கயிலை வாழ் பராபரன்!

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. – (திருமந்திரம் – 390)

விளக்கம்:
ஓங்கி எழும் அலைகளைக் கொண்ட பெரும்கடலில் வசிக்கும் திருமாலுக்கும், மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், தமக்கு மேலே நன்மை எல்லாம் தரும் பராபரன் ஒருவன் கயிலையிலே வசிக்கிறான் என்பது தெரியும். உலகில் ஒவ்வொரு உயிரும் உருவாகும் பொழுது, அவர்கள் அந்தப் பராபரனை உணர்வார்கள்!


பழமையான பரம்பொருள்

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. – (திருமந்திரம் – 389)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனான திருமால், தேவர்களுக்கெல்லாம் தலைவனான உருத்திரன், தன்னுடைய கழுத்துக்கு மேல் நான்கு முகங்கள் கொண்ட பிரமன் ஆகியோர் தத்தம் தொழிலைச் செய்து படைப்பை நிகழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மேலே பழமையான பரம்பொருள் ஒன்று இருக்கிறது. திருமால், உருத்திரன், பிரமன் ஆகியோருக்கு அவரவர்க்கு உரிய தன்மையைக் கொடுத்தது அந்தப் பரம்பொருளே!


அனைத்தின் தன்மையாகவும் சக்தி விளங்குகிறாள்

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே. – (திருமந்திரம் – 388)

விளக்கம்:
சிவனின் ஒரு பாகமாக விளங்கும் சக்தி, நீரின் சுவையாக விளங்குகிறாள். எரிகின்ற நெருப்பில் ஒளியாகவும், வீசுகின்ற காற்று தரும் உணர்வாகவும், வான்வெளியில் உள்ள சப்தங்களின் ஒலியாகவும் சக்தியே இருக்கிறாள். நீரினால் சூழப்பட்ட நிலப்பகுதி பல உயிர்களும் தோன்றக் காரணமாக இருக்கிறது. நிலத்தின் அந்தப் பிறப்பு தரும் தன்மையாக விளங்குபவள் சக்தியே ஆவாள்.


பூவும் வாசனையும்

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே. – (திருமந்திரம் – 387)

விளக்கம்:
புண்ணியனான சிவபெருமான் உலகின் எல்லாவற்றிலும் பொருந்தி இருந்து, எளிய உயிர்களை எல்லாம் வளர்க்கிறான். பூவும் வாசனையும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போல, சிவனும் சக்தியும் கலந்திருக்கிறார்கள். சிவனின் செயல்களில் எல்லாம் சக்தியின் பங்களிப்பும் உண்டு.


பிரமன் செய்யும் புண்ணியம்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே. – (திருமந்திரம் – 386)

விளக்கம்:
இந்த உலகத்தைப் படைத்தது சிவசக்தி ஆவார்கள். அவர்கள் தமது ஐந்து மக்களைக் கொண்டு இந்த உலகை உருவாக்கினார்கள். பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் அந்த ஐந்து மக்கள் ஆவார்கள். இவர்களில் படைப்புத்தொழில் செய்யும் புண்ணியம் பிரமனுக்குக் கிடைத்தது. அந்தப் புண்ணியத்தாலேயே அவனுக்குத் தாமரை மலரில் வசிக்கும் உரிமை கிடைத்தது.


பிரபஞ்சம் தோன்றிய முறை

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. – (திருமந்திரம் – 385)

விளக்கம்:
நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே!


சகலத்திலும் சக்தி இருக்கிறாள்

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே. – (திருமந்திரம் – 384)

விளக்கம்:
நம் எண்ணத்திற்கு எட்டாத சோதியாக இருக்கும் சிவபெருமானைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அந்த சிவபெருமானை நீங்காமல் தொடர்ந்து இருப்பவள் சக்தி. படைப்பு அனைத்திலும் சிவனும், சக்தியும் சேர்ந்து இருந்து அறிவுக்கும் செயலுக்கும் காரணமாகிறார்கள். சதாசிவன் படைத்த இந்த உலகம், ஐம்பூதங்களால் ஆனது. அந்த ஐந்து பூதங்களையும் செயல்படுத்தும் சக்தியாக சக்தி இருக்கிறாள்.


எல்லாவற்றிலும் சக்தி பரவியிருக்கிறாள்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. – (திருமந்திரம் – 383)

விளக்கம்:
அதுவரை இல்லாத ஒன்றை நம் சிவபெருமான் படைத்தான். அந்தப் படைப்பு தான் இந்த உலகம். இந்தப் படைப்பின் சகலத்திலும், நவமணியில் இருந்து அதன் ஒளியைப் பிரிக்க முடியாதது போல, சக்தி கலந்திருக்கிறாள். சகல இயக்கத்திற்கும் காரணமான அந்த சக்தியின் பெருமையைச் சொல்லலாம் என்றால், அது நம் சிற்றறிவிற்கு எட்டாததாக இருக்கிறது.


அறிவுக்கும் செயலுக்கும் காரணமானவர்கள்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே. – (திருமந்திரம் – 382)

விளக்கம்:
நாதனிடம் இருந்து தோன்றியது நாதம். இந்த மொத்தப் படைப்பும் அவனிடம் இருந்து தோன்றிய நாதம் தான். படைப்புக்களை ஆசை வருத்துகிறது, அதனால் விந்து உருவாகிறது. உருவாகும் விந்துக்களில், தீமை ஏதும் இல்லாத சிவனும் சக்தியும் வந்து அமர்கிறார்கள். அவர்கள் அந்த விந்துக்களில் இருந்து தோன்றப் போகும் உயிர்களுக்கு முறையே அறிவு, செயல் ஆகியவற்றின் காரணமாக அமைகிறார்கள்.


சிவனையும் சக்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே. – (திருமந்திரம் – 381)

விளக்கம்:
மேலான விஷயங்களுக்கு எல்லாம் மேலானவன் நம் சிவபெருமான். சிவபெருமானிடம் இருந்து பிரிக்க முடியாத ஞான நிலையாக விளங்குபவள் சக்தி. உலகமெங்கும் பரந்து நிற்கும் அந்தப் பேரொளியில் சிவனும் விளங்குகிறான். தீமை ஏதும் இல்லாத சக்தியும் அந்தப் பேரொளியில் விளங்குகிறாள். அருட் பேரொளியில் சிவனும், சக்தியும் சேர்ந்து விளங்குவதால் படைப்புக்கள் யாவும் நிகழ்கின்றன.