நஞ்சு உண்ட சிவபெருமான்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 41)

விளக்கம்:
திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே!

(புனம் – திருத்தப்பட்ட நிலம்,  கனம் – பெருமை,   வாள் – ஒளி,  நுதல் – நெற்றி)

Our Lord consumed deathly poison to save Devas.
We worship Him in our reformed heart.
The Lord who possess Uma as a part of Him,
conjoint with us like pairing deer.

சிவனை வணங்க எளிமையான முறை

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.   – (திருமந்திரம் – 1774)

விளக்கம்:
நம் சிவபெருமானை வழிபடும் முறையை நாம் இவ்வாறு நிர்ணயம் செய்து, அதன்படி தொடர்ந்து செய்யலாம். பொங்கி வரும் கங்கை நீரையும், மலர்களையும் ஏந்தி சிவநாமம் சொல்லி பூஜித்து அவன் அருளை உணரலாம். அப்படி செய்து வருபவரை விட்டு சுருள் முடி கொண்ட ஈசன் நீங்க மாட்டான்.

தினமும் சிவபெருமானை நீரும், பூக்களும் கொண்டு வணங்கி சிவநாமம் சொல்லி வந்தால் அந்த ஈசன் நம்மை விட்டு நீங்காதிருப்பான். இது மிகவும் எளிமையான முறையாகும்.

(வரை – நிர்ணயம்,  நிரைத்து – பொங்கி,   புரைத்து – தப்புதல்)

There is a simple way to worship Lord Siva.
For those who worship with water & flowers in hand, 
Chanting his Holy name to feel His Grace,
the Lord will be with them always.

ஒரு பல்லக்கு தூக்குபவனின் கடிதம்

மாதம் தோறும் வெளி வரும் ஒரு பக்தி மாத இதழுக்கு வந்த ஒரு வாசகர் கடிதம் இது.

ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,

கோடி நமஸ்காரங்கள். இந்த பரந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைவனின் படைப்புகளில் அடியேன் ஒரு சிறியவன். மாதந்தோறும் வரும் உங்கள் பத்திரிகையை நான் வாரந்தோறும் வாங்கி விடுவேன். தீவிர வாசகன் நான். வாசகன் என்றால் பல்லக்கு தூக்குபவன் என்று அர்த்தம் என்பது தங்களுக்கு தெரியும் தானே. (பாடை தூக்குபவன் என்றும் அர்த்தம் உண்டு. நாம் அதை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டாம்). முன்பெல்லாம் நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை வெளியூர் பயணத்திற்காக என் மனைவி உங்கள் பத்திரிகை ஒன்றை வழியில் படிக்க எடுத்து வைத்திருந்தார். நான் கோபத்தில் கடுமையாக திட்டி அதை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி விட்டேன். பேருந்து நிலையத்தின் கடை ஒன்றில் ஜூனியர் விகடன் கேட்டேன். வாங்கும் நேரம் பேருந்து கிளம்பி விட்டதால் புத்தகத்தை சரியாக பார்க்கவில்லை. பிறகு தான் பார்த்தேன், வீட்டில் நான் வேண்டாமென்று சொன்ன அதே புத்தகம் அது. அட்டையில் ஐயப்பன் படம், என்னைப் பார்த்து சிரித்தவாறு. வேகமாக திரும்பி அந்த கடைக்காரரை பார்த்தேன். அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார், என்னைப் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பு சிரித்தார். இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் சம்பவம் அது.

அன்றிலிருந்து உங்கள் பத்திரிகையை தவறாமல் வாங்கி விடுகிறேன். கையில் காசில்லா விட்டாலும் வித்தால் போதும் என்று கடைக்காரர் கொடுத்து விடுகிறார். பக்தி வந்தவுடன் எந்த கோவிலுக்கு போவது என்று தெரியாமல் இருந்தேன். அதற்கும் உங்கள் பத்திரிகை தான் வழி காட்டிற்று. கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தை திறப்பேன், அந்த பக்கத்தில் எந்த கோவிலைப் பற்றி இருக்கிறதோ அந்த கோவிலுக்கு கிளம்பி விடுவேன்.

