சிவ அமுதம்!

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே – 804

விளக்கம்:
தொடர்ந்து கேசரி யோகப்பயிற்சி செய்யும் போது நம் உடலில் அமுதம் ஊறும், அவ்வமுதம் சுழுமுனை நாடியின் உச்சிவரை பாயும். உடலில் அமுதம் ஊறும் போது, தலை உச்சியில் உள்ள சகசிரதளத்திலும் அமுதம் ஊறும். ஆனால் தலை உச்சியில் ஊறும் அமுதத்தை எல்லோராலும் உணர முடியாது. தேர்ந்த கேசரியோகப் பயிற்சியாளர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். தேன் போன்ற அந்த வானூறலை உண்பவர்கள் சிவானந்தம் பற்றியத் தெளிவைப் பெறுவார்கள்.

ஊனூறல் – உடலில் ஊறும் அமுதம், வானூறல் – தலையின் உச்சியில் உள்ள சகசிரதளத்தில் ஊறும் அமுதம்


சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே – 803

விளக்கம்:
இட நாடி, வல நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்தி, கேசரி யோகப்பயிற்சி செய்தால், சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம். அந்த யோகநிலையில், மேல்நோக்கி இருக்கும் குண்டலினியின் நாவை லேசாக விசிறினால் அமுத ருசியைக் காணலாம், அங்கே சிவனும், நம் சீவனும் கூடி இருப்பதை உணரலாம். சிவனும் சீவனும் கூடும் இடத்தில், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தெய்வங்களும், முப்பத்து மூன்று கோடி தேவர்களும் தோன்றுவார்கள். இவ்வாறு நாவினில் அமுதம் தோன்றக் கிடைத்தவர்கள் நூறு கோடி வருஷங்கள் வாழ்வார்கள்.

சிவிறிடிற் – விசிறினால், சதகோடி – நூறு கோடி, ஊன் – உடல்


அமுதத்தில் நீந்தலாம்

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே – 802

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்து வந்தால், சுழுமுனையுடன் நாம் உரையாடும் நிலை வாய்க்கும். சுழுமுனையில் கவனத்தை நிறுத்தி, அதனுடன் உரையாடல் செய்யும் போது அங்கே அமுதம் சுரக்கத் தொடங்கும். அமுதம் ஊறும் இடம் சந்திரமண்டமாய் மாறும், அவ்வமுதத்திலே நாம் நீந்தலாம். யோகநிலையில் அமுதம் நின்று ஊறினால், அதுவே நம் சிவபெருமான் அருள் பாலிப்பதாகும். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?

இரண்டாம் அடியை முதலிலும், முதல் அடையை இரண்டாம் இடத்திலும் வைத்துப் படிக்க வேண்டும்.

ஆய்ந்துரை செய்யில் – ஆராய்ந்து பார்த்தால், பாலிக்கு மாறே – அருள் பாலிக்கும்


சோம்பலை விட்டு கேசரியோகம் செய்வோம்

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே – 801

விளக்கம்:
கேசரியோக நிலையில் இடப்பக்க நாடி, வலப்பக்க நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்த வல்லவர்களுக்கு சோர்வு என்பதே கிடையாது. நாம் நமது சோம்பலை விட்டு விட்டு, கேசரியோகம் பயிற்சி செய்வோம். அப்படித் தொடர்ந்து கேசரியோகம் பயின்றால் மரணபயம் இல்லாமல் வாழலாம்.

இடக்கை – இடது பக்க நாடி, வலக்கை – வலது பக்க நாடி, துதிக்கை – நடுநாடியாகிய சுழுமுனை, உறக்கம் – சோம்பல்


சித்தம் சுத்தம் பெற கேசரி யோகம் செய்வோம்

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பிட்டு
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே – 800

விளக்கம்:
நம் சித்தத்தை சுத்தம் செய்யும் பொருட்டு நாம் செய்யும் கேசரி யோகத்தை, வண்ணான் அழுக்குத்துணிகளை பலகையின் மேல் அடித்துத் துவப்பதை உவமையாகச் சொல்கிறார் திருமூலர். யோகத்தில் நாம் கவனம் செலுத்தும் நெற்றிப்பகுதியை, வண்ணான் உபயோகிக்கும் சதுரப் பலகையாக உவமை செய்கிறார்.

அழுக்குத்துணிகளை வண்ணான் பலகையில் அடித்துத் துவைப்பதைப் போல, நம் கவனத்தை நெற்றியிலே நிறுத்த வேண்டும். கேசரி யோகப்பயிற்சியின் போது, நம் தலை உச்சியில் அமிர்தம் ஊறும். அவ்வமிர்தத்தை நெற்றிப்பகுதியில் குமிழி விழாமல் தேக்கி வைக்க வேண்டும். இவ்வாறான நிலையில் நம் கவனம் அண்ணாந்தவாறே இருந்தால் சித்தம் அழுக்கு நீங்கி சுத்தம் பெறும்.

