கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை!

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? மனிதன் இறையுள் வாழ்கிறான், ஆனால் அதைப் பற்றிய உணர்வு இல்லாமல். மனிதன் இறையினுள் பிறக்கிறான், இறையை சுவாசிக்கிறான், ஒரு நாள் இறையினுள் கலந்து விடுவான்.

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? இறை தான் நம்மை சூழ்ந்துள்ள கடல், அது நமக்கு உள்ளேயும் வெளியேயும் பரவியுள்ளது. கடவுள் என்பது ஒரு நபர் அல்ல, நம்மை சுற்றி நிரம்பி வழியும் தெய்வீக இருப்பு.

இறை வழிபட வேண்டிய விஷயம் அல்ல. அது வாழ்ந்து உணர வேண்டும். அதற்காக எங்கும் போக வேண்டியதில்லை, நாம் இறையின் உள்ளேயே வாழ்கிறோம்.

இறையினை உணர நமக்கு மதம் எதுவும் தேவையில்லை, இந்த நொடி நம் மேல் இறை பொழிகிறது. ஆனால் நம்மை நாமே பூட்டிக் கொண்டிள்ளோம். நம் கதவு யுக யுகமாக தட்டப்படுகிறது, நாம் அதை கேட்க விரும்பவில்லை.

பழைய விவிலிய கதை ஒன்று உண்டு. ஆடம் தனக்கிடப்பட்ட கட்டளையை மீறிய போது கடவுள் அவனை தேடி வந்தார். அப்போது ஆடம் ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவனுக்கு கடவுளை நேராக பார்க்கும் தைரியம் இல்லை. கடவுள் அந்த ஏதேன் தோட்டத்தில் “ஆடம்! நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கிறார். ஆடம் அதற்கு பதில் சொல்லவில்லை. இது கதை இல்லை, நம்முடைய நிலை இது தான். நாம் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறோம்.

From Osho’s discourse on ‘Talks on Kabir’

இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு

– முதலில் பெர்சியர்கள் சிந்து நதியோரம் வசிப்பவர்களை ஹிந்து என்று குறிப்பிட்டாலும், ஹிந்து என்ற சொல் அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள் வருகைக்கு பிறகு பரவலான உபயோகத்திற்கு வந்தது. முதலில் அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே நினைத்தனர். பின்னர் இந்திய மக்களின் வாழ்வு முறையை புரிந்து கொண்ட பிறகு தான் அவர்களால் ஹிந்துக்களை மற்ற மதத்தினவர்களிடம் (புத்தம் மற்றும் ஜைனம்) இருந்து வேறுபடுத்தி அறிய முடிந்தது.

– வரலாற்றின் பிற்காலங்களில் தான் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். முன்னர் அவர்கள் தங்கள் ஜாதி அல்லது வகுப்பு பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி கொண்டார்கள். ஹிந்துக்களிடையே ஜாதியினால் பெரிய அளவில் பிரிவினைகள் எப்போதுமே இருந்துள்ளது. சமய வழிபாட்டு முறை மற்றும் மத உரைகள் அவர்களிடையே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்து வர காரணமாய் இருந்து வந்துள்ளது.

– ஐரோப்பியர்களுக்கு வெகு காலம் முன்பே இந்தியர்கள் தாங்கள் கற்றவைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பழங்கால இந்தியர்கள் படைத்த காவியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டவை, நுட்பமான பொருள்கள் நிறைந்த அமரத்துவம் பெற்றவை. அவை இன்றும் உலக அளவில் நமக்கு பெருமை தேடித் தருபவை. மேலும் தலை சிறந்த கணித மேதைகளும் வானியலாளர்களும் செய்த பங்களிப்புகள் பின்னர் முக்கிய ஆய்வுகளுக்கு பயன்பட்டன. இந்தியர்கள் இல்லாமல் இப்போது நடைமுறையில் உள்ள நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையாய் உள்ள எண் முறை சாத்தியமாகியிருக்காது.

-தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக காலத்திய நகைகளையும் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் அந்நாளைய பண்பட்ட வாழ்க்கை முறையை பறைசாற்றுபவையாக உள்ளன. இந்தியர்களின் வெண்கலம் மற்றும் செம்பினால் ஆன கைவினைப் பொருட்களுக்கு அகில உலகில் எப்போதுமே கிராக்கி இருந்து வருகிறது.

