வோம். ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் நிற்கும் யோகிகளால் மட்டுமே சிவசக்தியரை கூடச் செய்வது சாத்தியம்.

செய்வதற்கு அரியதாகிய, ஐந்து நாழிகை நேர பரியங்கயோகம் செய்யும் யோகிகள் மட்டுமே சிவசக்தியரை ஒன்று சேரக் காண்பார்கள்.

பஞ்ச கடிகை – ஐந்து நாழிகை நேரம், சரிவளை முன்கைச்சி – முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவள்.

மனம் நிறையச் செய்யும் யோகம்

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே – 830

விளக்கம்:
சிவசக்தி சேர்ந்திருக்கும் பரியங்கயோகத்தில் ஐந்து நாழிகைகள் தொடர்ந்து நின்று ஆறாவது நாழிகையிலும் தொடர்ந்தால், மனம் நிறைந்த இன்பம் பெருகும். அந்த இன்பத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் காணாது.

ஐந்து நாழிகை நேரம் குண்டலினி சக்தியும், சகசிரதள சிவனும் சேர்ந்து இருக்கும்படி யோகம் செய்வது, பரியங்கயோகம் ஆகும்.

கடிகை – நாழிகை (24 நிமிடங்கள்), வாய் கொளாது – சொல்ல வார்த்தைகள் காணாது

உடலும் மனமும் நம் வசப்படும்!

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே – 829

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, சிவசக்தியை ஒன்று சேரக் காண்பவர்களுக்கு ஞானம் எல்லாம் வசப்படும். எல்லையில்லாத இன்பம் கிடைக்கும். மனம் வசப்பட்டு அங்கும் இங்கும் அலையாது நிற்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் நம் வசப்பட்டு நம்முடைய கட்டுப்ப்பாட்டில் இயங்கும்.

உடலும் மனமும் நம் வசத்தில் நின்று, நமக்கு நாமே தலைவனாகலாம்.

அஞ்சு – ஐந்து பொறிகள்

யோக இன்பத்தில் நிலை கொள்வோம்!

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே – 828

விளக்கம்:
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய சக்தியும், சகசிரதளத்தில் இருக்கும் சிவனும் ஒன்று சேரும் தத்துவத்தை புரிந்து கொள்ள, அச்சேர்க்கையை அங்கப்புணர்ச்சியாகிய உடலுறவுடன் ஒப்பிடலாம்.

அங்கப்புணர்ச்சியில் ஒரு தலைவன், கலவியின் போது தனது விந்தை சேதப்படாமல், நன்றாகத் தேங்கும்படி செய்து தலைவிக்குக் கொடுக்கிறான். பரியங்கயோகத்தில் யோகியானவன், குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடையும் போது, உச்சந்தலையில் ஊறும் அமுதத்தை தேக்கி நிறுத்தி சாதகம் செய்கிறான்.

யோகநிலையில் ஏற்படும் இன்பத்தை புரிந்து கொள்வதற்காக, அந்த இன்பம் மனித உடல் புணர்ச்சியோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது என்பதை இந்த பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அங்கம் – உடல், பங்கப் படாமல் பரிகரித்து – சேதம் ஏற்படாதவாறு அடக்கி

காதல் யோகம்!

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே – 827

விளக்கம்:
முந்தைய பாடல்களில் பார்த்தபடி, குண்டலினி சக்தி மேலேறி சகசிரதளத்தை அடைவது என்பது, சிவனும் சக்தியும் செய்யும் காதல் யோகம் ஆகும்..

இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு மூச்சுக்களையும், கவனத்தை வெளியே சிதற விடாமல், சுழுமுனையில் நிறுத்தி மேலே ஏற்றினால் உச்சந்தலைக்கு மேல் உள்ள மதி மண்டலத்தில் வான் கங்கை ஊறும். இவ்வாறு குண்டலினி சக்தியை மேலே ஏற்றி, நாம் பரியங்கயோகத்தில் நின்றால் நம்முடைய முதுக்குத்தண்டு ஒருகாலும் தளராது. உடலும் தளராமல் நீண்ட காலம் வாழலாம்.

இடைகலை, பிங்கலை ஆகிய இரு சக்கரங்களைக் கொண்ட வண்டியை, அங்கேயும் இங்கேயுமாக பாதை மாற்றாமல், மேலே ஏற்றுவோம்.

கண்டன் – தலைவனாகிய சிவபெருமான், கண்டி – தலைவியாகிய சக்தி, மண்டலம் – உச்சந்தலைக்கு மேல் விளங்கும் மதி மண்டலம், தண்டு – முதுகுத்தண்டு

உடல் இன்பத்தை விட்டு யோக இன்பத்தைப் பெறுவோம்

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே – 826

விளக்கம்:
புறக்கலவி என்னும் உடல் இன்பத்தில் நம் மனம் லயித்திருக்கும் வரை, நமக்கு சகசிரதளம் என்னும் படிக்கதவு திறக்கப்படாது.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களால் சூதை விட முடியாது, சூதும் அவர்களை விடாது. சூதனாகிய சிவபெருமானை பொருத்தவரை, மென்முலைகள் கொண்ட குண்டலினி சக்தி ஒரு சூதுப்பொருள். இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, சூதுக்கும் சூதாடுபவனுக்கும் இருக்கும் ஈர்ப்பு போன்று அடர்த்தியானது. பரியங்க யோகத்தினால், குண்டலினியாகிய சக்தியை, சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானை அடையச் செய்தால், தேனில் குழைந்தது போல் விந்து நாதத்தில் கலந்து விடும்.

