முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.

உயிரின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. – (திருமந்திரம் – 2011)

விளக்கம்:
உடலில் பொருந்தியுள்ள உயிரின் வடிவத்தை இப்படி சொல்லலாம். பசுவின் மயிர் ஒன்றை நூறாக பிளந்து, அந்த நூறில் ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் அது உயிரின் வடிவம்.

உயிரின் வடிவம், பசுவின் ஒரு மயிரில் நூறாயிரத்தில் ஒரு பங்கு. அதாவது உயிரின் வடிவம் மிகவும் நுன்மையானது, காண முடியாதது.

(மேவிய – பொருந்திய,  சிவன் – உயிர்,   கோ – பசு).

To speak about the size of the soul, it is like
splitting a cow's hair in hundred parts
and divide each part into thousand.
The size of Soul is thus one of hundred thousand parts.

ஆயிர நாமங்கள் வாழ்க

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)

விளக்கம்:
வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம்.  நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.

(சாந்து – கலவை,  கவரியின் கந்தம் – கத்தூரி,  ஆர்ந்த – நிறைந்த,   போந்து – நடந்து).

வாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer

It is like the fragrance of the musk of the musk deer,
the true path given to Devas given by the Lord.
Like a full Glow remain His thousand names
We chant them while sitting and while walking too.

திருவடி சரணம்

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. – (திருமந்திரம் – 43)

விளக்கம்:
சிவன் அடியை போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன்  அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான்.

(அரன் – சிவன்,   பரன் – கடவுள், உரன் – மன வலிமை,    நிரன் – நெருங்கி).

We speak of Siva's Holy Feet, weep and cry for his Grace
We think of His Holy Feet everyday.
For those who can surrender him, with strength of will
He comes close to them and pervade them.

பிதற்றுவதை விட மாட்டேன்

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. – (திருமந்திரம் – 38)

விளக்கம்:
பெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

பிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

புகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

என்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

(பேர் – புகழ்).

I won't stop speaking of Him, the Great, the Rare
I won't stop speaking of Him, the form of unborn
I won't stop speaking of Him, the renowned Nandi
I won't stop speaking of Him, he gave reputation for me.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

நம் தலைவன்

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. – (திருமந்திரம் – 32)

விளக்கம்:
தேவர்களின் தலைவனான அவன், நமக்கும் தலைவன் ஆனவன். அவன் பத்து திசைகளிலும் நிரவி இருப்பான். விரிவான நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் அந்த தலைவனின் தன்மையை நாம் அறிந்து கொள்ளவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் தலைவனான அந்த சிவபெருமானின் அருட் தன்மையை பாடலாக பாடி வணங்குவோம்.

(மேவு – நிரவி,  மேவு – பரவி,   பாவு – வியாபித்தல்,  திசை பத்து – எட்டு திசைகளோடு மேல் மற்றும் கீழ் திசை சேர்த்து பத்து ஆகும்).

The Lord of Devas, He is our God
He pervades all the ten directions.
No one know His nature, He transcends all the seven worlds
Let we sing about his Grace and Worship Him.

முயற்சியும் பலனும்

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. – (திருமந்திரம் – 11)

விளக்கம்:
இந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும்  பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

If we look the antiquity of this world, far and near
we can't see a mightier God than our Siva.
Himself our effort, Himself the fruit of effort,
Himself the rain, Himself the cloud. His name is Nandi.

திருநீறு நமக்கு கவசம்

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)

விளக்கம்:
எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.

(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)

Lord Shiva who wears garland of bones
adorned with Sacred Ashes. We too smear that Holy Ash.
The armored ash divert us from bad karmas to ideology of Shiva.
We shall reach his sweet Sacred Feet.

விதிகளினால் மட்டும் ஆகாது!

பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. – (திருமந்திரம் –33)

விளக்கம்:
இந்த பண்டைய உலகில், இதுவரை பல கடவுள்களின் பெயரில் பல வித விதிகளை ஏற்படுத்தியும் யாரும் உண்மை ஞானத்தை அறியவில்லை. கடவுளை  துதித்துப் பல பாடல்கள் பாட வல்லவர்கள் கூட உண்மையான ஞானம் இல்லாதவராய், உள்ளத்தில் அமைதி இல்லாமல் வாடுகின்றார்.

(மத விதிகளை கடைபிடிப்பதாலும், இறைவனை நோக்கி பாடல்கள் பாடுவதால் மட்டுமே ஞானம் அடைவது கடினம். மெய்ப்பொருளை நோக்கிய தேடலும் தவமும் அவசியம்.)

This very old world have seen many Gods,
many Rituals, but no one knows the truth.
Even those who sing Songs in praise of God,
Lacks of true Knowledge, with no peace in heart.