வெற்றிலை விற்கும் கிழவி

எங்க ஊர்ல வெற்றிலை மொத்தமாக வாங்கனும்னா ரெண்டே கடைகள் தான் உண்டு. ஒரு கடை  சுமார் முப்பது வயதுள்ள இளந்தாரியால் நடத்தப்படுவது. இன்னொன்று ஒரு பாட்டியால் நடத்தப்படும் கடை. பாட்டிக்கு எழுபது வயசு இருக்கும், கொஞ்சம் கோபக்கார பாட்டி. துணை யாரும் தேவைப்படாமல் தானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்வார். வெற்றிலை முக்கிய வியாபாரம், அது போக பூஜைக்கு தேவையான பொருட்களும் வியாபாரம் உண்டு.

நான் முப்பது ரூபாய்க்கு வெற்றிலை வாங்குவேன். இளந்தாரி கடையில் வாங்கினால் வெற்றிலை எண்ணிக்கை கொஞ்சம் அதிகமிருக்கும். பாட்டியிடம் வாங்கினால் எண்ணிக்கை கம்மி தான், ஆனால் எடைக்கணக்கு ஒரே மாதிரிதான், 100 கிராம் பத்து ரூபாய்னா, ரெண்டு பேர் கிட்டயும் அதே விலை தான். நான் வாடிக்கையாய் வாங்குவது பாட்டியிடம் தான்.

எண்ணிக்கை வித்தியாசத்திற்கு காரணம் இதுதான் – இளந்தாரி வரும் வெற்றிலையை வாங்கி ஒரு கட்டு மட்டும் பிரித்து வைப்பார், தேவைப்படும் போதுதான் அடுத்த கட்டு பிரிப்பார். கேட்பவர்களுக்கு அப்படியே எடை போட்டு கொடுப்பார். பாட்டியின் வியாபார முறை வேறு. வரும் வெற்றிலையை பூராவும் பிரித்து தண்ணீரில் நனைத்து அடுக்கி விடுவார். வெயிலாக இருந்தால் அடிக்கடி தண்ணீரில் நனைத்து வாடாமல் பார்த்துக்கொள்வார். எடை போடும் போது ஒரு முறை தண்ணீரில் நனைத்துக் கொள்வார். தண்ணிரின் எடை சேர்ந்து கொள்வதால் வெற்றிலை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

பாட்டிக்கு லாபமும் அதிகம், நல்ல வெற்றிலையாக தருகிறார் என்ற பெயரும் கிடைக்கிறது. இது மாதிரி பாட்டிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். வேறு வியாபாரங்களும் செய்கிறார்கள், அவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களை நினைத்து கண்ணீர் விடும் கட்டுரைகள் சிலவற்றை படிக்க நேர்ந்தது. கண்ணீர் விடுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான் – ‘எங்க பாட்டி ஒரு மொதலாளிங்க’.


தற்பெருமை ஒழி நெஞ்சே!

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.  – (திருமந்திரம் – 2513)

விளக்கம்:
கரிய கால்களைக் கொண்ட கருடன் வான் வழியே கடந்து செல்வதை பார்த்து, பசுமையான செடிகள் நிறைந்த குளத்தினில் உள்ள கருநாகப் பாம்பு ஓடி ஒளிந்து கொள்ளும். அது போல, ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது கண்டு நாம் நம்முடைய தற்பெருமையை பேசாதிருப்போம்.

ஆற்று நீர் கடலில் கலந்த பின் குடிக்க உதவாதது போல், நாம் விதி முடிந்து இறைவனுடன் கலந்து விடும் போது, வாழ்நாளில் நாம் தேடிய பெருமைகளெல்லாம் பொருள் இல்லாமல் போய் விடும். இதை உணர்ந்து நாம் பெருமை பேசுவதை விட்டு அடக்கமாய் இருப்போம்.

(கருந்தாள் கருடன் – கரிய கால்களை உடைய கருடன்,   விசும்பு – ஆகாயம்,  இற – கடந்து செல்ல,  கருந்தாள் கயம் – பசுமையான செடிகள் உள்ள நீர்நிலை)

When the black footed bird, Garuda, fly over the sky,
black snake in the pond below will hide itself.
Like this, seeing that the river water cannot be consumed
once it merge with ocean, we should stop speaking our self pride.