-மேலும் நமக்கு பெருமை சேர்ப்பவை பழங்கால துணி வேலைப்பாடுகள், கோவில்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் 8200 வருட கால அமைதியான ஒழுக்கமான சமூக வாழ்க்கை முறை.

– இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் பழங்கால இந்தியா மற்ற நாகரிகங்களான மெசபட்டோமியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பின்தங்கியே இருந்திருக்கிறது. இந்தியர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. சீனர்களும் ரோமானியர்களும் தங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

– பழங்கால இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமையை போக்குவதற்க்கு பெரிய அக்கறை எதுவும் கொள்ளவில்லை. மேலும் இந்தியாவின் மீது படிந்துள்ள பெரும் கறை அதன் ஜாதி அமைப்பு.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI

இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி ஒன்று

 – இந்தியாவின் முதன்மையான புனித நூல் ரிக் வேதம். இன்றைய பஞ்சாப் பகுதி ரிக் வேதத்தில் சப்த சிந்தவா (ஏழு நதிகளை கொண்ட நிலம்) என்று அழைக்கப்படுகிறது. இப்போது அங்கே ஐந்து நதிகள் மட்டுமே ஓடுகின்றன – சிந்து, ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ் / பீஸ். 4000 வருடங்களுக்கு முன் சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி என்னும் இரண்டு நதிகள் இருந்தனவாக நம்பப்படுகிறது. பின்னாளில் அவை வற்றிப் போயிருக்கலாம்.

– 8000 வருடங்களுக்கு முன் பெர்சியர்கள் இந்தியாவில் ஊடுருவ ஆரம்பித்த போது, அவர்கள் மேற்கே இருந்த சிந்து நதியை தொடர்புபடுத்தி அங்கே வசித்தவர்களை ‘ஹினாபு’ என்று அவர்கள் மொழியில் அழைத்தார்கள். பிறகு சுமார் 2000 வருடங்களுக்கு பிறகு மாசிடோனியர்கள் அலக்ஸாண்டரின் தலைமையில் அங்கே படையெடுத்தார்கள். அவர்கள் சிந்து நதியை ‘இந்தோஸ்’ என்றும் அதை சார்ந்த நிலப் பகுதியை ‘இந்தியா’ என்றும் கிரேக்க மொழியில் அழைத்தார்கள். ஆனால் நம் மக்கள் சில சமஸ்கிருத பெயர்களைத் தான் உபயோகித்துள்ளார்கள் – பாரத், மத்தியதேஷா மற்றும் ஜம்புத்விபா (இந்திய வரை படம் ஜம்பு மர வடிவில்  இருப்பதால்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

– கி.மு. 7000 வாக்கில் பலூசிஸ்தான் பகுதியில் முதன் முதலாக விவசாயம் செய்யும் வழக்கம் தோன்றியுள்ளது.

-கி.பி.1200க்கு முன்பு நமது நாடு பலமுறை வெளிநாட்டினரால் தாக்கப்பட்டிருந்தாலும் (பெர்சியர்கள், கிரேக்கர்கள், மத்திய ஆசியாவை சேர்ந்த குஷானர்கள், அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள்) அப்போதிருந்த இந்திய பேரரசர்களும் சிற்றரசர்களும் தங்கள் நிலப்பகுதிகளை காப்பாற்றி தக்க வைத்துக் கொண்டார்கள்.

-கி.பி.1200க்கு பிறகு ஆப்கன் மற்றும் மொகலாயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்திய மன்னர்கள் தங்கள் சுய ஆட்சி உரிமையை சிறிது சிறிதாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI

வெக்கை!

னியினால் அமையப் பெற்ற கோட்டை –
தனிமையில் நான் மட்டும் கூட்டமாக!
புரியாத குளிர் தாங்க முடியாமல்
எரித்து விட்டேன் அணிந்திருந்த உடைகளை!

வெறுமை!

மொத்த உலகும் என் அன்புப் பிடியில்
இருந்த அந்த கண நேர விநோத
நிலையில் தோன்றியதிது –

அறியாமையும் அவலமும்
தவிர்த்து பார்த்தால்,
புவியில் செய்யப்படும்
ஒவ்வொரு தீவினையும்
முன்னால் நிறைந்து நிற்கும் வெறுமையை
நிரப்பும் முயற்சி அது.
அதன் பின்னால் காத்துக் கிடக்கும்
மரணத்தை மறுக்கும் செயல் அது என்பது.

