சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த கொஞ்ச தயக்கத்தையும் கழற்றி விடலாமா என்ற யோசனை தோன்ற ஆரம்பித்து விட்டது விமலைக்கு.

“மன மயக்கத்தினால் வருவது தயக்கம். உனக்கென்று ஒரு யோசனையும் வேண்டாம், நான் சொல்வதை மட்டுமே உன் மனம் கேட்கட்டும்” சேதனனின் வசீகரக்குரலில் விமலை தன்னை மறந்து ஒரு மாய உலகத்துக்குள் நுழைய தயாரானாள்.

தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அது ஒரு சிறிய அறை, ரொம்ப சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மங்கலான வெளிச்சம், செயற்கையான குளிர். தரை முழுவதும் தடிமனான சிவப்பு நிற விரிப்பு ஒன்று பரவி இருந்தது. ஒரு சிறிய மெத்தை மேல் சேதனன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான், இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி மடித்து கட்டிய நிலையில் இருந்தது. மேலே சட்டை எதுவும் அணியவில்லை, உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருந்தது. கண்கள் மூடிய நிலையில் அவன் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் தெளிவாய் இருந்தது. கழுத்திலே ஒரு மலர் மாலை அணிந்திருந்தான். அறையில் அவர்கள் இருவரைத் தவிர ஒரு சிறிய பொருள் கூட கிடையாது.

“எப்போதும் நீ தான் அதிகம் பேசுவாய், இன்று உன் குரலையே நான் இன்னும் கேட்கவில்லை” கண்கள் இன்னும் மூடிய நிலையிலேயே கேட்டான் சேதனன்.

“அதான் நீ பேசுறியே சேர்த்து” அவள் குரலில் லேசான கிண்டல் இருந்தது.

“பயமாயிருக்கா?”

“இல்லை. என் சம்மதம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது”

“நான் ஒன்றும் செய்யப் போவதில்லை”

“சரி. அப்போ நான் வரட்டுமா?”

“பொறு. ஒரு அனுபவம் உன்னைச் சந்திக்க காத்திருக்கிறது!”

”அது எனக்கு இப்போ தேவை இல்லை.”

“நீ நினைப்பது இல்லை இது. அதை விட இது பெரிய அனுபவம். என் விரல் உன்மேல் படாது”

“சரி சரி. அந்த அனுபவத்தை சீக்கிரம் வரச் சொல்லு.”

விமலை மெதுவாக நடந்து சேதனன் பக்கத்தில் வந்தாள். அவள் சேலை தரையில் உரசிய சத்தம் அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாதது அவளுக்கும் கொஞ்சம் சுவாரசியத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. லேசாக இருமிக் காட்டினாள்.

“அமரலாமே!” அவன் குரல் இன்னும் என்ன தயக்கம் என்பது போல் இருந்தது.

“உன் முன்னால தானே உட்காரணும்?”

“இல்லை. என் மடியில் வந்து மண்டியிடு. என் மடியை உயிரில்லாத ஒரு தலையணை போல நினைத்துக்கொள்.”

“அது சரி!” இந்த நேரம் சிரிப்பது அபத்தமாய் இருக்குமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவள் சேலை நுனியை அவன் காலில் படச் செய்து அவன் முகத்தையே பார்த்தாள்.

“ஆற்றில் இறங்க ஆழம் பார்க்கிறாயா?” கண்களைத் திறக்காமலே கேட்டான்.

“பொம்பளைங்க எதுலயும் ஆழம் பார்த்துத் தான் இறங்குவோம்.”

மெதுவாக தன் கால் முட்டி இரண்டும் அவன் தொடையில் வைத்து அவன் மேல் தன் பாரத்தை ஏற்றினாள். அவன் மேல் பூசியிருந்த சந்தனத்தின் வாசம் அவளை கிறுகிறுக்கச் செய்தது.

“இது கோவில் கடைகளில் விற்கப்படும் வாசனைப் பொருள் இல்லை. அரைக்கப்பட்ட அசல் சந்தனம். அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நீ நிலை தடுமாறும் போது கைத்தாங்கலுக்காக என்னைத் தொட்டு விடாதே.”

இப்போது தான் அவளுக்கு நிலை தடுமாறும் போல இருந்தது.