ஆக்னட்டிக் கதிர்கள் – விஞ்ஞானத்தின் அற்புதம்

Electro Ognatics –  இது சமீபத்திய விஞ்ஞானத்தின் புதிய பிரிவு. இதன் வருங்கால சாத்தியங்கள் நினைத்துப் பார்க்க பிரமிப்பானவை. மிண்ணனுவியலில் ஒரு நூறாண்டு காலத்தை ஒரே பாய்ச்சலாக கடந்து விட்டோம் என்றே சொல்லலாம். இந்த புதிய விஞ்ஞானம் பல துறைகளில் செயல்படப் போகிறது என்றாலும், மனிதனின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்தினால் சாவு என்பதே இனி இராது, 108 ஆம்புலன்ஸ்களை வேறு எத்ற்கு பயன்படுத்தலாம் என்று ஒரு குழு யோசித்து வருகிறது. மனிதன் தன் சக மனிதனைக் கொலை செய்வது அசாத்தியமாகிறது. கடலினால் சூழப்பட்ட இந்த உலகில் இனி இயற்கை மரணம் மட்டுமே நிகழும்.

மனித வாழ்வின் முக்கிய அங்கமாய் இருக்கப் போகும் ஆக்னட்டிக் கதிர்கள் செயல்படும் விதம் பற்றி எனக்கு முழுதாக தெரியும் என்றாலும், அதெல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். நம் உடலை சுற்றி சுமார் ஆறு அங்குல அடர்த்தியில் ஆக்னட்டிக் கதிர்களை உருவாக்கி விடுவார்கள். இது நமது உடலுக்கு ஒரு கவசமாய் செயல்படும். ஆக்னட்டிக் கதிர் உடையவனை அரிவாளால் வெட்ட முடியாது, துப்பாக்கியால் சுட முடியாது, நெருப்பினால் சுட முடியாது, பனியினால் உறைய வைக்க முடியாது. கீதையில் பகவான் கிருஷ்ணர் இதை பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். இந்தக் கதிர் செயல்பாட்டில் இருக்கும் போது துரதிர்ஷ்டவிதமாக ஏதாவது விபத்து நடந்து விட்டால் கூட, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் எழுந்து வந்து விடலாம்.

இந்த ஆக்னட்டிக் கதிர்களை அணிந்து கொள்வது மிகவும் சுலபம். சிம் கார்டு போன்ற சிப் ஒன்றில் உள்ளடக்கி விடக்கூடிய கதிர்கள் இவை. இனி வரப் போகும் மொபைல்கள் இந்த சிப்பை பொருத்திக் கொள்ளக் கூடிய வசதிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட் முறையில் இந்த கதிர்களை மொபைல் மூலமாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்தக் கதிர்கள் கண்ணுக்கு புலப்படாதவை, எடை இல்லாதவை, தேவை இல்லாத நேரத்தில் ஆஃப் செய்து கொள்ளலாம்.

விருதுநகர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் இது பற்றிய ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று, இப்போது முழுமையடையும் நிலையில் உள்ளது. தலைமை விஞ்ஞானியிடம் பேசிய போது, இது தாமதமான முயற்சி என்றும், முன்பே செய்திருந்தால் நாம் காந்தியை இழந்திருக்க மாட்டோம் என்றும் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஆக்னட்டிக் கதிர் வீச்சு முறை நெருப்பு, நீர், ஆயுதப் பிரயோகம், கார் விபத்து, லாரி விபத்து, விமான விபத்து ஆகிய எல்லாவற்றிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு விட்டது. சிறிய அளவில் கூட அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். இந்த ஆக்னட்டிக் கதிர்கள் அணுக் கதிர் வீச்சுக்களையும் தாங்க வல்லவை. இன்னும் ஒரு சில வாரங்களில் ‘ஆக்னோ’ என்ற பெயரில் இந்த பொருள் விற்பனைக்கு வருகிறது, மாதம் எண்ணூறு ரூபாய் என்ற அளவில் அதன் விலை இருக்கும் என தெரிகிறது. புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு இருவருக்கான ஒருங்கிணைந்த கதிர் வீச்சு வடிவமைத்து தரப்படும், கொஞ்சம் விலை அதிகமாய் இருக்கும். கடைசியாய் ஒரே ஒரு விஷயம் – இந்தக் கட்டுரையை நம்பி உங்கள் ஹெல்மெட்டை நீங்கள் தூர எறிந்து விட்டால், அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.


எல்லாம் விதிப்படியே!

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. – (திருமந்திரம் – 45)

விளக்கம்:
கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் இறைவன் விதித்தபடி அல்லாமல் வேறு எப்படி இயங்க முடியும்? விதியின் வழியில் வந்த இன்பம் குற்றமில்லாதது. நாள்தோறும் அந்த சோதி வடிவான சிவனை துதிப்போம். அவன் வீடு பேறு அடையும் வழி காட்டும் சூரியன் ஆவான்.

ஆன்மிக இன்பம் மட்டுமே இயற்கையானது, விதி வழியானது, குற்றமில்லாதது.

(வேலை – கடல்,  விருத்தம் – குற்றம்,   நித்தலும் – எந்நாளும்,   பதி – வீடு)

This sea surrounded world is happening only by His fate.
There is no fault in enjoyment happening through fate.
Let we praise our Lord daily, He is our eternal light.
He guide us towards the divine path.

