ஆதியும் அவனே! முடிவும் அவனே!

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.  –  (திருமந்திரம் – 15)

விளக்கம்:
இந்த உலகை படைத்தவன் அவனே! அழிப்பவனும் அவனே! அந்த சிவபெருமான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இந்த உடலை இயக்கும் வேதியாய் விரிந்து பரவி உள்ளான். குறையாத தன்மையுடைய அருள்சோதியாய் இருப்பவனும் அவனே. அவன் என்றும் அழியாத தன்மையுடன் நின்று நீதி வழங்குகிறான்.

ஆதியும் அவனே! முடிவும் அவனே! இரண்டுக்கும் இடையே இயக்கமும் அவனே!

The Lord creates all. He is the destroyer too.
He is the one who transmutes inside our body.
He is the supreme light, which never shrinks.
And He is the eternal one.

சிரசில் நிற்கிறான் ஈசன்

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.  –  (திருமந்திரம் – 14)

விளக்கம்:
சிவபெருமான் சுவாதிட்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகிறான். மணிப்பூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்துள்ளான். அவர்க்கு அப்புறம் அநாகதச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனைக் கடந்துள்ளான். இவை எல்லாவற்றையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கவனித்தவாறு உள்ளான்.

Lord Siva transcends Brahma, He who resides in Swadishtana.
The Lord also transcends Thirumal, He who resides in Manipuraka.
Then the Lord transcends Urithira, He who resides in Anahata.
Witnessing all these our Lord Siva stands in the space above our head.

விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.  –  (திருமந்திரம் – 13)

விளக்கம்:
மண்ணளந்த திருமால், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் முதலான தேவர்களும் இன்னும் ஈசனின் பரந்து விரிந்திருக்கும் தன்மையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சிவபெருமான் விண்ணளவிலும் விரிந்திருக்கிறான், அவனுக்கு மேலானவர் யாரும் கிடையாது. அவன் நம் கண்ணால் பார்க்க முடிந்த இடமெல்லாம் உள்ளான், நம் பார்வைக்கு அப்பாலும் இருக்கிறான்.

ஈசன் இல்லாத இடம் என்று உலகில் எதுவுமே இல்லை.

Celestials including Lord Thirumal who spanned the earth and
Lord Brahma, the lotus seated, are not knowing the boundary of Lord Siva.
The Lord spreads all over the sky. He remains in all the things
that we can see and also there beyond our vision.

நெற்றிக்கண்ணை திறந்தது குற்றமா?

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.  –  (திருமந்திரம் – 12)

விளக்கம்:
நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் அருள் பாவித்து நின்ற போது, எண்ணில்லாத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வு பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானை அண்ணல் இவன் என்று தெரிந்துகொள்ளாமல் நெற்றிகண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக சொல்கிறார்கள். அவர்கள் அறியாமையை என்ன சொல்வது?

சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்ததால் நிறைய தேவர்கள் இறந்து விட்டதாக நினைக்கிறோம். அவர்கள் இறக்கவில்லை, அழிவில்லாத அமர வாழ்வே பெற்றார்கள்.

The Lord who have third eye, when he stood in love,
so many celestials got eternal life there after.
People don't understand the Grace of Lord Siva,
they are telling that the celestials were dead. How ignorant they are!

அது ஒரு காலம்

அது ஒரு காலம் –
மனிதன் அன்புடன் இருந்தான்.

அது ஒரு காலம் –
அவன் குரலிலே தன்மை இருந்தது.

அது ஒரு காலம் –
உலகில் நிபந்தனையற்ற அன்பு இருந்தது.

அது ஒரு காலம் –
வாழ்க்கை ஒரு இனிய பாடலாய் ஒலித்தது.

அது ஒரு காலம் –
அந்த பாடல் உணர்வு மிக்கதாய் இருந்தது.

பிறகொரு நாள் –
எல்லாம் மாறிற்று.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கனவினுள் கனவு வந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அது பயமறியாத இள வயது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அப்போது வாழ்வதில் அர்த்தம் இருந்தது.

கனவு கண்டேன் ஒரு நாள் –
அன்பு ஒரு நாளும் சாகாதெனெ.

கனவு கண்டேன் ஒரு நாள் –
கடவுளை கருணை உள்ளவராக.

பிறகொரு நாள் –
கனவெல்லாம் செலவழிந்த நிலை.
வாழ்வு கனவைக் கொன்றது.

Inspired by the movie – Les Misérables 2012

ஒப்பிட முடியாத கடவுள் சிவன்!

முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.  –  (திருமந்திரம் – 7)

விளக்கம்:
படைப்பெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன் சிவபெருமான். அவன் அயன், அரி, அரன் ஆகிய மூவர்க்கும் மூத்தவன். தன்னை எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க தலைமகன் அவன். தன்னை அப்பா என்று அழைப்பார்க்கு அப்பனுமாய் உள்ளவன். அவன் பொன்னைப் போன்ற ஒளிமயமான உபதேசங்களைத் தருபவன்.