“நீ உன் சுட்டு விரலால் என் மேல் உள்ள மாலையை லேசாகத் தொட்டுப் பார். கவனம், ரொம்ப லேசாக மட்டும் தொடு.”

விமலை பயத்தோடு பட்டாசு பற்ற வைப்பது போல் லேசாக தொடப்போனாள். அரை விநாடி கூட தொட்டிருக்க மாட்டாள், விரல் சூடு தாங்காமல் பொத்து விட்டது. பயம் கூடினாலும் அவளுடைய வயது ஆர்வத்தையே வெகுவாகத் தூண்டியது.

“ஏன் இப்படி?”

“சொல்லுகிறேன். உன்னிடம் பதட்டம் தெரிகிறது. அது தேவையில்லாதது மட்டுமில்லை, நம்முடைய அனுபவத்துக்கும் இடைஞ்சலானது. உன் மூச்சை சீராக வைத்துக் கொள்ள முயற்சி செய்.”

அடுத்து ஒரு அரை மணி நேரம் அங்கே மௌனம் மட்டுமே நிலவியது. விமலை ஒரு பத்து நிமிடம் சிறுதுயிலில் ஆழ்ந்து கனவு கூட கண்டு விட்டாள். கனவில் உருவமேயில்லாத ஒருவன் அவள் உடலெங்கும் தொடுவதை உணர்ந்தாள். பதிலுக்கு அவளால் அவனை தொட முடியவில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பாய்ந்த அந்த தொடுகை அவளுடைய பதில் உணர்வு எதையும் எதிர்பாராமல் தன் போக்கிலே சென்றது. கனவு கலைந்தவளுக்கு தான் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் இறுக்கமாக தோன்றியது. உடலின் பல பாகங்கள் விரிவடைந்து கடினமாக மாறி, உடைகளெல்லாம் தெறித்து விடும் போல் இருந்தது.

“இதனால உனக்கு என்ன கிடைக்கும்?” பேச்சு கொடுத்தாள்.

“காமத்தை கடந்து செல்வது ஒரு சாதனை. அது அனுபவிச்சா தான் தெரியும்.”

“அதுக்கு ஏன் நான்?”

“அழகான பெண்ணிடம் ஜெயிப்பது தான் பெரிய சாதனை.”

“உன்னால் மனத்தை அடக்க முடிஞ்சதா?”

“அது அடங்கியே தான் உள்ளது. என் மனம் இப்போது மிகவும் ஆனந்தமாக உள்ளது.”

“பெரிய சாதனை தான் நீ செய்யுறது.  எனக்கும் இது பிடிச்சிருக்கு. இன்னும் ஒரு பத்து நிமிஷம் தாங்குவோமே!”

“உனக்கும் இந்த முறை இன்பம் அளிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். உன் இஷ்டப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்.”

விமலை மெதுவாக தன்னுடைய விரலால் அவன் அணிந்திருந்த அந்த மாலையை தொட்டாள். மார்பில் சூடு தாங்காமல் சேதனன் பதறினான்.

“என்ன செய்கிறாய் நீ?” கோபத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது அவன் குரலில். விமலை விடவில்லை, மாலையை மேலும் வருட ஆரம்பித்தாள். வெப்பம் தாங்காமல் மாலையை கழற்றி வீசி எறிந்தான்.

“இவ்வளவு நேரம் நீ சொன்னதை நான் கேட்டேன். இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்” அவன் காதின் பக்கம் குனிந்து கிசு கிசுத்தாள்.

மறுநாள் காலையில் யாரோ வந்து பார்க்கும் போது சேதனன் ரொம்பவே சேதமாகி செத்துப் போயிருந்தான்.