பனை மரத்தின் மேல் ஒரு பருந்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  – (திருமந்திரம் – 47)

விளக்கம்:
இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். அப்பெருமான் தம் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்திருப்பவர் அன்புடையவராய் இருப்பர். பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து, அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப் பற்றி நினையாமல் உணவுக்காக கீழிறங்கி வரும். அது போலவே சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனைப் பற்றிய நினைவில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

(மனை – இல்லறம்,  மாதவர் – பெருந்தவம் செய்பவர்)

Those who worship the Lord, even while in domestic life, are equal to sages.
Those who feel the existence of God in their heart, will have great affection.
Like the kite over the palm tree not aware of the fruit in the tree,
some people do not feel the inside God. They won't find the real Bliss.

கரும்பு கசக்கும் தேன் புளிக்கும்

கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய வானந்தம்
விரும்பியே யுள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.  – (திருமந்திரம் – 2976)

விளக்கம்:
நம் உடலில் காமமாகிய கரும்பும், அதன் சுவையாகிய தேனும் கலந்துள்ளது. அதே உடலில் தோன்றும் சிவானந்த வாசனையை உணர்ந்து நமது உள்ளம் அதை விரும்பியிருந்தால் மனம் மேலான உணர்வு அடையும். அதன் பிறகு கரும்பின் சுவை கசப்பாகவும், தேனின் சுவை புளிப்பாகவும் இருக்கும்.

சிவானந்த உணர்வை அடைந்து மனம் அதிலே பொருந்தி விட்டால், காம உணர்வு நம்மை விட்டு அகலும்.

(அரும்பும் – தோன்றும்,  கந்தம் – வாசனை)

In this body, cane like sexual desire and honey like its pleasure are there.
We have to feel the sprouted fragrance of Siva Bliss in our body,
Our mind soak in that feeling, reaching a higher state.
Then the sugarcane will be bitter in taste and the honey will be sour.

துரை


தனக்கு ஒரு உவமை இல்லாதவன்

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.  – (திருமந்திரம் – 5)

விளக்கம்:
சிவபெருமானைப் போல் ஒரு தெய்வத்தை உலகமெங்கும் தேடினாலும் பார்க்க முடியாது. அப்பெருமானுக்கு உவமையாய் மனிதர்கள் யாரையும் ஒப்பிட முடியாது. அந்தச் சிவபெருமான் இந்த உலகத்தையும் கடந்து நின்று பொன்னொளியாய் மின்னுகிறான். செந்நிறமான சடை முடி கொண்ட தாமரையான் அவன்.

Even if we make a search, we can't find a God like Siva.
He is beyond comparison, not resembling anybody.
Glittering like gold, He stands beyond this world.
He who has red color hair, possess lotus like nature.

அனுபவத்துல சொல்றேன்

என்னோட அனுபவத்துல சொல்றேன், கோபத்தை அடக்கி வைக்காதீங்க. இப்படி சொல்றதுனால கோபம் வந்தா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு குதறணும்னு அர்த்தம் இல்லை. ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கோம், திடீர்னு வார்த்தைகள் உரசிக்கிடுது, அதுலே ஒரு வார்த்தை தன்மானத்தை பதம் பார்க்கும் போது சுருக்குனு கோபம் வரும். சம்பந்தப்பட்டவங்க நமக்கு அடங்கினவங்களா இருக்கும் போது பிரச்சினை இல்லை. மேலே விழுந்து பிறாண்டி வைக்கலாம், பிறகு சமாதானப்படுத்திக்கிடலாம். இதே கோபத்தை உண்டாக்குறது நமக்கு அன்னியரா இருந்தால் பேச்சை நிறுத்திட்டு வந்திருவோம். சம்பந்தப்பட்டவரை நாம் சார்ந்திருக்கும் நிலை இருக்கும் போதுதான் கஷ்டம். கோபிக்க முடியாதது மட்டுமில்லை, அபத்தமா சிரிச்சு சமாளிக்க வேண்டி வரும். அதனால ஒண்ணும் தப்பில்லை.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி சூழ்நிலைல கோபப்பட்டுக் காரியத்தை கெடுத்துகிடாதீங்க. முதலாளி, மேனேஜர்,  அதிகாரி, இவங்க கிட்ட ஒரு தடவை முறைச்சுகிட்டோம்னா அப்புறம் நம்மை ஜென்ம விரோதியாத்தான் பார்ப்பாங்க. அந்த நேரம் சூடு, சொரணை எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறந்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ங்கிற பாவனையில் நின்று சமாளிச்சுகிடலாம். அவங்களுக்குத் தெரியும், இவனுக்கு கோபம் இருக்கு, மரியாதைக்காக பேசாம போறான்னு. இந்த குற்ற உணர்ச்சி நாளை நமக்கு சாதகமாகலாம்.

