ஐவரின் ஐந்து தொழில்கள்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே. – (திருமந்திரம் – 400)

விளக்கம்:
வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களுக்கும் முறையே சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகியோர் தலைவராக இருக்கிறார்கள். எதிலும் நீங்காமல் இருக்கும் சிவசக்தி ஆனவர்கள், இந்த ஐவரின் தொழிலிலும் பங்கு கொள்கிறார்கள். மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். சதாசிவம் அரூபமானவர். இந்த ஐவரின் தொழிலைத்தான் நாம் பூமியாகப் பார்க்கிறோம்.


உலக இயக்கம் சிவசக்தி விளையாட்டாகும்

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. – (திருமந்திரம் – 399)

விளக்கம்:
இதற்கு முந்தைய பாடல்களில் பார்த்தபடி, இந்த உலக இயக்கம் என்பது சிவசக்தி இடையில் நடைபெறும் விளையாட்டாகும்.


காரியக் கடவுளும் காரணக் கடவுளும்

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே. – (திருமந்திரம் – 398)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவரின் ஐந்தொழிலால் இந்த உலகம் இயங்குகிறது. ஆணவ மலம் நீங்கப்பெறாத இந்த ஐவரும் காரியக் கடவுள் ஆவார்கள். இவர்களுக்கெல்லாம் மேலே காரணக் கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆணவம் இல்லாத அவன் நம் சிவபெருமான் ஆவான்.


எல்லாவற்றிலும் புகுந்திருக்கிறான்!

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. – (திருமந்திரம் – 397)

விளக்கம்:
உலகத்துக்கு எல்லாம் தலைவனான உருத்திரனின் செயல்களில் எல்லாம் நம் சிவபெருமான் புகுந்திருக்கிறான். கையில் சக்கரத்தை வைத்துள்ள திருமாலின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனின் செயல்களிலும் சிவபெருமான் புகுந்திருக்கிறான். அவன் இல்லாத செயல் என்று எதுவுமே இல்லை என்பதால் அவனே எல்லோருக்கும் தலைவனாகிறான்.


சிவசக்தி விளையாட்டு!

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. – (திருமந்திரம் – 396)

விளக்கம்:
எல்லாப் படைப்பிலும் சிவன் அறிவு வடிவாகவும், சக்தி செயல் வடிவாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணக்கம் மிகுந்தவர்கள். இவர்களின் விளையாட்டுத் தான் இந்த உலகத்தின் இயக்கமாகும். பருவங்கள் மாறுவதும், பயன்கள் மாறுவதும் சிவசக்தி விளையாட்டே! உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும் சிவசக்தியானவர்கள் ஒன்றி இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை, அவர்கள் இல்லாத பொருளும் எதுவுமில்லை.


நிகழும் தன்மை அவன்

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. – (திருமந்திரம் – 395)

விளக்கம்:
கடவுள் எங்கே? ‘ஆகின்ற தன்மையில்’ என்கிறார் திருமூலர். நிகழும் யாவற்றிலும் அந்த நிகழும் தன்மையாக இருக்கிறான், எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். ஆயுள் முடிந்த உடன் நீங்கிவிடும் நம்முடைய சீவனுக்கு அவன் துணையாக வருவான். நம்முடைய அடுத்த பிறவி நிகழும் தன்மையிலும் அவனே துணையாக இருப்பான்.


என் ஆருயிர் அவன்!

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. – (திருமந்திரம் – 394)

விளக்கம்:
படைப்பெனும் இயக்கத்திலே நின்று உயிர்களை உருவாக்கும் இறைவன் குற்றம் காணமுடியாதவன். அவன் என் ஆருயுராய் இருக்கிறான். இந்த உடல் உயிரோடு ஒன்றி இருக்க ஒரு தன்மை வேண்டும். அந்தத் தன்மையை உடலுக்குத் தருபவன் அவனே! முன் வினைகளால் துயர் கொடுக்கும் நம் உடலிலும் நடுவாக பொருந்தி இருந்து நம்மை உயிர்ப்போடு வைத்திருந்து துணையாக இருக்கிறான்.


பிறப்பும் இறப்பும் பரிணாம வளர்ச்சி காண உதவும்

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. – (திருமந்திரம் – 393)

விளக்கம்:
பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த உலகம் பரிணாம வளர்ச்சி அடைகிறது. புனிதனான சிவபெருமானின் இந்த உன்னதச் செயலை நாம் உணர்ந்தால், நம் இறைவன் நம் எண்ணங்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்பதையும், எட்டுத்திசைகளில் உள்ள எல்லாவற்றிலும் அவன் கலந்து பரவியிருக்கிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.


எல்லாப் படைப்பிலும் உள்ளொளியாக இருக்கிறான்

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயனொளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. – (திருமந்திரம் – 392)

விளக்கம்:
சிவபெருமானை வழிபட்டால், அவன் நம் வாழ்வில், மாணிக்கம் ஒளி வீசுவது போன்ற ஒளியைக் கொடுப்பான். நன்மைகளை எளிதாக வாரி வளங்கும் நம் சிவபெருமானிடம் இருந்து அந்தப் பயனைப் பெறுவது எளிது. படைப்புத் தொழிலைச் செய்பவன் பிரமன். ஆனால் அவனது ஒவ்வொரு படைப்பிலும் நம் சிவபெருமான் உள்ளொளியாக விளங்கும் விதத்தை நாம் புரிந்து கொண்டால், அவனிடமிருந்து பயன் பெறுவது எளிதான வேலையாகும்.


எல்லாம் நீயே!

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே. – (திருமந்திரம் – 391)

விளக்கம்:
இந்த உலகில் நிகழும் அனைத்திற்கும் காரணமானவன் நம் சிவபெருமான். அவன் எல்லாப் படைப்புக்களிலும் அன்பே உருவாய்க் கலந்திருக்கிறான். நாராயணன் செய்யும் காத்தல் தொழிலும், நடுவே சிவபெருமானின் பங்கு உண்டு. பிரமனின் படைத்தல் தொழிலிலும் அவனுடைய பங்கு உண்டு. அவனே வேதமாக இருக்கிறான். இந்த உலகமே நம் சிவபெருமான் தான்.