ஒரு சொம்பு நிறைய பாயாசம் கொடுத்து, அதில் எந்த துளியில் அதிக இனிப்பு என்று கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ அது போல உங்கள் பத்திரிகையில் எந்த பகுதி சிறப்பு என்பதும் சொல்ல முடியாது. ஆனாலும் அதில் வரும் ராசி பலன் பகுதியை முந்திரி பருப்பென்பேன். அது என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக உள்ளது. ஒரு மாதம் எனக்கு கெடுதலான பலன்களாக போட்டிருந்தது. பரிகாரமாக திருநங்கைகளுக்கு உதவச் சொல்லியிருந்தது ஆறுதல் அளித்தது. ஆனாலும் அந்த நேரம் திருநங்கை யாரும் தென்படவில்லை. அதற்காக பரிகாரம் செய்யாமல் இருக்க முடியுமா? இதெற்கெல்லாம் செலவு பார்த்தால் முடியுமா? இப்போது மருத்துவம் எவ்வளவு முன்னேறியிருக்கு?

என்னுடைய நிறைய ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களுடைய பதில்கள் எனக்குள் அறிவு வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது. அந்த சந்தேகங்களில் சில இவை.

  • பாம்புக்கு மோதிரம் போட்டால் நாக தோஷம் தீரும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த கிழமையில் செய்யலாம்?
  • கனவில் கழுதை ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. அதன் பலன் யாது?
  • அவிட்ட நட்சத்திரக்காரர் ஆயில்ய நட்சத்திரக்காரரை விவாகரத்து செய்யலாமா?
  • வாய்க்கசப்பு ஏற்படுவது மனக்கசப்பு  நீங்கிடும் அறிகுறி என்கிறார்களே? உண்மையா?
  • 108 விளக்கு ஏற்றினால் விவாதத் தடை நீங்கும் என்று சொல்லியிருந்தீர்கள். ட்விட்டரில் உள்ளவர்கள் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

எனக்கு தொழில் நிலம் வாங்கி விற்பது.  முதலில் சிறிய வருமானமாக இருந்த நேரம், வழக்கம் போல உங்கள் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். கடைகாரர் தவறுதலாக முந்திய மாத புத்தகத்தை கொடுத்து விட்டார். நானும் வீட்டுக்கு வந்து தான் கவனித்தேன். அப்போது தோன்றிய பிசினஸ் ட்ரிக்தான் தான் இது. ஏற்கனவே விற்ற நிலத்தை இன்னொருவருக்கு விற்றேன். மாட்டிக்கொள்ள இருந்தேன். அந்த நேரம் முதலில் வாங்கியவர் இறந்து விட்டார். அவர் சார்பில் யாரும் இதை தெரிந்திருக்கவில்லை. நான் தப்பித்தேன், கடவுள் நம்பிக்கை கூடிற்று. இப்போது கோடிக்கணக்கில் குவித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் பத்திரிகைதான். பத்திரிகை நின்று விடக்கூடாது என்பதற்காக மாதம் நூறு பிரதி வாங்கி வைக்கிறேன் இப்போது. சர்க்குலேஷன் போதவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் வாங்கி குவிக்கிறேன்.

இப்போது ஒரு சின்ன பிரச்சனை, உங்களால் கண்டிப்பாக ஆலோசனை சொல்ல முடியும். கிரக நிலை இப்போ சரியில்லை போல. மோசடி செஞ்சிட்டேன்னு சொல்லி போலீஸ்ல தேடுறாங்க, என் பேர்ல நிறைய கேஸ் இருக்கு. சட்டப் பிரச்சனைக்கு சட்டநாதரை வணங்கினால் தீர்வு உண்டு என்று உங்கள் கட்டுரை ஒன்று படித்தேன். அதைப் பற்றி இன்னும் சில விபரங்கள் தேவை.

மவுனமான நேரம்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே.  – (திருமந்திரம் – 1896)

விளக்கம்:
மவுனம் என்பது வாக்கு, மனம் இரண்டுமே அமைதியாக இருத்தல். வாய் மட்டும் பேசாமல் இருப்பது ஊமையாகும். வாக்கு, மனம் ஆகியவற்றை அமைதியாக, செயலற்றவையாக வைத்திருப்பவரே தூய்மை உடையவர் ஆவர். அத்தகைய தூய்மை நிலையை இங்கு யார் அறிந்திருக்கிறார்கள்!