இப்போது புரிகிறது –
உலகின் ஒவ்வொருவரையும்
நான் வெறுக்க முடியுமென்பது!

இந்த கவிதைக்கு பெயர் இல்லை!

பெயர் வைத்தே பழகினோம்
எல்லாவற்றிற்கும்!
பெயரில்லா உயர்திணை இல்லை உலகினில்!
பெயரில்லா அஃறிணையும் இல்லை!

அணுவின் கருவிற்கும் பெயரிட்டோம்!
எல்லை இல்லா இப் படைப்பை
இயற்கை என்னும் சொல்லில் அடக்கி விட்டோம்!

பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சமத்திற்கும்
பெயர் வைத்தோம் மேதாவிகளாய்!

பெயர்களை கொண்டாடுகிறோம்.
பெயர்களை கண்டிக்கிறோம்.
பெயரை பிடித்தே தொங்குகிறோம் நாம்!

பெயர் இல்லாமலிருந்தால் ஒரு வேளை
அந்த சூட்சமத்தை உணர்ந்திருக்கலாம் நாம்!

கடவுள் எனப்படும் அனானி!

பிரியமான மனிதர்களுக்கு,

அனானி எழுதுவது. நான் பெயர் இல்லாதவன், உருவமற்றவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதால் அனானி என்று சொல்லி கொள்கிறேன். அதையே எனது பெயராக்கி விடாதீர்கள். வரலாற்றில் இப்படித்தான் நிறைய நடந்திருக்கிறது. ஆன்மீக சிந்தனை என்ற பெயரில் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் எனது இன்பாக்ஸ்ஸில் வந்து சேர்ந்து அது பல டெட்ரா பைட்ஸ்ஸை தாண்டி விட்டது. உங்கள் கேள்விகள் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றாலும், உங்கள் சந்தேகங்களுக்கு நான் பொறுப்பில்லை என்றாலும் FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கு பதில் தருகிறேன்.

1. இந்த உலகத்தை படைத்தது யார்?
டெக்னிக்கலாக தெரிய வேண்டும் என்றால் டார்வின் படிக்கலாம். வேதாந்தமாக வேண்டுமென்றால் அவரவர் உலகை அவர்களே படைக்கிறார்கள்.

2. விதி என்பது உண்மயா?
உண்மை. இதற்கு நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்.

3. மதத்தின் பெயரால் நடக்கும் சண்டை, சச்சரவுகள் பற்றி?
அவை மதத்திற்காகவோ, அவர்களின் கடவுளுக்காகவோ இல்லை. தன்னுடய புரிதலும் நம்பிக்கையும் தான் சரியானது என்று வாதிடுகிறார்கள்.

4. இவற்றை எப்படி நிறுத்துவது?
அது என் வேலை இல்லை.

5. மரணத்திற்கு பிறகு?
செத்து பார். தெரியும்.

6. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏன்?
வலிமை உள்ளவன் வேண்டியதை அடைவான். அது இல்லாதவன் இப்படி கேள்விகள் கேட்பான்.

7. நாத்திகம் பற்றி?
அதுவும் ஒரு நம்பிக்கைதான்.

8. யோகா, தியானம் மூலம் கடவுள் தன்மை அடைய முடியுமா?
கடவுள் தன்மை என்று ஒன்று கிடையாது. முயன்றால் தன்னுடைய தன்மை உணரலாம்.

9. பேய், பிசாசுகள் உண்டா?
உண்டு. அவை எல்லோருடய எண்ணங்களிலும் உள்ளன.

10. பிரார்த்தனைகளால் பலன் உண்டா?
சந்தேகத்துடன் செய்தால் பலன் கிடையாது.

11. அரசியல் பற்றி?
சமூக வாழ்விற்கு அது மிகவும் அவசியம்.

12. அரசியலில் முறைகேடுகள் நிறைய உள்ளதே?
அவை service charges.

13. விபத்துக்கள் இப்போது நிறைய நடக்கிறதே?
விஞ்ஞான வள்ர்ச்சியின் ஒரு சிறிய பக்கவிளைவு.

14. பூஜைகள், யாகங்கள் செய்தால் பலன் உண்டா?
அவற்றை உருவாக்கியவர்களைத்தான் கேட்க வேண்டும்.

15. அவை கடவுளால் சொல்லப்பட்டதில்லையா?
நான் உருவாக்கியிருந்தால் இன்று உலகில் ஒரே வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும்.

