மூச்சு சீராக இருந்தால் உள்ளே பயமோ நடுக்கமோ ஏற்படாது

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே – 794

விளக்கம்:
முந்தைய வாரசரம் பற்றிய பாடல்களில் சொன்னபடி, வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

வலது நாசி பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடது நாசி பக்கம் உதிக்கும் போது, மூச்சு இயல்பாக இயங்காமல் சிறிது அதிர்வதும், தனது பாதையை விட்டு விலகி பிறகு தனது நேரான பாதையில் வந்து சேருவதுமாகவும் இருக்கும். இதுவே வாரசரத்தில் சொன்னபடி மூச்சு இயல்பாக இயங்கினால், சிறிதும் அதிர்வில்லாமல், ஒரு ஒழுங்கு முறையுடன் இயங்கும். மூச்சை சீராக உற்று கவனித்து வந்தால் இந்த உண்மையை உணரலாம்.

வாரசரத்தின் படி நமது மூச்சு இயங்கினால், நமக்குள்ளே பயமோ அதிர்வோ ஏற்படாது.

உதித்து வலத்திடம் – வலப்பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடப்பக்கம் உதிக்கும் போது, அகன்றாரும் – அகன்று ஆரும் (அகன்று சேர்தல்), இராசி – வரிசை, ஒழுங்கு


உயிர் ஊறும் இடம்!

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே – 793

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று சந்திரகலை எனப்படும் இடைகலை வழியாகவும், சூரியகலை எனப்படும் பிங்கலை வழியாகவும் மாறி மாறி இயங்குகிறது. தியானத்தின் போது, மாறி மாறி இயங்கும் மூச்சுக்காற்றைக் கவனித்தால், சுழுமுனை எனப்படும் நடு நாடியில் உயிர் ஊறுவதைக் காணலாம். இன்னும் உற்று நோக்கினால், சுழுமுனையில் ஊறும் உயிரில் சிவபெருமானின் உக்கிரத்தை உணரலாம். இவ்வாறு மூச்சுக்காற்றைக் கவனித்து தியானித்து வந்தால், நம் உயிர் இயங்கும் முறையை தெளிந்து அறியலாம்.

மதி – சந்திரகலை எனப்படும் இடைகலை, இது இடது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, வெய்யவன் – சூரியகலை எனப்படும் பிங்கலை, இது வலது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, ஏறி இழியும் – ஏறி இறங்கும், தேறி அறிமின் – ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.


கிழமை அறிந்து மூச்சு இயங்கினால் பேரானந்தம்!

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே – 792

விளக்கம்:
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று வலப்பக்கமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்த யோகிகள் சிவனைப் போன்றவர் ஆவார்கள்.  மேற்கூறிய கிழமைகளில், மூச்சுக்காற்று மாறி இடப்பக்கமாக இயங்கினாலும், அவர்கள் வலப்பக்கமாக மாற்றி இயங்கச் செய்து ஆனந்தமடைவார்கள்.

ஒவ்வாத வாயு – மூச்சுக்காற்று மாறி இயங்குதல்


மூச்சு ஒளி பெறும்!

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே – 791

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டதைப் போல வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று இடப்பக்கமாக தள்ளி விடப்பட்டவாறு இயங்குமாகில், அம்மூச்சுக்காற்று ஒளி பெறும். இந்த உடல் அறிவு பெற்று வெகு காலத்திற்கு நிலைத்து இருக்கும். இந்த விஷயத்தை வள்ளல் தன்மை கொண்ட நந்தியம்பெருமான் நமக்கு எடுத்து உரைத்திருக்கிறான்.

ஒள்ளிய காயம் – அறிவு மிகுந்த இந்த உடல், தயங்குமே ஆகில் – ஒளி விடுமே ஆகில்


வாரசரம்

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே – 790

விளக்கம்:
திருமந்திரத்தில் வாரசரம் என்னும் தலைப்பில் ஆறு பாடல்கள் உண்டு. சரம் என்றால் சுவாசம் எனப்படும் முச்சுகாற்று. எந்தெந்தக் கிழமைகளில் மூச்சுக்காற்று எப்படி இயங்குகிறது என்பது பற்றி திருமூலர் அழகாக விவரிக்கிறார்.

வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

ஒள்ளிய மந்தன் – அறிவு மிகுந்த சனி, வள்ளிய பொன் – பெருந்தன்மை உடைய வியாழன், இரவி – ஞாயிறு


நந்தியம்பெருமானின் குறிப்பு நம் உடலில் ஏறும்

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே – 789

விளக்கம்:
நாம் பிறப்பு, இறப்பு என்னும் தொடர்ச்சியில் சிக்கிக் கிடக்கிறோம். தொடர்ந்த யோகப்பயிற்சியால், பெருந்தகையாளரான நந்தியம்பெருமானின் யோகக்குறிப்புகள் நம் உடலில் ஏறுகிறது. இதனால் நம் உடல் அழகு பெற்று சிவபெருமானைப் போல விளங்குகிறது. நம் மனத்தில் இருந்து பற்று, பாசம் அறுகிறது. பற்றும் பாசமும் அறும்போது, அடுத்து பிறப்பு என்பது இல்லாமல் போகும். இதை நம் அறிவு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பது – குறிப்பு + அது, கோலக்குரம்பை – அழகிய உடல், பழப்பதி – பழமை வாய்ந்த சிவபெருமான்.


மது போன்ற ஒரு போதையைத் தரும் குண்டலினி

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே – 788

விளக்கம்:
இந்த உலகம் அறியாமை என்னும் மயக்கத்தில் இருக்கிறது. மயக்கம் நிறைந்த இந்த உலகிற்கு பொதுவாக அருள் செய்யும் சிவபெருமான், தொடர்ந்து யோகம் செய்யும் யோகிகளுக்குத் தனியாக சில விஷேச அருட்களைத் தருகிறான். அவற்றுள் முக்கியமான ஒன்று எதுவென்றால், நாள்தோறும் யோகநிலையில் இருக்கும் யோகிகளுக்கு, குண்டலினியாகிய பராசக்தி மது போன்ற ஒரு போதையை அளிக்கிறாள்.

சிவயோகிகள் வெளியே மதுவைத் தேட வேண்டியதில்லை. அவர்களுக்கு யோகப்பயிற்சியினால் உள்ளூர மது ஊறுகிறது.


சிவம் நம்முள்ளே நின்று திகழும்

அறிவது வாயுவொடு ஐந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே – 787

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்கள் பிராணவாயுவின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதுடன், ஐம்புலன்களின் இயக்கத்தையும் அறிந்து கொள்கிறார்கள். உலக உயிர்கள் அனைத்தும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. யோகத்தினாலே ஐம்புலன்களைத் தன் வசப்படுத்தி, மனத்தை உள்முகமாகத் திருப்பித் தியானித்து வந்தால் சிவபெருமானை நெருக்கமாக நம்முள்ளே உணரலாம். சிவம் நம்முள்ளே நின்று திகழும்.


மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும்

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே – 786

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்களால் மட்டுமே குண்டலினியின் இயக்கத்தை உணர முடியும். அவர்களுக்கு மட்டுமே மூச்சுகாற்றை முறைப்படுத்தும் கலை தெரியும். யோகப்பயிற்சி செய்யாத மற்றவர்களுக்கும் மூச்சுக்காற்று வீணாகக் கழியும். யோகம் செய்யும் சாதகர்களுக்கு மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும். மற்றவர்களுக்குக் கைவராத சூட்சுமம் எல்லாம் யோகப்பயிற்சில் இருப்பவர்களுக்கு மட்டுமே கைகூடும்.


கர்மவினைகளுக்குக் கட்டுப்பட மறுப்போம்!

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே – 785

விளக்கம்:
யோகப்பயிற்சியை முப்பத்து நாளாவதாகத் தொடரும் போது, நம்முள்ளே சிவசக்தியர் ஒன்று கூடி நிற்பார்கள். தெளிந்த நீரில் தோன்றும் காட்சி போல, நந்தியம்பெருமான் நம்முள்ளே காட்சி தந்து வழி நடத்துவான். கர்மவினைகளுக்குக் கட்டுப்படாமல், மனம் துவாதசாந்தப் பெருவெளியில் ஒன்றி நின்றால், தலைவனான நம் சிவபெருமான் நம்முடன் ஒன்றி நிற்பான்.