வெள்ளி கறுத்தால் சனி

வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஒரே சண்டை. இடையில் மாட்டிக் கொண்ட ஒரு ராகு காலம் மயிரிழையில் செத்துப்போனது. இருவருக்கும் இடையே சமரசம் பண்ண இறங்கி வந்த டிசம்பர் மாசம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

“ஒனக்கே ஒரு நெலையான எடம் கெடையாது. பாதி நாள் கார்த்திகைலயும் மீதி நாள் மார்கழிலயும் இருக்கே. நீ எங்களுக்கு நாட்டாமையா?” எப்பிடி மடக்கினேன் பாத்தியா என்று தொலைக்காட்சி விவாத்தில் கலந்து கொண்டவர் போல பெருமிதப்பட்டுக் கொண்டது வியாழன்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” பஞ்சாயத்துக்காரரின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஏன்? பிரச்சனை இருந்தாத்தான் சண்டை போடணுமா?” இப்போ வெள்ளி ‘இது எப்படி’ என்பது போல் வியாழனைப் பார்த்தது. வெளியில் இருந்து ஒருவர் எட்டி எட்டிப்பார்த்தார், பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருந்தது.

“என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.  முகநூல் என்ற பெயரில் அறியப்படுபவன் நான். என்னைத் தவிர்த்து இந்த உலகில் எந்த சச்சரவும் நடக்க முடியாது. இங்கே ஒரு வன்கொடுமை நடப்பதாக அவதானித்து உணர்ந்தேன். உங்கள் கருத்து மோதலை என் இடத்தில் வந்து நீங்கள் நிகழ்த்தலாம்”

“ஸார், நீங்க ஆங்கிலத்திலேயே பேசுவது தமிழுக்கு நல்லது” வியாழனும் வெள்ளியும் சேர்ந்து கொண்டன.

“ஓகே. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“இட் இஸ் அவர் ப்ராப்ளம்!”

சம்பந்தம் இல்லாமல் வந்தவர்களை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இரண்டு வயது முதிர்ந்தவர்களும் (இளமைக்கு எதிர்ப் பதம் கிழமை தானே) சிரித்துக் கொண்டார்கள். திடீரென வெள்ளி கறுப்பாக மாற ஆரம்பித்தார்.

“நீ ஒரிஜினல் தான்” வியாழன் சொன்னார். “கறுக்கிற வெள்ளி தான் ஒரிஜினலாமே!”

மரணம் என்னும் ஒரு வசீகர மர்மம்

மரணத்தைப் போல ஒரு வசீகரமான விஷயம் இருக்குமான்னு தெரியலை. அந்த வசீகரத்தின் முக்கிய காரணம் அதன் பின்னால் இருக்கும் மர்மம். மர்மமான விஷயங்கள் வசீகரித்தை உண்டாக்குவது தானே இயற்கை? மரணம் வாழ்வுக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் சாவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. கவிஞர் வைரமுத்து தவம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பார் “எனக்குத் தெரியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல், எனக்குத் தெரியாமல் என் இறப்பும் நேர வேண்டும்”. எவ்வளவு அர்த்தமுள்ள தவம்!

சமீபத்தில் நேர்ந்த அம்மாவின் மரணம் இப்படி ஒரு ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது. அப்பேர்ப்பட்ட சாவு அது, விஜயதசமி அன்று மதிய நேரம், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தார். சிகிச்சைக்காக போன ஆஸ்பத்திரியின் உள்ளே நடந்தே தான் போனார், நாடி பிடித்துப் பார்த்த டாக்டர் பல்ஸ் ரொம்ப குறைந்து விட்டதாக சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதற்குள் உயிரை விட்டு விட்டார்.

தன்னைத் தேடி வந்த மரணத்திடம் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தன்னை ஒப்படைத்ததாகவே தோன்றியது எனக்கு.  சாகும் கலை என்னும் தலைப்பில் ஓஷோ மணிக்கணக்கில் பேசியிருக்கிறார், நானும் கேட்டிருக்கிறேன். ’நீங்க எல்லாம் பேசுவீங்க, எழுதுவீங்க, படிப்பீங்க, ஆனா அது எனக்கு கை வந்த கலை’ன்னு பத்து நிமிஷத்தில் செய்து காட்டி விட்டார் அம்மா.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  – (திருமந்திரம் – 145)

திருமூலர் சொன்ன மாதிரி காலப்போக்கில் இறந்து போன அம்மாவை மறந்தாலும் ‘dead like me’ எனச் சொல்லாமல் சொன்ன செய்தியை மறக்க முடியாது.

பிராணாயாமம் – கும்பகத்தின் சிறப்பு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.   – (திருமந்திரம் – 571)

விளக்கம்:
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம்.

இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.

