காலத்தைக் கடந்து நிற்கலாம்

மதிவட்டம் ஆக வரைஐந்து நாடி
இதுவிட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே – 740

விளக்கம்:
மதிவட்டம் எனப்படும் சகசிரதளத்தில் வியாபினி முதலான ஐந்து கலைகளை உணர்ந்து, பிறகு அதை விட்டு சிரசில் இருந்து பன்னிரெண்டு அங்குல அளவுக்கு மேல் வசிக்கும் சிவபெருமானை உணர்ந்து யோகம் செய்வோம். ஆராய்ந்து பார்த்தால், சகசிரதளத்துக்கு மேல் கவனம் செலுத்தி யோகம் செய்யும் போது, சிவபெருமானின் அருள் பெற்று, நாம் காலத்தைக் கடந்து நிற்பதை உணரலாம்.

மதிவட்டம் – சகசிரதளம்
வரை ஐந்து – வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதி, உன்மனி
பதிவட்டம் – சிவன் இருக்கும் இடம்


விளையும் வேதசக்தி!

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே – 739

விளக்கம்:
ஆகுஞ்சனம் என்னும் ஆசனத்தில் அமர்ந்து யோகப்பயிற்சி செய்து, அதில் விளையும் வேதசக்தியை அன்போடு ஏற்றுக்கொள்வோம். விளைந்த நெல்லை விதைநெல்லாக பயன்படுத்தி பல இடங்களில் நெல் விளைவிப்பதைப் போல, யோகத்தினால் விளையும் யோகசக்தியைப் பயன்படுத்தி இன்னும் பல உள்ளார்ந்த யோகங்களைப் பயிற்சி கொள்ளலாம். இதனால் பழமையான மந்திரங்கள் வெளிப்படுவதை உள்ளே உணரலாம், அந்த மந்திரங்களில் லயித்து அமைதியாய் இருக்கலாம்.

ஆகுஞ்சனம் – பத்மாசனத்தில் அமர்ந்து மடியில் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து, எருவாயை (குதம்) மேல் ஏற்றி நிற்றல்.
ஊழ் – பழமை


மான்கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே – 738

விளக்கம்:
நாம் யோகப்பயிற்சி செய்யும் போது, குண்டலினியாகிய அக்னி, அகாரம், உகாரம், மகாரம், விந்து ஆகிய நான்கு கலைகள், ஏழு ஆதாரங்கள் ஆகியவற்றை உணரலாம். பயிற்சியின் போது நாம் பிராணனை உற்றுக் கவனித்து, உடல் முழுவதும் பிராணனின் இயக்கத்தை உணர வேண்டும். மனம் சிதறாமல் இவ்வாறு பிராண இயக்கத்தை உணர்ந்து வந்தால், மான் கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்.

வன்னி – அக்னி
ஊன் – உடல்


சுழலும் பெருங்கூற்றை விரட்டலாம்

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே – 737

விளக்கம்:
கூற்று எனப்படும் யமன் எப்போதும் எங்கும் சுழன்றபடி இருக்கிறான். நம் உடலின் மூலாதாரத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு அமர்ந்திருக்கும் ஈசன், சீறியபடி சுற்றிவரும் யமனைத் துரத்தி விடுகிறான். மூலாதாரத்தில் மனம் குவித்து அங்கு இருக்கும் ஈசனின் திருவடியைக் கண்டு யோகப் பயிற்சியை மேற்கொண்டால், நாம் ஈசனின் திருவடி நிழலில் நின்று அந்த சிவபெருமானின் நெருக்கத்தை உணரலாம்.

அழலும் – பிரகாசிக்கும்
இரதம் – உடல்
தெற்று – செறிவு, நெருக்கம்


யோகத்தினால் பெண்கள் விரும்பக்கூடிய உடலைப் பெறலாம்

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடைத்து ஏகிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே – 736

விளக்கம்:
நம் உடலில், குதத்தில் இருந்து இரு விரற்கிடை அளவுக்கு மேலே இருக்கும் மூலாதாரத்தில் மனம் செலுத்துவோம். சுக்கிலம் வீணாகாதவாறு கண்காணித்து தொடர்ந்து யோகப்பயிற்சி செய்வோம். குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து அடுத்தடுத்த நிலைக்கு மேல் ஏற்றிப் பயிற்சி செய்து வந்தால், நம்முடைய உடல் வண்டுகள் விரும்பும் பூவைச் சூடும் பெண்கள் விரும்பக்கூடிய வடிவத்தைப் பெறும்.

