உந்து சக்தியாக நிற்கும் அதோமுகம்!

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.   – (திருமந்திரம் – 523)

விளக்கம்:
மூலாதாரத்தில் எழுந்து சுழுமுனை வழியாக ஓங்கி வளரும் நந்தியம்பெருமான் சகஸ்ரதளத்தில் செந்தீயாகச் சுடர் விடும் போது சிவனென நிற்பார். அங்கே சிவபெருமானின் அதோமுகம் வெளிப்படும். அந்தி நேரத்தின் நிறம் கொண்ட சிவபெருமானின் அதோமுகம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உந்து சக்தியாகக் கலந்திருந்து வலம் வருகிறது.

தத்துவங்கள் புரிந்து உண்மையாக வழிபட வேண்டும்!

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.   – (திருமந்திரம் – 522)

விளக்கம்:
உண்மையான தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல், பொய்யான புகழுரைகளால் போற்றி வணங்குபவர்களைப் பற்றி அவனுக்குத் தெரியாதா? செழுமையான கடலையும் அவற்றால் சூழப்பட்டுள்ள இந்த நிலத்தையும் படைத்தவன் நம் சிவபெருமான் அல்லவா? உண்மையான தத்துவங்களைப் புரிந்து உணர்வோடு வழிபடுவர்களை விண்ணில் உள்ள தேவர்களும் வணங்குவார்கள். கறுத்த கழுத்தினைக் கொண்ட சிவபெருமான் இவ்வாறு நமக்கு அருள்வான்.

கண்டம் கறுத்த கருத்து அறிவாரில்லை!

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.   – (திருமந்திரம் – 521)

விளக்கம்:
சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகமாகும். அதோமுகம் கீழ் நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தையும் சுற்றி உள்ள எட்டுத்திசைகளையும் சிவபெருமானின் அதோமுகமே தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் கழுத்து கறுத்திருப்பதில் உள்ள கருத்தை யாரும் இங்கே தெரிந்து கொள்ளவில்லை. விஷம் குடித்தார், அதனால் கழுத்து கறுத்தது என மேம்போக்காக புரிந்து கொள்பவர் உணர்வில்லாதவர். கறுத்த அக்கழுத்தில் வெண்மையான மாலையாக இறந்தவர்களின் கபாலங்கள் விளங்குகின்றன.

சூரபதுமனை அழிக்க ஆறுமுகனை அனுப்பிய சிவபெருமான்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.   – (திருமந்திரம் – 520)

விளக்கம்:
ஒருமுறை சூரபதுமன் எனும் அசுரன், தனது வலிமையைத் தவறாக உபயோகித்து, தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். எப்போதும் மணம் வீசும் இயல்புடைய தேவர்கள், துன்பம் தாளாது சிவபெருமானிடம் சென்று  முறையிட்டார்கள். தற்பரனாக விளங்கும் சிவபெருமான் அழகிய பவழம் போன்ற மேனியைக் கொண்ட ஆறுமுகனை அழைத்து, தேவர்களுக்குப் பகையாக விளங்கும் சூரபதுமனை அழிக்க உத்தரவிட்டான்.

ஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.   – (திருமந்திரம் – 519)

விளக்கம்:
அந்தணர்க்கு உரிய நெறியில் நிற்காமல், பிறப்பினால் மட்டுமே பார்ப்பானாக இருப்பவர்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஒழுக்கமில்லாத அந்தணர்கள் கோயில்களில் அர்ச்சனை செய்தால், அந்நாட்டில் போர்கள் ஏற்படும். மேலும் அந்நாட்டில் கொடிய வியாதிகளும் பஞ்சமும் பரவும். இவையெல்லாம் நம் நந்தியம்பெருமான் அறிந்து நமக்கு உரைத்திருக்கிறான்.

சிவபூசை தவறினால் …

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.   – (திருமந்திரம் – 518)

விளக்கம்:
சிவன் கோயில்களில் பூசைகள் நிகழாமல் தடைப்பட்டால், நாடாளும் மன்னர்க்கு தீமை உண்டாகும். நாட்டில் செல்வ வளம் குறையும், களவு மிகும். என்னருமை நந்தியம்பெருமான் இவ்வாறு உரைத்துள்ளான்.

பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  –  (திருமந்திரம் – 517)

விளக்கம்:
நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.

கோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.  –  (திருமந்திரம் – 516)

விளக்கம்:
திருக்கோயில் மதில்ச்சுவரின் கல் ஒன்றை எடுப்பது கூட சிவ ஆணைப்படி குற்றமாகும். அக்கல்லை எடுப்பது அக்கோவிலைக் கட்டியவராகவே இருந்தாலும், தவமுனிவரானாலும், வேதம் சொல்லும் அந்தணர் ஆனாலும் சிவபெருமானின் ஆணைப்படி தண்டனை உண்டு. திருக்கோயிலில் திருட்டு நடக்காமல் காக்கும் பொறுப்பு அந்நாட்டு மன்னருக்கு உண்டு. அதனால் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நாட்டு மன்னருக்கும் தண்டனை உண்டு.

சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  –  (திருமந்திரம் – 515)

விளக்கம்:
திருக்கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் நிறுவ முயன்றால், அதைச் செய்து முடிப்பதற்கு முன்னால் அந்நாட்டின் அரசுக்கு கேடு விளையும். அச்செயலைச் செய்தவன் சாவதற்கு முன்னால் கடுமையான நோய்களால் துன்புறுவான். இது நம் தலைவனான நந்திபெருமானின் ஆணையாகும்.

தாவரம் – அசையாத பொருள்

உள்ளூறும் தீர்த்தத்தின் மகிமை!

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.  –  (திருமந்திரம் – 514)

விளக்கம்:
தியானத்தினால் உள்ளே உறும் தீர்த்தம் உடலினில் கலக்கும் போது உடல் சிவக்கும்,  முடி கறுக்கும், உடல் முழுவதும் தூய்மையாகும். மேலும் நம்மைச் சுற்றி உள்ள நிலத்திலும் காற்றிலும் அந்த தீர்த்தத்தின் புனிதம் கலந்து நிற்கும்.