யோக நிலையில் இருப்பவர்கள் வாய் பேசாமல் இருந்தால் மட்டும் போதாது. மனமும் செயலற்று அமைதியாய் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் தூய்மை அடைவார்கள்.

(மூங்கை – ஊமை,   சுத்தர் – தூய்மை உடையவர்)

State of silence is stillness of speech and thought.
Remaining speechless is the state of dumbness.
When we attain speechless and thoughtless state, we become pure.
But who knows this pure state to bring in.

ஒரு ஃபேஸ்புக் உரையாடல்

மீனா – ஹாய்

ரமேஷ் – ஹலோ மேடம்!

மீனா – என்னங்க இது? அஃறிணைல கூப்பிடுறீங்க?

ரமேஷ் – ஆமால்ல! மேடம்னா தமிழில் ஆடுன்னு அர்த்தம் வருது. சாரிங்க.

மீனா – சாரியெல்லாம் பெரிய வார்த்தை. உங்க கவிதையெல்லாம் படிச்சுகிட்டு வர்றேன். வாய்ப்பே இல்லைங்க! ரொம்ப நல்லாருக்கு. அதுவும் இன்னைக்கு வந்த கவிதைய படிச்சிட்டு உங்களை பாராட்டலாம்னு தான் சாட்ல கூப்பிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேனோ?

ரமேஷ் – இதெல்லாம் ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க.

மீனா – ‘மதியொளி காய்ந்த மேனி கண்டு மதியழிந் தோய்ந்த தனியன்.’ வாய்ப்பே இல்லைங்க! இந்த வரி என்னை என்னவோ பண்ணிருச்சு.

ரமேஷ் – சந்தோஷம்ங்க.

மீனா – என்னங்க இது? உங்க கவிதை என்னை என்னென்னமோ பண்ணுதுங்கிறேன். நீங்க சந்தோஷம்ங்கிறீங்க?

ரமேஷ் – அது ஒண்ணுமில்லை. என் எழுத்து பெண்ணான உங்களை இந்த அளவு பாதிப்பது எனக்கு சந்தோஷம் தானே?

மீனா – நான் ரொம்ப பேசுறேனோ?

ரமேஷ் – இல்லைங்க.

மீனா – இந்த அளவு ஒருத்தர் எழுதனும்னா, அவர் ரொம்ப ரசனை உள்ளவரா இருக்கணும். அனுபவமும் இருக்கணும் இல்லையா?

ரமேஷ் – ரசனை இருக்கணும்கிறது சரிதான். ஆனால் அனுபவம்? அது சந்தேகம் தாங்க.

மீனா – அனுபவம் இல்லாமலா இந்த அளவு ரசிச்சு எழுதுறீங்க?

ரமேஷ் – உங்க கிட்ட சொல்றதுக்கு என்னங்க! வாய்ப்பு கிடைக்கிறவன் அனுபவிக்கிறான். கிடைக்காதவன் இப்படி கவிதை எழுதுறான்.

மீனா – நீங்க நகைச்சுவையா பேசுறீங்க.

ரமேஷ் – அடுத்தவங்க வேதனை பெண்களுக்கு நகைச்சுவை.

மீனா – உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

ரமேஷ் – ஸாஃப்ட்வேர்காரன் நான். பொழுது போக்கு கவிதை.

மீனா – திருமணம்?

ரமேஷ் – ஆயிடுச்சுங்க. ரெண்டு பசங்க இருக்காங்க.

மீனா – மனைவி உங்கள் ரசனைக்கேற்றவரா?

ரமேஷ் – என் ரசனைக்கு ஏற்ற பெண்ணெல்லாம் கவிதையில் மட்டுமே.

மீனா – ரொம்ப வெறுத்துப் போய் பேசுறீங்க.

ரமேஷ் – இதெல்லாம் வெளியே பேசக் கூடாது. அதென்னவோ உங்க கிட்ட கொட்டிட்டேன்.

