நம்முள்ளே ஒரு விளக்கேற்றுவோம்

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே – 820

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்து, நம் தொண்டைப் பகுதியில் உள்ள அண்ணாக்கில் மனத்தை ஒன்றச் செய்வோம். படிக்கதவாகிய அண்ணாக்கில் மனம் ஒன்றினால், உள்ளே ஒளி பாய்ச்சியது போல நம் உடல் புத்துணர்ச்சி பெறும். நம் மூச்சுக்காற்று நாம் சொன்னபடி இயங்கி, நம் கைவசப்படும். மூச்சுக்காற்று நம் வசப்பட்டு, குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால், இருளாக இருக்கும் நம் உடல் என்னும் கோயில், மணி விளக்கு ஏற்றியது போல் வெளிச்சம் பெறும்.

கேசரியோகத்தினால் உடல் என்னும் கோயிலில் விளக்கேற்றலாம்.

பை – உடல், படிக்கதவு – அண்ணாக்கு, கையினுள் – கைவசப்படுதல், மையணி கோயில் – இருளாய் இருக்கும் கோயில்


உடலை அழியாமல் காக்கலாம்!

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே – 819

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சியில் நாம் வெளியேறும் மூச்சுக்காற்றை வீணாகாமல் காக்க வேண்டும். வெளியேறும் மூச்சுக்காற்றை வீணாகாமல் உள்ளே அமரச் செய்தால், தலை உச்சியில் சுரக்கும் அமுதம் மதி மண்டலத்தில் வழிந்தோடும். அமுதம் வழிந்தோடும் காலத்தில், வட்ட வடிவில் நம்மைச் சுற்றியிருக்கும் உலக விஷயங்களில் இருந்து விலகி இருப்போம். உலக விஷயங்களை வெறுத்து நாம் ஒதுங்கி நின்றால், நம்முடைய உடல் நெடுங்காலத்துக்கு அழியாமல் இருக்கும்.

கேசரியோகத்தினால் உடல் அழியாமல் காக்கலாம்.

வட்டக்கழலை – வட்ட வடிவிலான வளை, பை – உடல்


கர்ம வினைகள் தீரும்!

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிற்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே – 818

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சியால் மதி மண்டலம் மலர்ந்து நிற்கும் நிலையை முந்தையப் பாடலில் பார்த்தோம். மதி மண்டலத்தில் ஊறும் அவ்வமுதத்தை கழுத்துப் பகுதிக்குக் கீழே போகாதவாறு, மூச்சைக் கட்டி, நாம் பயிற்சி செய்ய வேண்டும். மனத்தளவில் ஒரு ஒட்டியாணத்தைக் கட்டி, நம் பிராணன் கீழே இறங்காதவாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயிலும் போது, நம் உடலுக்குள்ளே சூரிய ஒளி பாய்வது போன்ற ஒரு வெளிச்சமும் தெளிவும் உண்டாகும். தனது காதுகளில் குண்டலங்களை அணிந்திருக்கும் நம் சிவபெருமானும், நம்மை நம் கர்மவினைகளில் இருந்து விலக்கிக் காப்பான்.

கேசரியோகத்தினால் கர்ம வினைகள் தீரும்.

கண்டகம் – கண்டம், தொண்டைப்பகுதி, பண்டகம் – உடலின் உள்ளே, கூத்தொழிந் தானே – கர்ம வினைகளில் இருந்து காத்து நிற்பானே


மதி மண்டலம் மலரும்

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே – 817

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்திலேயே இருக்கும் பிராணன், மேலே எழும். மேலே எழும் அந்த மூச்சுக்க்காற்று, பிரியத்துடன் சுழுமுனை நாடியை நாடி இன்னும் மேலே எழும். இன்னும் மேலே சென்றால், சகசிரதளத்தில், அந்த சிவபெருமானின் உலகத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட அந்தத் தாமரையை நம் பிராணன் தொட்டு இன்னும் மேலே எழும். அப்படி உச்சியில் பிராணன் எழும்போது, நம் மதி மண்டலமே மலர்ந்து நிற்கும். நாம் மகிழ்வுடன் வாழலாம்.

கேசரியோகத்தினால் மதி மண்டலம் மலர்ந்து, நாம் மகிழ்வுடன் வாழலாம்.

பரிதல் – பிரியம் கொள்ளுதல், தண்டு – சுழுமுனை நாடி,


நம் உடல் கொழுந்து போல் மென்மையாகும்!

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே – 815

விளக்கம்:
கேசரியோகத்தின் போது, பராசக்தி தானும் தன் பங்குக்கு மேலும் அமுதத்தை பொழிவாள் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். சிவபெருமான் பொழியும் அமுதம், பராசக்தி பொழியும் அமுதம் என இரு அமுதங்களை நாம் பெறுகிறோம். பொழியும் அவ்வமுதங்களை வீணாகாதவாறு தேக்கி வைத்து தாரணை செய்ய நாம் பயில வேண்டும். நம் உடலினுள் பொன் போன்ற ஒரு கரை எழுப்பி, சகசிரதளத்தில் இருந்து பொழியும் அவ்வமுதங்களை தேக்கி வைத்துக் காப்போம். அவ்வாறு காத்தால் நம் உடல் கொழுந்து போல் மென்மையாகும்.

கேசரியோகத்தின் தன்மை நம் உடலைக் கொழுந்து போல் ஆக்குவதும் ஆகும்.