அனுபவத்துல சொல்றேன், இந்த மாதிரி அடக்கி வைச்ச கோபம் உள்ளே குமுறிக்கிட்டே இருக்கும். அதை வீட்டில உள்ளவங்க கிட்ட போய் கொட்டிடாதீங்க. அவங்க எல்லாம் நமக்கு அடங்கின மாதிரி பாவனை பண்றவங்க. போய் அவங்களை சீண்டுனா, அந்த பாவனையெல்லாம் கழட்டி வச்சிருவாங்க.

அனுபவத்துல சொல்றேன், இந்த கோபத்தை எல்லாம் உள்ளே ரொம்ப சேமிச்சு வைக்கக்கூடாது. அது நம்மை மெல்ல கொல்கிற விஷமாம். அதை செலவழிச்சு தீர்க்க நிறைய வழி இருக்கு. ஒரு நோட்டுல சம்பந்தப்பட்டவங்க பேரை எழுதி, அந்த பேரை பேனாவாலேயே ஆசை தீர குத்தலாம். கொஞ்சம் பெரிய கோபம்னா ஒரு தலகாணில அவங்க பேர் எழுதி தலகாணி பிஞ்சு போற அளவுக்கு ஏதாவது செய்யலாம். கொஞ்சம் வரையத் தெரிஞ்சிருந்தா சுவத்தில கோபப்படுத்தினவங்களோட படத்தை வரையலாம், அப்புறம் உள்ளதெல்லாம் உங்க இஷ்டம்தான்.

இதுக்காகவே வீட்டில்  தனி அறை இருந்தால் நல்லதுன்னு ஓஷோ சொல்றார். நான் அனுபவத்துல சொல்றேன்,  இதுக்கான  தனி அறை ஒன்று அவசியம். இந்த முறையில ஆத்திரத்தை உள்ளேயே வைத்து புழுங்க வேண்டியதில்லை, நேரடியாக வெளிப்படுத்தி சங்கடப்படவும் வேண்டியதில்லை. இது நினைத்துப் பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாக தோன்றும்.  நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்வது ஒன்றும் புதிதான செயல் இல்லையே?

அனுபவத்துல சொல்றேன், நான் இப்படி யாரையும் அடிச்சதில்லை. அந்த அளவு என்னை யாரும் கோபப்படுத்தியதில்லை. ஆனாலும் அனுபவத்துல சொல்றேன், என் மனைவிக்கு என் மேல் நிரந்தர கோபம் கிடையாது. அவர் ஓஷோவின் யோசனையை பின்பற்றுகிறார்.


நஞ்சு உண்ட சிவபெருமான்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 41)

விளக்கம்:
திருப்பாற்கடலில் சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை காத்தவன் சிவபெருமான். நாம் நம் மனதை திருத்தி பண்படுத்தி அக்கடவுளை  வணங்குவோம்.  ஒளியான நெற்றியுடைய உமையாளை தன்னுடைய ஒரு பாகமாய் கொண்டு பெருமை செய்த சிவபெருமான், நம்மிடம் பெண் மானைக் கண்ட ஆண் மானைப் போல கூடி நின்றானே!

(புனம் – திருத்தப்பட்ட நிலம்,  கனம் – பெருமை,   வாள் – ஒளி,  நுதல் – நெற்றி)

Our Lord consumed deathly poison to save Devas.
We worship Him in our reformed heart.
The Lord who possess Uma as a part of Him,
conjoint with us like pairing deer.

சிவனை வணங்க எளிமையான முறை

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.   – (திருமந்திரம் – 1774)

விளக்கம்:
நம் சிவபெருமானை வழிபடும் முறையை நாம் இவ்வாறு நிர்ணயம் செய்து, அதன்படி தொடர்ந்து செய்யலாம். பொங்கி வரும் கங்கை நீரையும், மலர்களையும் ஏந்தி சிவநாமம் சொல்லி பூஜித்து அவன் அருளை உணரலாம். அப்படி செய்து வருபவரை விட்டு சுருள் முடி கொண்ட ஈசன் நீங்க மாட்டான்.

தினமும் சிவபெருமானை நீரும், பூக்களும் கொண்டு வணங்கி சிவநாமம் சொல்லி வந்தால் அந்த ஈசன் நம்மை விட்டு நீங்காதிருப்பான். இது மிகவும் எளிமையான முறையாகும்.

(வரை – நிர்ணயம்,  நிரைத்து – பொங்கி,   புரைத்து – தப்புதல்)

There is a simple way to worship Lord Siva.
For those who worship with water & flowers in hand, 
Chanting his Holy name to feel His Grace,
the Lord will be with them always.