மீனா – என்னாலும் ஒரு விஷயம் சொல்லாமல் இருக்க முடியலை. வெளியில என் அழகை நிறைய பேர் ஜாடைமாடையா வர்ணிக்கிறாங்க. வீட்டில் உள்ளவர் வர்ணிக்க வேண்டாம். ரசிக்கவாச்சும்  வேணாமா?

ரமேஷ் – நீங்கள் திருமணம் ஆனவரா?

மீனா – ஆமாங்க. ஒரு பொண்ணு உண்டு.

ரமேஷ் – நீங்க வேலை பார்க்கிறீங்களா?

மீனா – ஆமாம். பஜாஜ் இன்ஸூரன்ஸ் கம்பெனில.

ரமேஷ் – சென்னை தானா?

மீனா – ஆமாம். நுங்கம்பாக்கம்.

ரமேஷ் – உங்க முழுப்பேர் மீனலோசினியா?

மீனா – அட! உங்களுக்கு எப்படி தெரியும்?

ரமேஷ் – வீட்டில லோசினின்னு கூப்பிடுவாங்களா?

மீனா – நீங்க யாரு?

ரமேஷ் – அடிப்பாவி. நான் ரமேஷ்குமார்.

மீனா – அதென்ன டி போட்டு பேசுறீங்க? நாம டைவர்ஸ் ஆகி நாலு வருஷம் ஆகிடுச்சு.

ரமேஷ் – ஸாரி. நல்லாருக்கியா?

மீனா – இருக்கேன். போன மாசம் கூட அடையார்ல ஒரு பங்களா வாங்கிப் போட்டோம்.

ரமேஷ் – நீ இருக்கிற வசதிக்கு ஏன் வேலைக்குப் போகனும்? உன் ஹஸ்பண்ட் பேரு சுந்தர் தானே?

மீனா – ஆமாம். வேலைக்குப் போனால் தான் கொஞ்சம் நேரம் போகுது. உன் வொய்ப் என்ன பண்றா?

ரமேஷ் – வீட்டில தான் இருக்கா. நான் ஆஃபிஸில் ஓவர் டைம் எடுத்து கவிதை எழுதுறேன்.

மீனா – நாம ரெண்டு பேரும் ஒரு முறை மீட் பண்ணுவோமா? ஸாரி. வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – உன்னை ஃபேஸ்புக்கில் இருந்து அன்ஃபிரெண்ட் பண்ணிடறேன்.

ரமேஷ் – நானும் பண்ணிடறேன்.

மீனா – இந்த சாட் ஹிஸ்டரி எல்லாம் டெலீட் பண்ணிடு.

ரமேஷ் – சரி. ஆனா ஒண்ணு.

மீனா – என்ன?

ரமேஷ் – உன்னை மாதிரி வராது!

மீனா – ஆமாம். உன்னை மாதிரி வராது!

தாய் வீடென என்னுள் புகுந்தான்

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே.  – (திருமந்திரம் – 1728)

விளக்கம்:
கருவில் நாம் உருவான அன்றே ஐம்பூதங்களும் நம்முள்ளே குடி வந்தன. ஐந்து பூதங்களும் தம் இடத்தில் வாசல் வைத்து வழி ஏற்படுத்தி அருளினர். நம் தலைவனான சிவபெருமான், தன் தாய் வீடென உரிமையுடன் உள்ளே புகுந்தான் அவ்வாசல்கள் வழியாக. அவன் வந்துள்ள நோக்கம் நம்மை தன் அருளினால் ஆள்வதற்காகவே.

ஐம்பூதங்களின் இயக்கமே நாம் உயிர் வாழக் காரணமாய் உள்ளது. அந்த பூதங்களின் இடத்தில் ஈசன் வந்து ஆட்சி செய்யும் போது நம் வாழ்க்கை பயணம் சிறப்பாகவே இருக்கும். நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

(தாயில் – தாய் + இல் – தாய் வீடு)

The five elements entered our body, once it formed in mother’s womb.
They made gates for their places and ruling us in their ways.
Lord Siva entered our body, as if His mother’s house,
through the gates, became the master of us.

