கடலில் தொலைத்ததைக் குளத்தினில் தேடலாமா?

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.  –  (திருமந்திரம் – 513)

விளக்கம்:
புனிதமான தீர்த்தத்தை வெளி உலகில் தேடாமல், தியானத்தினால் தம்முள்ளே தேடுபவர்களுக்கு ஒப்பானவர் யாருமில்லை. நந்தியம்பெருமான் நம் உடலில் புகுந்து திடமாக அமர்ந்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் அந்த உண்மையை உணராமல் புனித தீர்த்தத்தை வெளி உலகில் தேடுகிறார்கள். அவர்களது செயல் கடலில் தொலைத்தப் பொருளை குளத்தினில் போய்த் தேடுவதைப் போல் உள்ளது.

உள்ளூறும் கங்கை!

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.  –  (திருமந்திரம் – 512)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவபெருமானை அறிந்தவர்கள், பிறப்பு இறப்பு இல்லாத அமரர் ஆவார்கள். எங்கும் எதிலும் செறிந்திருக்கும் அப்பெருமானின் திருவடியைத் தேடிச்சென்று வெற்றி பெறுவோம். சிவனடியை தியானித்து இருந்தால் நம்முள்ளே கங்கை வெள்ளம் தோன்றுவதை உணரலாம். அவ்வெள்ளத்தை மறிக்காமல், நமது ஐம்பொறிகளும் அவ்வெள்ளத்தில் மூழ்குமாறு செய்வோம். நம்முள்ளே ஊறும் அத்தீர்த்தத்தில் மூழ்கினால் நாம் புண்ணியம் பெறலாம்.

நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பந்தருள்ளானே.  –  (திருமந்திரம் – 511)

விளக்கம்:
தீவினைகள் நிரம்பிய பள்ளம் போன்றது நமது உடல். இந்த உடலின் உள்ளே நம் சிவபெருமான் பந்தல் அமைத்து தெளிந்த தீர்த்தமாக இருக்கிறான். கள்ள மனம் கொண்டவரால் அதை உணர முடியாது, அந்த சிவனுடன் மனம் கலக்க முடியாது. அன்புள்ளம் கொண்டவர்கள் தம்முள்ளே உள்ள தெளிந்த தீர்த்தமான சிவபெருமானை உணர்ந்து அவனோடு கலந்து இருப்பார்கள். அன்பில்லாத மற்றவர்கள் புறவுலகில் உள்ள தீர்த்தங்களில் கடவுளைத் தேடி அலைவார்கள்.

பக்தி, யோகம், ஞானம்

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.  –  (திருமந்திரம் – 510)

விளக்கம்:
கண்ணீர் மல்க பக்தியுடன் சிவனை வழிபடுபவர்க்கு, அவன் குளிர்ச்சியுடைய பொருளாகத் தோன்றுவான். பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு சிவனைக் காணும் வாய்ப்பு அதிகம். தெளிந்த ஞானம் உள்ளவர்களின் சிந்தையில் சிவன் எப்போதும் இருக்கிறான். ஞானம், அன்பு, யோகம் எதுவும் இல்லாமல் புற உலகில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவதால் எந்தப் பயனும் கிடையாது. அவர்களால் சிவனடியை அடைய முடியாது.

உள்ளே ஊறும் தீர்த்தம்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  –  (திருமந்திரம் – 509)

விளக்கம்:
மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை உள்ள ஆதாரங்களில் எல்லாம் தீர்த்தங்கள் உள்ளன. தியானத்தில் நின்று ஆதாரங்களில் கவனம் செலுத்தினால், அங்கே உள்ள தீர்த்தங்களில் புனித நீராடலாம். அத்தீர்த்தங்கள் நம்முடைய தீயவினைகளை அழிக்கும். நம்முள்ளே உள்ள இந்தத் தீர்த்தங்களைப் பற்றி அறியாத கள்ள மனமுடையவர்கள் தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும் மேடும் நடந்து அலைகின்றனர்.

நம்முடைய பாவங்களைக் கழுவும் தீர்த்தங்கள் நம் உள்ளேயே இருக்கின்றன. தியானத்தினால் அவற்றைக் கண்டு அடையலாம். புற உலகில் தீர்த்தங்களைத் தேட வேண்டியதில்லை.

தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  –  (திருமந்திரம் – 508)

விளக்கம்:
நாம் கொடுக்கும் தானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிவபெருமானே நம் முன்னே நின்று ஈகின்றான் எனக் கை கூப்பி வணங்கிக் கொடுக்க வேண்டும். நிலத்தளவு தானம் செய்தாலும், மலையளவு தானம் செய்தாலும், ஈசனை நினையாமல் கொடுத்தால் தானம் கொடுத்தவரும் தானம் பெற்றவரும் மீள முடியாத நரகக் குழியிலே விழுவார்கள்.

தானம் செய்தால் நரகம் தவிர்க்கலாம்

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.  –  (திருமந்திரம் – 507)

விளக்கம்:
நல்லவர்க்குத் தானம் செய்வதன் பயனை அறியாதவர் பஞ்ச மாபாதகர் ஆவார்.  குற்றம் இல்லாத சிவனடியார்களுக்கும் , சிவஞானம் அளிக்கும் குருக்களுக்கும், காமம் முதலிய குற்றங்களை விட்ட சிவயோகியர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தானம் செய்வதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும்.  அப்படித் தானம் செய்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் ஞானம் பெறுவார்கள். தானம் அறியாத பாதகர்கள் செல்லும் நரகத்திற்கு அவர்கள் செல்ல மாட்டார்கள்.

இயம நியமத்தில் இருப்பவர்க்கே தானம் செய்ய வேண்டும்

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  –  (திருமந்திரம் – 506)

விளக்கம்:
யோக நெறியில் சொல்லப்படும் இயம நியமங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். இயம நியமங்களில் இருந்து விலகினால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரிந்தும் அந்நெறியில் விரும்பித் தங்காதவர்களுக்குத் தானம் செய்யக்கூடாது. அது பெரும்பிழை ஆகும்.

இயமம் – தவிர்க்க வேண்டிய தீய விஷயங்கள். நியமம் – கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்.

ஒழுக்கம் இல்லாதவர்க்குத் தானம் செய்ய வேண்டாம்

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.  –  (திருமந்திரம் – 505)

விளக்கம்:
ஒழுக்கமும் தவமும் இல்லாத வேடதாரிகளுக்குத் தானம் செய்வது, வறட்டுப் பசுவை வணங்கி  அதற்கு உணவளித்து அதன் பாலைக் கறந்து குடிப்பதைப் போல பயன் இல்லாத செயலாகும். காலம் கடந்து பயிர் செய்வது போன்ற அவ்விதத் தானத்தைத் தவிர்க்க வேண்டும்.

தகுதி இல்லாத வேடதாரிகளுக்கு தானம் செய்வது எந்தவிதப் பயனையும் தராது.

ஆவது ஆகட்டும்! அவன் இருக்கிறான்!

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.  –  (திருமந்திரம் – 504)

விளக்கம்:
நந்தி என்னும் பெயர் கொண்ட நம் இறைவன், முதன்மையான தகுதி உடைய அடியவரிடம் தன்னைக் வெளிப்படுத்தித் தரிசனம் தருவான். தரிசனம் பெற்ற அடியவர் தம் வாழ்வில் தெளிவு பெற்று ‘நடப்பது நடக்கட்டும், அழிவது அழியட்டும், போவது போகட்டும், வருவது வரட்டும். எது நடந்தாலும் அது இறைவனின் ஆணை’ என தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்து நிம்மதியாய் இருப்பார்.