(கால்  – காற்று,  கூற்று – யமன்,    குறி – குறிக்கோள்)

let us inhale through our left and right nostrils alternatively,
and feel elated. We don't know how to retain the breath in between.
If we know the method of retaining the breath inside,
We are destined to spurn the God of Death, Yama.

கவிக் கள்ளைக் குடித்து வெறி ஏறுதடா!

நூலகம் வலைப்பக்கத்தில் 1943ஆம் வருடத்து மும்மாத இதழ் ஒன்று படிக்க நேர்ந்தது. ’கலாநிதி’ என்பது அந்த இதழின் பெயர். அதன் உள்ளடக்கம் சுவாரசியமாக இருந்ததால் எடுத்துப் படித்தேன். சில இலக்கியக் கட்டுரைகளுடன் ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரையும் உள்ளது, உபயோகமான தகவல்கள் நிறைந்தவை. அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியான அடுத்த பகுதிகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை, கிடைத்தால் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கும்.

அப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே வந்த போது “தமிழ்க்கவிப் பித்து” என்ற தலைப்பில் ஒரு பாடல், அதைப் படிக்கும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட வைத்தது. அந்தப் பாடலை இங்கே பகிர்கிறேன், இதை எழுதிய  ‘க.ச. ஆனந்தன்’ அவர்களுக்கு நமது கோடி வணக்கங்கள்.

தமிழ்க்கவிப் பித்து

பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை – அந்த
மார னழகெனக்கு வேண்டிய தில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமே யடா! – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமே யடா!
தின்னத் தமிழெனக்கு வேணுமே யடா – தின்று
செத்துக் கிடக்கத்தமிழ் வேணுமே யடா!

உண்ண உணவெனக்கு வேண்டிய தில்லை – ஒரு
உற்றா ருறவனிரும் வேண்டிய தில்லை
மண்ணில் ஒருபிடியும் வேண்டிய தில்லை – இள
மாத ரிதழமுதும் வேண்டிய தில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயு மிடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன்  – அங்குக்
காயுங் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதி வருவேன் – இள
மாதர் குறுநகையிற் காத லுறுவேன்
பாடி யவரணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கி யெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தி யறிந்து – அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் னுலகமிது கண்டனெ னடா! – என்ன
ஆனந்த மானந்தங் கண்டனெ னடா!

கால்கள் குதித்துநட மாடுதே யடா! – கவிக்
கள்ளைக் குடித்துவெறி யேறுதே யடா!
நூல்கள் கனித்தமிழில் அள்ள வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்பசியும் ஆற வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டிய தில்லை – அவர்
தின்னுஞ் சுவையமுது வேண்டிய தில்லை
சாவிற் றமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.

உதயசூரியன் அவன்!

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை ஒரு தாயைப் போல போக்கி அருளும் அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)

Like the fire indwells inside bamboo,
Our Lord Nandi resides inside our body - temple.
Like a mother, He remove our three impurities and
arise in our heart like the sun from the ocean.

விளக்கேற்றுவோம்!

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  – (திருமந்திரம் – 1818)

விளக்கம்:
விளக்கு ஏற்றி எல்லையற்ற பரம்பொருளை அறிவோம். விளக்கின் ஒளியின் முன் நம் வேதனைகள் அகலும். விளக்கு ஏற்றத் தூண்டும் ஞானமாகிய விளக்கு உடையவர்களுக்கு, ஏற்றப்படும் விளக்கினில் சிவன் ஒளியாய் காட்சி தருவான்.

Let we light the lamp and realize the eternal God.
Before the lamp light, our troubles will go away.
For those who have the light of knowledge,
in their lamp light, the Divine Light will show Himself.

சொல்லக் கூடாத கதை-01

“ஏ மதியம் என்ன சாப்பிட்டே?” இப்படி கேட்டாலே உள்ளதை சொல்லவா இல்லை பொய் சொல்லுவோமான்னு சாந்திதேவி யோசிச்சு தான் பதில் சொல்வாள். கள்ளத்தனம் பண்ணினால் உண்மையா சொல்லுவா?  ஆனாலும் அவளை நேர்ல பார்த்தா கோவமே வர மாடேங்குது. அவ சிரிக்கும்போது உதடு கொஞ்சம் கோணுமே, அதைப் பார்ப்பதால் இருக்குமோ? அப்போ கண்ணும் சேர்ந்து சிரிக்குமே, அதைப் பார்க்கும்போது என்னென்னமோ தோணும்.  ஹூம்.