உபசாந்தம் – மன அமைதி

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  – (திருமந்திரம் – 2506)

விளக்கம்:
முக்திக்கு வித்து சிவஞானம். பக்திக்கு வித்து பணிந்து அவன் திருவடி பற்றி இருத்தல். சித்திக்கு வித்து சிவனுடன் பொருந்தி இருந்து தானும் சிவம் ஆதல். சக்திக்கு வித்து உயிர்களிடையே விருப்பு வெறுப்பு இல்லாமல் மன அமைதியுடன் இருத்தலே.

ஆன்மீக வாழ்வில் மன அமைதியே மிகவும் முக்கியமானதாகும், மன அமைதி மிகுந்த சக்தி தரும். மனம் அமைதி பெற, விருப்பு வெறுப்பு இல்லாதிருப்போம்.

(உபசாந்தம் – விருப்பு வெறுப்பு இல்லாமை, மன அமைதி)

Seed for mukthi (self realization) is knowledge about our primal God Siva.
Seed for bakthi (devotion) is seeking his Holy Feet.
Seed for siddhi (spiritual power) is one becoming Siva
Seed for sakthi (strength) is the state of upasanta – being peaceful.

தூங்கும் போதும் நின் திருவடியே சரண்

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம் – 2707)

விளக்கம்:
நம் சிவபெருமானை நெஞ்சில் நினைந்து, வாயால் சிவாயநம என்று சொல்லி, தூங்கும் பொழுதும் நின் திருவடியே சரண் என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பனி தவழும் கைலாய மலையில் வசிக்கும், ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தின் அம்சமான சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

(துஞ்சு – தூங்கு,   தாள் – திருவடி,    மஞ்சு – பனி)

Thinking of the Lord in our heart, we chant SIVAYANAMA,
Even while sleeping, we seek His Holy Feet.
If so we behave, sure we’ll get the Grace of the Lord,
Who resides in the snow clad mountain Kailas, in the form of the Letters ‘SIVAYANAMA’

ஈசனைத் தின்பேன், கடிப்பேன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.  – (திருமந்திரம் – 2980)

விளக்கம்:
என் சிவபெருமானை நினைந்து உள்ளம் உருகி அழுவேன், புலம்புவேன். எலும்புகள் உருகும் அளவுக்கு இரவும் பகலும் அவனை வணங்கி இருப்பேன். என் பொன்மணியாம் அந்த இறைவனை, ஈசனைத் தின்பேன், கடிப்பேன். அவனை உறவாக்கி நட்பு கொள்வேன்.

கடிப்பேன், தின்பேன் என்பவை பக்தி மேலீட்டால் சொல்லப்பட்டவை.

(அரற்றுவன் – புலம்புவேன்,    என்பு – எலும்பு,   திருத்து – உறவாக்கு)

With melting heart, I moan and cry,
I adore you day and night, as if my bones are melting.
He is my gold, my Lord, my Siva,
I eat Him, bite Him in passion and make him friendly.

ஒன்றே செய் அதை நன்றே செய்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. – (திருமந்திரம் – 1568)

விளக்கம்:
இந்தத் தவம் செய்தால் இந்த பலன் பெறலாம், அந்தத் தவம் செய்தால் அந்த பலன் பெறலாம் என்று நிறைய யோக முறைகளைக் கற்று சிலர் குழப்பிக் கொள்வார்கள். எந்த ஒரு யோகத்தையும் முழுமையாக செய்யாத அவர்களைப் பார்த்து எங்கள் நந்தித் தேவன் எள்ளிச் சிரிப்பான்.

செய்வது எந்த தவமாக இருந்தால் என்ன? அந்த தவம் பிறந்த இடம் எதுவாக இருந்தால் என்ன? செய்யும் தவத்தை மன ஒருமைப்பாடுடன் செய்பவர்கள் விரைவாக முத்தியான ஊரை அடைவார்கள்.

(நகும் – எள்ளிச் சிரிப்பான்,    ஒத்து – ஒருமைப்பட்டு,   ஒல்லை – விரைவாக)

Mad men classify meditation methods into many,
Our Lord Nandi laughs at them in pity.
What though the method? what though its birth place?
Those who practice in harmony will attain God quickly.