16. அப்படியானால் நீங்களே ஒரு வழிபாட்டு முறை உருவாக்கி இருக்கலாமே?
என்னை வழி படச்சொல்லி நான் யாரையும் சொல்லவில்லை.

மாயகம்!

மெல்ல மெல்ல அசை போடும்
என் துடுப்பு அது
உன் குளத்தினில்…
நுரை நுரையாய் பூத்திற்று.

விகடன் புத்தகத்துக்குள் இருந்த அந்த துண்டு சீட்டை பார்த்ததும் எதோ கவிதை மாதிரி இருக்கேன்னு படிச்சுப் பார்த்தாள் தேவகி. அதன் நோக்கம் கொஞ்சம் புரியுறப்ப ச்சீன்னு ஆகிப்போச்சு அவளுக்கு. புருஷன் செத்துட்டா ஆளாளுக்கு இப்படி ஜாடை பேச கிளம்பிருவாங்களோ. ஆறு மாசத்துக்கு முன்னதான் செத்து போனான் அவன். மரியாதை எதுக்கு அவனுக்கு? நாற்பதியெட்டு வயசுல முப்பத்தியெட்டுன்னு சொல்லி கல்யாணம் பண்ணினவன்தானே! தேவகிக்கு அப்போ இருவத்தி ஒண்ணு. ஆனாலும் கல்யாண வாழ்க்கை அப்படி ஒண்ணும் மோசமில்லை. வயசானாலும் ஆள் நல்ல திடகாத்திரம். வசதிக்கு பஞ்சமில்ல. சுகத்திலும் ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி லாரியில் அடிபட்டு சாகாமல் இருந்தால் இப்பவும் அவளூக்கு அது ஒரு நல்ல வாழ்க்கைதான்.

தேவகிக்கு இப்போ பிறந்த வீட்டிலும் பேச்சு வார்த்தை இல்லை. ஐம்பதினாயிரத்துக்கு ஆசைப்பட்டு இப்படி வயசானவருக்கு கட்டி வச்சிட்டாங்களேன்னு பெத்தவங்களோட பேசுறத நிறுத்திட்டா. அவங்களும் ஒண்ணும் வேணும்னு அப்படி செய்யலை. வீட்டில் இருந்த கடன் பிரச்சனை அப்படி.

பழசெல்லாம் நெனச்சு அழுதுகிட்டே தூங்கினவளுக்கு, எழுந்த  போது  கொஞ்சம் தெளிவாய் இருந்தது. துண்டுச் சீட்டு எழுதின அந்த இருபது வயசு பையனை நெனச்சா சிரிப்புதான் வந்தது. கண்ணாடி முன்னால் நின்னு தன்னை தானே பார்த்துகிட்டு இருந்தாள். சாதாரணமாய் நின்னதே நெஞ்சை நிமிர்த்தி நின்னாற் போல இருந்தது. ‘இதெல்லாம் பார்த்தா துடுப்பு தாங்குமாடா’ன்னு கோணலாய் ஒரு எண்ணம் மனசில வந்து போச்சு. அந்த துண்டு தாளை எடுத்து கிழிச்சு போட்டுட்டு விகடனை எடுத்து புரட்ட ஆரம்பிச்சா. புரட்டிகிட்டே வந்தவள் சுந்தரம்கிற பேரை பார்த்தவுடனே இது நம்ம சுந்தரமான்னு பார்த்தாள். அவன் எழுதின கதைதான் வந்திருந்தது. சுந்தரம் சின்ன வயசிலேருந்து நண்பன். கூடப் படிச்சவன். எதோ கொஞ்சம் சுமாரா எழுதுவான். அப்பப்போ சில பத்திரிக்கையில வரும். ‘என்ன கதை விடுறான்னு பார்போம்ன்னு’ எடுத்து படிக்க ஆரம்பிச்சாள்.