ரெண்டு வருஷமா பழக்கம், நண்பனுடைய அலுவலகத்தில் வேலை பாக்கிறா.  சேகரன்  இருக்கும்போது அண்ணாம்பா, தனியா இருக்கும்போது டேய் கண்ணா ன்னு கூப்பிடுவா. கொஞ்ச நாளா தனியா சந்திச்சுக்கிட சந்தர்ப்பம் கிடைச்சது. ‘என்ன போன வாரத்துக்கு இப்போ ஒரு இன்ச் குறைஞ்ச மாதிரி இருக்கு’ ன்னேன். பார்வை போன இடத்தை கவனித்தவள் வெட்கப்பட்டாள். ஒரு நொடியில் முகம் மாறியது, முறைத்தாள். கோவப்படுறாளாம்! ‘என்னமோ அளந்து பார்த்த மாதிரிதான்’ முணுமுணுத்தாள். ‘கண் அளக்காததையா  கை அளக்கப்போவுது?’. ‘பாக்கிற பொண்ணெல்லாம்  இப்படிதான் அளப்பீங்களோ?’ பேச்சை வளர்க்கும் ஆசை தெரிந்தது. ‘அது பார்க்கிற மாதிரி இருந்தா அளக்குறதுதான். ஹூம் கையால அளக்கதான் பாக்கிறேன், எங்க முடியுது?’ பெருமூச்சு விட்டேன். ஓங்கி குட்டினாள். அதில் ஆசை இருந்தது.

சேகரன் கிட்ட பேசும்போதுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கும், அன்னியோன்யமா பழக முடியல. சாந்திதேவி கூட பழகுறது போதையாவே ஆயிருச்சு. ஒண்ணா சினிமா பார்த்தப்போ போதை இன்னும் ஏறுச்சு. புழுக்கமா இருக்குங்கிறத கூட காதுக்குள்ளே தான் பேசினாள். கிறுகிறுத்து போச்சு.

‘ஏன்டா சினிமாக்கு போனால் பின்னால உட்கார்ந்திருக்கிறவனெல்லாம் கண்ணு தெரியாதோ?’ சேகரன் சிரிச்சுக்கிடேதான் கேட்டான்.  என்ன சொல்லன்னே தெரியலை. டவுசர் போடுறதுக்கு முன்னாலருந்தே  பிரெண்ட்ஸ். அழுகையே வந்திருச்சு.

இதெல்லாம் நடந்து 12 வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம் அவன் முகத்துல  முழிக்க வெட்கப்பட்டு சென்னைக்கு வந்து வேலை தேடி பிறகு செட்டில் ஆயாச்சு. ‘டேய்  மாப்ள எப்படி இருக்க?’ ன்னு சேகரன் இன்னைக்கு முன்னால வந்து நின்னப்போ இதெல்லாம் ஞாபகம் வந்து திரு திருன்னு முழிச்சேன். அவன்தான் என்ன உற்ச்சாகப்படுத்தி ‘வாடா டேய் ‘ன்னு வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான்.

நான் கூச்சப்படுறத பார்த்து அவனே ‘நீ ஏன் இப்படி இருக்கேன்னு தெரியும். விடுறா எனக்கு உன் மேல ஒன்னும் வருத்தம் இல்லை. நீ எனக்கு ஒரு சான்ஸ்  தான் குடுத்துட்டு போன!’ன்னான். புரியாமல் பார்த்தேன். ‘எனக்கும் ஒரு கண் இருந்தது அவ மேல. நீ பழகிறத பார்த்திட்டுதான் பேசாம இருந்தேன். நீங்க சினிமாக்கு போனது எனக்கு தெரியும்னதும் ரொம்ப குற்றவுணர்வோட இருந்தா. இதுதான் சான்ஸ்ன்னு அப்படியே வசப்படுத்திட்டேன். துரோகம்னு பார்த்தா அதை செஞ்சது நான்தான்’.

