அடியார்க்கு அடியார்

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)

விளக்கம்:
சிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.

அடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே!

Those who seek love of Lord Siva's followers
can attain Siva's feet too.
The devotees who seek Siva's follower
will get the same reputation of whom they seek.

உயிரிலே கலந்தவன்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. – (திருமந்திரம் – 2010)

விளக்கம்:
ஆன்மாவில் சிவனும், சிவனில் ஆன்மாவும் ஒன்றாக கலந்திருப்பதை நிறைய பேர் உணர்ந்திருக்கவில்லை. ஒப்பில்லாத ஈசன் அவன், பிரபஞ்சம் முழுவதும் வற்றாமல் எங்கும் நிறைந்திருக்கிறான்.

(அணு – ஆன்மா,    சராசரம் – பிரபஞ்சம்)

He is inside the soul, the souls are inside Him.
Such the Soul and Siva are combined, but most people unaware of this.
Incomparable is His Grace, He spreads everywhere
in this universe, with out any abatement.

அவனுக்கா தெரியாது?

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. – (திருமந்திரம் – 1889)

விளக்கம்:
தன்னை தேடி வருபவர்களை வரவேற்க வழியிலேயே நின்றிருப்பான் ஈசன். தன் அடியவரான நல்லவர்க்கு இன்பம் தரும் விதமாக தன்னையே தர இருக்கிறான் அவன். தன்னை சரணடைய வருபவரிடம் கலந்து கொள்ள தயாராக இருக்கிறான். அவனைப் போய் அறியாதவன் என்று சொல்லலாமா?

(பொர – பொருந்த,    புகல் – சரண்)

He is standing in the path to receive them who seek Him.
He wants to give Himself to his holy devotees.
He likes to unite with them, who stands waiting
to surrender his feet. How can we say 'He don't know me'!

புலன்களை அடக்காதீர்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. – (திருமந்திரம் – 2033)

விளக்கம்:
ஐந்து பொறிகளையும் அடக்கு என்று வலியுறுத்துபவர்கள் எதுவும் அறியாதவர்கள். ஐந்தும் அடக்கிய தேவர்கள் அங்கே வானுலகிலும் இல்லை. ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டால் நாம் சடப் பொருள் போல் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து அடக்காமல் இருக்கும் அறிவை அறிந்து கொண்டேனே!

புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது. அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.

(அசேதனம் – அறிவற்ற சடப் பொருள்)

Those are ignorant, who insist to repress the five senses.
Not even the immortals could not do that.
If we repress the five senses, we'll be a insensible thing.
Thus we learnt not to suppress the senses.

கண்டு கொண்டேன்

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. – (திருமந்திரம் – 1589)

விளக்கம்:
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவன் உயிர்களில் பொருந்தியிருக்கும் தன்மையை யாரும் அறிந்திருக்கவில்லை. இது பற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபாடான பல கருத்துக்கள் உள்ளன. நான் இந்த சச்சரவுகளுக்குள் சிக்காமல் எல்லா உயிர்களையும் தம் கருவில் கொண்ட ஈசனை கண்டு கொண்டேன்.

For all living things in the world, He is the Lord
No one knows his state of existence.
I am not involved in the conflicts about the concepts on Him.
I found that God, who is the seed of all living things.

ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. – (திருமந்திரம் – 2026)

விளக்கம்:
நம் உடல் ஒரு காடு. அதில் ஐம்பொறிகளாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும் வெளியே சென்று மேய்ந்து, பார்ப்பதை எல்லாம் ஆசைப்பட்டு வந்து நம் மனம் புகுந்து பிராண்டுகின்றன. இந்த சிங்கங்களின் நகங்களையும் பற்களையும் பிடுங்கி விட்டால் நாம் இறைவனை அடைவது உறுதி.

(அடவி – காடு,  அகம் – மனம்,    உகிர் – நகம்,  எயிறு – பல்)

Within us five lions are living, they are our five senses
They roam outside and return to our mind.
If we remove the claws and teeth of that lions,
It is sure that we shall reach God.

வரி செலுத்தி ஓய்ந்தோம்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு இறைஇறுத்து ஆற்றகி லோமே. – (திருமந்திரம் – 2027)

விளக்கம்:
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு ஐந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருத்தரின் கீழும் தொண்ணுற்றாறு வீரர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரில் உள்ள ஒவ்வொருவரும் தாம்தான் நம்மை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த அமைச்சர்கள் ஐவரும் நம்முடன் ஐந்து வகையான போர் தொடுத்தபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மால் வரி செலுத்தி மாளாது.

அரசர்களான நாம் நம் அமைச்சர்களை (ஐம்பொறிகளை) கட்டுபாட்டில் வைத்திருக்க முடியாமல் அவர்களின் போருக்கு பயந்து வரி செலுத்தி வருகிறோம்.

(மைந்தர் – வீரர்)

Our five senses are like five ministers under us.
Each minister have ninety six soldiers, each trying to rule us.
The five ministers are always doing war against us in their ways
Endless is the tax we are paying them.

ஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)

விளக்கம்:
அனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.

(திகை – திசை,   அகக்குறை – மனக்குறை)

The Lord spreads over all directions.
If there is a man who pursue the Lord and remain so,
There will be no enmity there, rain will not fail
No dissatisfaction there, evil will not near that world.

சிவமணம் பூத்தது

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. – (திருமந்திரம் – 1459)

விளக்கம்:
பூவினுள் வாசம் பொருந்தியிருப்பது போல நம் உயிருக்குள் சிவமணம் பூத்திருக்கிறது. இந்த விஷயம் ஒரு சித்திரத்தைப் போல் நம் மனதில் பதிந்து விட்டால் புனுகுப்பூனை அணைத்த தூண் ஆவோம்.

புனுகுப்பூனை தூணை அணத்துக் கொண்டால் அந்த தூண் மணம் பெறும். அது போல் சிவன் நம்மை அணைத்துக் கொள்வான், நாம் சிவமணம் பெறுவோம்.

(கந்தம் – வாசனை,   நாவி – புனுகுப்பூனை,    நடுதறி – நடப்பட்ட தூண்)

The flowers have fragrance within itself
Like that, our souls have the fragrance of Siva.
If we get the clear picture of this truth
We'll be like planted post, embraced by the musk cat.

திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.