இப்போதெல்லாம் மீனாட்சி தும்மினாலே ராஜாராமுக்கு சந்தேகம் வருது. யாருக்கும் கேக்கணும்னு தும்முராளோன்னு வெளியெல்லம் போய் நோட்டம் பார்க்கிறார். இதெல்லாம் பார்க்கும் மீனாட்சிக்கு ரொம்பவே எரிச்சலாய் இருந்தது, கொஞ்சம் வினோதமாவும் இருந்தது. ‘இது வரை இவர் அப்படியெல்லாம் இல்லையே. அதுவும் நமக்கு நாற்பது வயசானதுக்கு அப்பறமா இப்படி சந்தேகமெல்லாம் வரணும்ன்னு’ வருத்தமாய் இருந்தது. ராஜாராமுக்கு அவள் இன்னும் புது பொண்டாட்டி மாதிரி இன்னும் இழையனும், கொஞ்சணும்னு ஆசை. அதுவும் அவங்களுக்கு பிள்ளை இல்லாத்தால் இவளுக்கு என்ன இடைஞ்சல்ன்னு யோசனை. அதான் தேவை இல்லாத சந்தேகம் எல்லாம் வர ஆரம்பிச்சது.இந்த சமயத்தில்தான் ராஜாராம் தினமும் வேலாயுதத்தை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு கல்யாண புரோக்கர், தினமும் வாக்கிங் போகும் போது பழக்கமாச்சு. விளையாட்டாய் ஒரு நாள் “யோவ் உம்ம பார்த்தால் வயசான மாதிரியே தெரியலை. பேசாம உமக்கு ஒரு பொண்ணு பார்த்திருவோமா?’ன்னு’ கொளுத்தி போட ராஜாராம் மனசில அது பத்திகிடுச்சு. தட்டு தடுமாறி அது பத்தி வேலாயுதத்திடம் கேக்க பத்து நாளாச்சு அவருக்கு. புரோக்கர் தொழிலில் இது போல் நிறைய பார்த்திருப்பதால் வேலாயுதம் ராஜாராமுக்கு குற்றவுணர்வு எதுவும் எழாதபடி பேசினார். “பக்கத்து ஊருல ஒரு பொண்ணு இருக்கு. இந்த போட்டோவை பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லும்”ன்னார். பெண்ணை பார்த்ததும் ராஜாராம் அசந்தே போனார். “ஆனா ஒண்ணு. அந்த குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கு. கடன் பிரச்சனை.” வேலாயுதத்தை மேற்கொண்டு பேச விடவில்லை “அடப்போய்யா என்ன பெரிய வசதி. அதெல்லாம் நான் பார்த்துகிடுறேன்.” எங்கே இந்த பொண்ணு கிடைக்காமல் போகுமோன்னு அவசரப்பட்டார் ராஜாராம்.

அடுத்த வாரத்தில் பெண்ணைப் பார்க்க போனார்கள். நேரில் பார்க்க பெண் ரொம்பவே அம்சமாய் இருந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமல் இருபத்தையாயிரம் ரூபாயை எடுத்து பெண்ணின் தந்தை கையில் கொடுத்து விட்டார். கல்யாணம் முடியவும் இன்னும் தர்றேன்னார். பணத்தை பார்த்ததும் அந்த வீட்டில் யாரும் ஒன்றும் சொல்ல முடியலை. அடுத்த வாரத்தில் கல்யாணம் என்று முடிவாயிற்று. அந்த ஊரிலேயே கோவிலில் வைத்து என்று பேசியாயிற்று.

முதலில் இன்னும் ஒரு வாரமான்னு யோசிச்சவருக்கு நாள் வேகமாக நகர ஆரம்பிச்சது. இன்னும் ஒரு மாசம் தள்ளி வச்சிருக்கலாமோன்னு தோணிச்சு. மீனாட்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் இருடி உன்னை பழிவாங்குறேன் போலியாய் வீரம் காட்டினார். நாலாவது நாள் காய்ச்சலே வந்து படுத்து விட்டார். காய்ச்சலாய் இருந்தவரை மீனாட்சி எழவே விடவில்லை. இது வரை இப்படி முடியாமல் படுத்தது இல்லை. சாப்பாடு எல்லாம் படுக்கைக்கே வந்தது. ஊட்டி விடாத குறைதான். ராஜாராமுக்கு மீனாட்சி பக்கத்தில் வரும் போதெல்லாம் என்னவோ போலிருந்தது. “பேசாம இருங்க. என்னமோ புதுமாப்பிள்ளை மாதிரி ரொம்ப பிகு பண்ணிக்கிட்டு” அதிகமாகவே மேலே ஒட்டினாள். ராஜாராமுக்கு நினைவெல்லாம் அந்த புது பெண்ணை எப்போ தொட்டு பார்ப்போம்ன்னு இருந்திச்சு.