பின்குறிப்பு – இது ஒரு சிறுகதை. கட்டுரை இல்லை.

வெற்றிலை விற்கும் கிழவி

எங்க ஊர்ல வெற்றிலை மொத்தமாக வாங்கனும்னா ரெண்டே கடைகள் தான் உண்டு. ஒரு கடை  சுமார் முப்பது வயதுள்ள இளந்தாரியால் நடத்தப்படுவது. இன்னொன்று ஒரு பாட்டியால் நடத்தப்படும் கடை. பாட்டிக்கு எழுபது வயசு இருக்கும், கொஞ்சம் கோபக்கார பாட்டி. துணை யாரும் தேவைப்படாமல் தானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார். வெற்றிலை முக்கிய வியாபாரம், அது போக பூஜைக்கு தேவையான பொருட்களும் வியாபாரம் உண்டு.

நான் முப்பது ரூபாய்க்கு வெற்றிலை வாங்குவேன். இளந்தாரி கடையில் வாங்கினால் வெற்றிலை எண்ணிக்கை கொஞ்சம் அதிகமிருக்கும். பாட்டியிடம் வாங்கினால் எண்ணிக்கை கம்மி தான், ஆனால் எடைக்கணக்கு ஒரே மாதிரிதான், 100 கிராம் பத்து ரூபாய்னா, ரெண்டு பேர் கிட்டயும் அதே விலை தான். நான் வாடிக்கையாய் வாங்குவது பாட்டியிடம் தான்.

எண்ணிக்கை வித்தியாசத்திற்கு காரணம் இதுதான் – இளந்தாரி வரும் வெற்றிலையை வாங்கி ஒரு கட்டு மட்டும் பிரித்து வைப்பார், தேவைப்படும் போதுதான் அடுத்த கட்டு பிரிப்பார். கேட்பவர்களுக்கு அப்படியே எடை போட்டு கொடுப்பார். பாட்டியின் வியாபார முறை வேறு. வரும் வெற்றிலையை பூராவும் பிரித்து தண்ணீரில் நனைத்து அடுக்கி விடுவார். வெயிலாக இருந்தால் அடிக்கடி தண்ணீரில் நனைத்து வாடாமல் பார்த்துக்கொள்வார். எடை போடும் போது ஒரு முறை தண்ணீரில் நனைத்துக் கொள்வார். தண்ணிரின் எடை சேர்ந்து கொள்வதால் வெற்றிலை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

பாட்டிக்கு லாபமும் அதிகம், நல்ல வெற்றிலையாக தருகிறார் என்ற பெயரும் கிடைக்கிறது. இது மாதிரி பாட்டிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். வேறு வியாபாரங்களும் செய்கிறார்கள், அவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களை நினைத்து கண்ணீர் விடும் கட்டுரைகள் சிலவற்றை படிக்க நேர்ந்தது. கண்ணீர் விடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் – ‘எங்க பாட்டி ஒரு மொதலாளிங்க’.

தற்பெருமை ஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.  – (திருமந்திரம் – 2513)

விளக்கம்:
கரிய கால்களைக் கொண்ட கருடன் வான் வழியே கடந்து செல்வதை பார்த்து, பசுமையான செடிகள் நிறைந்த குளத்தினில் உள்ள கருநாகப் பாம்பு ஓடி ஒளிந்து கொள்ளும். அது போல, ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது கண்டு நாம் நம்முடைய தற்பெருமையை பேசாதிருப்போம்.

ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது போல், நாம் விதி முடிந்து இறைவனுடன் கலந்து விடும் போது, வாழ்நாளில் நாம் தேடிய பெருமைகளெல்லாம் பொருள் இல்லாமல் போய் விடும். இதை உணர்ந்து நாம் பெருமை பேசுவதை விட்டு அடக்கமாய் இருப்போம்.

(கருந்தாள் கருடன் – கரிய கால்களை உடைய கருடன்,   விசும்பு – ஆகாயம்,  இற – கடந்து செல்ல,  கருந்தாள் கயம் – பசுமையான செடிகள் உள்ள நீர்நிலை)

When the black footed bird, Garuda, fly over the sky,
black snake in the pond below will hide itself.
Like this, seeing that the river water cannot be consumed
once it merge with ocean, we should stop speaking our self pride.