பிழக்கடை வாசல் – மூலாதாரம்
அண்டத்துள் உற்று – சுக்கிலம் வீணாகாதவாறு கண்காணித்து


உணவைக் குறைத்தால் யோகம் எளிதாகும்

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே – 735

விளக்கம்:
சுக்கிலம் வெளிப்படுவது குறைந்தால், அது சார்ந்த உறுப்புகளுக்கு நல்லது. உடல் மெலிவதால், யோகத்தில் பிராணனை நிலை நிறுத்துதல் எளிதாக இருக்கும். உணவை குறைவாக உட்கொள்வதால், யோகப்பயிற்சியில் பல புதிய உபாயங்களைக் கற்கலாம். இவ்வாறு நாம் கட்டுப்பாட்டுடன் யோகப் பயிற்சி செய்து வந்தால், கறுத்த கழுத்தை உடைய சிவபெருமானின் தன்மையைப் பெறலாம்.

அண்டம் – விதை (சுக்கிலத்தை வெளிப்படுத்தும் விதை)
பிண்டம் – உடல்
உண்டி – உணவு
கண்டங் கறுத்த கபாலி – கறுத்த கழுத்தை உடைய சிவன்


யோகத்தினால் நரை, முதுமை நீங்கும்

நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே – 734

விளக்கம்:
குண்டலினி என்பது நீல ஒளியைக் கொண்ட பராசக்தி ஆகும். குண்டலினியாகிய சக்தியோடு மனம் பொருந்தி இருந்து, அதில் கிடைக்கும் இறையனுபவமே நிலையானது என்பதை உணர்ந்தவர்க்கு, நரை மாறும், முதுமையான தோற்றம் மாறி இளமையாக உனர்வார்கள். இது நம் நந்தியம்பெருமானின் வாக்கு.

நேரிழையாள் – நல்ல அணிகலன்களை அணிந்துள்ள சக்தி
சாலவும் புல்லி – மிகவும் பொருந்தி
சதம் – நிலையானது
ஞாலம்  – உலகம்
திரை – முதுமையினால் தோன்றும் தோல் சுருக்கம்


மூலாதாரம் இருக்கும் இடம்

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே – 733

விளக்கம்:
நம் உடலில் மலம் சேரும் இடமான குதத்தில் இருந்து இரு விரற்கிடை அளவுக்கு மேலேயும், நாம் அதைப்பற்றிப் பேசக் கூச்சப்படும் குறிக்குக் கீழேயுமான இடத்தில் மூலாதாரம் உள்ளது. சூடு தணியாத இந்த உடலில் வசிக்கும் சிவபெருமான், மூலாதாரத்திலும் குடியிருக்கிறான். யோகத்தின் போது நாம் நம் மனத்தை மூலாதாரத்தில் நிறுத்தி அங்குள்ள அபானனை மேலே எழுப்பிப் பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால், உபதேசம் இல்லாமலேயே பல நன்மைகளைக் காணலாம்.


மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்திப்போம்

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே – 732

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூச்சுக்காற்றைக் கொப்பூழ்ப் பகுதிக்கு கீழே செல்ல விடாமல் தடுத்து மேலே செலுத்த வேண்டும். மூச்சின் இயக்கத்தை மட்டுமே சிந்தித்து மூச்சை மேலே எழுப்பி பயிற்சி செய்வதால் நிகழும் சிவமந்திரத்தை உணரலாம். சிவமந்திரத்தினால் மூச்சுக்காற்றை தலையின் உச்சியில் நிறுத்தலாம். மூச்சு உச்சியில் நிலைபெற்றால் நாம் சிவ அம்சம் பெற்றவர் ஆவோம்.

உந்திச்சூழி – கொப்பூழ்ச்சுழி
முகடு – உச்சி
அபானன் – நாபிக் கமலத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயு


மனம் அமிழ்ந்து யோகப்பயிற்சி செய்வோம்

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே – 731

விளக்கம்:
அம்ஸ மந்திரத்தில் ‘அம்’ என்பது மூச்சினை உள் வாங்குதற்கும், ‘ஸ’ என்பது மூச்சினை வெளிவிடுதற்கும் உரியனவாகும். பிராணாயாமத்தில் மனம் அமிழ்ந்து பயிற்சி செய்து வந்தால், அகாரமாகிய மூச்சை இழுத்தலும், சகாரமாகிய மூச்சை வெளிவிடுதலும் ஆகிய பயிற்சி அம்ச மந்திரத்தை நெற்றிப்பொட்டிலே ஸ்திரமாக நிகழச்செய்யும். பயிற்சியிலே மனம் பொருந்தி இருந்து சாதகம் செய்யும் யோகி நாதத்தை முழுமையாக உணர்வான். அறநெறியின்படி இது தானாகவே நிகழும்.

பிராணாயாமப் பயிற்சி, தாமாகவே நம்முள்ளே மந்திரத்தை உருவேற்றும். தனியாக உச்சரிக்க வேண்டியதில்லை.

உறப்பெறவே – மனதுக்கு நெருக்கமாக
திறத்திறம் – மிகவும் ஸ்திரமாக