ஏழாவது நாள் காலை நாலு மணிக்கே எழுந்து குளிச்சி ரெடியாகிட்டார். தூங்கிட்டு இருந்த மீனாட்சியை எழுப்ப மனசு வரலை. வேலாயுதம் வர இன்னும் நேரம் இருந்தது. ஏதோ நினைப்பு வந்தவராய் மீனாட்சியை திரும்ப பார்த்தார். அவள் ஒரு பழைய புடவை கட்டியிருந்தாள். அது அவருக்கு ரொம்ப பழக்கமானதாக இருந்தது. அந்த அரையிருட்டில் உற்றுப்பார்த்தவருக்கு ஞாபகம் வந்தது. மீனாட்சியுடன் கல்யாணாம் ஆகி வாங்கிக் கொடுத்த முதல் சேலை அது. வாங்கின அன்னைக்கு அவளுக்கு இருந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்க்கணுமே! அன்று நடந்தது பூராவும் ஞாபகம் வந்தது. “இன்னைக்கு எல்லாமே நான்தான். நீங்க பேசாம சும்மா இருக்கணும்” இப்போ வந்து காதுக்குள் கடிக்கிற மாதிரி இருக்குது. அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்திட்டார்.

வேலாயுதம் வந்து கூப்பிட்ட போது சுரத்தே இல்லாமல் கிளம்பினார். வழியில் வேலாயுதம் பேசிக்கிட்டு வந்தது எதுவுமே அவர் காதில் விழவில்லை. ஸ்டாப்பில் பஸ் வந்து நின்னப்போ வேலாயுதம்தான் முதல்ல ஏறினார். பின்னாலே ஏறப்போன ராஜாராம் திடீர்ன்னு திரும்ப கீழே இறங்கிட்டார். வேலாயுதத்துக்கு ஒன்னும் புரியலை. “என்னைய்யா ஆச்சு உமக்குன்னு” கோபப்பட்டார். இல்லேன்னு இழுத்த ராஜாராம் “சின்னப் பொண்ணா இருக்கு. அது வாழ்க்கையை பாழாக்க வேண்டாம்னு பாக்கிறேன். கொடுத்த பணம் கூட அவங்களுக்கே உதவியா இருக்கட்டும். இன்னும் வேணும்னாலும் தர்றேன்”. பதிலுக்கு என்ன வேணும்னாலும் திட்டிக்கொள் என்கிற பாவனையில் தலை குனிந்து நின்றார்.

படித்து முடித்த தேவகிக்கு தொண்டை அடைச்சுகிடுச்சு. ஒரு வெள்ளைத்தாளைத் தேடி எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள சுந்தரத்துக்கு,

உன்னுடய சிறுகதையை விகடனில் படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் கடைசியில் ஏன் முடிவை மாற்றி எழுதி இருக்கிறாய் என்று புரியவில்லை. நீ எழுதியபடி அவர் மனம் மாறியிருந்தால் இன்னைக்கு எனக்கு துடுப்பு, அடுப்புன்னு எவனும் எழுதியிருக்க மாட்டான். உன் ஆசையை கதையின் முடிவாய் மாற்றி இருக்கிறாய் போலும். ஆனால் கதையின் கீழ் வந்துள்ள விளம்பரம் உன் கதையின் மூலத்தை காட்டி கொடுக்கிறது. இது தற்செயலாய் தான் நடந்திருக்க வேண்டும். ஆனாலும் ஆச்சர்யமாய் உள்ளது.

அன்புடன்
தேவகி.
படித்து பார்த்த சுந்தரம் விகடனை எடுத்து புரட்டிப் பார்த்தான். வழுக்கைத் தலைக்கு சிகிச்சை விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தில் தேவகியின் புருஷன் ஃபோட்டோ, சிகிச்சைக்கு முன், பின் என வந்திருந்தது. ஆள் செத்துப் போனாலும் இன்னும் அந்த விளம்பரத்தில் அவர் படம்தான் வந்துகிட்டுருக்கு.
(அமரர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் இந்த சிறியவனை மன்னிக்க வேண்டும்)

அந்திம காலம்

கலி முற்றி விட்டதாம்.
இயற்கையை மீறி விட்டோமாம்.
ஏதோ கல்கி அவதாரமாம்.
கர்த்தர் வேறு வருகிறாராம்.

என்னை பொறுத்த வரை
என் சாவில் இந்த உலகம்
அழிந்து விடும்!