இருவெள்ளி – இரண்டு அமுதங்கள், ஒன்று சிவபெருமான் பொழிவது, இன்னொன்று பராசக்தி பொழிவது, மண்ணடை – உடலினுள் கரை கட்டுதல், வான் – சகசிரதளம்


அமுதைப் பொழியும் பராசக்தியே!

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே – 814

விளக்கம்:
கேசரியோகம் பயிலும் போது அறிவு சுடர் விடும். அந்த அறிவுச்சுடரில் பராசக்தியும் சூழ்ந்து இருப்பாள். என்றும் இளமையாக இருக்கும் பராசக்தி, சுழுமுனையில் நடுவாக இருப்பாள். கேசரியோகத்தில் நம்முள்ளே அமுதம் ஊறும் போது, அவ்வமுதம் மான் போன்ற அந்த சக்தியின் நிலவு முகத்திலும் பொழியும். தன் மேல் அமுதம் பொழியும் போது, தானும் தன் பங்குக்கு மேலும் அமுதத்தை பொழிவாள் நம் பராசக்தி.

கேசரியோகத்தில் பராசக்தியும் அமுதைப் பொழிவாள்.

சத்தி – பராசக்தி, கன்னி – என்றும் இளமையாக இருப்பவள், மானேர் முகநில வார – மான் ஏர் (போன்ற) முக நிலவு ஆர


அறிவும் உடலும் பிரகாசிக்கும்

மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே – 813

விளக்கம்:
மாவினையான கேசரியோகம் பயில்பவர்களின் அறிவிலே, அந்த சிவபெருமான் பிரகாசித்து விளங்குவான் என்பதை முந்தையப் பாடலில் பார்த்தோம். கேசரியோகப் பயிற்சியினால், மதியினிலே பதினாறு அறிவுக்கதிர்கள் எழுந்து இந்த உடலிலே பதியும். அந்தப் பதினாறு கதிர்கள் இருநூற்று இருபத்து நான்கு கதிர்களாய் விரிந்து, நம்முடைய புகலிடமான இந்த உடலில் பரவும். மதியில் இருந்து பரவும் அந்த இருநூற்று இருபத்து நான்கு கதிர்களும் உடலில் அம்பெனப் பாய்ந்து பரவும், இந்த உடலும் அவற்றைத் தடுக்காமல் ஆசையுடன் உள்வாங்கி ஒளி பெறும்.

கேசரியோகத்தால் அறிவு பிரகாசித்து இந்த உடலும் ஒளி பெறும்.

பதி – பதிதல், கதிமனை – புகலிடமான உடல், கணை – அம்பு, எதிர்மலையாமல் – எதிர்த்து நிற்காமல்


அவரவர் அணுகுமுறைக்கு ஏற்ப அருள் செய்வான்

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன்
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே – 812

விளக்கம்:
யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு சிவபெருமான் அவரவர் அணுகுமுறைக்கு ஏற்ப அருள் செய்வான். மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை மேலே எழுப்பிப் பயிற்சி செய்பவர்களின் தலை உச்சியில் சிவபெருமான் விளங்குவான். சகசிரதளத்தில் கவனம் செலுத்தி யோகம் பயில்பவர்களுக்கு, சிவபெருமான் தலைவனாக வந்து ஆட்கொள்வான். சிவபெருமானின் அருள் குறித்த பாடல்களைப் பாடி யோகப் பயிற்சி செய்பவர்களின் கருத்திலே, நினைவிலே சிவபெருமான் நிறைந்து நிற்பான். மாபெரும் யோகமான கேசரி யோகம் பயில்பவர்களின் அறிவிலே, அந்த சிவபெருமான் பிரகாசித்து விளங்குவான், சாதகர் தெளிவான அறிவு கொண்டவராக இருப்பார்.

தீவினையாளர் – குண்டலினி என்னும் அக்னியை எழுப்பி பயிற்சி செய்பவர், பூவினையாளர் – சகசிரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவை நோக்கி யோகம் செய்பவர், பாவனையாளர் – சிவனைப் பற்றிப் பாடல்கள் பாடி யோகம் செய்பவர், பாவகம் – கருத்து, மாவினையாளர் – மாபெரும் யோகமான கேசரியோகம்.


தாயை விட மேலானவன்!

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே – 811

விளக்கம்:
அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் சிவன், இந்த உலகத்துக்கே தாய் போன்றவன், சொல்லப்போனால், தாயை விட மேலானவன். சிவபெருமான் சினம் கொண்டவர் என்றாலும் நல்லவர். தன் மேல் கோபம் கொண்டவர்கள் உள்ளும் சிவன் குடியிருப்பார், ஆனால் அவர்களால் அதை உணர முடியாது. தீவினையாளர்களுக்கு, சிவபெருமான் தீயை விடத் தீமைகளைக் கொடுப்பார்.

தரணி – உலகம், காயினும் – சினந்தாலும், காய்ந்தவர் – சினந்தவர்


சிவனின் கோயில் நம்முள்ளே!

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே – 810

விளக்கம்:
கேசரியோகம் செய்பவர்களுக்கு, வான கங்கை நீரைப் பருகும் நல் வாய்ப்பு அமையும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அவ்வாறு சிவனருள் வாய்ந்து, அந்த சிவனை மனத்துள்ளே வைத்து வழிபடுபவர்களுக்கு, சிவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.

காய்ந்த அறிவு – மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு – படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி – கூர்ந்து அறி