He is the Primal, older than the creation
and the three Gods. The Lord cannot be equal to anything.
For those who call Him Father, He'll be a father to them.
He gives us the golden flame like Spiritual Teachings.

அவனன்றி எதுவுமில்லை!

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.  –  (திருமந்திரம் – 6)

விளக்கம்:
சிவனை விட மேன்மையான தேவர் யாரும் இல்லை. சிவனை நோக்கிச் செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவனருள் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் இல்லை. சிவன் இல்லாமல் முக்தி அடையும் வழியை நான் அறியேனே!

No celestial is supreme than Lord Siva.
Without Him, there will be no real Penance.
Without Him, there will be no creation, protection and destruction.
Without Him, I couldn't find the way to Heaven.

இன்னுயிர் மன்னும் புனிதன்

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.  –  (திருமந்திரம் – 2)

விளக்கம்:
நம் உயிரில் இனிமையாய் நிலைத்து நிற்கும் புனிதனை, நான்கு திசைகளுக்கும் தலைவனை, பராசக்தியின் நாதனை, தென் திசையில் உள்ள இயமனை உதைத்தவனும் ஆன சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து நான் பாடுகின்றேனே!

The Holy Lord Siva, who remains in our soul,
He is the Lord of all four directions, Lord of Sakthi.
He kicked yama, who rules the south direction.
I praise and sing of my Lord Siva's Glory.

திருமந்திரம் – கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.  –  (திருமந்திரம் – 1)

ஒன்று அவன் தானே
இரண்டு அவன் இன்னருள்
மூன்றினுள் நின்றான்
நான்கு உணர்ந்தான்
ஐந்து வென்றான்
ஆறில் விரிந்தான்
ஏழு உம்பர்ச் சென்றான்
எட்டில் உணர்ந்திருந்தான்.

விளக்கம்:
இந்த உலகம் முழுவதையும் ஒரு மொத்த பொருளாகப் பார்த்தால் அது சிவபெருமானே! அவன் சிவன், சக்தி என இருவராய் நின்று அருள் புரிகிறான். நாம் அவன், அவள், அது என எவையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை அனைத்திலும் உயிராய் நிற்பவன். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் உணர்ந்தவன், நமக்கு உணர்த்துபவன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் வெல்ல உதவுபவன். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்திருப்பவன். எழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குபவன். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களிலும் கலந்திருப்பவன். அந்த சிவபெருமானை நான் வணங்குகிறேன்.

He is the whole! Two is His sweet Grace.
He stands in three, witness of all the four.
He conquers the five senses. He fill in the six Aadharas and stand in the
Seventh place, Sahasrara. He pervades in all the eight elements.

சபாபதித் தாத்தா

சபாபதித் தாத்தா சாகக் கிடந்தார். அவரை சபாபதி தாத்தான்னும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அவர் சாகத்தானே போறார். வயசு எண்பதுக்கு மேலே ஆயிடிச்சு. தன்னோட வாழ்நாளில் தான் இது வரை ஏன் பிறந்தோம் என அவர் வருத்தப்பட்டதில்லை. அதனால் ஏன் சாகப் போகிறோங்கிற வருத்தமும் அவருக்கில்லை. அவருக்கே வருத்தம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களின் துணை வருத்தங்கள் தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் வீடே ஒரு வித திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. சொந்தமெல்லாம் ஒன்று கூடியதால் வந்தக் கோலம். தாத்தாவுக்கு பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிறைய.

அவரோட பேத்திகளில் ஒருவளான சியாமளாவும் அவளோட புருஷன் சேதனனும் வந்த போது நிறைந்த வரவேற்பு. “கூட்டம் ரொம்ப அதிகமா தெரியுதே! பேசாம ஒரு மண்டபம் பிடிச்சிருவோமா சியா?”ன்னு கிசு கிசுப்பா கேட்ட சேதனன் காலிலே மிதி வாங்கினான். “உன் லூசுத்தனத்தெல்லாம் ஃபேஸ்புக்கோட வச்சுக்கோ”.

தாத்தா யார் கிட்டவும் ரொம்ப ஒட்ட மாட்டார், ஆனா சேதனனை மட்டும் கூப்பிட்டு வச்சு ரொம்ப பேசுவார். வீட்டில் எல்லாருமே ஆச்சரியப்படுற விஷயம் இது. சேதனனோட முகராசியே அப்படித்தான். வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்திலேயே இவன் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு அவன் அலுவலகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இருந்தும் நல்ல சம்பளமும் ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனும் கொடுத்து நல்லபடியா வச்சிருக்கிறாங்க. சியாமளா அறிமுகம் ஆனதும் அலுவலகத்தில் தான். ப்ளாக்கில் அபத்தமா எழுதுவதே தன்னோட வேலையா இருந்தவன் இப்படி ஒண்ணு எழுதினான்.

