ஆனந்த யோகம் பெறலாம்

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே – 709

விளக்கம்:
மூலாதாரம் முதல் ஆக்கினை (புருவ மத்தி) வரை உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கடந்து, அங்கே வீற்றிருக்கும் கடவுளர்களைத் தியானித்து, இன்னும் உயரே சென்று தியானித்தால் அங்கே சிவசக்தியரைக் காணலாம். அங்கே மேதை முதலான பன்னிரெண்டு சந்திரகலைகளைக் கடந்து மேல் ஏறினால், சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குலத்துக்கு மேலே மனம் நிலைத்து, வாக்கும் மனமும் இறந்து ஆனந்த யோகம் பெறலாம்.


சிவசக்தியின் திருவடிகளைக் காணலாம்

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே – 708

விளக்கம்:
மூலாதாரத்துக்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் பிரமனும், மணிப்பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும் வீற்றிருக்கிரார்கள். மகேசுரனின் வழிகாட்டுதல்படி அநாகதத்துக்கு மேலே தலை உச்சி வரை சிவ ஒளியையும், சிவநாதத்தையும் உணரலாம். தொடர்ந்து இவ்வாறு தியானத்து வந்தால் சிவசக்தியரின் திருவடிகளைக் காணும் பேறு கிடைக்கும். அந்நிலையில் தனிப்பட்ட அருள் ஒளியைக் காணலாம், அருள் ஒலியைக் கேட்கலாம்.


சிவபெருமானை வெளியே தேட வேண்டாம்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே – 707

விளக்கம்:
நமது அண்ணலான சிவபெருமானைக் காண்பது மிக எளிது. ஆனால் நாம் பாதங்கள் வலிக்கும் அளவுக்கு அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்து எங்கெங்கொ சென்று சிவபெருமானைத் தேடுகிறோம். அண்ணல் மேல் கொண்ட அன்பினால், பக்தியினால் நாம் யோக வழியில் தொடர்ந்து நின்று தியானித்தால், நமக்குள்ளேயே குடியிருக்கும் சிவபெருமானைக் காணலாம்.

ஓதம் ஒலிக்கும் உலகு – கடல் சூழ்ந்த உலகம்.


யோகம் செய்பர்களின் பத்து இயல்புகள்

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே – 705

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே – 706

விளக்கம்:
பிராணாயாமத்தின் கணக்கறிந்து தொடர்ந்து அப்பயிற்சி செய்பவர்கள் இவ்வாறான பத்து இயல்புகளைப் பெறுவார்கள்.

1. பெண்ணாசையைத் துறப்பார்கள்.
2. சுற்றத்தினரின் உலக விஷயப் பேச்சுக்களில் இருந்து விலகி இருப்பார்கள்.
3. சிவவழிபாடு பற்றிய நூல்களைப் படித்து ஞானம் பெறுவார்கள்.
4. சதா சிவமந்திரத்தை முணுமுணுக்கும் சித்தர்களின் பெருமைகளைக் கேட்டு அறிவார்கள்.
5. எந்தச் சூழ்நிலையிலும் மனம் துவளாது இருப்பார்கள்.
6. பிராணாயாமத்தை எளிதாகச் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்று இருப்பார்கள்.
7. மூப்பு, இறப்பு ஆகியவற்றைக் கடந்து எப்போதும் இளமையாக உணர்வார்கள்.
8. சிவ அருள் வெளியில் கலந்து இருப்பார்கள்.
9. தமது நல்ல செய்கைகளால் முன்னோர்களை நற்கதி பெறச் செய்வார்கள்.
10. சிவனது திருவுருவைத் தான் பெறுவார்கள்.


சிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான்ஆம் சகமுகத்து
உந்திச் சமாதி உடையொளி யோகியே. – (திருமந்திரம் – 704)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடங்கலை, பிங்கலை ஆகிய மூச்சுக்காற்றில் பரம்பொருளும் கலந்து நிற்கிறது. இதனால் தூணைப் போல நிலையாக இருக்கும் சுழுமுனையின் உச்சியிலே, சிவபெருமானின் திருமுடியில் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம். அட்டாங்க யோகத்தில் நிற்பதால், நமது உடலில் உயிர் உள்ளபோதே சமாதி நிலையை அடைந்து யோகி ஆகலாம்.


ஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்

ஆறுஅது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழுஅது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டுஅது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. – (திருமந்திரம் – 703)

விளக்கம்:
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களுக்கும் மேல் உள்ள ஏழாவது ஆதாரமான சகசிரதளத்தில், நமது மூச்சுக்காற்றை ஏற்றி இறக்கி பிராணாயாமம் செய்யும் போது, ஆறு ஆதாரங்களிலும் அமிர்தம் ஊறும். எட்டாவது ஆதாரமாகச் சொல்லப்படும் உச்சந்தலையில் இருந்து பன்னிரெண்டு அங்குலம் உயரத்தில் மனம் நிறுத்தி பிராணாயாமம் செய்யும் போது, சுழுமுனையும் சுழுமுனை தவிர்த்த மற்ற ஒன்பது நாடிகளும் ஒரே அளவில் பிராண வாயு பெற்று வளம் பெறும்.

தசநாடிகள் எனச் சொல்லப்படும் பத்து நாடிகள் இவை – பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.


மூச்சுக்காற்றில் பராசக்தி கலந்திருக்கிறாள்

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே . – (திருமந்திரம் – 702)

விளக்கம்:
யோக நிலையில், மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற சோதியுள் நம் நாயகியாகிய பராசக்தி கலந்திருக்கிறாள். நான்கு இதழ்களை உடைய மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியாக எழுகின்ற குண்டலினி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளைக் கலந்து செல்கிறது.


மூச்சுக்காற்றே பெருஞ்செல்வம் ஆகும்!

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே . – (திருமந்திரம் – 701)

விளக்கம்:
நம்முடைய தலைவனான சிவபெருமான் வசிக்கும் சகசிரதளமும், பிராணாயாமத்தின் போது இயங்கும் மூச்சுமே நாம் பெற்ற பெருஞ்செல்வம் ஆகும். இவற்றை விட பெரிய செல்வம் வேறேதும் இல்லை. பிராணாயாமத்தினால் நமது மூச்சு இயங்கும் கணக்கு இருநூற்று முப்பத்து எட்டாகக் குறைந்து விடும்.


ஆய்ந்து அறிய முடியாத நாயகி

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. – (திருமந்திரம் – 700)

விளக்கம்:
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியாத தனித்தன்மை கொண்ட நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயமத்தின் போது நாம் இழுக்கும் மூச்சுக்காற்றுடன் அந்நாயகி எந்த அளவுக்கு கலந்திருக்கிறாள் என்பதை ஆய்ந்து அறிந்தால், பராசக்தியுடன் எழும் மூச்சுக்காற்று ஐந்நூற்று முப்பத்து ஒன்பது நாடிகளை நிரப்புகிறது. இதனால் உள்ளே நமது மூச்சு செல்லும் பாதை வளம் பெறுகிறது.


கலை நாயகி!

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. – (திருமந்திரம் – 699)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூலாதாரத்தில் இருந்து எழும் கலை நாயகியாகிய பராசக்தியை, நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்று பற்றிக்கொள்ளும் வகையை இப்படிச் சொல்லலாம். அக்கலை நாயகி தன்னுடைய ஐந்து முகங்களால் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை நமக்கு உணர்த்தி தெளிவு ஏற்படுத்துகிறாள்.