ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம்

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. – (திருமந்திரம் – 698)

விளக்கம்:
யாருடனும் ஒப்பிட முடியாத தனிப்பெரும் தத்துவ நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயாமத்தின் போது நடுநாடியாகிய சுழுமுனையில் அவள் ஊரும் வகையை உணர்ந்தால் ஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம். மனம் ஒன்றி பராசக்தியை மனத்தில் நினைத்து மூச்சுக்காற்றை சுழுமுனையில் செலுத்தும் பயிற்சியில் வெற்றி பெற்றால், அப்பயிற்சி வாழ்க்கையில் ஆயிரமாயிரம் வெற்றிகளைக் கொண்டு வரும்.


ஐந்து முக நாயகி!

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. – (திருமந்திரம் – 697)

விளக்கம்:
ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவத்துடன் வசிக்கும் ஐந்து முகங்கள் கொண்ட சக்தியின் பத்துக் கைகளில் பத்து ஆயுதங்கள் ஏந்தி இருப்பதைப் பார்க்கிறோம். பிராணாயாமம் செய்து யோகத்தில் நிற்பவர்கள், இடைகலை மூச்சின் போது சகசிரதளத்தில் மலரும் ஆயிரம் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் சக்தியின் முகத்தைக் காண்பார்கள். அதே போல் பிங்கலை மூச்சின் போதும் ஆயிரம் இதழ்களில் சக்தியின் ஆயிரம் முகங்களைக் காண்பார்கள். யோக காலத்தில் ஒரே சக்தி இரண்டாயிரம் சக்திகளாகத் தோன்றுவதைக் காணலாம்.


காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. – (திருமந்திரம் – 696)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடைகலை, பிங்கலை ஆகிய சீரான முச்சின் ஓட்டத்தில் சதாசிவ நாயகியாகிய சக்தி மேலெழுந்து சகசிரதளத்திற்குச் செல்கிறாள். ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ நாயகி இரண்டு வகையான மூச்சுக்காற்றில் ஏறும் போது அவள் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை உணர்த்தி சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை விரியச் செய்கிறாள். நாயகியின் இந்தச் செயலில் காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்.


தலையில் ஊறும் அமிர்தம்

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே. – (திருமந்திரம் – 695)

விளக்கம்:
யோகத்தினால் நம் தலையில் அமிர்தம் ஊறி ஆறு போலப் பெருகும். ஆறு போலப் பெருகும அவ்வமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் வழியாகப் பாய்கின்றன. ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சகசிரதளம் மலர்ந்து நிற்க இந்த அமிர்த ஊறலே சிறந்த வழியாகும். சிவசக்திகள் நமது உயிருடன் ஒன்றி நிற்கவும் இந்த அமிர்த ஊற்று உறுதுணையாக இருக்கிறது.


காற்று உயிரில் கலக்கும் வகை!

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே. – (திருமந்திரம் – 694)

விளக்கம்:
நமது உடலில் ஐந்நூற்றுப் பதிமூன்று நாடிகளிலும் நாடிகளின் நாயகியாகிய பராசக்தி கலந்து இருக்கிறாள். பிராணயாமத்தின் போது நமது மூச்சுக்காற்று பராசக்தியுடன் கலப்பதைக் காணலாம். மூச்சுக்காற்று எப்படி நம் உயிரில் கலந்து நின்று நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அட்டமாசித்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே இவற்றை எல்லாம் உணர்வது சாத்தியம்.


பேரொளியை மூச்சுக்காற்றிலே உணரலாம்

பேரொளி யாகிய பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. – (திருமந்திரம் – 693)

விளக்கம்:
உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்தப் பேரொளியை, அந்த சிவ ஒளியை, அட்டமாசித்தி பெற்ற யோகியர் தமது பிராணாயாமத்தின் மூச்சுக்காற்றிலே உணர்வார்கள். சக்தி வாய்ந்த அவ்வொளியை நடுக்கம் இல்லாமல் காணும் பக்குவம் யோகிகளுக்கு மட்டுமே உண்டு.


யோகத்தினால் அச்சம் நீங்கும்

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. – (திருமந்திரம் – 692)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தை தொடர்ந்து பயிலும் யோகிகள், மேன்மை மிகுந்த பேரொளியைக் காண்பார்கள். அந்தப் பேரொளியின் வெளிச்சத்தையே தாயகமாகக் கொண்டு அங்கே வசிக்க விரும்புவார்கள். அவர்கள் யோகத்தின் போது தமது அகத்தில் உள்ள குழப்பங்களை ஆய்ந்து, தெளிந்து அச்சம் நீங்குவார்கள். எப்போதும் அச்சத்திலேயே இருந்த அவர்களது மனம் அச்சம் நீங்கி பேரொளியைக் காணும்.


பூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்!

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஒளி நாயக மானதே. – (திருமந்திரம் – 691)

விளக்கம்:
பூ மலரும் போது அதில் வாசனை தோன்றுகிறது. அந்தப் பூ வாடும் போது வாசனை மறைந்து விடும். அது போலத்தான் நாம் பிறக்கும் போது இந்த உலகம் நமக்குள் தோன்றுகிறது, நாம் மறையும் போது இந்த உலகம் நமக்குள்ளேயே மறைந்து விடும். வசித்துவம் பெற்று, தீமைகளில் இருந்து நம்மைக் காக்கும் தத்துவம் கைகூடும் போது இந்த உண்மையை உணர முடியும். இந்த உண்மையை நமக்கு உணர்த்துபவன் நம் தலைவனான சிவபெருமான். வசித்துவம் பெற்று உலகம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ளும் போது, நாம் அறிவொளி மிகுந்தவராக இருப்போம்.


பொன்னான தருணங்களைக் காணலாம்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. – (திருமந்திரம் – 690)

விளக்கம்:
இத்தனை காலம் கல்லில் செய்த கொடி போல காமுகனாக இருந்திருக்கிறோம். அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை நல்லவிதமாக மாற்றுகிறது. நற்கொடியாகிய சக்தியைக் கண்டு ஓராண்டு குண்டலினிப் பயிற்சியாகிய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், இவ்வாழ்க்கையின் பொன்னான தருணங்களைக் காணலாம். அதுவே வசித்துவம் ஆகும்.


வசித்துவம் தரும் சிறப்புகள்

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. – (திருமந்திரம் – 689)

விளக்கம்:
மென்மையான மெய்ப்பொருளைக் கண்டு வசித்துவம் எனும் சித்தி பெறும்போது, நாம் சூரியனைப் போல் பிரகாசமாக இருந்து அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை பெறுவோம. அசுத்தமான ஐம்புலன் ஆசைகள் நம்மை விட்டு அகன்று விடும். நன்மை தரும் நற்கொடியாகிய சிவசக்தியைக் காணலாம்.