வன்புணர்வு என ஒரு வழக்கு அவன் மேல் –
இல்லை, மென்புணர்வு அது என மறுத்தான் அவன்.
இதென்ன நுண்புணர்வு என திகைத்த மக்கள்
கண்புணர்வு கொண்டனர்.

இதைப் படித்த சியாமளாவுக்கு வந்த சந்தேகம்தான் அவர்களுக்குள்ளே அறிமுகம் ஏற்படுத்தியது.

“புணர்வுன்னா என்னதுங்க?”

“?”

“இல்ல. நான் தமிழ் மீடியத்துலயே படிச்சு வந்துட்டேன். அதான் புரியலை.”

“அன்புணர்வு தெரியுமில்ல உங்களுக்கு? திருவள்ளுவர் கூட நிறைய அது பத்தி நெறைய எழுதிருக்கார். அதத்தான் இப்போ சுருக்கமாச் சொல்றோம்.” எப்படியோ சமாளிச்சிட்டான்.

இப்படி ஒரு அப்பாவியைத் தான் கல்யாணம் பண்ணனும்னு அன்னைக்கே முடிவும் பண்ணிட்டான்.

அவனோட சுபாவம் சியாமளா வீட்டில எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. தாத்தா மட்டும் மற்றவர்களிடம் போலவே அவனிடமும் பட்டும்படாமல் இருந்தார். சேதனன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவன் பாட்டுக்கு தாத்தா ரூமுக்கு போய் உட்கார்ந்து டீவி பார்ப்பான். அப்படி ஒரு முறை பார்த்த மனோகரா படம்தான் தாத்தாவையும் அவனையும் நெருக்கமா ஆக்கிச்சு. டி.ஆர். ராஜகுமாரியின் வஞ்சனையைப் பார்த்த சேதனன் தன்னை மறந்து கமெண்ட் அடித்தான்.

“இந்த ஒரு பார்வையே போதும். என்னைய இப்படிப் பாத்து தாத்தாவ கொல்லுன்னு சொன்னா, கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேன்”.

அன்றையிலிருந்து தாத்தாவும் சேதனனும் ரொம்ப அந்நியோன்யம். அவன் வந்தாலே ரெண்டு பேருக்கும் சேர்த்து தின்பண்டங்களும் காப்பியும் தாத்தா ரூமுக்குப் போயிரும். சியாமளாவுக்கு தாத்தா தன் புருஷன் கூட மட்டும் தான் பேசுறார்ங்கிறதுல ரொம்பவே பெருமை.

_____________________________________________________

தாத்தா சாகப்போறது சேதனனுக்கு ரொம்பவே துக்கமான விஷயம் தான், ஆனால் அவன் இது போன்ற உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. தன் உணர்வு இல்லாமல் ரொம்பவே தளர்ந்து கிடந்தார் தாத்தா. மருத்துவரின் கணக்குப்படி நேத்தே போயிருக்க வேண்டியது, இருக்கவா போகவான்னு இன்னும் ஊசலாடிக்கிட்டுருந்தார். வீட்டில உள்ள பெரியங்க சில பேர் வீட்டுச்சுவரை கொஞ்சம் சுரண்டி மண் எடுத்து பால்ல கரைச்சு தாத்தா வாயில ஊத்தினாங்க. சேதனனுக்குப் புரியலை, என்ன விஷயம்னு கேட்டான்.

“ஏதாவது ஒரு ஆசை பிடிச்சு உயிரை நிப்பாட்டியிருக்கும். இந்த வீடு அவர் ஆசையா கட்டினது இல்லையா, அந்த மண்ண கொஞ்சம் குடுத்தா நிம்மதியா போயிருவார்னு ஒரு நம்பிக்கை”.

கொஞ்ச நேரம் கழிச்சு தாத்தாவுக்கு பிடிச்ச திண்பண்டம் எல்லாத்தையும் ஒரு கலவையா பால்ல கரைச்சு அதையும் தாத்தா வாயில ஊத்தினாங்க. இதையெல்லம் பார்த்துகிட்டேயிருந்த சேதனன் வெளியே போயிட்டு தானும் ஒரு கிண்ணத்தில பாலோட வந்து தாத்தா வாயில ஊத்தினான். ஊத்தும்போதே தாத்தா முகம் கொஞ்சம் அசைவு கொடுத்து அப்படியே அடங்கிருச்சு. ஏதோ திருப்தி தெரிஞ்சது அவர் முகத்தில.

ஊருக்குத் திரும்பினதும் சியாமளா கேட்டாள் “அதெப்படி நீங்க பால் கொடுத்ததும் தாத்தா செத்துப் போனார்?”. “நான் அவருக்குப் பிடிச்ச பேரன்ல! அதனால இருக்கும்” ன்னான். தன் சட்டைப் பையில் இருந்த ஒரு பழைய வாரப்பத்திரிகையின் பக்கத்தை எடுத்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சம் இருந்தது.