பரியங்கயோகத்தினால் விந்து என்னும் உயிர்சக்தி வீணாகமல் சிவத்தில் கலந்து விடும்.

போகம் – புறக்கலவி இன்பம், உன்னுதல் – நினைத்தல், வெள்ளி – வெண்ணிற விந்து, வியாழம் – நாதம், நற்சூதன் – சிவன், தாது – தேன்

பரியங்க யோகம்

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே – 825

விளக்கம்:
வாசனைத் திரவியங்கள் பூசிய தலை மயிரை உலர வைத்து, மணம் மிகுந்த பூக்களைச் சூட்டி சிவ கலவிக்குத் தயார் ஆகிறாள் நம்முடைய மூலாதாரத்தில் குடியிருக்கும் குண்டலினி ஆகிய சக்தி. சிவ கலவிக்கு தயாராக இருக்கும் சக்தியை, நாம் நமது யோகப் பயிற்சியால் சகசிரதளத்தில் இருக்கும் சிவனோடு சேர்ந்து கலவி கொள்ளச் செய்யலாம். முந்தைய பாடல்களில் பார்த்தது போல், மனத்தை ஊசி துளைப்பது போல் சுழுமுனையில் ஒன்றச் செய்து யோகப்பயிற்சி செய்தால், சகசிரதளத்திற்கான படிக்கதவு திறக்கப் பெறும். சக்தியும் அவ்வழியே மேலே சென்று சிவனோடு கலவி கொள்வாள். அக்கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

அகக் கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

காயக்குழலி – குண்டலினி, போகம் – இன்பம்

சிவன் நம்முள்ளே குடி கொள்வான்!

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே – 824

விளக்கம்:
தாமரை மலரைப் போல விரிந்து மேலே எழும் தன்மையுடைய குண்டலினி சக்தி நம்முடைய கொப்பூழுக்கு பன்னிரெண்டு விரற்கடை அளவு கீழே உள்ளது. இந்த குண்டலினி சக்தி பகலொளியைப் போன்றது என வேதங்களால் போற்றப்படுகிறது. நன்மை தரும் அந்த குண்டலினியின் எழுச்சியில் நம் சிந்தையை ஒளி விடும் தீபம் போல நேராக நிறுத்துவோம். சிந்தையில் குண்டலினியின் எழுச்சியைக் கவனித்து, நம் கவனத்தை அதிலேயே நிறுத்தினால், நம் உடல் என்னும் கோயிலில் சிவபெருமான் குடி கொள்வான்.

கேசரியோகத்தினால் சிவன் நம்முள்ளே குடி கொள்வான்.

பன்மம் – தாமரை, வேதப் பகலொளி – வேதத்தில் பகல் ஒளி எனப் போற்றப்படும் குண்டலினி

தீபம் போன்ற அழகான சிந்தை!

தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே – 823

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்பவர்கள் ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தம்முள்ளே கண்டு, இந்த உலகம் இயங்கும் முறையைப் பற்றிய தூரதரிசனம் பெறுவார்கள். தூரதரிசனம் பெற்ற அவர்கள் கருமை நிறக் கண்களை உடைய பராசக்தியின் அருள் பெற்று ஞானத்தின் எல்லையை அறிவார்கள். எழுச்சி கொண்டு ஒளி விடும் தீபம் போன்ற அழகான சிந்தையைக் கொண்டவர்களுக்கு, பரந்த இவ்வுலகம் வெளிச்சம் நிறைந்ததாகத் தெரியும்.

கேசரியோகத்தினால் சிந்தை தெளிவு பெறும்.

காராரும் – கருமை நிறம் பொருந்திய, கடைஞானம் – ஞானத்தின் எல்லை, ஏராரும் – எழுச்சி நிறைந்த, பாராரும் – பரந்த, பகன் – சூரியன்

தூர தரிசனம் பெறலாம்!

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே – 822

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்யும் போது நம் உடலில் வாயு இயங்கும் முறையை உணரலாம். கடினம் தான் என்றாலும், இன்னும் சிறிது முயற்சி செய்தால், நம் உடலின் உள்ளே நிலத்தையும் நீரையும் உணரலாம். இன்னும் கடுமையாக யோகப்பயிற்சி செய்தால், ஐம்பூதங்களின் தன்மையையும் நம் உடலின் உள்ளே அறிந்து உணரலாம். அகத்தினுள் ஐம்பூதங்களின் இயக்கத்தை உணர்ந்தால், இந்த உலகம் இயங்கும் முறையையும் அறியலாம்.

கேசரியோகத்தினால் ஐம்பூதங்களின் இயல்பை, செயல்படும் முறையை தூரதரிசனத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆகம் – உடல், தூர தரிசனம் – தூரத்தில் உள்ளவற்றை இங்கிருந்தே பார்க்கும் திறன்