மோழை – குமிழி, கண்ணாறு – கண்ணின் கவனத்தை நெற்றியில் நிறுத்தி ஊறும் அமுதத்தை கரை கட்டி நிறுத்துதல், விண்ணாறு – உச்சந்தலையில் ஊறும் அமிர்தம்


கேசரி யோகம்

கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே – 799

விளக்கம்:
இப்பாடல் கேசரி யோகத்தின் முதல் பாடலாகும். கேசரி என்றால் சிங்கம் என்று பொருள். சிங்காதன நிலையில் இருந்து செய்யும் யோக முறைகளைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

முழந்தாளிட்ட நிலையில் அமர்ந்து, உடலைத் தளர்ந்து விடாமல் நேராக நிறுத்தி வைக்க வேண்டும். பின்னங்கால்களால் குதத்தின் வாயிலை அடைத்து நிமிர்ந்து அமர்ந்தால் மூலாதரம் என்னும் அடுப்பை அணை கட்டலாம். இவ்வாறு உடலை நிலைநிறுத்தி யோகம் செய்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், அவர்களுக்கு மரணம் துன்பம் தருவதாக இருக்காது.

அட்டம் – முழங்கால், அடுப்பு – மூலாதாரம்


வாரசூலம்-02

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே – 798

விளக்கம்:
தன்னுடைய கழுத்திலே எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமானது சூலம், வியாழக்கிழமைகளில் தெற்குத் திசையில் இருக்கும். நம்முடைய பயணம் சூலத்திற்கு இடப்பக்கமாகவோ, பின்னோக்கியோ இருந்தால் துக்கம் ஏதும் ஏற்படாது. சூலத்திற்கு எதிராகவோ, வலப்பக்கமாகவோ நம் பயணம் அமைந்தால் மென்மேலும் தீவினைகள் வந்து சேரும்.

உதாரணத்திற்கு, கிழக்கே சூலம் என்றால், நம்முடைய பயணம் கிழக்குத் திசையிலோ, தெற்குத் திசையிலோ இருக்கக்கூடாது. மேற்கு அல்லது வடக்குத் திசையில் பயணம் செய்யலாம்.

தெக்கணம் – தெற்கு, அக்கணி – அக்கு + அணி, எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமான்


வாரசூலம்-01

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
தேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே – 797

விளக்கம்:
வாரநாட்களில், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த திசையில் சூலம் வரும் என்பதைத் திருமந்திரம் சொல்கிறது. திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கிழக்கே சூலமாகும். செவ்வய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்கே சூலமாகும். ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிகிழமையும் மேற்கே சூலமாகும்.

வியாழக்கிழமை வரும் சூலம் பற்றி அடுத்த பாடலில் பார்க்கலாம்.

தேரொத்த திங்கள் – தேரைப் போல நகரும் திங்கள், பாரொத்த சேய் – நிலத்தைப் போன்ற செவ்வாய், நேரொத்த வெள்ளி – திருத்தமான, நேர்த்தியான வெள்ளி, உத்தரம் – வடக்கு, பானுநாள் – ஞாயிறு, குடக்கு – மேற்கு


எல்லா நாளும் முகூர்த்த நாளே!

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு முகூர்த்தமு மாமே – 796

விளக்கம்:
நாம் ஆராயும் பரம்பொருள் எங்கே இருக்கிறது என்றால், நம் உச்சந்தலையில் உள்ள சகசிரதளம் எனப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் அந்தப் பரம்பொருள் விளங்குகிறது. சுழுமுனையில் பொருந்தி நமது மூச்சுக்காற்று மேலே உள்ள சகசிரதளத்தைத் தொடும்போது நாம் பரம்பொருளை உணரலாம். அந்நேரத்தில் வலி மிகுந்த நம் மனம் வலி எல்லாம் நீங்கி, நம்முடைய ஆதாரமான பரம்பொருளுடன் பொருந்தி நிற்கும். பரம்பொருளுடன் மனம் பொருந்தி நின்றால், நம்முடைய ஆயுளில் எல்லா நாளும் நல்ல முகூர்த்த நாளே!

மூச்சுக்காற்று சகசிரதளத்தைத் தொடும்போது பதினாறு வகையான வாயு அங்கே வெளிப்படும்.

ஆயும் பொருள் – நாம் ஆராயும் பரம்பொருள், அணிமலர் – நாம் சகசிரதளத்தில் அணிந்திருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர், வலி போய மனத்தை – வலி போய் அம்மனத்தை, பொருகின்ற – பொருந்துகின்ற,


மூச்சை சுழுமுனையில் நிறுத்தினால் சிவனைக் காணலாம்

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே – 795

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று நடுவே உள்ள சுழுமுனையில் ஒன்றி நிற்காமல், வலப்பக்கமும் இடப்பக்கமாகவும் அலைந்து ஓடி வருந்துகிறது. சிவயோகியர் தமது மூச்சுக்காற்றை அப்படி அலைய விடாமல் நடுவாக சுழுமுனையில் நிறுத்தி நிதானிக்கிறார்கள். மூச்சுக்காற்று சுழுமுனையில் நிற்கும் போது அங்கே குண்டலினியும் ஒன்று சேர்ந்து நம் தலையின் உச்சியில் ஒளி விடும் தீபமாக நின்று விளங்குகிறது. அந்தத் தீபமே சிவமாகும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

அடுகின்ற – வருந்துகின்ற, அந்தணன் – தூய்மையானவன், யோகி,  பணி – பாம்பு (குண்டலினி)